Monday 30 March 2015

குதிரைக்காரன்...

இந்த கருத்தை மிகச் சரியாக புரிந்து கொள்ளுங்கள்....
இந்தக் கதை நம் எல்லோருக்கும் தெரியும்.
ஒரு ஊரில் ஒரு ராஜா இருப்பார்.ராணி மேல் மிக அன்பாயிருப்பார்.
ராணி ராஜாவை விட அதிக அன்பாயிருப்பாள்.
ஒருநாள் மந்திரிக்கும் ராஜாவுக்கும் தர்க்கம் வரும்.
மந்திரி சொல்வார் “எப்பேர்ப்பட்ட பத்தினிப் பெண்ணுக்கும் ஆசையுண்டு.கணவனைத் தவிர இன்னொருவருடன் அன்புண்டு ” என்பார்.
ராஜா கோபப்பட்டு “இல்லை என் மனைவி மாதிரி நல்லவர்களும் இருக்கிறார்கள்” என்பார்.
மந்திரி “அது சரிதான் ராஜா” என்று மெலிதாய் நகைப்பார்.
“என்ன நீர் நம்பவில்லையா? “என்று ராஜா கர்ஜிப்பார்.
மந்திரி ராஜா காதில் கிசுகிசுப்பார்.
அடுத்தநாள் ராஜா மூன்றுமாதம் வேட்டைக்கு போவதாக அறிவித்து நாட்டுமக்களையும் ராணியையும் ஏமாற்றிவிட்டு அரண்மனையிலேயே ஒளிந்து கொள்வார்.இரவு ஒரு மணிக்கு மேலே ராணி எழுந்து நடப்பாள்.ராஜா பின் செல்வாள்.
ராணி குதிரை லாயத்துக்கு செல்வாள்.அங்கே குதிரை வளர்க்கும் குதிரைக்காரன் ராணிக்காக காத்திருப்பான்.
ராணியைப் பார்த்ததும் “ஏன் இவ்வளவு நாள் என்னை பார்க்க வரவில்லை” என்று எட்டி மிதிப்பான்
ராணி கோபப்படாமல் மன்னிப்பு கேட்டு அவன் காலை அமுக்கி விடுவான்.
குதிரைக்காரன் கெட்டவார்த்தைகள் பேசி ராணியின் கன்னத்தில் ஒங்கியடிப்பான். அப்போது கூட ராணி அழுதுகொண்டே” ஏன் இப்படி அடிக்கிறீர்கள்” என்று கேட்பாள்.
இப்படி ஏன் எதற்கு என்று கேட்காமல் ராணி குதிரைக்காரனின் அன்புக்கு அடிமையாகி அவன் காலடியில் வீழ்ந்து கிடப்பாள்.
இந்தக் கதையில் வரும் ”குதிரைக்காரன்” நம் எல்லோருடைய வாழ்க்கையிலும் உண்டு என்று நினைக்கிறேன்.
ஆண்கள் பெண்கள் இருவரையும் இந்தக் குதிரைக்காரன் என்ற பதத்தால் அழைக்கலாம்.
ஏன் எதற்கு என்று கேட்காமல் சிலரிடத்தில் அன்பு வைத்து அடிமையாகியிருப்போம்.
அவன்/அவள் அவமானப்படுத்தினாலும் குதிரைக்காரனையே சுற்றி சுற்றி வருவோம்.மனைவிக்கு ஒரு குதிரைக்காரனும், கணவனுக்கு ஒரு குதிரைக்காரியும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இந்த குதிரைக்காரன் தியரிப் படி, குதிரைகாரனாக நினைப்பவர்களிடத்தில் நிச்சயமாக உடலுறுவு கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை.
உடலுறுவு நடக்காமலேயே பல குதிரைக்கார உறவுகள் இருக்கின்றன.அந்தக் குதிரைகாரர்கள் சொந்தபந்தத்தில் இருக்கலாம், அலுவலகத்தில் இருக்கலாம், பொது இடத்தில் இருக்கலாம், கல்லூரிகளில் இருக்கலாம்.வாழ்க்கைத் துணையைத் தவிர வேறொருவராக கட்டாயம் இருப்பார்கள்.
இந்தக் குதிரைக்காரர்கள் வறண்டு போன வாழ்க்கைக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறார்கள்.வயதைக் குறைத்து உணரவைக்கிறார்கள்.சில சமயம் துள்ளல் இசையில் சத்தமாக பாட வைக்கிறார்கள்.
இனம் புரியாத க்ளுக் க்ளுக்கை மனதில் ஏற்படுத்துகிறார்கள்.
அளவான தூரத்தில் குதிரைக்காரர்களை வைத்துக் கொள்வது, அல்லது அமைந்து விடுவதை ஏற்றுக் கொள்ளலாம்.
ஆனால் எங்கே இந்தக் குதிரைககாரர்கள் ஆபத்தவானர்களாக மாறிவிடுகிறார்கள்?
நம்முடைய சுக துக்கத்தை தீர்மானிக்கும் ஆதார காரணிகளாக இந்தக் குதிரைக்காரர்கள் மாறிவிடும் போது நம் வாழ்க்கையில் தவறு செய்கிறோம் என்று பொருள்.
குதிரைக்காரன் அன்று காலையில் நன்றாக பேசினால் நான் அன்று நன்றாகப்பேசுவேன். குழந்தைகளிடம் அன்பாக இருப்பேன்.கனிவின் உச்சத்தில் இருப்பேன்.
குதிரைக்காரன் அன்று சரியாக பேசாவிட்டால் சோர்ந்துவிடுவேன்.குடும்பத்தினரோடு சரி வர பேச மாட்டேன் என்பது ஆபத்தனான குதிரைக்காரயடிமையாகி வருவதன் அறிகுறி.
இதை ஆரம்பத்திலெயே கிள்ளி எறியாவிட்டால் நம் வாழ்க்கை நம் கையில் இல்லை.
இப்படியாக நடைமுறையில் ஒருவருக்கு ராணியாக இருக்கிறோம்.
மற்றவருக்கு குதிரைக்காரனாக இருக்கிறோம்.
முடிவில்லாத மன முடிச்சுகளில் விழுந்து அவிழ்க்கும் வழிதெரியாது சோர்ந்து குழம்பி
”வாழ்க்க்கைச் சக்கரமே ஒரு சிக்கல்.இதிலிருந்து மீள வழிதா இறைவா” என்று அழுது புலம்புகிறோம்

No comments:

Post a Comment