Sunday 16 June 2013

கதை போல ஒன்று - 99


கணேசின் சட்டையில் ஒன்றிரண்டு ரத்தத்துளிகள் ஓட்டியிருந்ததை கவனித்தேன்.

காலை ஏழு மணிக்கு கதவைத்தட்டின கணேசைப் பார்த்து பயந்து போன என் முகம் பார்த்து “மச்சி இந்தப்பரிட்சை முடியிரவரைக்கும் உன் வீட்ல தங்கி எழுதிகிறேண்டா” என்றான்.

என்னால் ஒன்றுமே சொல்ல முடியாத நிலமை.

அம்மா காபி கொடுத்தார்கள்.யாரும் அவனிடம் எதுவும் கேட்கவில்லை.மாடியில் உள்ள என் ரூமிற்கு கூட்டிப்போகும் போதுதான் கவனித்தேன் அவன் சட்டையின் நுனியில் இருக்கும் ரத்தத்துளிகளை.

“மச்சி என்னடா சட்டையில பிளட்டு”

வாயைக் கொஞ்சம் கோணலாக வைத்துக்கொண்டு ஆனால் அழாமல்
“அப்பா அம்மாவ அடிக்கிறாருடா.காதுல அடிச்சி அம்மாவுக்கு காது கிழிஞ்சி ரத்தம் சட்டையில”

“சரியான சைக்கோ மச்சி உங்கப்பா”

“அவரப்பத்தி பேசாத மச்சி எனக்கு டிப்ளோமோ கடைசி செமஸ்டர்ல மிச்ச மூணு பரிட்சையும் முக்கியம்.அத எங்க வீட்ல இருந்து எழுத முடியாது. ஒருவாரம் உன் வீட்ல தங்கியிருந்து எழுதிட்டு போலாம்ன்னு இருக்கேன்”

“எனக்கொண்ணும் இல்லடா தங்கி எழுது.எனக்கென்ன தங்கச்சி அக்காவா இருக்காங்க. நீ தங்கு மச்சி”

கணேசின் அப்பா தமிழாசிரியர் மட்டுமல்ல,தன்னை சுற்றியுள்ளவர்களை துன்புறுத்துபவரும் கூட.முதல் மனைவி இறந்துவிட்டதால் கணேசின் அம்மாவை இரண்டாம்தாரமாக கல்யாணம் செய்துகொண்டவர்.

முதல் தாரத்துக்கு பிறந்த பையன் பத்தாம் வகுப்பு படித்து முடித்ததும் இவரைப்பிடிக்காமல் வீட்டை விட்டு ஒடிவிட்டான்.அவனை தேடவே இல்லை என்பது பற்றி கவலைப்படக் கூட யாருமில்லை. 

ஆனால் கணேஷ் இதைச்சொல்லி வருத்தப்படுவான். 

கணேசின் அம்மாவை எடுத்ததெற்கெல்லாம் அடிப்பார்.குடித்தாலே வீட்டில் அன்று ஒ ஒ என்று அழுகைச்சத்தம் கேட்கும்.

அவர் சைக்கிளை கணேசன் தினமும் துடைக்க வேண்டும்.சைக்கிளை தெருவில் எல்லோரும் பார்க்க நிறுத்தி வைப்பார்.கணேசன் துடைக்க துடைக்க “இப்படி துடைகனும் அப்படி துடைக்கனும் “ என்று சத்தமாக தலையில் தட்டிக்கொண்டே இருப்பாராம்.

கணேசனின் சித்தி வீட்டுக்கு வரும் போது தப்பாய் நடந்தார்.

லெட்ரினுக்கு போய்விட்டு தண்ணீர் சரியாய் ஊற்றாமல் அதை கணேசனும் அவன் அண்ணனும்தான் சுத்தம் செய்ய வேண்டும் என்பாராம்.

கணேசன் அம்மா சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது அங்கு தட்டைப்பிடிங்கி “போதும் நீ ஒசிச் சோறு சாப்பிட்டது “ என்று சொல்லி அடித்தாராம்.

“என்னப் பிடிக்கலன்னா வீட்ட விட்டு மூணுபேரும் போயிரலாம்.நா இப்படித்தான் இருப்பேன்” என்பார்
.
அம்மா அழுதுகொண்டே இருப்பார்.அவருக்கு ஒரே ஆறுதல் அவர் இரண்டு பிள்ளைகள். 

இந்த கஸ்டத்திலும் தனக்கு பெண்பிள்ளைகளைக்கொடுக்காத கடவுள் மேல் மரியாதையும் பக்தியும் உண்டு.

தன்னுடைய பேரழகே கணவனின் எல்லா கோபத்திற்கும் காரணம் என்று நம்பிக்கையை வளர்த்து முடிந்த மட்டும் தன் அழகை மறைத்துக் கொண்டு வாழ முயற்சிப்பவர்.

கணேக்ஷ் தினமும் அப்பாவைப் பற்றிப்புலம்புவான். 

“திருத்த டிரைப் பண்ணு. இல்லன்னா டிப்ளமோ முடிக்கிற வரைக்கும் பொறுமையா இரு.படிச்சி வேலைக்கு போயிட்டன்னா அம்மாவ கூப்பிட்டு தனியா வந்திரலாம் மச்சி”

“இல்ல மச்சி எங்கம்மா அப்பாவ விட்டு வரமாட்டாங்க.அவங்களுக்கு அப்பாவ பிடிக்கும்,.என்ன அடிச்சாலும் அவரப்பிடிக்கும்.அவர் ஏதோ போட்டு மயக்கி வெச்சிருக்காருடா”

“ம்ம்ம்”

”ஒருதடவ மச்சி எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. அப்போ நான் சிக்த் படிச்சிட்டுருந்தேன். பாத்ரூம்ல அம்மா நிக்குறாங்க, அவுங்க கால் வலியே ரத்தம் போகுது.ப்ளீடிங் ஆயிட்டுருக்குது.அம்மா உடம்பு நடுங்கிகிட்டே இருக்காங்க. நானும் அண்ணனும்தான் வெந்நீ வெச்சி கொடுத்தோம்.ஆனா அப்பா அப்படியே பேப்பர் படிச்சிட்டே இருந்தார்.அம்மா வழக்கம் போல அரைமணி நேரம் பிறகு அவருக்கு சூடா இட்லியும் தக்காளிச்சட்னியும் வெச்சிக்குடுத்தாங்க.” இப்படி நிறைய சொல்லலாம் மச்சி.

கணேசன் அடிக்கடி வீட்டிற்கு வருவான், இரவு பேசத்தொடங்கினால் விடிய விடிய பேசுவோம். காலை பஸ்ஸைபிடித்து தன் வீட்டுக்கு போவான்.

அவனுக்கு கிடைக்கும் மனவிடுதலையில் என் பங்கு முக்கியமானது ஆக ஆக எனக்கு கொஞ்சம் பயமாகவே இருந்தது.

அவன் என்னிடம் வைப்பது அன்பு.நான் அவனிடம் வைப்பது பொதுவானது. எல்லோரிடமும் நான் இப்படித்தான் பழகுவேன்.

ஆனாலும் அதைத்தாண்டி கணேசின் அப்பாவித்தனம் பல இடங்களில் என்னை ஈர்த்தது.

மூன்று பரிட்சையும் அந்த ரத்ததுளிகள் பட்ட சட்டையை இரவு துவைத்து காயவைத்தே எழுதினான்.உள்ளாடை மட்டும் கொண்டுவந்திருந்தபடியால் தப்பித்தான்.வேறு சட்டை கொடுத்தால் வேண்டாம் என்று மறுத்தான். ரொம்ப தன்மானம் பார்த்தான்.

மூன்றாவது பரிட்சை எழுதியதும், மிக ஆனந்தமாய் வீடுவந்து சேர்ந்தோம்.

கணேசன் மிக நன்றாய் எழுதியிருப்பதாக சொல்லி சிரித்தான்.

” இன்னைக்கு வீட்டுக்கு போயிரு மச்சி அம்மா உன்னத்தேடிகிட்டே இருப்பாங்கல்ல “என்று சொன்னேன்.

“ஆமா மச்சி பாக்கனும் பாக்கனும்” என்று சொல்லிய விதத்தைப் பார்த்தால் அன்று இரவு மொட்டை மாடி சந்திப்புக்கு விரும்புவதைப்போல் தெரிந்தது.

இரவு உணவுக்குப் பிறகு மொட்டை மாடியில் சேரைப்போட்டேன். பேசிக்கொண்டே இருந்தோம்,

“மச்சி என்னடா அன்னைக்கு திடீர்ன்னு வீட்டுக்கு வந்த, வீட்ல பிரச்சனைன்னு”

“பரிட்சைக்கு முந்தின நாள் நைட்டுடா. நான் படிச்சிட்டிருக்கும் போது. புர்க்கா போட்டுட்டு ஒரு பொம்பள வந்துச்சி வீட்டுக்கு.கையில் ஒரு நாலுவயசு பொண்ணு. 

நா என்ன வேணுமின்னு கேட்டேன்.உங்கப்பா இருக்காரான்னு கேட்டுச்சி. அப்பா தூங்கிட்டிருந்தார்.அதுக்குள்ள அம்மா வந்துட்டுடாங்க. விசாரிச்சா.அந்த பொம்பளய அப்பா வெச்சிகிட்டுயிருக்காராம்.

இரண்டு மாசமா காசும் கொடுக்கலையாம் அந்தப்பக்கம் போகவே இல்லையாம். இதக்கேட்டா அம்மாவுக்கு எப்படி இருக்கும் மச்சி. 

எனக்கு எப்படி இருக்கும்.அம்மா தலைசுத்தி தரையில உட்காந்துட்டுடாங்க.அப்பா சத்தம் கேட்டு வெளிய வந்தார். அந்த புர்க்கா போட்ட பொம்ளையப் பார்த்து அசால்டா, எது இங்க வந்த போ நா வரேன்னு சொல்றார்.”

“அதிர்ச்சியா இருக்குடா உங்கப்பா நெனச்சாலே”

“நா ஏய்யா இப்படி பண்றன்னு அப்பாவ கத்தினேன். அப்பா என்ன அடிச்சார்.அண்ணன் வழக்கம் போல ஒண்ணும் பேசல.ஆனா அப்பா என்ன ரொம்ப அடிச்சிட்டாருடா.”

சட்டையை கழற்றி காண்பித்தான்.கைத்தடம் பதிந்த ரத்த உறைவுகள்.

”கோவத்துல அழுதுகிட்டே பாட்டிவீடு பெரம்பூர்ல இருக்குல்ல.
அங்க போயிட்டேன்.பாட்டிவீட்ல எல்லாரும் அழுதாங்க மச்சி.

ஒரு அத்தை மட்டும் “கணேசு இதெல்லாம் உங்கம்மா அவளா இழுத்துகிட்டது.அவளுக்கு வரன் வரும் போது,விழுப்புரத்துல இருந்து ஒரு ஹெல்த் இன்ஸ்பெக்டர் வரனும், உங்கப்பா வரனும் வந்துச்சி.

உங்கப்பாவ கல்யாணம் பண்ணினா இரண்டாம் தாரமா போகனும்.ஆனா அந்த விழுப்புரம் வரனுக்கு மொதத்தாரம்தான். 

ஆனா உம் அம்மா என்ன செஞ்சா தெரியுமா. உன் அப்பன் போட்டோவ பாத்துகிட்டு நான் கட்டினா இவனத்தான் கட்டுவேன்னு கல்யாணம் செஞ்சுகிட்டா. யாராவது இரண்டாம் தாரம்ன்னு தெரிஞ்சி போவாங்களா கணேசு.ஒடம்பு அழகு உன் அம்மாவுக்கு அவ்ளோ முக்கியம். நீ பெரிய பையன் தான தெரிஞ்சிக்க”

மவுனமாய் இருந்தேன்.

“தெரிஞ்சே இரண்டாம் தாராமா ஏண்டா அந்த நாயி போச்சு.பொம்பளையா அவ.சனியண்டா”

”பாட்டி வீட்ல இருந்துதான் என் வீட்டுக்கு வந்தியா கணேசு”

“இல்ல மச்சி அம்மா இரண்ட்டாம் தாரமா போனத அவகிட்டவே கேக்கனும்ன்னு கோவத்துல மறுபடி எங்க வீட்ல போய் கேட்டுட்டு அழுதுட்டு வாரேண்டா.மனுசியா அவ. பீடைடா”

நிலா அமைதியாக நாங்கள் பேசுவதையெல்லாம் கேட்காமல் பொறுமையாக குளிர்ச்சியை பாய்ச்சிக்கொண்டிருந்தது பின்னரவில்.

இருவருமே அமைதிதாக இருந்தோம்.மவுனம் மவுனம் மவுனம்...

திடீரென்று எனக்கு அது தோண்றியது.

“நாய பன்னி அப்போ உன் சட்டையில இருக்கிற ரத்தக்கறை”

கணேக்ஷ் திடுக்கிட்டு சட்டென்று நெஞ்சைபிடித்து கொண்டு சத்தமாய் அழுதான்.

“மச்சி நா தான் மச்சி அம்மாகிட்ட ஏண்டி இரண்டாம் தாராம போன போனன்னு கேட்டு காதுவாக்குல அடிச்சிட்டேன்.அம்மா என் மேல சாய்ஞ்சா .அந்த ரத்தம்தான் மச்சி என் சட்டையில.அண்ணந்தான் நீ பரிட்சை எழுதிட்டு வான்னு என்ன வீட்ட விட்டு அனுப்பிட்டான்.மச்சி அம்மாவ பாக்கவே ஒருமாதிரியா இருக்குடா. காலையில நீயும் வாடா வீட்டுக்கு. ஒரு ஆவேசத்துல அம்மாவ அடிச்சிட்டேண்டா.இனிமே அடிக்க மாட்டேண்டா “ என்று கதறினான்.

நடுங்கினேன்.

கணேசின் சத்தம் அக்கம் பக்கம் கேட்க கூடாதென்பதற்காக “சத்தமா அழாத மச்சி” என்றேன்.

3 comments:

  1. வெளித் தோற்றத்தை வைத்து அதுவும் இரண்டாம் தாரமாக ஒரு பெண் கணவனைத் தேர்ந்தெடுப்பாளா என்பதே என் ஒரே சந்தேகம்…!

    ReplyDelete
  2. அப்படியும் பெண்கள் இருக்கலாம் என்ற அனுமானம் தான். அது அவர்கள் உரிமை என்பது போன்ற கருத்தாக்கத்தில் அதை அப்படி வைத்தேன்...

    ReplyDelete
  3. may be vijay… சொல்லப் போனால் எங்கும் நடக்கும் சம்பவங்களைவிட எங்கோ நடக்கும் விநோதமான சம்பவங்கள்தானே கதை எழுத தேவையானவை.…!

    ReplyDelete