Thursday 23 May 2013

கலிதொகையில் இருந்து ஐந்து பாடல்கள்...

இதன் நோக்கம் கலித்தொகை மேல ஆர்வத்தை ஏற்படுத்துவதுதான்.எந்த புத்தகத்தில இத படித்தேன் என்பதை பதிவோட கடைசியில சொல்றேன்.

ஒவ்வொரு திணையிலிருந்து ஒரு கலித்தொகைப் பாடலின் அர்த்தத்தை மட்டும் கொடுக்கிறேன்.

1.பாலைக்கலி:பொருள் தேட போன தலைவனை நோக்கி தலைவி சொல்வது.

பொருளுக்காக என்னை பிரிய நினைக்காதே.

உனக்கு மிக விருப்பமான என்னை நினைத்துப் பார்.என் அழகான உடலை நினைத்துப்பார்.

பொருள் தேடி வெளியூர் போகாதவர்களுக்கு உண்ண உணவு கிடைக்காமல் இல்லை.

இளமையும் காதலும் கொடுக்கும் இன்பத்தை நீ தூர தேசம் போய் ஈட்டும் பொருள் கொடுக்குமோ?

வாழும் நாட்களில் உள்ளே இறுக்க அணைத்து ஒருவரது ஆடையை இருவருமாய் உடுத்து வாழ்ந்தால் கூட சேர்ந்தே வாழ்வோம் அன்பே!

2.குறிஞ்சிக்கலி:தலைவியின் காதல் அவள் அம்மாவுக்கு தெரிந்தது கண்டு தோழி சமாதானப்படுத்தும் முறை.

தலைவி ஆற்றில் மூழ்கி தவிக்கும் போது சமயத்தில் காப்பாற்றியவன்.

நம் வீட்டு பெண்ணின் மார்புகள் தலைவனின் மார்பில் அழுந்த பட காதல் கொள்கிறார்கள் என்று ஊரார் சொன்னாலும், நான் என் தலைவியை நம்புகிறேன். அவள் அதெல்லாம் செய்ய மாட்டாள்.
அவள் சொன்னால் மழை இன்றும் பொழியும் ஒழுக்கத்தை உடையவள்.

இங்குள்ள மக்களுக்கு தேன் வேட்டையாட உதவி செய்வது போன்று பல உதவிகளை செய்யும் தலைவனைத்தவிர வேறு யாருக்கும் தலைவியை கொடுத்தல் நியாயமே இல்லை.

இவ்வாறு சொல்லி வாதாடி சம்மதம் பெற்று, அந்த சம்மதத்தை தலைவனிடம் சொல்லி பெண் பார்க்க வரச்சொல்லி விட்டு, அந்த தகவலை தலைவியிடம் சொல்வாளாம் தோழி.

3.மருதக்கலி:பரத்தையர்களிடம் உறவு கொண்டு வரும் தலைவனை நோக்கி தலைவி கூறுவது.

தயவு செய்து நம் செல்ல மகனை தூக்காதே.!

அந்த சிறுவனை நீ தூக்கும் போது, அவன் கைபட்டு உன் மார்பின் சந்தனம் உதிர்ந்தால் உன்னை மகிழ்விக்கும் காதலிகளுக்கு பிடிக்காமல் போகலாம்.

அவன் கைபட்டு உன் நெஞ்சில் சூட்டியிருக்கும் முத்தார மணி மாலை கலைந்தால், உன்னை மகிழ்விக்கும் காதலிகளுக்கு பிடிக்காமல் போகலாம்.

உன் தலையில் சூடியிருக்கும் பூக்களை நம் மகன் கலைத்தால் உன் காதலிகளுக்கு பிடிக்காமல் போகலாம்.

உள்ளே பிற பெண்களை வைத்து, என்னை சமாதானப்படுத்துவதற்காக நம் மகனை கொஞ்சி காட்சி செய்யாதே. நீ தள்ளி போ...

4.முல்லைக்கலி:ஆயர்குலப் பெண்ணை தலைவன் வர்ணிப்பது.

தலையில் மோர்ப்பானையோடு அழகாய் இளமையாய் இருப்பவளை பார்.

இவள்தான் பேரழகி.

தன் குலத்தினர் செய்த கண்ணியை தலையில் வைத்து மோர்ப்பானையை தலையில் வைத்த பாரம் தாங்காமல் ஆடும் அவள் சின்ன இடுப்பைப் பார்.

அது அவள் கழுத்தை விட ஒல்லியாக இருக்கிறதே.

அவள் கோயிலுக்கு போனால் மன்மதக் கடவுளே அழகை பார்த்து கலங்குவானே.

தன் தலைவனை மயக்கிவிடுவாள் என்று இவள் கொடுக்கும் மோர்வேண்டாம், மாங்காய் ஊறுகாயே போதெமென்று சொல்லி, தலைவனை அவள் பின்னால் போகவிடாமல் கதவை சாத்தும் பெண்களை கவனித்தீர்களா?

இவள் காதல் நோயை கொடுப்பவளே அன்றி அதை தீர்க்கும் மருந்தல்ல.

5.நெய்தல் கலி: தலைவியிடம் நன்றாக பழகிய தலைவன், கல்யாணம் என்று வரும் போது மட்டும் காலம் தாழ்த்துகிறான். அவனுக்கு அறிவுரையாக தோழி சொல்லி சீக்கிரம் மணமுடிக்க சொல்வது.

உப்புமணல் குவியலாய் குவிந்திருக்கும் கடற்கரை மணலில் உன் காதல் நோய் தீர, நீ சொன்ன இடத்திற்கு வந்த காரணத்திற்காகவா தலைவனே! என் தலைவியை மணமுடிக்க தயங்குகிறாய்.

உன் தேர் வருமென்று கொடிய கானல் வெயிலில் காத்திருந்து கவலையுற்றிருந்த கண்களை உடையவள் என் தலைவி என்பதாலா, நீ மணமுடிக்க தயங்குகிறாய்.

ஆழகான ஆற்றங்கரையோரம் நிலவொளியில் நீ காதல் செய்ய அழைத்த போது நெஞ்சில் பொங்கும் கனிந்த காதலோடு ஒடி வந்ததால்தான் இப்படி வெற்றுக் காரணம் சொல்லி காலம் தாழ்த்துகிறாயா தலைவனே.

சந்தன மணத்தை உடையவனே! கவலையால் அவளின் தளிர் போன்ற மேனி வாடும் முன் அவளை மணமுடிப்பாயாக!

இதை படித்தது “கலித்தொகை எனும் காதல்தொகை “என்ற புத்தகத்திலிருந்து.

எழுதியவர் இரா.சரவண முத்து. சாரதா பதிப்பகம்.

No comments:

Post a Comment