Monday 30 March 2015

வாதத்தைத் திரிக்கும் ஒற்றைச் சொல்...

சபையில் பேசும் போது சில சொற்களால் அல்லது ஒற்றை வாக்கியத்தால் நாம் சொல்ல வந்த கருத்தே திரிக்கப்பட்டுவிடும்.அது மாதிரி நான் அடைந்த அனுபவம் ஒன்றை பகிர்ந்து கொள்கிறேன்.
பெண் படைப்பாளிகள் நான்கு பேர்களின் புத்தகங்கள் பற்றிய கருத்துப் பரிமாற்றக் கூட்டம் கிட்டத்தட்ட ஆறுமாதங்களுக்கு ? முன்பு பனுவலில் நடந்தது.
அதற்காக தமயந்தி,குட்டி ரேவதி,கவின்மலர்,மற்று அ.வெண்ணிலாவின் சிறுகதைத் தொகுப்புகளைப் படித்து போயிருந்தேன்.நான் மெயின் பேச்சாளர் எல்லாம் இல்லை. இருந்த இடத்தில்தான் மைக்கைப் பிடித்துப் பேசினேன்.
ஒவ்வொரு எழுத்தாளர் எழுதிய கதைகளிலும் எனக்குப் பிடித்த இரண்டு இரண்டு கதைகளைப் பற்றிய குறிப்புகளை எடுத்து வைத்திருந்தேன்.அதையெல்லாம் புகழ்ந்து பேசினேன்.
ஆனால் அந்த சபையில் தொடக்கத்தில் இருந்தே அனைவரும் புகழ்ந்தே பேசி வந்தனர்.சில புகழ்ச்சிகள் சலிப்பூட்டும் அளவுக்கு கூட இருந்தன.சரி அவர்களுக்கு பிடித்திருக்கிறது அவர்கள் புகழ்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.ஒரே ஒரு விமர்சனம் வந்தது. குட்டி ரேவதில் எழுதிய சில கதைகள் கொஞ்சம் செக்ஸாக இருக்கிறது என்ற விமர்சனம்.அதையெல்லாம் எழுத வேண்டுமா? என்றொருவர் கேட்டார்.
எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது. அவர் எழுதிய கதைகளில் எனக்கு பிடித்தமானதாக நான் அதைத்தான் எடுத்து வைத்திருந்தேன்.
நான் புகழ்ந்து பேசினேனா? அதன் பிறகு ஒவ்வொரு எழுத்தாளர்களின் எழுத்தில் இருக்கும் குறைகளைப் பேசினேன்.கவின் மலர் எடுத்துக் கொண்ட கருக்கள் நன்றாயிருந்தாலும் இன்னும் நன்றாக கிராப்ட் செய்திருந்தால் இதைவிட அழகாக இருக்கும் என்று சொன்னேன்.
அந்த வரிசையில் அ.வெண்ணிலா பற்றி சொல்லும் போது
“இந்த சிறுகதைத் தொகுப்பில் வெண்ணிலா ஒரே மையத்தை வைத்து கிட்டத்தட்ட ஏழுகதைகள் எழுதியிருக்கிறார்.அதாவது ஏழு கதைகளிலும் ஒரு பெண் குழந்தை அசால்ட் செய்யப்படுவாள்.ஆட்கள் வெவ்வேறு.தெருப் பையன், ஸ்கூல் வாத்தியார்,
அப்பா, மாமா இப்படி போகும் அந்த லிஸ்ட்.
இவையெல்லாம் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு பத்திரிக்கைகளுக்கு அ.வெண்ணிலா எழுதிக்கொடுத்தவை.
அதைப் படிக்கும் போது.இவை அனைத்தும் ஒற்றைத் தன்மையோடு இருக்கிறதோ என்ற எண்ணம் வருகிறது. நாலு கதை அப்படியிருந்தால், ஒரு கதையில் அந்த தவறு ஆணின் பார்வையும் உளவியலும் ( ஆணை ஞாயப்படுத்த அல்ல) இருந்தால், அந்த பன்மைத்தன்மை இதைவிட சிந்தனையை கிளறுவதாக இருக்குமே” என்று சொன்னேன்.
(மிக மிக டைலர் மேய்டு தன்மையோடு எழுதப்பட்ட கதைகள் அவை)
இப்படி சொல்லும் போது “ஆண்கள் எல்லோரும் பிறக்கும் போதே காமத்தை சுமந்து இப்படித்தான் செய்ய வேண்டும் என்று வருவதில்லையே”என்று கொஞ்சம் குரலை சிரிப்பாக வைத்து சொல்லிவிட்டேன்.
அந்த வாக்கியம் நான் தவறுதலாக சொன்ன வாக்கியம்தான்.அது நிச்சயமாக பெண்களின் மனதை புண்படுத்தியிருக்கும்.சபையோரின் மனதை புண்படுத்தி இருக்கும்.
அடுத்து கொஞ்சம் நேரம் பிறகு மைக்கைப் பிடித்த குட்டி ரேவதி “ ஃபேஸ்புக்கில் அது இது என்று பேசுபவர்கள். இது மாதிரி நிகழ்வில் பத்தாம் பசலித்தனமாக பேசுகிறார்கள்” என்றொரு போடு போட்டார்.
அதை என்னைத்தான் என்று நினைத்துக் கொண்டேன்.கொஞ்ச நேரம் ஒரு மாதிரி இருந்தது. வீட்டுக்கு வந்ததும் அது பற்றி விளக்கம் சொல்லி ஒரு பதிவிட்டேன்.
அதன்பிறகு ஒருநாள் “தப்பா பேசிட்டோமா” என்று உறுத்தலாய் இருந்தது.
சட்டென்று தோன்றியது “ தப்பா பேசியிருந்தாதான் என்ன? நம்ம மனசில தப்பில்லையே.வெண்ணிலாவின் எழுத்தை சரியாகத்தான் விமர்சனம் செய்தோம்.ஒரே ஒரு வாக்கியம் பிசகிவிட்டது.அதுக்கென்ன அடுத்த முறை கவனமாக இருப்போம்” என்று தன்னம்பிக்கையை ஏற்றிக்கொண்டேன்.
அனைத்து மனக்கிலேசங்களில் இருந்தும் விடுதலை அடைந்தேன்

No comments:

Post a Comment