Monday 27 May 2013

கதை போல ஒன்று - 95



அந்த பிரவுசிங் செண்டரில் ஜெராக்ஸ் கொடுத்துவிட்டு மனதிற்குள்ளாக ஒரு பொம்மையை செய்து கொண்டிருந்தேன்.

”ஒரு பிளாட் வாங்கிரனும்.எங்கயாவது வாங்கிட்டு நிம்மதியா இ.எம்.ஐ கொடுக்கிற அளவுக்கு வந்திரனும்.மீரா கல்யாணத்துக்கு நகை இருக்கே.அதோட சேத்து சம்பாதிச்சிர மாட்டோமா.கடவுள்தான் கண் வைக்கனும்.” அந்த பிரார்த்தனை பொம்மையை செய்து முடித்ததும் அதை தூக்கி ரசித்தேன்.எளிமையான பொம்மை.அழகான பொம்மை.யார் வாழ்க்கையையும் கெடுக்காத பொம்மை.எனக்கே எனக்கான பொம்மை.

ஜெராக்ஸை வாங்கி பணம் செலுத்தி திரும்பும் போது கைகளை பற்றிய மற்றொரு கைகளின் சொந்தக்காரரை நோக்கினேன்.

“சார் எனக்கு நெட்டு தெரியாது.அப்ளிக்கேசன் ஒண்ணு அர்ஜென்டா போடனும்.உதவி பண்ணுங்க”

அவனை பார்க்க பொல்லாதவன் மாதிரி தெரியவில்லை. ஆனா வயது குறைவு.இருத்திரண்டு இருக்கலாம்.கிராமத்தை கடக்காத உடையும் தலையும் அவனை நம்ப வைத்தன.

“நெட்டு தெரியாதா”

“ஆமா சார்.ஒ.என்.ஜி.சி ல ஒரு அப்ளிகேசன் ஆன்லைன்ல
போடனும்.எனக்கு இண்டர்நெட் சரியா தெரியாது.உதவி செய்ங்க”

“உன் ஐடி கார்ட காட்டு” காட்டினான்.

சரி என்று அவனை கூட்டி நெட்டில் உட்கார்ந்தேன்.

“உன் பேரு கங்காதரனா”

“ஆமா”

ஒ.என்.ஜி.சி வெப்சைட்டுக்குள் போனேன்.

வயசு. இருபது.
அப்பா பேரு.செல்வகுமார்

’ம்ம்ம்...அப்பா என்ன பண்றாரு.’

’அப்பா தவறிட்டாரு.’

’எந்த ஊரு.’

’ஆரணி பக்கத்துல தேவிகாபுரம்.’

’அப்பா இல்லாம எப்படி.’

’ஊர்ல கொஞ்சம் நிலம் உண்டு சார்.அத லீசுக்கு விட்டுருவோம்.சொந்த வீடு. குடிசைதான்.அப்படியே சமாளிச்சிருவோம்.’

ஃபார்மை நிரப்பினேன்.

’என்ன படிச்சிருக்க’

’டிப்ளமோ எலக்கிடிரிக்கல் இன்ஜினீரிங்’

’இத யாரு உனக்கு படிக்க சொல்லி சொன்னா.’

’யாருமே சொல்ல நானா படிச்சேன்.’

’ஃபீஸெல்லாம்.’

’வீட்ல நகை ஒண்ணு ரெண்டு இருந்துச்சு அதவெச்சி படிக்க வைச்சாங்க.’

ஃபார்மை நிரப்பி வந்தவன். அவனை நோக்கி திரும்பி “கங்காதரன் நல்லா பாத்துதான் இதுக்கு அப்ளை பண்றீங்களா.இதுக்கு மகாராஸ்டிராவுல உள்ளவங்க மட்டும்தான் அப்ளை பண்ண முடியும்.இதப் பாருங்க அங்க எதாவது எம்பிளாய்மெண்ட் எக்சேஞ்சில பதிஞ்சிருக்கனுமாம்”

கங்காதரன் சோகமாகி விட்டான்.

“நான் இத ரொம்ப எதிர்பார்த்தேன் சார்”

“அட இதில்லனா வேற ஒண்ணு ஃபீல் பண்ணாத.இப்ப உனக்கு வேலை இருக்கா”

“ஏன் கேக்குறீங்க”

“சாப்பிடலாம்.எனக்கு பசிக்குது கம்பெனி கொடு”

கொஞ்சம் தயக்கத்தோடு சிரித்தான்.

“இஸ்டமிருந்தா வா.அல்லது போடே” என்றேன்.

வந்தான். ஆர்டரை கொடுத்து விட்டு.

“இப்ப என்ன வேல பாக்குற.”

“இப்ப எலக்டிரிசீயனா இருக்கேன்”

”எவ்ளோ சம்பளம்”

“ஏழாயிரம்”

“அது பத்துமா”

“பத்தாது,அது இல்லாம தனியா இன்னொருதருக்கு அஸிஸ்டண்டா போவேன்.அதுல கொஞ்சம் கிடைக்கும்”

”வீட்ல எத்தன பேரு.

அக்கா, நானு,தம்பி,தங்கச்சி”

“அக்காவுக்கு கல்யாணம் பண்ணிட்டீங்களா”

“இனிமேதான் சார் பார்க்கனும்.பாத்துக்கிட்டே இருக்கோம்.அதான் கொஞ்சம் அதிகமா சம்பாதிக்க டிரை பண்ணிட்டு இருக்கேன்,”

“பணத்தாலத்தான் அக்கா கல்யாணம் நிக்குதா”

“அப்படி மட்டும் சொல்ல முடியாது.அக்கா கொஞ்சம் கிந்தி கிந்தி நடப்பா.கால் கொஞ்சம் வளைஞ்சிருக்கும்”

“பொம்ள பிள்ளைக்கு கஸ்டம்தான்.உனக்கு இருபதுதான ஆகுது.அக்காவுக்கும் கல்யாணத்துக்கு டைம் இருக்குல்ல.மேக்சிமம் டிரை பண்ணு”.

கங்காதரன் அசட்டு சிரிப்பு சிரித்தான். ”எனக்கும் அக்காவுக்கும் எட்டு வயசு வித்தியாசம்.அதுக்கப்புறம் அடுத்தடுத்து தம்பி தங்கச்சி.அக்காவுக்கு பொறுப்பு ஜாஸ்தி.அவதான் எல்லாத்தையும் கவனிச்சிப்பா”

“ஆமா மூத்தது பொண்ணா இருந்துட்டாலே வேலை இருக்கும்தான்.எங்க வீட்ல கூட எங்க அம்மாவுக்கு அஞ்சு தம்பி அஞ்சு தங்கச்சி.பொறுப்பு ஜாஸ்தி.இப்போ வீட்ட உங்க அக்காவும் அம்மாவும் பாத்துகிறாங்களா”

“அம்மாவுக்கு முடியாது சார்.அவங்களால பாத்துக்க முடியாது”

“ஏன் வயசானதாலையா”

“இல்ல அவுங்களுக்கு கண்ணு தெரியாது”

அமைதி.

“ம்ம்ம். என்னாச்சி கண்ணு மங்கலா தெரியுமா”

“இல்ல தங்கச்சிக்கு ரெண்டு வயசா இருக்கும் போது அப்பா குடிச்சிட்டு வீட்டுக்கு வந்தார்.அம்மாவ போட்டு அடிச்சார் எப்பவும் அடிக்கிறாப்ல.வலி தாங்கமுடியாம அம்மா பதிலுக்கு அடிச்சா.அப்பாவுக்கு வெறி வந்துட்டு.அம்மாவ பிடிச்சி சுவத்துல வேகமா மோதிட்டாரு.பின் தலையில்ல அதுல அடி. ரத்தமே இல்ல. ஆனா பின் பக்கம் வீங்கி போயிடுச்சி.முதல்ல தைல எண்ணய் தேச்சிட்டோம். ஆனா மறுநாள் அம்மவுக்கு வாந்தி,மயக்கம். டாக்டர்கிட்ட போனா செக்கப் பண்ணி ஸ்கேன் பண்ண சொல்லிட்டாரு”

”ஐயோ அப்புறம்”

“ஸ்கேன் பண்ணதுல ஏதோ கட்டி கட்டிடுச்சாம்.கண்ணுக்கு போற மூளை நரம்புல”

“ஆப்டிக் நெர்வஸா”

“ஆமா அதுல ஏதோ பிரச்சனையாம்.இப்போ தலையில இருக்கிற கட்டிய எடுக்காட்டி உயிர் போயிடுமாம்.அப்படி எடுத்தா அந்த நரம்பில பாதிப்பு வந்து கண்ணு தெரியாம போயிடுமாம்”

இறுக்கம் வந்தது. கங்காதரன் தொடர்ந்தான்.

“உயிரா கண்ணா அப்படின்னு ஆயீட்டது சார்.டாக்டர் உடனடியா ஆப்பிரேசன் பண்ணச்சொன்னார்.அம்மா என்னக்கொன்னுடுங்கன்னு கதறுராங்க.அவங்கள சமாதானப்படுத்தி ஆப்பிரேசன் தியேட்டருக்குள்ள அனுப்பி வெச்சோம்.வாழ்க்கையில என்னால அத மறக்கவே முடியாது.யாரோ நெஞ்ச பிடிச்சி பிசைஞ்சு பிசைஞ்சு விட்டாப்போல இருந்துச்சி”.

பலவருடம் பிறகு அதைக் கேட்ட மூன்றாம் மனிதனான எனக்கே முடியவில்லை.

பட்டுபுடவைக் கடையில் கடைக்காரன் ஒவ்வொரு புடவையாய் எடுத்து விரித்து காட்டி பிடித்ததை எடுத்துக்கொள்ளச் சொல்வதுபோல ஏன் இந்த கடவுள் வாழ்க்கையை அது மாதிரி விரித்து போட்டு “அடேய் மனுக்ஷா புடிச்சத எடுத்துக்கோ” என்ற சொல்ல மாட்டேன் என்கிறார்.

இவ்வளவு கொடூரம் ஏன் இவன் வாழ்க்கையில்.இருபது வயதில் இதையெல்லாம் சுமந்து கொண்டு எப்படி இவன் தூங்குவான்.தலை வெடிக்கும் போல் இருந்தது.

இவனுடைய பிரார்த்தனை எப்படியாக இருக்கும். அது எவ்வளவு வீரியமுள்ளதாக இருக்கும்.அவன் பிரார்த்த்னை பொம்மை பக்கத்தில் வைக்க கூட தகுதியில்லாத என்னுடைய “பிளாட் வாங்கும் பிரார்த்தனை பொம்மை” மீது ஆயாசம் வந்தது. இயலாமையின் எரிச்சல்.

“ம்ம்ம் கேக்கவே முடியல கங்கா.எப்பத்தான் சமாதானமானாங்க”

“ஒருவாரத்துல சமாதானமாயிட்டாங்க சார்.ஆனா”

“ஆனா”

“இந்த மார்கழி மாசம் வந்தது பாருங்க அந்த முதல் நாளுதான் அம்மா ஒப்பாரி மாதிரி வெச்சி வெடிச்சி வெடிச்சி அழுதாங்க.ஏன்னா அவுங்க நல்லா  பெரிய பெரிய கலர் கோலமா போடுவாங்க. அது ஒண்ணுதான் அவுங்களுக்கு வாழ்க்கையில பிடிச்சதே”

சொல்லிவிட்டு கங்காதரன் வெறும் சிரிப்பை சிரித்தான்.

அழுகையையே சிரிப்பாக்கி வெளிப்படுத்தும் கலையை கடவுள்தான் கங்காதரனுக்கு சொல்லிக்கொடுத்திருக்க வேண்டும்.

Saturday 25 May 2013

கதை போல ஒன்று - 94


கெமிஸ்டிரி லேபில், சார் இல்லாத போது செல்வா கேட்டான்.

விஜய் நீங்க பிளஸ்டூவா?

இந்தகேள்வி என்னை பயமுறுத்தும் அளவுக்கு வேறெதுவும் பயமுறுத்தாது.

அதை உணர பிளஸ் டூ படித்து விட்டு பாலிடெக்னிக் முதலாண்டில் இருந்து படிக்க வேண்டும்.வயதில் சிறியவர்களோடு படிப்பதில் வரும் தாழ்வு மனப்பான்மையை அனுபவித்தாலே புரியும்.

என்னை பிளஸ் டூவென்றே சொல்லிக்கொள்ள மாட்டேன்.முடியை மிக ஒட்டிவெட்டியிருப்பேன்.தாடி மழிக்கவே சோம்பி ஒத்திப்போடும் நான் தினமும் க்ஷேவ் செய்வேன்.

சின்னப்பசங்க கூட அதிக வெச்சுக்க கூடாதென்று பேச்சை குறைத்தேன்.வகுப்பில் இருக்கும் போது அமைதியிலும் அமைதி.முடிந்ததும் யாரிடமும் பேசுவதில்லை.வேக வேகமாக பஸ்ஸைப் பிடித்து வீடு போய் சேர்வேன்.

ஒரு கல்லூரியில் படிக்கிறேன்.அந்தப்படிப்பை படிப்பேன். அதற்கிடையில் யார் நட்பும் வேண்டாம் எனக்கு. இந்த பொடிபசங்ககிட்ட பேசுறதுக்கா இங்க சேர்ந்தோம். சே... நம்ம கூட படிச்சவன் எல்லாம் அண்ணா யுனிவர்சிட்டி,இன்ஜினியரிங் காலேஜ்,மெடிக்கல் காலேஜ்ன்னு படிக்கிறான்கள்.நான் மட்டும் ஏன் மாட்டிக்கொண்டேன்.

நல்ல மார்க் வரவில்லையென்றால் மனிதனுக்கு இவ்வளவு அவமானமா வரும்.

துக்கம்தான் வாழ்க்கையாக இருந்தது.அழுகை முட்டும்.

சில சமயம் மாலை வேளையில் மெரினா பீச்சில் இறங்கி கடலைப்பார்த்து நெடுநேரம் அமர்ந்திருப்பேன்.நோட்டை எடுத்து எதாவது எழுதுவேன்.எழுத்து பூராவும் துக்கத்தை தூக்கி நிறுத்தி இருக்கும்.

பல சமயம் அழுவேன்.கண்களில் கண்ணீர் கசியும்.துடைக்க துடைக்க கடல் ஊத்து போல திடமாய் கசியும் கண்ணீரின் ஈரமே எனக்கு ஒரு குரூர ரசனையாகிவிட்டது என்று கூட சொல்லலாம்.

எப்படி படித்து முடிக்க போகிறேன் இந்த கோர்ஸை. அதுவும் மூன்றரை ஆண்டுகள். இப்படியே இந்த கடலில் குதித்து விடலாமா? முடியாது தைரியம் கிடையாது.அமமா அழுவாள்.

”உனக்கு எப்படி நான் பிளஸ் டூன்னு தெரிஞ்சது.”

”இல்ல அன்னைக்கு பசங்க பேசிக்கிட்டாங்க.”

”நீங்கன்னு சொல்லாத நீன்னே சொல்லு.பப்ளிக்கா மரியாதையா கூப்பிடாத ஃப்ளீஸ் ஒகேவா.

”அது வரமாட்டேங்குது விஜய்.”

அவனைப்பார்த்தேன் பார்க்கும் போதெல்லாம் அவன் ஒரே சட்டையை போட்ட மாதிரிதான் இருக்கிறது.பிரிந்து பிரிந்து பிசிறு தொங்கும் அட்டை பெல்டை போட்டிருந்தான்.தலையில் சின்ன பரட்டைத்தனம் தெரிந்தது.

“எனக்கு இந்த சால்ட் டெஸ்ட் சொல்லித்தாங்க... சாரி சொல்லித்தா விஜய்”

“சுத்தமா ஒண்ணும் புரியமாட்டேங்குது.நான் படிச்சது சைதாப்பேட்டை கார்பிரேசன் ஸ்கூல்ல.இங்க இங்கிலீக்ஷ்ல கெமிஸ்டிரி எல்லாம் படிக்க சுத்தம். ரொம்ப கஸ்டபடுறேன். இந்த சால்ட் எல்லாம் எப்படி கண்டுபிடிக்கிறீங்க. எனக்கு கண்ணக்கட்டி விட்டாப்போல இருக்கு”

பார்க்க பாவமாய் இருந்தது.

என்னுடைய சால்டை எளிதாய் கண்டுபிடித்துவிட்டேன்.அவன் கையில் இருந்தது கலர்லெஸ் சால்ட். ஆளுக்கொரு சால்டை கொடுத்து கண்டுபிடிக்க சொல்லி போய்விட்டார் சார்.பயிற்சியாம்.

“இதப்பாரு செல்வா இப்ப கேல்சியம் நைடிராட் வெச்சிக்க, இதுல பேசிக் ராடிக்கிள்.அசிடிக் ராடிக்கிள்ன்னு இரண்டு இருக்கு அது தெரியுமா”

“தெரியாது”

“கேல்சியம்தான் பேசிக் ராடிக்கிள்.நைட்டிரேட்தான் அசிடிக் ரேடிக்கிள்.”

“இந்த ரெண்டையும் தனிதனியா கண்டுபிடிச்சி.அதுதான் அந்த சால்ட் அப்படிங்கிறதுக்குள்ள டெஸ்டை நீ செய்யனும்.”

”புத்தகத்தை புரட்டினேன்.இதப் பாத்தியா இதுல போட்டிருக்கிறது எல்லாத்தையும் படிக்கனும் முதல்ல”

அவன் பார்த்தான். “படிச்சிரலாம்” என்றான்.

”நாம ஈசியா கண்டுபிடிக்கிறதுக்கு வழியிருக்கு.உனக்கு குடுத்திருக்கிற சால்ட எடுத்துக்க”

அவன் டெஸ்ட் டியூபில் சால்டை எடுத்துக்கொண்டான்.

“இப்ப இதுக்குள்ள சல்ஃபூரிக் ஆசிட்ட கொஞ்சமா விடு, டைலூய்ட்தான்”

அவன் சல்ஃபூரிக் ஆசிட்டை விட்டான். ஒன்றுமே நடக்கவில்லை.

“இப்ப பாத்தியா இதுல இருந்து புசுபுசுன்னு பொகை வந்து மூக்குள்ள துளைச்சுதுன்னா அது குளோரைடு.ஆனா இதுல எதுவுமே வரல.அப்ப சல்ஃபேட் அல்லது நைட்டிரேட்டா இருக்கலாம். நமக்கு ஒரே ஒரு நைட்டிரேட்தான் இருக்கு. அதனால சல்பேட்டுக்குள்ள டெஸ்ட செய்திரலாம். இப்ப பேரியம் குளோரைட உள்ள ஊத்து.”

ஆர்வமாய் ஊத்தினான்.

“பாத்தியா கீழ வெள்ள கலர்ல பொடியா நிக்கு பாரு. உன்னோட சால்ட் வந்து இப்ப சல்ஃபேட்டு”

பரவசத்தால் என் முதுகை பிடித்து கொண்டான்.

“இரு இப்ப பேஸிக்க் ராடிக்களையும் டெஸ்ட் செய்திரலாம்.இன்னும் கொஞ்சம் சால்டைய எடுத்து அதுக்குள்ள சோடியம் ஹைடிராக்சைட விடு”

“அது நீலக்கலரைக்காட்டிற்று”

“உனக்கு லக்கு செல்வா.இப்படி நீலக்கலர் காட்டினா அது மெக்னீசியம் சால்டு. நீ கண்டு பிடிச்ச சால்டு பேரு மெக்னீசியம் சல்பேட்”

இப்படி சொன்னது செல்வா என்ற செல்வகுமார் துள்ளிக்குதித்தான்.கைகளை வைத்து வெற்றிக்குறி காண்பித்தான். “சூப்பர் விஜய் சூப்பர் விஜய். எனக்கு ஈசிய புரிய வெச்சுட்ட,இனிமே நான் புக்க படிச்சா புரிஞ்சிரும். இவ்வளவு நாள் இத படிக்க முடியாம எவ்வளவு டென்சனா இருக்கும் தெரியுமா? என்னால உன்ன மறக்கவே முடியாது”

எப்போதும் என் பையில் இருக்கும் கிழிந்து நைந்த “மரப்பசு” புத்தகத்தை ஒருநாள் காணவில்லை.மறுநாள் செல்வா அதை தைத்து ஒட்டி பைண்டு செய்து கொடுத்தான்.அவன் கைகளை பிடிக்கும் போது வழிந்தோடும் நட்பில் கரைய ஆரம்பித்தேன்.திரும்ப திரும்ப வற்புறுத்தியதால் அவன் வீட்டிற்கு சென்றேன்.

சைதாப்பேட்டை பாலத்தில் அடியில் இருக்கும் ஆஸ்பெஸ்டாஸ் குடிசைகளில் ஒரு குடிசைதான் அவனிருக்கும் வீடு.வீட்டில் ஸ்டீல் சேரில் அமர்ந்து வீட்டைப்பார்க்கும் போது செல்வாவின் வறுமை படீரென்று அடித்தது. சமைலறை ஹால் பெட்ரூம் எல்லாம் ஒரே அறை.ஒருவர் இருமினால் எல்லோரும் துன்புறும் இடவசதியின்மை.கொசு.நிரந்தரமாய் சுருண்டு சுருண்டு வீசும் நாற்றம்.

செல்வாவின் அமமா மிரிண்டா வாங்கிக்கொடுத்தார்.அதிகம் பேசவில்லை.

போகும் போது ஒன்றே ஒன்று சொன்னார் “ எங்களுக்கும் தெக்குபக்கம்தான் தம்பி. செல்வா நல்லா படிப்பாம்.உன்னப்பத்தி அடிக்கடி பேசுவான். நீ இல்லன்னா அவன் இந்தப்படிப்ப விட்டுட்டு ஐ.டி.ஐ சேர்ந்திருப்பானாம். கொஞ்சம் சந்தேகம் இருந்த சிரமம் பாக்காம சொல்லிகுடு”

அதைக்கேட்டு வெளியே நடந்து வரும்போது இனிமேல் மெரினா பீச்சில் உட்கார்ந்து கடலைப்பார்த்து விக்கி விக்கி அழமாட்டேன் என்று தீர்மானமாய் தோண்றியது.

சீனிக்கட்டி கரைந்தே விட்டது....

Thursday 23 May 2013

கலிதொகையில் இருந்து ஐந்து பாடல்கள்...

இதன் நோக்கம் கலித்தொகை மேல ஆர்வத்தை ஏற்படுத்துவதுதான்.எந்த புத்தகத்தில இத படித்தேன் என்பதை பதிவோட கடைசியில சொல்றேன்.

ஒவ்வொரு திணையிலிருந்து ஒரு கலித்தொகைப் பாடலின் அர்த்தத்தை மட்டும் கொடுக்கிறேன்.

1.பாலைக்கலி:பொருள் தேட போன தலைவனை நோக்கி தலைவி சொல்வது.

பொருளுக்காக என்னை பிரிய நினைக்காதே.

உனக்கு மிக விருப்பமான என்னை நினைத்துப் பார்.என் அழகான உடலை நினைத்துப்பார்.

பொருள் தேடி வெளியூர் போகாதவர்களுக்கு உண்ண உணவு கிடைக்காமல் இல்லை.

இளமையும் காதலும் கொடுக்கும் இன்பத்தை நீ தூர தேசம் போய் ஈட்டும் பொருள் கொடுக்குமோ?

வாழும் நாட்களில் உள்ளே இறுக்க அணைத்து ஒருவரது ஆடையை இருவருமாய் உடுத்து வாழ்ந்தால் கூட சேர்ந்தே வாழ்வோம் அன்பே!

2.குறிஞ்சிக்கலி:தலைவியின் காதல் அவள் அம்மாவுக்கு தெரிந்தது கண்டு தோழி சமாதானப்படுத்தும் முறை.

தலைவி ஆற்றில் மூழ்கி தவிக்கும் போது சமயத்தில் காப்பாற்றியவன்.

நம் வீட்டு பெண்ணின் மார்புகள் தலைவனின் மார்பில் அழுந்த பட காதல் கொள்கிறார்கள் என்று ஊரார் சொன்னாலும், நான் என் தலைவியை நம்புகிறேன். அவள் அதெல்லாம் செய்ய மாட்டாள்.
அவள் சொன்னால் மழை இன்றும் பொழியும் ஒழுக்கத்தை உடையவள்.

இங்குள்ள மக்களுக்கு தேன் வேட்டையாட உதவி செய்வது போன்று பல உதவிகளை செய்யும் தலைவனைத்தவிர வேறு யாருக்கும் தலைவியை கொடுத்தல் நியாயமே இல்லை.

இவ்வாறு சொல்லி வாதாடி சம்மதம் பெற்று, அந்த சம்மதத்தை தலைவனிடம் சொல்லி பெண் பார்க்க வரச்சொல்லி விட்டு, அந்த தகவலை தலைவியிடம் சொல்வாளாம் தோழி.

3.மருதக்கலி:பரத்தையர்களிடம் உறவு கொண்டு வரும் தலைவனை நோக்கி தலைவி கூறுவது.

தயவு செய்து நம் செல்ல மகனை தூக்காதே.!

அந்த சிறுவனை நீ தூக்கும் போது, அவன் கைபட்டு உன் மார்பின் சந்தனம் உதிர்ந்தால் உன்னை மகிழ்விக்கும் காதலிகளுக்கு பிடிக்காமல் போகலாம்.

அவன் கைபட்டு உன் நெஞ்சில் சூட்டியிருக்கும் முத்தார மணி மாலை கலைந்தால், உன்னை மகிழ்விக்கும் காதலிகளுக்கு பிடிக்காமல் போகலாம்.

உன் தலையில் சூடியிருக்கும் பூக்களை நம் மகன் கலைத்தால் உன் காதலிகளுக்கு பிடிக்காமல் போகலாம்.

உள்ளே பிற பெண்களை வைத்து, என்னை சமாதானப்படுத்துவதற்காக நம் மகனை கொஞ்சி காட்சி செய்யாதே. நீ தள்ளி போ...

4.முல்லைக்கலி:ஆயர்குலப் பெண்ணை தலைவன் வர்ணிப்பது.

தலையில் மோர்ப்பானையோடு அழகாய் இளமையாய் இருப்பவளை பார்.

இவள்தான் பேரழகி.

தன் குலத்தினர் செய்த கண்ணியை தலையில் வைத்து மோர்ப்பானையை தலையில் வைத்த பாரம் தாங்காமல் ஆடும் அவள் சின்ன இடுப்பைப் பார்.

அது அவள் கழுத்தை விட ஒல்லியாக இருக்கிறதே.

அவள் கோயிலுக்கு போனால் மன்மதக் கடவுளே அழகை பார்த்து கலங்குவானே.

தன் தலைவனை மயக்கிவிடுவாள் என்று இவள் கொடுக்கும் மோர்வேண்டாம், மாங்காய் ஊறுகாயே போதெமென்று சொல்லி, தலைவனை அவள் பின்னால் போகவிடாமல் கதவை சாத்தும் பெண்களை கவனித்தீர்களா?

இவள் காதல் நோயை கொடுப்பவளே அன்றி அதை தீர்க்கும் மருந்தல்ல.

5.நெய்தல் கலி: தலைவியிடம் நன்றாக பழகிய தலைவன், கல்யாணம் என்று வரும் போது மட்டும் காலம் தாழ்த்துகிறான். அவனுக்கு அறிவுரையாக தோழி சொல்லி சீக்கிரம் மணமுடிக்க சொல்வது.

உப்புமணல் குவியலாய் குவிந்திருக்கும் கடற்கரை மணலில் உன் காதல் நோய் தீர, நீ சொன்ன இடத்திற்கு வந்த காரணத்திற்காகவா தலைவனே! என் தலைவியை மணமுடிக்க தயங்குகிறாய்.

உன் தேர் வருமென்று கொடிய கானல் வெயிலில் காத்திருந்து கவலையுற்றிருந்த கண்களை உடையவள் என் தலைவி என்பதாலா, நீ மணமுடிக்க தயங்குகிறாய்.

ஆழகான ஆற்றங்கரையோரம் நிலவொளியில் நீ காதல் செய்ய அழைத்த போது நெஞ்சில் பொங்கும் கனிந்த காதலோடு ஒடி வந்ததால்தான் இப்படி வெற்றுக் காரணம் சொல்லி காலம் தாழ்த்துகிறாயா தலைவனே.

சந்தன மணத்தை உடையவனே! கவலையால் அவளின் தளிர் போன்ற மேனி வாடும் முன் அவளை மணமுடிப்பாயாக!

இதை படித்தது “கலித்தொகை எனும் காதல்தொகை “என்ற புத்தகத்திலிருந்து.

எழுதியவர் இரா.சரவண முத்து. சாரதா பதிப்பகம்.

Wednesday 22 May 2013

கதை போல ஒன்று - 93



”தயவு செய்து என்ன விட்டுட்டு நீங்க மட்டும் போங்கடா.எனக்கு நரசிம்மர பாக்க வேணாம். நான் கிறிஸ்டினா மாறப்போறேன்” என்று சொல்லும் போது, அந்த ஆயிரத்தி ஐநூறு படிக்கட்டில், எழுநூறாவது படிக்கட்டில் படுத்திருந்தேன்.

ராஜனும் கார்த்திக்கும் என்னை முறைத்தார்கள்.

”மச்சி நான் என் ஆளு பிறந்தநாளுக்கு சாமிக்கும்பிட வந்திருக்கேண்டா.கும்பிட்டு பிரசாதம் கொடுத்து ஸீனப்போடனும் நீ வா “என்றான் ராஜன்.

கார்த்திக் என்னைக்காட்டி
”இவன் என்னடா சுத்த ஸ்டாமினாவே இல்ல.நாளைக்கு கல்யாணம் முடிஞ்சி எப்படி வேலை செய்வ.மவனே விடாம வொர்க் அவுட் பண்ண வேண்டியிருக்கும்.இப்படி கிடந்தன்னா உம்பொண்டாட்டி பக்கத்து வீட்டுக்காரனோட எஸ்கேப்பாயிருவா”

“டேய் இது கோயில்டா”

“ஏன் எனக்கு தெரியாதா கோயில்ன்னு.சரி இவன எப்படி மிச்ச படி ஏற வைக்கிறது.எப்ப லட்சுமிநரசிம்மர கும்பிட வைக்கிறது.கழுத்துறுக்காண்டா”

சோளிங்கர் லட்சுமி நரசிம்மரை பார்க்க நானும்தான் ஆசையாகதான் வந்தேன்.

ஆனால் இந்த படிக்கட்டுக்களைதான் ஏறி மாளவில்லை.இருநூறாவது படிக்கட்டில் கொஞ்சமாய் தெரிந்த வலி, ஏற ஏற கால் கடுப்பாகி, மூச்சிரைத்து, அறுநூறாவது படியில் கால்கள் தள்ளாடி எழுநூறாவது படியில் நெட்டாங்கிடையாக படுத்து விட்டேன்.அதற்கு மேல் ஒற்றை அடி என்னால் எடுத்து வைக்க முடியவில்லை. கார்த்திக்கும் ராஜனும் கவலையோடு என்னை பார்த்து இருந்தார்கள்.

கார்த்திக் என் பின்மண்டையை அவன் நெஞ்சில் தூக்கி வைத்து பச்சபுள்ளைக்கு தண்ணீர் கொடுப்பது போல கொடுத்தான்.

“என்ன மச்சி தலைக்கு க்ஷாம்புவே போட மாட்டியா.இவ்வளவு எண்ணய்யா இருக்கு.கொய்யால என் சட்ட பூரா எண்ணய பாரு”

அந்த மயக்கத்திலும் நான் சிரித்தேன்.ராஜன் பக்கத்தில் வந்து தன் பையிலுள்ள  குளுக்கோஸ் பாக்கெட்டை உடைத்து  அப்படியே என் வாயில் தட்டினான்.

அதை அவுக் அவுக்கென்று தின்னும் போதே கேட்டேன்.

“மச்சி ஸ்பூன் கொண்டு வரல”

“ஸ்பூன் உங்க ஆயா கொண்டு வருவாடா. கடுப்பேத்தாத எந்திரிச்சி வாயேண்டா”

“முடியலடா.வேணுமின்னா வராம இருக்கிறேன்.நடக்க முடியல. இரு பத்து நிமிசம் நில்லு. போகலாம்.

அப்போது எங்களை கடந்து போன வயதானவரிடம் நிறைய தடி மரப் பிரம்புகள் இருந்தன.

“தம்பி பாதி தூரம் வந்துட்டீங்க.உங்க கையில கம்பே இல்ல”

“கம்பு எதுக்குண்ணே” என்றேன்.

”இன்னும் மேல ஏற ஏற நிறை குரங்குளா இருக்கும். இத வைச்சிருந்தாதான் பயந்து பக்கத்துல வராது”

“சரி இது எவ்ளோ” என்றேன்.

மூன்று கம்பு ”பதினைச்சி ரூவாய்”.

வாங்கினோம்.அவர்களோடு ஒவ்வொரு படிக்கட்டாய் தத்தி தத்தி ஏறினேன்.

ராஜன் கையில் அந்த பாலித்தீன் கவரை இறுக்க பிடித்திருந்தான்.அதனுள் தேங்காய் பழம் பூ என்று அர்ச்சனை செய்யும் பொருட்கள் இருந்தன.ஒரு விலை உயர்ந்த ஜவ்வாது பாட்டிலும் இருந்தது. அதையும் சாமி முன் வைத்து பூஜை செய்து, அவன் காதலிக்கு கொடுப்பானாம்.காதலி அதை பூசும்போது வரும் நறுமணம் அவனையே ஞாபகபடுத்துமாம்.

அவன் காதல் ஒருதலை காதல் மாதிரி ஆகிவிடாமல் அவள் பக்கமும் இருந்து சம்மந்தம் வேண்டியும்தான் அர்ச்சனைக்கான பொருட்களை பத்திரமாக எடுத்து போகிறான்.

என்னை கார்த்திக் தாங்கி கூட்டிப்போக, ராஜன் பின்னாடி வந்து கொண்டிருந்தான்.

“மாட்டிக்கிட்டேண்டா.இப்ப என்னடா பண்றது “என்ற குரல் கேட்டு நானும் கார்த்திக்கும் திரும்பினோம்.

ஒரு குரங்கு, ராஜன் கையில் வைத்திருந்த தேங்காயை, பாலத்தீன் கவரில் தொங்கிக்கொண்டிருந்த தேங்காயை இறுக்க பற்றிக்கொண்டடிருந்தது.

“அந்த பார்சல அதுகிட்ட கொடுத்திரு.ரிஸ்க எடுக்காத.கடிச்சி வெச்சிரப்போகுதுடா.குரங்கு கடிக்கு மருந்தே கிடையாதுன்னு கம்பு விக்கறவர் சொன்னாரு கேட்டல்ல.” என்றேன்.

ராஜனுக்கு கவரை விட மனதில்லை.ரொம்ப செண்டிமெண்டாக உணர்ந்திருப்பான் போல. கார்த்திக் பதட்டமானான்.

“நாய அத கொடுத்துட்டு வாடா.அவல்லாம் ஒரு ஆளுன்னு செண்டிமெண்ட் போடுற.உங்கள மாதிரி ஆளுங்கதாண்டா மொக்க ஃபிகரெல்லாம் உசுப்பேத்தி விடுறது”

“காதல பத்தி பேசாத. என் மனசுக்குள்ள இருக்குடா” என்று ராஜன் குரங்கிடம் ஆவேசமாய் பையை கொடுத்து விட்டு வந்தான்.

“புடுங்குன காதல்.அதுக்காக குரங்கு கிட்ட கடி வாங்குவானாம்” கார்த்திக் சவுண்டாய் பேச, ராஜன் அமைதியானான்.

கார்த்திக் சென்று ராஜன் தோளில் கையை போட்டுக்கொண்டான்.” இல்லடா நான் படிச்சிருக்கேன். ஒரு அம்மா அப்பா சின்ன பாப்பா மூணுபேரும் சின்ன துடுப்பு போடுற படகுல சவாரி போனாங்களாம். அந்த சின்ன குழந்தயில்ல அது தண்ணிக்குள்ள கைய விட்டு ராவிகிட்டு வரும்போது, முதலை ஒன்று அந்த  சின்னபிள்ள கையை பிடிச்சிட்டாம்.இப்ப அந்த பிள்ளைய தண்ணீல முதலைக்கு போடலைன்னா எல்லோரையும் முதலை கீழ் இழுத்திரும். அந்த அப்பாவும் அம்மாவும் குழந்தையையே தூக்கி ஆத்துல போட்டுட்டு வந்தாங்களாம்.அப்படி போகுது காலம். இவர் என்னடான்னா அர்ச்சனை பூ பழத்த குரங்கு தூக்கிட்டு போயிட்டாம்.”

“இந்த கதைய நிறைய பேர் சொல்றாங்க.உண்மையா பொய்யான்னு தெரிய மாட்டேங்குது. இந்த லேடீஸ் ஹாஸ்டலுக்குள்ள துணி வெளுக்கிறவன் தெரியாம நுழையும் போது அவன எல்லா லேடிஸும் ராப் பண்ணிருவாங்கன்னு பொதுவா ஒரு கத சொல்லுவாங்கல்ல அது மாதிரிதான கார்த்திக் சொல்ற “ என்றேன்.

”இந்த கதை சொல்லும் உணர்வு நமக்கு புரியுதா அவ்வளவுதான் நமக்கு வேணும்.அந்த கதை உண்மையா பொய்யான்னு ஏன் ஆராய்ச்சி பண்ணனும்.

நான் டாப்பிக்க மாத்தினேன்.” தேங்காய கூட தூக்கிட்டு போயிடுச்சியே” ராஜன் .

“இந்த குரங்க சும்மா விடமாட்டேன்டா” என்றான் ராஜன்.கம்பை கையில் வாங்கி விசுக் விசுகென்று வீசினான்.அவனை பார்க்கும் குரங்குகளை எல்லாம் துரத்தி துரத்தியடித்தான்.அவன் காதலுக்கு செய்ய முடிந்த காணிக்கையாகவே அதை நினைத்தான்.

அந்த குரங்குகள் தேங்காய் பழத்தை எடுத்தது கூட போகட்டும்.ஆனால் பாரிமுனையில் தெரிந்தவரிடம் சொல்லி வைத்து வாங்கின விலை உயர்ந்த ஜவ்வாது பாட்டிலையுமா பாலத்தீன் கவரோடு இந்த குரங்குகள் எடுத்துப்போகும். அந்த ஜவ்வாதை குரங்குகளுக்கு உபயோகப்படுத்த தெரியுமா? அப்படி உபயோகப்ப்டுத்தினாலும் நாற்றம் பிடித்த குரங்குளின் உடலில் அது வாசனையை கொடுக்குமா?

காமன்சென்ஸே இல்லாத குரங்குகளை இப்படி மலைமுழுவதும் நிரப்பி வைத்திருக்கிறாறே லட்சுமி நரசிம்மர்.அவர் வேண்டுமானால் உங்களை மன்னிக்கலாம்.ஆனால் குரங்குகளே இந்த ராஜன் உங்களை மன்னிக்க மாட்டான் என்று  சொல்லிக்கொண்டான்.

கொஞ்சம் கொஞ்சமாக தைரியம் வந்து ராஜன் பெரிய குரங்கை அடிக்க வீசும்போதுதான் அது நடந்தது.அந்த குரங்கு சட்டென்று சினந்து பார்த்து ராஜனை தாக்க ஒடிவந்தது.அது ஒடிவரும் வேகத்தைப்பார்ட்த்து மூவரும் ஒடினோம் தரையை நோக்கி.

குரங்கு குதித்து குதித்து பக்கத்தில் ஒடிவருகிறது, கார்த்திக் என்னை இழுத்து குரங்கு முன் விட்டு ஒடுகிறான்,ராஜன் என்னையும் கார்த்திக் இரண்டு பேரையும் இழுத்து விட்டு ஒடுகிறான்.நான் கைகால்கள் ஆட அவர்கள் இரண்டு பேரையும் குரங்கு முன் இழுத்துவிட்டு ஒடுகிறேன்.

இழுப்பென்றால் சாதரண இழுப்பெல்ல. பலம் கொண்ட மட்டும் ஒருவரை ஒருவர் குரங்கின் முன் தள்ளிவிடுகிறோம்.

ராஜனை இழுத்து விட்டதில் அவன் சட்டை பித்தான்கள்  தெறித்து ஒடியது.கார்த்திக் ராஜனை இழுத்துவிட்டதில் ராஜனின் கால்களில் சிராய்ப்பு.

உயிர் காக்கும் போராட்டத்தில் வரும் வெறியை இட்டுக்கட்டி கொண்டு வரவே முடியாது. அது அப்போது மட்டுமே வரும்.

லட்சுமி நரசிம்மர் ஆசீர்வாததித்தினால் இன்னும் நிறைய பேர் வந்து அந்த வெறிபிடித்த குரங்கை விரட்டி விட்டனர்.

குரங்கு போய்விட்டது என்று தெரிந்ததும். நிம்மதியாக தண்ணீரை குடித்தோம்.

நான் ஆரம்பித்தேன்.

“என்னடா சினன் குரங்கு தொரத்துனதுக்கே இப்படி ஒடுறோம்.ஒடுறது கூட முக்கியமில்ல.இப்படி மூணு பேரும் ஒருத்தன ஒருத்தன் இழுத்து விட்டுட்டு ஒடுறோம்.அவ்வளவுதானா ம்ச்சி பிரண்க்ஷிப்.பிரச்சனைன்னு வந்தா இப்படித்தான் சுயநலமா இருப்போம் போல.என்னா பதட்டம் பாத்தியா. நான் நான் நான் , நம்ம உடம்பு.நம்ம கைகால் எல்லாம் நல்லாயிருக்கனும்ங்கிற ஆவேசத்துல அடுத்தவன எப்படி தள்ளி விடுறோம் பாத்தியா. குரங்குக்கு பதிலா புலி துரத்திச்சுன்னா என்ன பண்ணியிருப்போம்டா “ என்றேன்.

”நானே உங்க ரெண்டு பேரையும் தலையில அடிச்சி புலிக்கு போட்டுட்டு,அது உங்கள சாப்பிட்டுடிருக்கும் போது ஒடிவந்திருப்பேன்” என்றான் கார்த்திக்.

அதை அவன் சிரித்து சொல்லவில்லை.புளியங்காய் புளிக்கும் என்று இயல்பை இயல்பாக சொல்வது போல சொன்னான்.

”அவ்வளவுதானாடா நட்பு”  என்றான் ராஜன்.

“அவ்வளவுதான் மச்சி நட்பு” அதுக்கு மேல ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது. என்று சொல்லி ராஜனின் தோளில் கைபோட இருவரும் படிகளில் ஏறினார்கள்.

குரங்கு துரத்தினதில் கீழே ஒடிவந்த நூறு படிகளை மறுபடியும் ஏறவேண்டுமே என்ற கவலையில் நான் கால்களை எடுத்து வைத்தேன்.

Saturday 4 May 2013

கதை போல ஒன்று - 92




விநோத மிருகம் போல்தான் இருந்தது திடுமென பார்க்க.

இன்னும் கொஞ்சம் கண்களை குவித்தாலே மட்டும் அது நாயாகத் தெரிகிறது.

அசைக்க முடியாத உடலை கொண்டு தொடர்ந்து நகர முயற்சிப்பதும், அது முடியாத பட்சத்தில் கழுத்தை மட்டும் மேலே தூக்கி தூக்கி ஒலம் போடுவதும்,வாயில் ஒழுகும் கோளையுடனும் ஒலம் போடுவதைப் பார்க்க அவ்வளவு ரம்மியமானதாய் இல்லை.

கட்டாந்தரை சூரியனை பிரதிபலித்து நெருப்பாகிக்கிடக்க,புவியீர்ப்பினால் ”பாதி உடல் செயலற்ற” நாய் அதில் கிடந்து உருண்டுழல்வது பரிதாபமே.

நாயின் கழுத்தில் கிடக்கும் பட்டை அதை ஏதோ வீட்டுநாய் என்று சொல்லிக்கொண்டிருந்தது.

கிட்டப்போய் பார்த்தேன்.உடல் முழுவதும் புண்கள் கண்களுக்கு தெரிந்தும், வாடை மூக்கைத் துளைத்தும் நாயின் சேதியை சொல்லின.

நண்பர்களிடம் விசாரித்ததில் தெரியவில்லை என்கிறார்கள்.பக்கத்தில் இருக்கும் பழக்கடையிலும் அதே பதில்தான்.

நாயின் தன்மையிலிருந்து விலகி புழுவின் தன்மை கொண்டதாய் அந்த வெயிலில் அது துடித்தது.

சிராஜுதினிடம் கேட்டேன்.

“மச்சி என்ன பண்ணலாம்டா.ரொம்ப பாவமா இருக்கு.சனியன் செத்தும் போக மாட்டேங்குது.பாவமா இருக்கு.அப்படியே க்ஷூவ வெச்சி ஒரு நிமிசம் ஏறி நின்னுருவோமா.செத்துரும்.நிம்மதி”

சிராஜுதின் சீரியஸாக சொன்னான் ”மச்சி தண்ணி கொடுப்போம்”பழக்கடையில் நீர் வாங்கிவந்து உடைந்த பிளாஸ்டிக் தட்டு ஒன்றை கண்டு பிடித்து நாய்க்கு அதில் நீர்விட்டுக்  கொடுத்தான்.கொஞ்சம் நக்கியது.

பழக்கடையின் காலி பிளாஸ்டிக் கூடை இரண்டை கேட்டு வாங்கி ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி கொஞ்சம் நிழல் விழுமாறு செய்தான்.

”சரி இப்ப என்ன பண்றதுடா”

“புளூகிராஸுக்கு போன் பண்ணு” என்றான் சிராஜுதின்.

“எனக்கு நம்பர் தெரியாது”

“ஜஸ்ட் டயலுக்கு போட்டு கேளுடா” நாயின் மீது கண்களை அகற்றாமலே சொன்னான்.

ஜஸ்ட் டயல் போட்டு புளூகிராஸ் நம்பர் வாங்கி அழைத்தேன்.

”எந்த இடத்துல சார் நாய் கிடக்குது”

“மேடம் நுங்கம்பாக்கம் சர்ச் கிட்டக்க,அஞ்சப்பர் பக்கத்துல பழக்கடை இருக்கும்ல அதுமுன்னாடி”

“நீங்க எங்க இருக்கீங்க சார்”

“நானும் ஃபிரண்டும் நாய் பகக்த்திலே நிக்குறோம்.உடனே வாங்க”

“நாய் உயிரோட இருக்கா”

“இருக்கு மேடம்.சீக்கிரம் வாங்க.வெயில்ல கிடந்து துடிக்குது.உடம்புல பாதி வேலை செய்ய மாட்டேங்குது”

“கண்டிப்பா வரோம்”

காத்திருந்தோம்.கொஞ்சம் நிழலும் தண்ணீரும் கிடைத்ததும் நாய் ஆசுவாசித்து படுத்து கிடந்தது.பற்களை நறநறவென்று கடித்து கொண்டிருந்தது, பார்க்க கொஞ்சம் பயத்தையே கொடுத்தது பரிதாபத்தின் தொடர்ச்சியாக.

அரை மணிநேரம் காத்திருந்தோம்.புளூகிராஸ் வரவில்லை.மறுபடி போன் செய்தேன்.

“வரும் சார்.உங்க நம்பருக்கு கால் வரும் “ என்ற பதில் வந்தது.

பழக்கடைக்காரிடம் சொல்லி வந்தோம்.பழக்கடைக்காரருக்கு சலிப்பு.

“ஏம்ப்பா புளூகிராஸ் வந்தா உங்கள கூப்பிடுவாங்கல்ல.என்ன எதும் கேட்பாங்களா.சவம் தூக்கிட்டு போயிட்டா நல்லது.கடைக்க முன்னாடி செத்து கித்து போயிட்டா அப்புற படுத்திறதுக்கு  கஸ்டாமாயிருக்கும்.”

”ண்ணா நாய் பொழச்சிரும்ண்ணா.வாய வெச்சிட்டு சும்மா இருங்க.ஆபீஸ்ல வேல இருக்கு.நாங்க போறோம்.புளுகிராஸ் வரவரைக்கும் பாத்துகிடுங்க.வந்தா கண்டிபா நாங்க வருவோம்.”
சொல்லி லிப்டை பிடித்து மேலே வந்தோம்.

அன்று புது புராஜக்டின் கிக் ஆஃப் மீட்டிங்.

முதலில் வேலையின் முழுத்தன்மையை சொன்னார்கள்.அப்புறம் மெக்கானிக்கல் என்ன செய்ய வேண்டும் என்ற விவாதத்தில் கலந்து கொள்ளும் போது கோழை ஒழுகிய வெயிலில் துடிக்கும் நாய் ஞாபகம் வந்தது.

மெக்கானிக்கல் முடிந்து எலக்டிரிக்கல் வரும் போது சிராஜுதின் கவனமாக குறிப்பு எடுத்து கொண்டிருக்கும் போது ,எனக்கு போன் வந்தது. மீட்டிங் ஹாலை விட்டு ஒடிச்சென்று எடுத்தேன்.

”புளுகிராஸ்ல இருந்து வரோம்.வண்டி ஸ்டெர்லிங் ரோட்ல நிக்குது.எப்படி வரது”

“நீங்க பாலம் சுத்தி இங்க சர்ச் உள்ள ரோடு போகுமே அதுல இருக்கிற அஞ்சப்பர் பக்கதுல வந்துருங்கண்ணே”

“வரேன் நீங்க நில்லுங்க.நீங்க கண்டிப்பா நாய அடையாள்ம் சொல்லனும்”

“சரி” சொல்லிவிட்டு மீட்டிங்க் ஹாலுக்கு நுழைந்து மன்னிப்பு கேட்டு சிராஜுதினிடம் சொன்னேன்.

“மச்சி நான் மீட்டிங்ல இருக்கேன்.நீ மட்டும் போ.போய் அட்டென்ட் பண்ணு.அவனுக்கு அம்பது ரூபா கொடு என்ன.அப்பதான் நாய நல்லா கவனிப்பான்”

மண்டையை ஆட்டி லிஃப்டை பிடித்து கீழே வந்தேன்.

நாய் என்னை கொஞ்சம் ஓரக்கண்ணால் பார்த்தது.இப்போது அது பல்லையெல்லாம் காட்டவில்லை.சோர்வின் உச்சியிருந்தது.

இயலாமையை ஒத்துக்கொண்டு உடலை அசைக்காமல்  படுத்திருந்தது.

புளூகிராஸ் வரவில்லை.

மறுபடியும் போன்.

”ஆமா சர்ச பக்கதுல வர கிருக்ஷ்ணா ஸ்வீட்ஸ் தொட்டு வருமே அதே ரோடுதான்.வாங்க.அங்கதான் நிக்கேன்.வாங்க.”

பெரிய கூண்டு வண்டி வந்து. வேகமாக கையை நீட்டி வண்டியைத் தடுத்தேன்.வண்டியிலிருந்து இருபது வயதுள்ள பையன் குதித்தான்.
டிரைவர் வண்டியை விட்டு இறங்கவில்லை.

பையன் முகத்தை கனிவாக எல்லாம் வைத்திருக்க விரும்பாததால் அவனை நோக்கி வீசிபட்ட புன்னகை தரை விழுந்து கிடந்தது.

நாயின் முகத்தை தூக்கிப்பார்த்தான்.செல்லமாக ரெண்டு அடி அடித்தான்.நாய் அயர்ச்சியாய் கத்தியது.

“உயிர் இருக்கு “ என்று டிரைவரை நோக்கி கத்தினான்.டிரைவர் தூக்கி உள்ளே போடு என்று ஆக்சன் காட்டினார்.

நாயை பிடித்து தூக்கினான்.நல்ல முரட்டு நாய் அது.அதை அணைத்தபடிதான் தூக்க முடியும்.ஆனால் நாயைப்புரட்டினால், ஒரே இடத்தில் படுத்து கிடந்ததினால் ஒருபக்க வயிற்றில் மஞ்சள் நிறப்புண்ணாகி சீழும் கட்டி உடைந்து வழிந்து கொண்டிருந்தது.

 அதை தூக்கினால் அவன் சட்டை முழுவதும் ஆகிவிடும்.

இரண்டு முறை தூக்க முயற்சிபதும் பிறகு கீழே கிடத்தி விடுவதுமாய் திணறினான்.

கூடிய கூட்டத்தில் யாரும் வரவில்லை.அந்த நாற்றம் சுவாசிப்பதற்கே முடியவில்லை.எப்படி தொட்டுத்தூக்குவார்கள்.

பையன் என்னைப்பார்க்காமலே நான்தான் அவனுக்கு உதவமுடியும் என்று தோண்றிற்று.

வேறு வழியில்லை.நாயின் நிலமை மிக மோசமாக இருக்கிறது.இப்போது எடுத்துப்போனால்தான் எதாவது மருத்துவம் பார்ப்பார்கள்.ஏனோ தெரியவில்லை அந்த நாயை காப்பாற்ற வேண்டும் என்று துடித்தது.சட்டையை மடக்கி விட்டுக்கொண்டேன்.

“பின்னங்கால நான் புடிச்சிக்கிறேன்.முன்னாடி நீ புடிச்சிக்கோ.திடீருன்னு கொளைச்சாலும் நீ சமாளிப்பல்ல.”

“சரி பாஸ் தூக்குங்க”

நாயின் மிக அருகே போனேன்.பின்னங்காலை தொட்டுத்தூக்கினேன்.வாடை நாசியின் உள்ளே போய் கசப்பு சுவையை கொடுத்தது.

நாய் ஹூய் ஹூய் என்று ஒலமிட்டது.இரண்டு காலையும் பிடித்து தூக்கினால்.நாயின் உடலில் வடியும் அழுகிய நீரெல்லாம் என் உள்ளங்கையில் பரவி முழங்கைக்கு வரும் போல தெரிகிறது.அருவருப்பால் கைநடுங்கிறது.

வேகமாக  வண்டியை நோக்கி வருகிறேன்.

முதல் கதவு திறந்திருக்கிறது,ஆனால் வண்டியில் இருக்கும் பெரிய கூண்டுகதவில் ஒரு இரும்பு வளைவு கம்பியை கொண்டு தாளிட்டு வைத்திருக்கிறார்கள்.அதை எப்படி திறப்பது என்று தெரியாமல் முழிக்க, புளுகிராஸ் பையன் கத்தினான்.

“சார் உங்கள யாரு கதவுகிட்ட போகச்சொன்னது.நான் சொல்றதுக்கு முன்னாடியே போறீங்க.நீங்க இப்படி வாங்க நான் திறக்கிறேன்.”

அழுகிகொண்டிருக்கும் நாயின் நகம் கைகளில் உரச எனக்கு பதட்டத்தில் ஒன்றுமே புரியவில்லை.

ஒரு காலைபிடித்து கொண்டிருந்த கையை விட்டு கூண்டு கொண்டியை திறக்கிறேன். வலி தாங்க முடியாமல் நாய் கத்துகிறது,பையன் கத்துகிறான்.கையெல்லாம் வேலை செய்ய வில்லை.சட்டென்று கூண்டு உள்ளே ஏறமுயன்றேன்.

உள்ளே மேலும் இரண்டு நாய்கள் அரைகுறை மயக்கத்தில் கிடந்தன.

“சார் கூண்டுக்குள்ள போகாதீங்க.நீங்க போகவே கூடாது.இங்க இருந்தே மெல்லமா வைங்க.ஆனா கொஞ்சம் தள்ளிவைங்க”
அவன் லாவகாமாக கொஞ்சம் தள்ளி தாலாட்டுவதுபோல ஆட்டினான்.நானும் நாயை அப்படித்தான் ஆட்டினேன்.ஆனால் நாயின் உடலில் இருந்து தொடர்ச்சியாக சொட்டிய துளிகள் பாதத்தில் பட மூன்றாவது வீச்சை பெரிதாக வீசி நாயை உள்ளே போடுவதற்கு பதிலாக வீசியெறிந்தேன் என்னையறியாமல்.

நாய் உள்ளே விழுந்து” கெள்ள்ள்ள்ள்ள்” என்று ஒரு மரண ஒலத்தோடு விழுந்தது,

பையன் என்னை முறைத்து விட்டு கூண்டை சாத்தி வண்டி கதவை சாத்த டிரைவர் வண்டியை எடுத்துப்போனார்.அவனுக்கு கொடுக்க வைத்திருந்த ஐம்பது ரூபாயைக்கூட கொடுக்க முடியவில்லை.

பழக்கடைக்காருக்கு என் மேல் பரிதாபம்.அவரே கைகழுவ தண்ணீர் ஊற்றினார்.கழுவி விட்டு ஆபீஸ் ரெஸ்ட் ரூமில் சோப் போட்டு கழுவ கழுவ அந்த நாய் தூக்கிப்போடப்படும் போது போட்ட சத்ததை யோசித்து கொண்டே இருக்கிறேன்.

நிச்சயமாக அது நாயின் மரண ஒலம் போலத்தான் இருந்தது.

அருவருப்பினால் அவசரப்பட்டு நாயை வீசிவிட்ட குற்ற உணர்வு பொங்கி பொங்கி வந்தது.

கைகழுவி விட்டு வெளியே வரவும். சிராஜுதின் மீட்டிங் முடிந்து வெளியே வரவும் சரியாக இருந்தது.

‘என்ன மச்சி நாயை நல்ல படியா ஒப்படைச்சிட்டியா.பொழச்சிருமா மச்சி” என்றான்.

“ஆ பொழச்சிரும் போலத்தான் இருந்துச்சி.புளுகிராஸ்ல அத பொழைக்கவெக்க எண்பது சதவிகிதம் சான்ஸ் இருக்கு மாதிரிதான் சொன்னாங்க”

“சூப்பர் மச்சி.தேங்ஸ்டா.கலக்கிட்ட விஜய்”

எனக்கே தெரியாமல் சிராஜுதின் எடுத்த முயற்சியால்,அந்த மாதம் ’கேரர் அண்டு க்ஷேரர்’ அவார்டு எனக்காக கம்பெனியினால் கொடுக்கபட்டிருந்ததை நோட்டீஸ் போர்டு இப்படி சொல்லியது. “கம்பெனி வாசலில் அடிபட்டு கிடந்த நாய்க்கு கருணையோடு முதலுதவி செய்து,புளூகிராஸிடம் ஒப்படைத்து குணமடைய வைத்து நம்மையெல்லாம் பெருமையடைய வைத்த விஜயபாஸ்க்கருக்கு இந்த மாதம் பெஸ்ட் ’கேரர் அண்டு க்ஷேரர்” எம்பிளாயீ அவார்டை கொடுக்கிறோம்.

அதைப்படிக்கும் போது யாருக்கும் கேட்காத நாயின் மரண ஒலம் என் காதிற்கு தெளிவாக கேட்டது.

Wednesday 1 May 2013

கதை போல் ஒன்று - 91


டியர் சார்,

உங்க விளம்பரத்த பத்திரிக்கையில படிச்சேன்.

ரொம்ப நாளா உங்களுக்கு லட்டர் எழுதுவோமா வேணாமான்னு எனக்கு வெக்கமா இருந்துச்சு.ஆனா எனக்கு வேற வழியே இல்லை.

உங்க விளம்பரத்துல திக்குவாய குணப்படுத்துவோம்ன்னு போட்டிருந்தீங்க.அதப் பார்த்ததும் மனசுக்கு நிம்மதியா இருந்துச்சி.

எனக்கு திக்குவாய் இருக்கு சார்.ஆனா எப்போதும் திக்காது.

சில சமயம், ஒரு சபையில ஒரு புத்தகத்த வாசிக்க சொன்னா திக்கும்.

சாதரணமா பயம் இல்லாம பேசினா நிறைய பேசுவேன்.கத்துவேன்.பாடுவேன்.ஆனா பயம் வந்துச்சின்னா திக்குவேன்.

அது எப்போ ஆரம்பிச்சிதுன்னும் சொல்றேன்.

சின்ன வயசுல நான் ஸ்கூல்ல எதாவது வாசிக்க சொன்ன டக்குன்னு எந்திரிச்சி வாசிப்பேன்.

அஞ்சாங்கிளாஸ்ல புறாவுக்காக தன் தொடைகறியையே அறுத்துக்கொடுப்பாரே கிள்ளிவளவன், அந்த நாடகத்துல எல்லாம் நடிச்சி பாராட்டு வாங்கியிருக்கேன்.

பேச்சுப்போட்டியில் பரிசு வாங்கியிருக்கேன்.

அப்படி எனக்கு நல்ல பேரு இருக்கிறதே எனக்கு பிரச்சனையா முடிஞ்சது.

அஞ்சாங் கிளாஸ் வரைக்கும் தான் எங்க ஸ்கூல்ல கோ-எட்.அதுக்கப்புறம் கேர்ள்ஸ் மட்டும்தான் படிக்கலாம்.பாய்ஸ் வேற ஸ்கூலுக்கு போயிருவோம்.

அதனால எங்க கிளாஸ் மிஸ் “சோசியல் டே” ஒண்ணு வெச்சிருந்தாங்க.

அதுக்கு ஹச்.எம் லில்லி புக்ஷ்ப்பம் சிஸ்டரையும்,மதரையும் கூப்பிட்டுருந்தாங்க.

அந்த சின்ன விழாவுல “வோட் ஆஃப் தேங்க்ஸ்” சொல்றதுக்கு நல்லா பேசுற ஆளத்தேடினாங்க.எல்லோரும் என்னச்சொல்ல நான் மிஸ் முன்னாடி நின்னேன்.

“என்னப்பா நல்லா பேசுவியா “

நான் தலையசைத்தேன்.தன் கைப்பையில் இருந்த பேப்பரில் எழுதப்பட்ட கட்டுரையை என்னிடம் கொடுத்து.

“நல்லா படிச்சிட்டு வந்து பேசு” அப்படின்னாங்க.

நான் வீட்டுக்கு வந்து படிச்சேன்.ரெண்டு நாள் முழுசா படிச்சிட்டு மிஸ்கிட்ட போனேன்.

படிச்சிட்டேன் அப்படின்னு சொன்னேன்.

சரி பேசுன்னு சொல்லி நான் பேச ஆரம்பிக்க போகும் போது என் தலையில பிரம்பால கொஞ்சம் வலிக்கிறமாதிரி ஒரு அடி விழுந்தது.

பயத்துல திரும்பி பார்த்தேன்.பின்னாடி லில்லி புக்ஷ்பம் சிஸ்டர் நின்னுட்டிருந்தாங்க.எதுக்கு தலையில அடிச்சாங்கன்னு எனக்கு புரியவே இல்ல.

”பேசும்போது ஒழுங்கா ஸ்டெரெயிட்டா நில்லு” ன்னு அதட்டலா சொன்னாங்க.

அப்புறம் அவங்களும் எனக்கு எதிர்த்தாப்போல உட்கார்ந்து “ம்ம்ம் கண்டினியூ” ன்னு சொன்னாங்க.

மொத மொறையா என்னால பேச முடியல சார்.( எழுதும் போது கைநடுங்குது சார்).

சிஸ்டர பார்த்ததும் நாகெல்லாம் கொழருது. பேசுத்தொடங்கும் போதே சடார்ன்னு தலையில அடிச்சா அதிர்ச்சியாத்தான சார் இருக்கும்.

அத ஏன் சார் அவங்க எனக்கு அப்படி செஞ்சாங்க.பேசும் போதே பயமாயிருந்துச்சி சார்.

சொல்றேன்.

 பேசிக்கிட்டு இருக்கும் போதே சிஸ்டர் உதட்ட பிதுக்கி ரூம விட்டு எந்திருச்சி போயிட்டாங்க.மிஸ்ஸும் என்னப்பார்த்து இன்னும் நல்லா பிரிப்பேர் பண்ணு அப்படின்னு சொன்னாங்க.

மறுநாள் மிஸ்ஸே என்ன கூப்பிட்டு விட்டு “நீ பேச வேண்டாம்ன்னு” சொல்லிட்டாங்க.

அந்த சம்பவம் கொடுத்த அவமானம்தான் சார் எனக்கு திக்குவாய் வர மொத காரணம்.

அது என் மனசுல ஆழமா பதிஞ்சது.

ஆறாங்கிளாஸ்ல வேற ஸ்கூல்.மிஸ்ஸெல்லாம் கிடையாது.வாத்தியார்தான்.

வாத்தியார் எதையாவது வாசிக்க சொன்னா பயமா இருக்கும்.ஆனா எப்படியோ தேத்தி திணறி வாசிச்சிருவேன்.

எங்க கிளாஸ் எழுவது பேர் படிக்கிறதால ரொம்ப வாசிக்கிறதும் அதிகம் வராது.ஏழாங்கிளாஸும் சமாளிச்சிட்டேன்.

எட்டாங்கிளாஸ்ல தான் எனக்கு இந்த பிரச்சனை அதிகமா வந்துச்சி. நடராஜன் சார் என்ன செய்வார் தமிழ் பாடத்த ஓவ்வொரு பத்தியா படிக்க சொல்லுவார்.

ஒருத்தன் படிச்சிட்டிருக்கும் போது பாதில அவன நிறுத்தச்சொல்லி யாரோ ஒருத்தன தொடர சொல்லுவார்.

விட்ட இடத்துல இருந்து படிக்கலன்னா அடிப்பார்.

அவர் பிரீயடு வந்தாலே பயமா இருக்கும்.

வரிசைப்படி வாசிக்க சொன்னாக்கூட சமாளிக்கலாம். மனச கொஞ்சம் தேத்தி வெச்சிக்கலாம்.ஆனா திடீர்ன்னு சொன்னா பயம்தான வரும்.

மூணு வாரம் தப்பிச்சிட்டேன்.

நாலாவது வாரம் என்னப்பாத்து கைநீட்டி “ஏ நீ வாசி” என்றார்.பதறி எழுந்து விட்ட இடத்தில் இருந்து வாசிக்க முயற்சி பண்ணும்ப்போது புக் கிழே விழுந்து விட்டது.

 “எல கண்ணாடிகாரா லூஸால நீ. ஏம்ல கையெல்லாம் நடுங்குவு” என்று நடராஜன் சார் கேட்க கிளாஸே சிரித்தது.அவசரமாய் புக்கை எடுத்து பத்தியை பிடித்து வாசிக்கும் போது என்னுடைய கீச்சி குரல்தான் வருக்கிறது.

பதட்டத்தில் கீச்சு குரலால் இருவரிகள் வாசித்துவிட்டேன்.

டாக்டர் சார். சொல்ல மறந்துட்டேன்.

எனக்கு கீச்சி குரலும் உண்டு, ஆண் குரலும் உண்டு. டபுள் குரல் வரும்.

கவனமாக கீச்சிக்குரலை பின்தள்ளி ஆண்குரலை முன்னிருத்தி பேசுவேன்.அதனால் என்னுடைய குறையை எளிதில் யாரும் கண்டுபிடிக்க முடியாது.

ஆனால் அந்த பதட்டத்தில் அது வந்துவிட்டது சார்.

என் கீச்சுகுரலை கேட்டதும் கிளாஸே சிரித்தது.

இந்த சமுதாயம் எவ்வளவு கொடூரமானதென்று அன்று நான் தெரிந்துகொண்டேன் சார்.காலில்லாமல் விழுபவனைப் பார்த்து சிரிக்கும் சமுதாயம்.கொட்டை வீங்கியவன் ஜட்டி போடமுடியாததைப்பார்த்து சிரிக்கும் சமுதாயம்.

நடராஜன் சாரும் அதிகம் சிரித்து என்னை உட்கார வைத்து விட்டார்.

அந்த சம்பவத்திலிருந்து பொது இடத்தில் எல்லோரும்  பார்க்க பேச வாய் திக்குகிறது சார்.பக்கத்து தெரு கடையில் “அரிசி என்ன விலை? “ என்று எல்லோரும் பார்க்க என்னால் பேச முடியவில்லை.

எல்லோரும் என்னை கவனிக்கிறார்கள் என்ற பயத்தால் வாய் திக்குகிறது.கொன்னுகிறது சார்.

பஸ்ஸில் டிக்கட் எடுக்கும் போது சட்டென்று இடம் பெயரை சொல்ல முடியவில்லை.திக்குகிறது.

வகுப்பில் பல கேள்விகளுக்கு எனக்கு விடை தெரிந்திருந்தாலும் வாய் திக்குவதால் சொல்ல முடியவில்லை. அந்த அவமானத்திற்கு பயந்து பதில் தெரியாதது மாதிரியே இருந்து விடுவேன்.அடி வாங்குவேன்.

இங்கிலீஸ் மிஸ் வரிசையாக வாசிக்க சொல்லும் போது என் முறை வரும் போது, எழுந்து நான் தடுமாறுவதைப்பார்த்து எதிரிக்கும் இரக்கம் வரும் சார்.

கூடப்படிக்கும் பையன்கள் “டீச்சர் அவனுக்கு திக்கும் “ என்று சொல்ல அப்போது அந்த டீச்சர் என்னை ஒரு பரிதாபப்பார்வை பார்த்தார்கள் சார்.அந்த பார்வை என் முதுகிலேயே ஒட்டிக்கொண்டு இருக்கிறது இந்த கடிதத்தை எழுதும்போது கூட.

நான் டியூசன் படிக்கும் வாத்தியார் என்னை புரிந்து கொண்டு, என்னை ஒப்பிக்க சொல்வதே கிடையாது.நோட்டில் எழுதிக்காட்டு என்றே சொல்லிவிடுவார்.எல்லா பசங்களும் அவரிடம் கட கடவென்று ஒப்பிக்கும் போது நான் மட்டும் மாங்கு மாங்கென்று எழுதிக்கிடப்பேன் சார்.

எனக்கு என் பிரச்சனை புரிகிறது.பயத்தால்தான் என் வாய் திக்குகிறது. தினமும் காலையில், பயப்படக்ககூடாது என்றுதான் மனதிற்குள் சொல்லி செல்வேன்.ஆனால் பிரச்சனை என்று வரும்ப்போது பயம் வருகிறது. தனியா இருக்கும் போது

என்னால “அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
நச்சைவாயிலே கொணர்ந்து நண்பரூட்டும் போதிலும்” மாதிரி பாட்ட முழுசா தெளிவா பாடமுடியுது.ஆனா நிறைய பேர் பாக்கும் போது திக்குது சார்.எப்படியாவது என்ன கொணப்படுத்துங்க சார்.

தினமும் கிளாஸ்ல வாத்தியார்கிட்ட ”யெஸ் சார்” “பிரசண்ட் சார்” அப்படின்னு அட்டெண்டன்ஸ் சொல்றதுக்கு முன்னாடி நான் திணறு திணறல நினைச்சாலே பயமாயிருக்கு சார்.

லைஃபே பிடிக்கல சார். உங்களத்தான் நான் நம்பிருக்கேன்.
இதுக்கு பதில் லெட்டர என் கிளாஸ் அட்ரஸுக்கு அனுப்பிருங்க.

வீட்டு அட்ரசுக்கு அனுப்பினா எல்லாருக்கும் தெரிஞ்சிரும்.

என் அட்ரஸ் எழுதுறேன்.
என்.விஜய்
நைன்த் ஸ்டாண்டர்டு
ஏ செக்சன்
எஸ்.எல்.பி ஸ்கூல்
நாகர்கோவில் -2

இப்படிக்கு அன்புள்ள
விஜய்.