Monday 30 March 2015

துரை.குணா எழுதிய ”ஊரார் வரைந்த ஒவியம்” ...

துரை.குணா எழுதிய ”ஊரார் வரைந்த ஒவியம்” என்ற படைப்பை நாவல் என்று சொல்வதை விட முப்பத்தியாறு பக்க சிறுகதை எனலாம்.
இந்த நாவலுக்காகத்தான் துரை.குணா ஊராரால் ஊரில் இருந்து விரட்டப்பட்டார்.
ஜாதி இந்துக்களின் அடக்குமுறையை எதிர்க்கத் திணறும் முந்தைய தலைமுறையினரின் மனக்குழப்பம்தான் கதையின் மையம் என்று நான் புரிந்து வைத்திருக்கிறேன்.
தன் மகன் கோவில் திருநீறை கையில் எடுத்து நெற்றியில் தடவிக்கொண்டதன் அடிப்படையில் வரும் அடிதடியில், மறுநாள் விடியலில் நடக்கப் போகும் ஜாதி வெறி பஞ்சாயத்தை எப்படி எதிர் கொள்ளப் போகிறோம் என்ற சங்கரனின் தவிப்பிலேயே கதை நகர்கிறது.
-இவர்களைச் சார்ந்திருக்கிறோமே? இவர்களை எப்படி எதிர்த்து நமக்கான உணவை இழப்பது.
-இவர்களின் அதிகார அடக்குமுறை முன்னால் நம்மால் நிற்கமுடியுமா?
என்றெல்லாம் சராசரி மனிதனுக்கு வரும் குழப்பம், இக்கதையில் வரும் சங்கரன் கதாப்பாத்திரத்துக்கு வருகிறது.
இன்னொருபக்கம் தன் காலத்துக்கு முந்தைய காலத்திலேயே தாழ்த்தப்பட்டவர்களுக்காக ஜாதி இந்துக்களை எதிர்த்த ஒற்றைக் கிழவனும் சங்கரன் மனதை குடையாமல் இல்லை.
தன் இனமான தாழ்த்தப்பட்ட மக்கள் ஒன்று கூட முயற்சி செய்து, அந்த ஒன்று கூடலுக்கு சங்கரனின் மகன் விவகாரத்தை கையில் எடுக்க முயற்சி செய்யும் போது,
அது தன் மகனின் எதிர்காலத்தை சிதைத்து விடுமோ என்று சங்கரன் பிடிகொடுக்காமல் பேசும் காட்சியும்,
அதற்கு சங்கரனின் ஜாதியைச் சேர்ந்தவர்கள் சலித்துக் கொள்வதும், விடலைகள் சங்கரனை கோபத்தில் கெட்ட வார்த்தை கொண்டு திட்டுவதுமாக கதையை நகர்த்தியிருப்பது,
தேவையில்லாமல் லட்சியவாதத்தை திணிக்க விரும்பாமல்,
இப்படித்தான் நடக்கிறது, இப்படித்தான் சிந்திக்கிறார்கள், இப்படி சிந்திக்கும் படியாகத்தான் நம் சமுக வெளி இருக்கிறது என்பதை துரை.குணா அதீதமில்லாமல் எழுதிச்செல்கிறார்.
யதார்த்த ஜாதி வெறி சூழ்நிலைக்கும் கொடுக்கப் போகும் பயங்கரத்துக்கும், சங்கரனின் தன்மானத்துக்கும் இடையே நடக்கும் மவுனமான விவாதத்தை வாசிக்கும் போது உணரமுடிகிறது.
துரை.குணாவில் தெறிக்கும் வட்டார வழக்கின் தெறிப்பு இயல்பானது.அவர் அதற்காக எதையும் மெனக்கெடவில்லை.அந்த இயல்பிலேயே இலக்கியமான பல சொற்றொடர்கள் வந்துவிடுகின்றன.
உதாரணமாக இது போன்ற
// நாலுப்புள்ளேய பெத்து.மூண மண்ணுலப் போட்டுட்டு அருவமுன்னு ஒண்ணு வெச்சிருக்கேன்.நின்னுக்குடிகெடுக்க இந்த ஊரான் எட்டுனாப் பட்டினிகிடப்பான்//
வட்டார வழக்கு வாக்கியங்களை உடனே கடந்து விட முடியவில்லை.
நின்று இன்னொருமுறை படித்து அதன் பின்னால் இருக்கும் நிகழ்வை யோசித்து,
அவ்வளவு பெரிய விசயத்தை பேச்சு வழக்கில் மிகச்சுருக்கமாக சுருக்கி தன்னையறியாமல் நேர்த்தியாக பேசும் அந்த பாங்கை போகிற போக்கில் சொல்லி நம்மை சிந்திக்கவும் யோசிக்கவும் வைக்கிறார் ஆசிரியர்.
அடுத்தடுத்தடுத்து இரண்டு முறை படித்த பிறகுதான் என்னால் முழுமையாக நாவலை உள்வாங்க முடிந்தது.
இன்னும் கொஞ்சம் விரித்து இதே வீரியத்தோடு எழுதியிருந்தால் இன்னும் ஆழமாக நெஞ்சில் தைத்திருக்கும்.
துரை.குணா அவசரப்பட்டிருந்தாலும் நல்ல படைப்பையே கொடுத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். எனக்கு திருப்திதான்.

No comments:

Post a Comment