Monday 30 March 2015

கூவம் படகு சர்வீஸ்...

”இப்போ சிட்டி செண்டர் இருக்குல்ல”
“ஆமா”
”அங்கதான் படகோட ஸ்டாப்.அங்க தொடங்கி மஹாபலிபரம் வரைக்கும் படகுலேயே போயிருக்கிறேன்” என்றார் இன்று நான் வந்த ஆட்டோவின் டிரைவர்.
நம்பமுடியவில்லை.
“கூவம் வழியோடி போட்ல மஹாபலிபுரம் போயிரலாமா”
“ஆமா நா போயிருக்கேன்.அரையனாவோ காலனாவோ டிக்கட்” என்றார்.
நான் அதை கற்பனை செய்து பார்த்தேன்.நானே அப்படி ஒரு படகில் இருந்தால் எனக்கு என்ன என்ன தெரியும் என்று யோசித்துப் பார்த்தேன் த்ரில்லிங்காக இருந்தது.
சிட்டி செண்டர் இருக்கும் இடத்தில் இருந்து ஒரு நதி வழியாக மஹாபலிபுரம் போய்விடலாம் என்று நினைக்கும் போது ஆச்சரியமாக இருந்தது.
”எவ்வளவு நேரம் ஆகும் தல” என்றேன்.
“கிட்டத்தட்ட 7 மணி நேரத்துக்கும் மேல.ராத்திரி ஏறுனா விடியிரப்ப மஹாபலிபுரம் போயிரலாம்” என்றார்.
ஏனோ அதை மனம் நம்ப மறுத்தது. ஏழு மணி நேரம் பிரயாணமா? மஹாபலிபுரத்துகா என்று யோசித்தேன்.
அப்புறம் அவரிடம் பேச்சைக் குறைத்து என் குட்டி மொபைலில் “speed of row boat" என்று கூகிள் செய்தேன்.
அதில் சராசரியாக மணி நேரத்துக்கு ஏழு மைல் என்று வந்தது.
மைலாப்பூருக்கும் மஹாபலிபுரத்துக்கும் இடையே 45 கிமீ ரோடு தூரம் இருக்குமா?
அப்ப 45 கிமிங்கிறது எவ்வளோ மைல். கிமிய மைலா மாத்தனும்னா என்ன செய்யனும் 45 அ 1.6 ஆல வகுக்கனும்.
அப்ப வகு 45/1.6... அய்யோ வெட்டு குடுக்க ஒடலியே அப்ப என்ன செய்ய?
அப்ப 45 அ 48 ஆ மாத்து... 48/1.6 = 30 (பதினாற மூணு தடவ பெருக்கினா 48)
அப்ப மஹாபலிபுரத்துக்கும் மைலாப்பூருக்கும் நடுவுல 30 மைல் ரோடு தூரம் இருக்கு.
துடுப்பு போட் சராசரி வேகம் எவ்ளோனு கூகிள் பாத்தோம்.
7 மைல் ஒரு ஹவருக்கு. அப்ப 30 மைல் தூரம் போகனும்னா
30/7= நாலு ம்ணி நேரத்துக்கு மேல வரும்.
ஆட்டோ டிரைவர் எவ்வளவு சொன்னார் 7 மணி நேரத்துக்கு மேலன்னார்.
ஆனா கூவம் ரோடு மாதிரி நேராவா இருந்திருக்கும் வளைஞ்சி வளைஞ்சி இருந்திருக்கும்.அதனால நிச்சயம் 45 கிமியோட அதிகம்தான் இருந்திருக்கும்.
அடுத்து தண்ணில போறதுல பிராக்டிக்கலா நிறைய ரிஸ்க் மற்றும் கஷ்டம் இருந்திருக்கும்.அதனால இவரு சொல்றது சரிதான் என்று மனதுக்குப் பட்டது.
மறுபடி உற்சாகமாக மெட்ராஸில் எப்படி கைரிக்‌ஷாவை ஒழித்தார்கள்.எப்படி ஒவ்வொரு மாற்றமும் நடந்தது என்று கதையளந்து இறங்க வேண்டிய இடத்தில் இறங்கினேன்

No comments:

Post a Comment