Wednesday 26 June 2013

ஒசையில்லாத வன்முறை...

வன்முறையில் பலவகை உண்டு. 

அதில் ”சைலண்டான வன்முறைதான்” கொடுமை.அதாவது நாசுக்காக நோகடிப்பது.

பழைய கம்பெனியில் ஒருவர் மெடிக்கிளைம் இன்சூரன்சை வைத்து கால்முட்டில் ஆப்ரேசன் செய்து கொண்டார்.

ஐந்து வருடங்கள் கழித்தும் அதை செய்திருக்கலாம்.ஆனால் அவர் ரிஸ்க் எதற்கு என்று சீக்கிரமே செய்துவிட்டார்.

முடித்து குணமாகி ஆபீஸ் வந்ததும் நாங்கள் எல்லோரும் விசாரித்தோம்.

அப்போது வந்த உயர் அதிகாரி ஒருவர் சிரித்தபடியே “மெடிக்கிளையம் இல்லாட்டி நீங்க இதுக்கு வெறும் தென்னமரக்குடி எண்ணய் போட்டுட்டு விட்றுப்பீங்க இல்ல” என்று கேட்டார்.

மேலோட்டமாக அது காமெடியாக தோண்றினாலும். அந்த ஆப்பிரேசன் செய்தவரின் மனதை அது பாதித்தது.

“பாஸு அப்ப நான் பிச்சகாரனா பாஸு” என்று சொல்லி சொல்லி நொந்தார்.இதுதான் சைலண்ட் வன்முறை.

அமைதியாக ஒருவர் மனதை புண்படுத்துவது.அதில் மிக மிக தேர்ந்தவர்களைப் பார்க்கலாம்.

தி.ஜானகிராமனின் “முள்முடி” சிறுகதையில் திருடின குற்றத்திற்காக ஒரு மாணவனிடம் பேசாதீர்கள் என்று சொல்லிவிடுவார் பிரம்பை கையால கூட தூக்காத நல்லாசிரியர்.

அந்த ஆசிரியரின் பிரிவு உபசார விழாவுக்கு எல்லோரும் ஒருரூபாய் கொடுக்கும்ப்போது “அந்த மாணவனின்” பங்கை மறுக்கிறார்கள்.

அவன் ஆசிரியர் வீட்டிற்கு வந்து கமறும் போதுதான் ஆசிரியருக்கு புரிகிறது “அன்றே அவனுக்கு பிரம்பால் இரண்டடி போட்டிருந்தால் அதோடு போயிருக்கும்.ஆனால் அன்பு மண்ணாங்கட்டி என்று “ஒதுக்கி” வைக்க” சொல்லி பலநாட்களாக ஒரு மாணவனை புண்படுத்திருக்கிறோம்.என்று

இதுவும் சைலண்ட் வன்முறைதான்.

அம்மா ஒருகதை சொல்வார்கள்.

ஒருகுடும்பத்தில் வீட்டிற்கு வந்த புது மருமகளை நன்றாக பார்த்துக்கொண்டார்கள். நாத்தனார்கள் கூட “அண்ணி அண்ணி” என்று பாசமாகத்தான் இருந்தார்கள். இருந்தாலும் அந்தக்குடும்பத்தில் பிரச்சனை வெடித்தது.

காரணம் அந்த மருமகள் காய்கறி வெட்டினால் அவர் போக்கில் காய்கறியை வெட்ட விட்டுவிட்டு, அவர் போனதும் அதே காய்கறியை சின்னதாக அந்த வீட்டின் பொதுதன்மைக்கு ஏதுவாக வேட்டிக்கொள்வார்களாம் நாத்தனார்கள்.

எப்படி இருந்திருக்கும் அந்த மருமகளுக்கு.

இங்கே யாரும் யாரையும் அடிக்கவில்லை.திட்டவில்லை. ஆனால் அரிவாள் வெட்டாக மனதில் காயம் உண்டாகிறது.

இந்த பத்தியை இந்த கதையை சொல்லி முடிக்கலாம் என்று நினைக்கிறேன்.

சாரு நிவேதிதா ஒரு கதை சொல்லியிருப்பார்.சாருவை கூர்ந்து படித்தாலே அவர் சொல்லும் சாதரண சம்பவத்தின் பின் உள்ள ஆழத்தை உணரலாம்.அப்படி கூர்ந்து பார்க்க தெரியாவிட்டால் அவரை பத்தியாளர் என்றே சொல்லிக்கொண்டும் இருப்போம். சரி அது தனி டாப்பிக்.இப்ப கதைக்கு வருவோம்.

ஒரு ஏழை எழுத்தாளர், தன் பணக்கார நண்பனோடு காரில் போய் கொண்டிருப்பார்.

எழுத்தாளருக்கு பணம் தேவை.

நெருக்கடி.

நண்பனிடம் கேட்க கூச்சம்.

காரைவிட்டு இறங்கும் போது அந்த பணக்கார நண்பன் எழுத்தாளரை கூப்பிட்டு பணம் கொடுப்பார்.

எழுத்தாளர் நன்றி சொல்வார்.

அதற்கு அந்த பணக்கார நண்பன் “பார்த்து செலவு பண்ணுடா! ஹார்ட் எர்ன்ட் மணிடா “ என்பார்.
அதன் அர்த்தம் “பார்த்து செலவு பண்ணுப்பா நான் கஸ்டப்பட்டு சம்பாதித்த பணம்” என்பது.

அந்த துட்டை வாங்கிய எழுத்தாளனின் மனம் எப்படி இருந்திருக்கும்.

இதுதான் “சைலண்ட் வன்முறை” க்கு சிறந்த உதாரணம்.

No comments:

Post a Comment