Monday 30 March 2015

ஆச்சியும் ஒரு நாட்டுப்புறக்கதையும்...

எங்கள் குடும்பத்தில் ஒரு ஆச்சி உண்டு.
அவருடைய பொழுதுபோக்கே கல்யாண வரனுக்கான தகவலை இங்கேயும் அங்கேயும் சொல்லி திருமணம் செய்து வைப்பதுதான்.
ஆச்சிக்கு,விழாக்களில் ஒரு யுவனைப் பார்த்தால், இன்னொரு விழாவில் பார்த்த யுவதியின் நினைவு வரும்.உடனே பையனுடைய அம்மா அப்பாவிடம் பேசுவார்.
அப்படி அப்படி அடுத்த அடுத்த கட்டத்துக்கு போய் அடுத்த இரண்டு மாதங்களில் கல்யாணம் முடிந்திருக்கும்.
இப்படி கல்யாணம் பேசும் போது சில பொய்களை சொல்லவும் தயங்கமாட்டார்.
பையன் டிப்ளமா படித்திருப்பான்.ஆனால் ஆச்சி இன்ஜினியர் என்பார்.இன்னும் ரொம்ப நோண்டிக் கேட்டால்தான் டிப்ளமோ என்றே சொல்வார்.
அதுவும் எப்படி சொல்வார் தெரியுமா? ”நல்ல இடம் நல்ல பையன் நல்ல சம்பந்தம் நல்ல வசதி படிப்பு என்னவோ டிப்ளமோ அல்லது அதுக்கு மேலேயோ சரியாத் தெரியல” என்பார்.
ஒரு பெண்ணுக்கு இதயத்தில் பிரச்சனை என்று சிகிச்சை எடுத்துக் கொண்டார்.அவர் நெஞ்சில் தழும்பொன்று இருக்கும்.அந்தப் பெண்ணின் பெற்றோர்களே மகளுக்கு கல்யாணம் நடக்கும் என்று நம்பவில்லை.
ஆனால் ஆச்சி களத்தில் குதித்து பெண் பார்க்கும் படலம் நடக்க வைத்து, பெண்ணைப் பிடிக்க வைத்து, பெண்ணின் குடும்பத்தைப் பிடிக்க வைத்து கடைசியாக மாப்பிள்ளை வீட்டாரை டாக்டரிடம் அழைத்துச் சென்று “மண வாழ்க்கையில் பிரச்சனையிருக்காது” என்ற நம்பிக்கையை உண்டாக்கினார்.
அவர்கள் தரப்பிலும் ஒரு டாக்டரிடம் கூட்டிச்சென்று காட்டி சோதித்துக் கொள்ள சொன்னார்.திருமணம் நடந்து, இப்போது குழந்தைகளோடு கணவனோடு நல்லபடியாக இருக்கிறார் (பெண்களுக்கு திருமணம்தான் இன்பமா என்ற விவாதம் இந்த இடத்தில் வேண்டாம்.யதார்த்தத்தில் திருமணம் செய்யாமல் நம் சமூகத்தில் இருப்பது கஷ்டம்தானே).
ஒரு ஊரில் கல்யாண வயசுல நெசவாளன் இருந்தானாம்.அவனுக்குன்னு மனுசங்க யாருமே இல்ல.
ஒரு நரி மட்டும்தான் அவனுக்குத் துணை.
”உனக்கு நா கல்யாணம் பண்ணி வெக்கிறேன் நண்பா” என்ற நரி பக்கத்து நாட்டுக்கு போச்சாம்.
அங்கே இளவரசி குளிக்க வர்ற குளத்துக்கு பக்கத்துல நின்னுகிட்டு வெத்தலை போட்டுகிட்டு இருந்துச்சாம்”
இளவரசிக்கு ஆச்சரியம்.நரி வெத்தல போடுமான்னு.நரிகிட்ட கேட்டாளாம்.
“ஆமா இளவரசி எங்க நாட்ல நரி,சிங்கம்,புலின்னு எல்லா மிருகங்களும் வெத்தல போடுவோம்.எங்க ராஜாவோட ஆட்சியில பாலாறும் தேனாறும் ஒடும்”
அது இதுன்னு சொல்லி இளவரசி, மன்னர்,அரசி என்று எல்லார் மனசுலையும் பெரிய நாட்ல இருந்து வர்றா மாதிரி காட்டிகிச்சி.
இப்போ மன்னருக்கு தன் மகள அந்த ராஜாவுக்கு கல்யாணம் செய்து கொடுக்கிற ஆச வந்துச்சி.டபக்குன்னு நரி மூலமா அந்த ராஜாவ பாக்காமலேயே மகளுக்கு நிச்சயம் செய்துட்டார்.
நரி வெற்றிக்களிப்புல இந்தத் தகவல நெசவாளனுக்கு சொல்லிச்சி.
மறுபடியும் ராஜாவ சந்திக்கப் போச்சி “ ராஜா ராஜா எங்க மன்னர் படை பரிவாரத்தோட வந்தாருன்னா அதுகளுக்கு தங்குறதுக்கு உங்க நாட்ல இடமிருக்கா? அதனால மாப்பிள்ளை மட்டும் வருவார்.நீங்க உங்க படைகள அவருக்கு துணைக்கு அனுப்பி கூப்பிட்டுக்கோங்க சரியா”
அதுக்கு ராஜா” இல்ல நா எவ்வளவு பேர் வந்தாலும் தங்க வசதி செய்து கொடுப்பேன்னு” சொன்னாராம்.
“அடைக்கலம் கொடுத்தா சரிதான். நான் இன்னைக்கு பாதி படைய அனுப்பி வெக்கிறேன்” அப்படின்னு சொல்லிட்டு,
நேரே காட்டுக்குப் போய் ஆயிரம் நரி, ஆயிரம் காக்காவ கூட்டிகிட்டு வந்து இரவெல்லாம் ஒரே சத்தமான சத்தம் போடவெச்சதாம்.
ராஜா இளவரசி எல்லோரும் நடுங்கிட்டாங்க அந்த சத்தத்த கேட்டு.
“ஐயோ நிறைய பேர் வந்திருக்காங்க போல இருக்கேன்னு” சொல்லிட்டு நரிகிட்ட ”கல்யாண ராஜாவ மட்டும் வரச்சொல்லுன்னு” சொன்னாராம்.
நெசவாளன் ராஜா வேசம் போட்டுகிட்டு வந்து இளவரசிய கல்யாணம் செய்துட்டு ஊருக்குப் போனானாம்.
ஊருக்கு போனப்புறம்தான் இளவரசிக்கு தன்ன ஏமாத்திட்டாங்கன்னு தெரிஞ்சது.ஆனா நெசவாளன் நல்ல குணமா இருந்ததால கோபம் எல்லாம் போயிட்டதாம்.
இப்ப ஏழ்மைய எப்படி விரட்டுறது.இளவரசி அரிசி மாவ இடிச்சிட்டு வரச்சொன்னாளாம்.அத உடம்பெல்லாம் பூசினாளாம்.
அப்புற காய்ஞ்ச மாவ உதுத்தா மாவெல்லாம் தங்கப்பொடியா விழுது.
அந்தப் தங்கப்பொடிய எடுத்து வித்து நெசவாளன் பெரிய பணக்காரணா வாழ்ந்தானாம்.
நரி ரெண்டு பேரையும் ஆசீர்வாதம் செய்துட்டு காட்டுக்குள்ள தன் கூட்டத்தோட கலந்து போச்சாம்.

No comments:

Post a Comment