Monday 30 March 2015

குடும்பம் நடத்துவது...

இன்னைக்கு மேட்ச்ல இந்தியா யாரு கூட விளையாடுது? என்று என் மகள் கேட்டாள்.
”பங்களாதேஷ்”
”அது எங்க இருக்கு?”
“இப்ப ஆபீஸுக்கு கிளம்புறேன்.அத விளக்கமா சொன்னாத்தான் புரியும்”
”குளோபப் பாத்தா தெரியப் போகுது” என்று சாய்ந்த உலக உருண்டையை என்னிடம் எடுத்து வந்து சுற்றிக் காட்டினாள்.
நான் அதில் பங்களாதேஷைக் காட்டினேன்.அதன் பிறகு பாக்கிஸ்த்தானைக் காட்டினேன்.
“பாத்தியா இதுதான் பாக்கிஸ்தான்”
“ஆமா தெரியும் பாக்கிஸ்தான்னா டெரஸ்டிட்தான.சுட்டுருவாங்க” என்றாள்.
அதிர்ச்சியாயிருந்தது.” ஏன் அப்படி சொல்ற”
“டெரரிஸ்ட்தான். ஸ்கூல் பசங்கள சுட்டுட்டாங்களாமே.எங்க ஸ்கூல்ல அமைதியா இருக்க சொன்னாங்க முன்னாடி ஞாபகம் இருக்கு.பாக்கிஸ்தான்னா டெரரிஸ்ட்தான”
நான் கொஞ்சம் நிதானமாக விளக்கினேன்.
“எந்த நாட்லையும் நம்மளமாதிரி மக்கள்தான் இருப்பாங்க்.
இப்ப நம்ம ரெண்டு பேரும் ஏரோப்பிளேன்ல பாக்கிஸ்தான் போய் இறங்குறோம்ன்னு வெச்சுக்க.
அங்க ஒரு வீட்டுக்குள்ள காலையில எட்டிப்பாத்தா, அங்க ஒரு அப்பா அம்மா அப்புறம் உன்ன மாதிரி கொழந்தைங்க எல்லாம் பரபரப்பா இருப்பாங்க.
பாக்கிஸ்தான் கொழந்தைக்கு அவுங்க அம்மா அன்பா சாதம் ஊட்டுவாங்க,
பாக்கிஸ்தான் அம்மாவும் அப்பாவும் ஆபீஸுக்கு போகும் கொழந்தைக்கு டாட்டா சொல்வாங்க.
பாக்கிஸ்தான் கொழந்தை ரைம்ஸ் சொல்லும். பாக்கிஸ்தான் அப்பா அம்மா அத ரசிப்பாங்க.
பாக்கிஸ்தான் அப்பா பாக்கிஸ்தான் கொழந்தைக்கு ஆசையா சாக்லெட்ட பிச்சி வாயில ஊட்டுவாங்க. பாக்கிஸ்தான் கொழந்த அத சாப்பிட்டு, அந்த பாக்கிஸ்தான் அப்பாவுக்கு முத்தம் கொடுக்கும்.
அப்பா சொல்றது புரியுதா?
இப்படித்தான் எல்லா நாட்லையும் மக்கள் இருக்க ஆசப்படுவாங்க.
நிறைய பேர் இப்படித்தான் இருப்பாங்க.அதனால் எந்த கண்ட்டிரியையும் பாத்து டெரரிஸ்ட் அப்படின்னு சொல்லகூடாது என்ன? “
என்றொரு நீண்ட அட்வைசை சொல்லி வந்தேன்.
ஏனோ அப்படிப் பேசிவிட்டு தெருவில் நடக்கும் போது மிகுந்த உணர்ச்சிவசப்பட்டவனாக இருந்தேன்.
’உலகில் மதம் ஜாதி தீவிரவாதம் போராட்டம் அனைத்தையும் தாண்டி குடும்பம் நடத்தவே அனைவரும் விரும்புகிறார்கள்’
என்ற எளிய விசயத்தை
ஏனோ இன்னும் உள்ளே உள்ளே நுழைந்து அனுபவித்து யோசித்துப் நடந்தேன்.

No comments:

Post a Comment