Sunday 10 August 2014

அப்படியானது உலகம்

கலகலப்பான, ”நம்முடைய உணர்வை பிறர் மீது செலுத்தக் கூடாது” என்ற கொள்கையை உடையவர்களை உலகோர் விரும்புவார்கள்.
நம்முடைய உணர்வை பிறர் மீது செலுத்துவது என்றால் என்ன ? வீட்டில் சண்டை நடந்திருக்கும். மொக்கையான மூடில் வீட்டில் இருப்பார். ஆனால் ஆபீஸ் வந்தால் அந்த எரிச்சலை சக ஊழியரிடம் ஏதோ விசயத்தில் சின்ன அளவாக கூட பிரதிபலிக்க மாட்டார்.இப்படி ஒருவர் இருந்தால் அதுதான் “நம்முடைய உணர்வை பிறரிடம் செலுத்தாத” தன்மையாகும். வீட்டில் என்னுடன் சண்டையிட்டது என் மனைவி அல்லது அம்மா. அந்த கோபத்தை யாரோ ஒருவரிடம் எப்படி நான் பிரதிபலிக்க முடியும் என்று இவர்கள் நினைப்பார்கள்.

ஆனால் பெரும்பான்மையான மனிதர்கள் இப்படி நினைப்பதில்லை. யார் மீதோ உள்ள கோபத்தை யாரிடமோ காட்டுவார்கள். அதனால் யார் மீதோ உள்ள கோவத்தை யார் மீதோ காட்டாத பக்குவபட்டவர்களை உலகோர் மிக அதிகமாக நேசிப்பார்கள்.

இப்படி கலகலப்பாக பழகும் மனிதர்களுக்கு ஒரு சிக்கல் இருக்கிறது உலகத்தோர் அவனுக்கு “செல்லக்கிறுக்கன்” பட்டத்தை மானசீகமாக வழங்கிவிடுவார்கள்.என்றாவது ஒருநாள் அவனுடைய உணர்வுகள் காயப்பட்டு அதை யாரிடமாவது பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கும் போது அவனுக்கு யாருமே இருக்கமாட்டார்கள்.எல்லோரும் அவனை பக்குவப்பட்டவனாக,கலகலப்பானவாக நினைத்து,” உனக்கா ? மனக்கஷ்டமா? ஒஹ்ஹோ” என்று சிரித்தபடி கடந்துவிடுவார்கள். இது அவனுக்கு கிடைக்கும் முதல் அடி.

இரண்டாவது அடிதான் கொடுமையானது. அவன் எப்போதும் சிரிப்பவனில்லையா? எப்போதும் பக்குவப்பட்டவனில்லையா? அதனால் அவன் எப்போதாவது கோபப்பட்டாலோ அல்லது கவலையோடு இருந்தாலோ அதையும் உலகம் வெறுக்கும். “இவன் என்ன கலகலப்பாக ஜாலியாவே இருக்க மாட்டேன் என்கிறான்.இவன் அப்படி இருந்தால்தானே நமக்கெல்லாம் மகிழ்ச்சி.இவன் ஏன் நல்லா போயிட்டிருக்கிற சிஸ்டத்த சிதைக்கிறான்” இதுமாதிரியான அடிதான் அவனுக்கு கிடைக்கும் இரண்டாவது அடி.

கோமாளியின் சிரிப்பைத் தவிர வேறு சாய்ஸ் இல்லைதானே.

ஆஸ்கார் வைல்ட் எழுதிய “இன்ஃபாண்டாவின் பிறந்தநாள்” என்ற கதை கிட்டத்தட்ட இது மாதிரி வரும்.

12 வயதான ”இளவரசி இன்ஃபாண்டாவின்”, பிறந்தநாளை விமர்சியாக கொண்டாடுவார்கள்.இளவரசியும் ஆங்காங்கே விளையாடிக்கொண்டும், நடனமாடிக்கொண்டும் இருப்பாள்.அங்கே இளவரசியை ஈர்ப்பது ஒரு குள்ளனின் நடனம். அந்தக் குள்ளனை பார்கக் அசிங்கமாக இருப்பான். அவனைச்சுற்றி கூட்டம் கூடியிருக்கும். அவன் உயரமின்மைக்கும் அசிங்கத்துக்கும் அவன் ஆடும் நடனம் சிரிப்பாக இருக்கும்.அவன் காட்டில் அலைந்து திரிந்த போது, அவனைப் பார்க்க விநோதமாய் இருக்க அந்நாட்டின் தளபதி, குள்ளனை அவன் தந்தையிடம் விலைக்கு கேட்க, இத்தனை நாளும் ஒன்றுக்கும் உதவாத குள்ளப்பிள்ளையை சந்தோஷமாக விற்கிறான் அவன் தந்தை.

குள்ளன் இங்கே இளவரசியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஒரு ”எண்டர்டெயின்மெண்ட் எலியாக” ஆடிக்கொண்டிருக்கிறான். பார்ட்டி முடியும் போது குட்டி இளவரசி இன்ஃபாண்டா சொல்கிறாள் ”நீ நன்றாக ஆடுகிறாய். உன்னுடன் இன்னொருநாள் நான் விளையாட நடனமாட விரும்புகிறேன்” என்று சொல்லிவிட்டுப் போகிறாள். குள்ளன் துள்ளுகிறான். துடிக்கிறான். இளவரசியே ஆட விரும்புகிறாள் என்று சொல்லி, அரண்மனைக்குள் போகிறான். அங்கே இளவரசியின் அறை இருக்கிறது. அதுனுள்ளே போகிறான். அறையுனுள்ளே அவனுடைய உருவத்தைப் பார்க்கிறான்.

இதுவரை குள்ளன் நிலைகண்ணாடியில் தன் உருவத்தை பார்த்தே இல்லையாதலால் அதிர்ச்சியடைகிறான்.அவனுடைய அசிங்கமான உருவம் அவனுக்கு அப்போதுதான் புரிகிறது. உள்ளத்தில் உறைகிறது. அவமானப்படுகிறான். கதறுகிறான். அவனுக்கு புரிகிறது ஏன் பார்ட்டியில் அவனைப்பார்த்து அனைவரும் சிரித்தார்கள் என்று . ஏன் அவன் அப்பா அவனை விற்றார் என்று புரிகிறது. இளவரசியின் அன்பு என்று நினைத்திருந்தது உண்மையில் அன்பில்லை அது ஒரு வேடிக்கை பார்க்கும் மனப்பான்மைதான் என்று தெரிந்த போது அவன் துக்கம் உச்சமாகியிருந்தது.

அப்படியே அழுகிறான்.சத்தமாக அழுகிறான்.தரையில் விழுகிறான். தரையை தன் கையால் அடித்து அடித்து அழுகிறான். குள்ளன் உணர்வுப்பூர்வமாக தரையை அடித்து அடித்து அழுதுகொண்டிருக்கும் போது இளவரசி வருகிறாள். அவளுக்கு அவன் அப்படி அழுவதும் ஒரு விளையாட்டாக நடனமாகத் தெரிகிறது. இளவரசி சிரிக்கிறாள். ரசிக்கிறாள்.

பின் குள்ளனை எழுந்து அவளுடன் விளையாடக் கூப்பிடுகிறாள். குள்ளன் எழுந்திருக்கவில்லை. அப்போது இளவரசியின் மாமா ஒரு பிரபு வருகிறார்.அவரிடம் இளவரசி குள்ளனை எழுப்பச் சொல்கிறாள். அவர் எழுப்ப எழுப்ப எழும்பாமல் இருக்கிறன் குள்ளன்.

அவர் குள்ளன் நெஞ்சில் கைவைத்துப் பார்க்கிறாள். குள்ளனின் இதயம் சோகத்தால் நின்று விட்டிருக்கிறது.

இளவரசி மாமாவிடம் கேட்கிறாள் “ ஏன் மாமா இவன் எழுந்திருக்க மாட்டான்” 

“அது இவன் இனிமே எழுந்திருக்க மாட்டான்மா... அவனோட குட்டி இதயம் உடைஞ்சு போச்சு” என்று சொல்வார்.

“இனிமே என்கூட யாராவது விளையாட வர்றாங்கன்னா அவங்களுக்கு இதயமே இருக்ககூடாது ஆமா” என்று சலித்தபடியே செல்கிறாள் குட்டி இளவரசி இன்ஃபாண்டா.

குள்ளனின் சேட்டைகளை கோமாளித்தனத்தை ரசித்த உலகத்துக்கு அவனுடைய உணர்வுகள் கடைசிவரை புரியவில்லை.

அப்படியானது  உலகம். .

1 comment:

  1. நீங்கள் சொல்வது உண்மைதான் ஒருவரை இதுதான் அவரின் குணமாய் ஒருவர் நிர்ணயித்து விட்டால் அதைத் தாண்டி அவர் சிந்திக்கக்கூட விடாத சமூகம் தான்....விட்டுக்கொடுப்பவரின் உணர்வுகளும் இப்படித்தான் கடைசி வரை புரிந்துகொள்ளப்படுவதில்லை...

    ReplyDelete