Friday 20 November 2015

அம்பேத்கர் என்ன செய்தார்?

அம்பேத்கர் வாழ்க்கையில் நடந்த சில விஷயங்கள் மிக உருக்கமாய் இருக்கும்.

1928 ஆம் ஆண்டு அக்டோபர் 23 ஆம் நாள் பம்பாய் மாநிலத்தில் உள்ள தாழ்த்தப்பட்டவர்கள் தொடர்பாக தான் அளித்த அறிக்கையை முன்னிட்டு பேசுவதற்காக இந்திய சட்டப்படி அமைந்த கமிஷனிடம் ஆஜராகிராகிறார்.

அம்பேத்கர் அளித்த அறிக்கையை மதிப்பீடு செய்வதற்காக அக்கமிஷன் கூடுகிறது. அதில் உள்ள உறுப்பினர்களும் தாழ்த்தப்பட்டவர்கள் உரிமை மீது அக்கறை உள்ளவர்கள்தாம். ஆனால் ஒரு ரிப்போர்டை கூர்மையான கேள்விகள் மூலம்தானே மதிப்பீடு செய்ய முடியும். அதன் அடிப்படையில் அம்பேத்கரிடம் கேட்கிறார்கள். அம்பேத்கருடன் சோலங்கி இருந்தாலும் பெரும்பாலான பெரும்பான்மையான இடத்தில் அம்பேத்கரே பேசுகிறார்.

கிட்டத்தட்ட 295 கேள்விகளுக்கு அம்பேத்கர் பதிலளிக்கிறார்.

இந்தியனாய் பிறந்தவன் ஒவ்வொருவரும் அம்பேத்கர் அளிக்கும் அப்பதில்களை படிக்க வேண்டும்.

படிக்கும் போதே உடம்பெல்லாம் சிலிர்க்கும். (புத்தகம் 4 பக்கம் 219 - 269). அச்சமயத்தில் தாழ்த்தபட்டவர்கள் சார்பில் இருக்கும் ஒரே வக்கீல் அம்பேத்கர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

1.முதலில் அம்பேத்கரிடம் எத்தனை தாழ்த்தபட்டவர்கள் பம்பாய் மாநிலத்தில் இருக்கிறார்கள் என்ற கேள்வி வருகிறது. அம்பேத்கர் 28 லட்சம் என்கிறார். இல்லையே மக்கள் தொகை கணக்கெடுப்புப் படி 15 லட்சம்தானே வருகிறது என்கிறார்கள் கமிஷன் ஆட்கள்.

அதை முன்னிட்டு யார் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற விவாதம் நடக்கிறது. கோவில்களில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டவர்கள். பொதுக்குளத்தில் நீரெடுக்க அனுமதி மறுக்கப்பட்டவர்கள் என்ற ரீதியில் 28 லட்சம் பேர் வருகிறார்கள் என்று அம்பேத்கர் விடாமல் விவாதம் செய்கிறார். கமிஷன் ஒப்புகொண்டு அது பற்றி பின்னர் ஆய்வு செய்யலாம் என்ற அடுத்த கட்ட கேள்விகளுக்கு செல்கிறது.

2.தாழ்த்தப்பட்டவர்கள் இந்துக்களா? என்ற கேள்விக்கு அம்பேத்கர் இல்லை என்கிறார். இந்துக்கள் எங்களை எப்போதுமே அவர்களுடன் சேர்த்தது கிடையாது. அவர்கள் எங்களை அடிமையாகத்தான் நடத்துகிறார்கள். எங்களை தனிச்சிறுபான்மை பிரிவனராக அறிவிக்க வேண்டும். அளவில் சிறுபான்மையாக இருந்தால் அது சிறுபான்மைப் பிரிவு கிடையாது. கடுமையாக அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுதலையும் பார்க்க வேண்டும் என்கிறார்.

3.தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்ன வேண்டும் என்ற கமிஷனின் கேள்விக்கு, வயது வந்தவர்கள் எல்லாம் ஒட்டுப்போடலாம் என்ற உரிமை வேண்டும். எங்களுக்கு என்று தனித்தொகுதிகள் வேண்டும். பம்பாய் மாநிலத்தில் இருக்கும் 140 தொகுதிகளில் 22 தொகுதிகள் தாழ்த்தபட்டவர்களுக்கான தொகுதிகளாக இருக்க வேண்டும் என்று கேட்கிறார்.

அப்போது கமிஷன் கேட்கிறது.

22 தொகுதிகள் கேட்கிறீர்கள் அதைக் கொடுத்தால் மட்டும் உங்களுக்கு உரிமை கிடைத்து விடுமா? தாழ்த்தபட்டவர்களுக்குத் தேவையான சட்டங்களை உங்களால் கொடுத்து விட முடியுமா? என்று கேட்கிறது.

அதற்கு அம்பேத்கர் நிச்சயமாக நிறைவேற்ற முடியாது ஆனால் எங்கள் குரலை வெளியே ஒலிக்க அது தேவை என்கிறார்.

மறுபடி கமிஷன்  தாழ்த்தபட்டவர்களில் 22 இடங்களுக்கு போட்டியிட ஆட்கள் இருக்கிறார்களா? என்று கேட்கிறது.

இந்த இடம் மிக துக்கமான இடமாகும்.

அம்பேத்கர் சொல்கிறார் 22 ஆட்கள் கிடைப்பார்கள் என்று நம்புகிறேன் என்கிறார். இக்கேள்வியைப் படிக்கும் போதும், அதற்கான அம்பேத்கரின் பதிலைப் படிக்கும் போதும் சோகம் என்னை அப்பிக்க் கொண்டது. 1928 ஆம் ஆண்டு தாழ்த்தபட்டவர்களின் நிலமை இதுதான்.

4.தாழ்த்தபட்டவர்களுக்கு சட்டம் இயற்றப்படுகின்றனவே என்று கமிசன் சொல்ல அதற்கு அம்பேத்கர் ”சட்டம் இருக்கிறது. ஆனால் இந்துக்களின் ஜாதி வெறியால் அது அமலில் இல்லை என்கிறார்.

அதற்கு உதாரணமாக தன்னுடன் கோர்டுக்கு வந்த தாழ்த்தபட்ட இனத்தைச் சேர்ந்த ஒருவர் நீதிபதி முன்னால் வரமுடியாது என்று சொன்னதைச் சொல்கிறார். ஒருவேளை அவர் நீதிமன்றத்தில் நுழைந்தால் அவரை ஊரை விட்டு இந்துக்கள் ஒதுக்கிவைத்து விடுவார்கள் என்ற சம்பவத்தைச் சொல்கிறார்.

அரசாங்கம் ஒவ்வொரு ஊருக்கும் கொடுத்த காட்டுநிலத்தில் தாழ்த்தபட்டவர்களுக்கு நிலமே கொடுக்காமல் அல்லது மோசமான நிலத்தைக் கொடுத்து அபகரித்துக் கொண்ட இந்துக்களைப் பற்றி சொல்கிறார்.

5.பம்பாய் போன்ற நகரத்தில் தாழ்த்தபட்டவர்களைச் சமமாகத் தானே நடத்துகிறார்கள் என்ற கமிசனின் கேள்வியை மறுக்கிறார் அம்பேத்கர். தொழிற்ச்சாலைகளிலும் இந்துக்கள் தாழ்த்தபட்டவர்களை ஒதுக்கிறார்கள் என்று நிறைய சம்பவங்களைச் சொல்கிறார். கமிஷன் வியக்கிறது. இது பற்றியெல்லாம கவனத்தில் கொள்கிறோம் என்கிறது.

-பள்ளிகளில் தாழ்த்தபட்டவர்கள் நிலமை எப்படி என்று கேட்கிறது கமிசன். அங்கேயும் மோசம்தான் என்று அம்பேத்கர் விளக்குகிறார்.

6.விவாதம் முக்கிய கட்டத்துக்கு வருகிறது. கமிசன் என்ன் சொல்கிறது என்றால் 20 வருடங்கள் முன் இருந்த நிலமை இப்போது இல்லை என்கிறது.

ஆனால் அம்பேத்கர் அதை மறுக்கிறார். 20 வருடங்கள் முன்னால் எப்படி இருந்ததோ அப்படித்தான் இப்போதும் தாழ்த்தப்பட்டவர்கள் நிலைமை இருக்கிறது என்கிறார்.

பஸ்ஸில் எல்லாம் ஜாதி வித்தியாசம் பார்க்காமல் பிரயாணம் செய்யத்தானே  செய்கிறார்கள் என்ற கேள்விக்கு

அம்பேத்கர் “கிராமப்புரத்தில் போய் பாருங்கள்.தாழ்தப்பட்டவர்களை பஸ்ஸில் ஏற்றவே மாட்டார்கள்
”என்று சொல்கிறார்.

ஏற்றாமல் போனால் டிரைவர் குற்றவாளியாகிவிடுவாரே என்பதற்கு

“பஸ்ஸில் சீட் இல்லையென்ற பதிலை வைத்து டிரைவர் தப்பித்துக் கொள்வார். என்று சொல்கிறார்.

எப்படி தாழ்த்த்பட்டவன் உயர்த்தபட்டவன் என்று கண்டுபிடிப்பார்கள் என்ற கேள்விக்கு பதில் சொல்ல அம்பேத்கர் கொஞ்சம் திணறுகிறார்.

அது உண்மை என்று உலகத்துக்கே தெரியும். ஆனால் கமிசனின் தர்க்கமான கறாரான அக்கேள்விக்கு அவரால் சரிவர பதிலளிக்க முடியவில்லை. இந்த இடம் என் மனதை பாதித்தது.

அம்பேத்கர் ஒன்றும் பட்டிமன்றத்தில் பேசவில்லை. பல நூறு வருடங்களாக அடக்கபட்டவர்களின் உணர்வுகளின் ஒற்றைக் குரலாக பேசுகிறார். ஆனால் அவர்கள் ஒடுக்கப்படும் ஒரு விசயம் பற்றி சபையில் பேசும் போது அதை சரிவர நிருபிக்க முடியாமல் போகிற்து.

இதில் கமிசனும் நல்ல எண்ணத்தில்தான் இக்கேள்வியைக் கேட்கிறது என்றாலும் அம்பேத்கரின் அந்த சிறிய அசவுகரியம் என்னை அதிகம் சிந்திக்க வைத்தது.

அடிவாங்கியவனின் உரிமை மீட்பு குரலுக்கும், அடித்தவனின் பக்கம் ஏதோ ஒரு வகையில் இருந்து கொண்டு உரிமையை மீட்டுத் தருகிறேன் என்ற குரலுக்கும் வித்தியாசம் இருக்கிறது.

எவ்வளவு முயன்றாலும் மேலிருந்து உரிமையை மீட்டுக் கொடுக்கிறேன் என்று வருபவனால் கீழிருந்து அடிவாங்கியவனின் வலியை புரிந்து கொள்ள முடியாது .

கீழிருப்பவன் கதறும் போது மேலிருப்பவன் தர்க்கம் செய்வான். நியாயம் பேசுவான்.ஆதாரம் கேட்பான். வலியின் போராட்டத்தின் நோக்கத்தை அவனால் புரிந்து கொள்ள முடியாமல் போகிறது.

தண்ணி லாரி வரும் போது குடத்தை வைத்து நெருக்கியடிக்கும் மனிதர்களை காரில் போகும் மனிதனால் பார்க்க முடியும்.

அவர்கள் வலியை கற்பனை செய்ய முடியும்.

ஆனால் நேரடியாக அனுபவிப்பனின் அனுபவம் எழுப்பும் ஆவேசம் இருக்காது என்பதுதான் உண்மை.

தாழ்த்தபட்டவர்கள் பிரச்சனையைப் பேசும் தாழ்த்தபட்ட ஜாதியை சேராதவர்கள் அனைவருக்கும் இது பொருந்தும்தான்.