Saturday 2 August 2014

மீனவர் வலையை விட்டிருப்பாரா ?

ஹொக்கனேக்கலில் இருந்து வரும் நீர்,மேட்டூர் அணையில் தேக்கி வைக்கபடுகிறது.அணைக்கு முன்னால் இரு கரையிலும் இருக்கும் கிராமங்களில் ஒன்றுதான் நண்பர் ஆனைகவுண்டனின் கிராமம்.

கிட்டத்தட்ட 150 குடும்பங்கள் அங்கே இருக்கின்றன.எல்லா குடும்பத்தினரும் மீன்பிடித் தொழிலையே நம்பியிருக்கிறார்கள்.

அணையில்,ஆற்றில் மீன் பிடித்து சம்பாதித்து பிழைக்கிறார்கள். அரசாங்கம் வருடா வருடம் குறிப்பிட்ட அளவு பணத்தை வாங்கிக்கொண்டு, மீன் பிடிக்க அனுமதி கொடுக்கிறது.

அதற்கான லைசென்ஸை வைத்துக் கொண்டுதான் மீன் பிடிக்க வேண்டும்.சிலேபி,சுறா,கட்லா,வாளை,ரோகு,அரஞ்சான்,கெழுத்தி,கல்பாஸ் போன்ற மீன்களை பிடிக்கிறார்கள்.மீன் பிடிப்பதை பரிசலில் போய்தான் செய்கிறார்கள்.

நீண்ட வலையை மாலை நான்கு மணிக்கு வீசினால் அதிகாலை நான்கு மணிக்கு பிரிப்பார்கள்.வலையெல்லாம் செங்குத்தாக நீரைக் கிழித்து மீனை எதிர்நோக்கி காத்திருக்கும்.காலையில் மீனை வலைலிருந்து பிரித்து விற்பார்கள்.

சராசரியாக ஐந்து கிலோ மீன் மட்டுமே கிடைக்கும்.சில நாட்களில் ஒரு கிலோ மீன் மட்டும்தான் கிடைக்கும்.சந்தையில் கமிசன் வியாபாரிகள் ஒரு கிலோ மீன் இருபது ரூபாய்க்கு எடுப்பார்கள்.

ஐந்து கிலோ விற்றால்  பரிசல் போடுபவருக்கு என்ன கிடைக்கும்? நூறு மட்டுமே ரூபாய் கிடைக்கும்.அந்த நூறு ரூபாயை வைத்து எப்படி குடும்பம் நடத்துவார்கள்.

ரேசன் அரிசி இருப்பதால் அரிசிக்கு பிரச்சனையில்லை.கிராமத்தில் அவரவர்க்கு குடியிருக்கு சின்ன வீடுண்டு.நூறு ரூபாயை வைத்து சமாளிப்பார்கள்.பரிசல் முன்னாடி போல மரத்திலானது அல்ல.

இப்போது ஃபைபர் பரிசல் வந்து விட்டன.ஐந்தடி விட்டமுள்ள பரிசல் ஒன்பதாயிரம் ரூபாய்.அந்த பத்தாயிரம் ரூபாயை கடன் கொடுப்பது கமிசன் வியாபாரிகள்.அப்படி கொடுத்தால் வட்டிக்கு மீனை எடுத்துக் கொள்வது எளிது என்பதால் ஆர்வமாக அப்படியான கடனை ஒரு “டேம் மீனவருக்கு” கொடுக்கிறார்கள்.

இப்படியாக ஒரு மீனவரின் வாழ்க்கை நூறு ரூபாய்தாளாகவே ஆகிவிட்ட சூழ்நிலையில்,அவர்களுக்கு சம்பாதிக்க ஒரு வழி வருகிறது.

பெரிய வழியில்லை என்றாலும், அவர்களைப் பொறுத்தவரை அது ஒரு முக்கியமான வழி.

ஏப்ரல் மே மாதங்களில் நிறைய குஞ்சு மீன்கள் உலவும் .மேலும் டேமில் அரசாங்கம் வேறு நிறைய புதிய குஞ்சு மீன்களை விடும்.

சென்னாங்கவுணி என்னும் மிகச்சிறிய மீன் நிறைய படும்.நிறைய என்றால் நிறைய.ஐந்து நிமிடம் அதற்கென்றிருக்கும் பிரத்யோக வலையைப் போட்டால், வலை நிறைந்து விடும்.

ஒரு வலையில் கிட்டத்தட்ட இருபதிலிருந்து முப்பது கிலோ தேறும்.வலையை போட்டவுடன் வேக வேகமாக இழுக்க வேண்டும்.

ஏனென்றால் அடுத்த மீனவர் அவர் பங்கிற்கு நிற்பார்.சீக்கிரம் மீன் பிடித்து விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட வேண்டும்.ஒருநாளைக்கு ஐந்து கிலோ எங்கே? முப்பது கிலோ எங்கே?

நிறைய வருமானம் வரும் இந்த சென்னாங்கவுனி மீன் பிடியால்.

சில சமயம் அரசு போட்கள் ரோந்து வரும்.யாராவது குஞ்சு மீன்களை பிடிக்கிறார்களா? என்று கண்கானிக்க. அப்போது பரிசல்காரர்கள் வேக வேகமாக தங்கள் பரிசல்களை ஒட்டி மறைவான இடங்களுக்கு சென்று விடுவார்கள்.வேறு வழியில்லை.பிரச்சனையை சந்தித்துதான் ஆகவேண்டும்.

வருடம் முழுவதும் நூறு ரூபாய் சம்பாதிக்க வேண்டும் என்ற கணக்கிருக்கிறதா என்ன? கிடைக்கும் ஒரே வாய்ப்பு இந்த சென்னாங்கவுனி மீன்பிடிதான்.அதையும் விட முடியாதல்லவா? முடிந்த மட்டும் கஸ்டப்பட்டு பிடிக்கிறார்கள்.

நிறைய சம்பாதிக்க வேண்டிய, பண நெருக்கடியில் உள்ள மீனவர் ஒருவர் அன்று நிறைய சென்னாங்கவுனி மீன் பிடித்து விட வேண்டும் என்ற திட்டத்தில் இருந்தாராம்.

காலையில் ஒருதடவை பிடித்து விட்டு, மற்ற மீனவர்களிடம் அவர் பணக்கஸ்டத்தை சொல்லி அனுதாபம் தேடி, இரண்டாவது ஒருமுறையும் வலையை வீசியிருக்கிறார்.

வீசும் போது தீராமல் ஆண்டவனிடம் பிரார்த்திருக்கிறார்.அவருக்கு எதாவது செலவிருக்கலாம்.அது முக்கியமான தவிர்க்க முடியாத செலவாயிருக்கலாம்.அதனால் வீரியமாய் உருக்கமாய் பிரார்த்தனை செய்திருக்கிறார்.

பத்து நிமிடத்தில் வலையை இழுத்துப் பார்த்தால்.நிறைய மீன்களை உணர முடிந்திருக்கிறது.நல்ல மீன் பாடு.மகிழ்ச்சியில் கூவியபடி வலையை இழுத்திருக்கிறார்.இழுக்க முடியவில்லை.மீண்டும் தம் கட்டி இழுத்திருக்கிறார்.முடியவில்லை.

ரொம்ப நேரம் தன் சக்தியெல்லாம் கூட்டி மீனை இழுக்கவும், அவருக்கு நெஞ்சு வலி வந்தது.அதையும் பொருட்படுத்தாமல் இழுக்க, நெஞ்சு வலி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து,பரிசலில் விழுந்து சுருண்டு துடித்து இறந்திருக்கிறார்.

நண்பர் ஆனைகவுண்டன் இந்த விசயத்தை சொல்லும் போது எனக்கு ஒன்றும் ஒடவில்லை.

இவர்களும் தமிழ்நாட்டில்தான் இருக்கிறார்கள்.இவர்களும் தமிழர்கள்தான்.இது மாதிரி யோசித்துக் கொண்டிருந்தேன்.

இறந்த மீனவர் தன் கையிலுள்ள வலையை விட்டிருப்பாரா? அல்லது பற்றியே இறந்திருப்பாரா என்ற சந்தேகமும் வந்ததெனக்கு.

No comments:

Post a Comment