Monday 30 March 2015

ரஜினி ரசிகன்...

ரஜினிகாந்த் இரண்டு வருடங்கள் முன் மோசமான உடல்நிலையை அடைந்து சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்று திரும்பினார் என்பது நாம் அனைவரும் அறிந்து செய்தி.
அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டு பூரண குணம் ஆகும்வரை, தன் முடியையும் தாடியையும் எடுக்காத ஆட்டோ டிரைவர் ரசிகர் ஒருவரின் ஆட்டோவில் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது.
அவர் ரஜினிகாந்த் மீது பக்தியாக பேசிக்கொண்டிருக்கும் போது ஒன்றும் சொல்லத்தோன்றவில்லை.ஏனென்றால் இதயசுத்தியாக ரஜினியை அவர் விரும்புகிறார்.
உலகில் இன்னாரை விரும்பு இன்னாரை விரும்பாதே என்றெல்லாம் இன்னொரு மனிதனுக்கு சொல்ல நாம் யார்.
டெரி ஜோன்ஸ் ஃபேரி டெய்ல்ஸில் ஒரு கதை வரும்.
மூன்று மழைத்துளி மேகத்தில் இருந்து புறப்பட்டு தரையை நோக்கி வந்து கொண்டிருக்கும். மூன்று துளிகளுக்கும் யார் பெரியவன் என்ற போட்டி நடக்கும். போட்டி நடந்து கொண்டிருக்கும் போதே தரையில் இருக்கும் குட்டையில் விழுந்து கலந்து விடும்.
மனித வாழ்க்கையும் அப்படித்தான்.
இறப்பு என்னும் குட்டையை நோக்கி போய்க்கொண்டிருக்கிறோம்.நடுவுல நாப்பது வருசம் கொஞ்சம் உருப்படியா உயிரோடு இருக்கோம்.
இதில் என்ன நீ ம்னைவியைத்தான் நேசிக்க வேண்டும், குழந்தையைத்தான் நேசிக்க வேண்டும் என்ற வியாக்கியானம் எல்லாம்.
ஆட்டோ டிரைவர் ரஜினிகாந்தை நேசித்தால் நேசம் செய்யட்டுமே.தலைவனுக்காக முடியையும் தாடியையும் எடுக்காமல் இருந்தால் இருக்கட்டுமே.
இதில் கிண்டல் செய்ய என்ன இருக்கிறது.இப்படியெல்லாம் என் மனதில் ஒடிக்கொண்டிருந்ததற்கு காரணம் அந்த ஆட்டோடிரைவரின் ரஜினிகாந்த் அன்பில் இருந்த நேர்மை (அது எப்படி உங்களுக்கு எப்படித்தெரியும் என்று கேட்டால்.அதெல்லாம் தெரியும் பாஸ் )
“தல ரஜினியைப் பாத்தீங்களா?”
“ஆமா சிங்கப்பூர் போயிட்டு வந்து ரெஸ்ட்ல இருக்கும் போதே என்ன கூப்பிட்டனுப்பி பாத்தார்”
“அப்படியா என்ன சொன்னார் உங்க சூப்பர் ஸடார்”
“ஏன் என்ன உனக்கு பிடிச்சிருக்கு.எந்தப் படத்துல இருந்துன்னு கேட்டார்”
“நா அவர் படம் எல்லாத்தையும் வருசம் மாசம் மொதக்கொண்டு வரிசையாச் சொன்னார்.ரொம்ப நெகிழ்ச்சியாக் கேட்டார்”
“ம்ம்ம்”
“நல்லாப் பேசினார். எனக்கு பாபா படம் போட்ட டாலர் ஒண்ணு கொடுத்து,’என் மேல இருக்கிற அன்பு உண்மையின்னா இத பத்திரமா வெச்சுக்கனும்.இது உன் வாழ்க்கைக்கு தேவைன்னார்.இன்னும் விரிவா பிறகு பேசுவோம்ன்னார்”
“உங்களுக்கு எப்படி இருந்திச்சி”
“தலைவர் பக்கத்துல இருந்து பேசுறத பாத்துகிட்டே இருந்தேன்.அவர் பேசுறதே போதும். இன்னொருதடவை அவர் கூப்பிடும் போதுதான் போவேன்” என்றார்.
“தல இவ்வளவு ரசிகரா இருந்தா உங்க வைஃப் கோச்சுக்கமாட்டாங்களா?”
“இல்ல இந்த விசயத்துல நான் பிடிவாதம்ன்னு அவளுக்கு தெரியும்.மத்தபடி ஒழுங்க குடும்பம் நடத்துவேன்” சிரித்தார்.
“ஹலோ இல்ல நீங்க குடும்பம் ஒழுங்க நடத்துறீங்களா இல்லையான்னு நான் செக் பண்ணல” என்று நானும் சிரித்தேன்.
”நான் தலைவர குடும்பத்தோடத்தான் போய் பார்த்தேன்.குடும்பத்துக்கும் சந்தோசம்” என்றார்.
அவர் தாடியுடன் பரட்டைத்தலையுடன் ரஜினிகாந்தோடு எடுத்த போட்டோவை காட்டினார்.
மறுபடியும் சொல்கிறேன்.
ஏனோ அன்று அந்த ஆட்டோ டிரைவரை மனதால் கூட கிண்டல் செய்ய தோன்றவில்லை.

No comments:

Post a Comment