Monday 7 March 2016

ஆறு வயதி சிறுமியிடம் எப்படி சொல்வது...

'வாழ்க்கை கதை' மீது அதிகாக ஆர்வம் கொண்டிருகிறாள் என் மகள்.
மாயஜாலம், அரசன் காலத்து கதை இவற்றை எல்லாம் விட அன்றாட வாழ்கையில் நடக்கும் நிகழ்வுகளை விவரித்தால் ரசனையாக கேட்கிறாள்.
நான் ஆரம்பித்தேன்.
"உனக்கு என்ன வயசு?"
"ஆறு"
"ஆறு கூட மூண கூட்டினா என்ன வரும்"
"நைன்"
"ம்ம்ம். அப்பாவுக்கு நைன் வயசா இருக்கும் போது ராத்திரி பாத்து மணிக்கு நாகர்கோவில்ல, வீடு கதவ யாரு தட்டினாங்க"
"ம்ம்ம்"
"டக் டக் டக் .... டக் டக் டக்.. அப்புறம் காலிங் பெல் டின் டயுன் டின் டியூன்"
"யாரு"
"தாத்தா (என் அப்பா) இருக்காங்க, இருந்தாலும் எனக்கு பயமா இருக்கு. என்ன நாங்க இருந்த இடத்துல தெருல லைட்டே கிடையாது. அப்படியே இருட்டா இருக்கும். சைக்கிள்ள கடை அடிச்சுட்டு தாத்தா கூட வந்தா குகைக்குள்ள வந்தா மாதிரி இருக்கும். அப்படியே குண்டசா ஓட்டிட்டு வருவோம். சில சமயம் நாயெல்லாம் துரத்தும் அதுல ஒரு நாய் உண்டு அடிக்கடி கால் பக்கம் வந்து குறைக்கும். நாங்க சைக்கிள்ள இருந்தது கிட்டே கால வீசுவோம். அடிவாங்கிட்டு ஓடும் . அத நாங்க 'செருப்படி சுந்தரம்' அப்படின்னு கூபிடுவோம்".
"ம்ம்ம்"
"ஆஹா கதைய விட்டு போறேன் பாரு செல்லம். ஆமா நாங்க இருந்த இடம் அமைதியா இருட்டா இருக்கும். அப்பா கதவ யாரோ தட்டினாங்களா?"
"யாரு"
"ஒரு அக்கா வயசு 25 இருக்கும். சேலை கட்டி இருந்தாங்க. முகமெல்லாம் வியர்வை. பயந்து போன முகம்"
"என்னம்மான்னு தாத்தா கேட்டாங்க"
"ஒரு பையன் என் பின்னாலே வாரான் அண்ணாச்சி. கிட்ட வந்துட்டான். அதான் இங்க வந்துட்டேன்"
"ம்ம்ம்"
"உடனே தாத்தா என்ன பண்ணுனாங்க சட்டைய போடுட்டு ஒரு டார்ச் லைட்ட எடுத்துகிட்டு அந்த அக்காவ வீட்ல விடப போனாங்க"
"ம்ம்ம்"
" அப்போ நானும் தாத்தாவோட போனேன்"
"உங்கள தாத்தா கூட்டுட்டு போனாங்களா"
"ஆமா நான் தாத்தா அந்த அக்கா மூணு பெரும் போனாம். ஒரு மேட்டுல ஏறி நடந்து போனோம். வழியில செடியில நிறைய பூச்சிய பாத்தேன். அப்படியே மரம் செடி கோடி எல்லாம் தாண்டின பிறகு ஒரு ஒன்ரை கிலோ மீட்டர் நடந்த பிறகு அங்க ஒரு சின்ன ஒட்டு வீடு இருந்திச்சி. அதுதான் அந்த அக்கா வீடு. போய் விட்டாச்சு"
"ம்ம்ம்"
"அந்த அக்கா அவுங்க அம்மா அப்பா எல்லாரும் தாத்தாவுக்கு நன்றி சொன்னாங்க. தாத்தா அவுங்கள எல்லாம் மெல்லமா திட்டினாங்க"
"ம்ம்ம்"
"மறுபடி வரும் போது நான் என் அப்பா கைய பிடிசிகிட்டு வந்தேன். அப்போ எப்படி இருந்தி தெரியுமா தாத்தாவ பாக்க"
"எப்படி"
" அப்படி சூப்பர் ஹீரோ மாதிரி இருந்திச்சி. அப்படியே பாசமா"
"ம்ம்ம். ஆமா தாத்தாவுக்கு எல்லாமே தெரியும். நீங்கதான்" ( முகத்தில் அளவிட முடியாத சிரிப்பு)
"மண்ட கிண்டஎல்லாம் ஒடச்சுருவேன். எனகென்ன பிள்ள கொறச்சல்"
"இல்லப்பா அப்படி சொல்லல" என்று சிரித்தாள்.
" ஹா ஹா... ம்ம்ம். அது ஒரு நல்ல பீல் இல்ல. அந்த பீலா சொல்லத்தான் இந்த சம்பவம்"
" ஆமா நல்ல பீல் இருக்கும் இல்ல"
"சரி இப்ப இந்த சம்பவத்துல இருந்து உனக்கு ஒரு கேள்வி. அந்த அக்காவ ஒரு பையன் துரத்தினான். எதுக்கு துரத்தினான்?. நீ சொல்லு பாக்கலாம்"
"ம்ம்ம்... வந்து... அந்த அக்காவோட சும்மா பயங்காட்டி விளையாடுறதுக்கு"
"இருக்கலாம்"
" அப்படி இல்லன்னா அந்த அக்கா கிட்ட இருக்கிற பணம் செயின் எல்லாம் புடுங்குறதுக்கு"
"இருக்கலாம். இது நல்ல பார்வை"
"அல்லது அந்த பைய்யனே ஒரு பேயா இருக்கலாம். அந்த அக்காவ சாப்பிடுறதுக்கு துரத்தி இருக்கலாம்"
"இருக்கலாம்.வேற"
"அவ்வளவுதான் டாடி"
இந்த இடத்தில என்ன சொல்வதென்று தெரியவில்லை.
ஆறு வயது சிறுமிக்கு அந்த ஆண் பாலியல் கொடுமை செய்யத்தான் துரத்தி இருப்பான் என்றும், அதுதான் முதல் காரணமாக இருக்க கூடும் என்று எப்படி சொல்லி புரிய வைப்பேன் என்று யோசித்தேன்.
அப்படி யோசிக்க வேதனையாக உணர ஆரம்பித்தேன்.
எவ்வளவு கொடுமையான உலகம் இன்னும் இவளுக்கு தெரியாமல் இருக்கிறது.
அந்த கொடுமையான உலகத்தில் நானும் ஒரு புள்ளி என்ற குற்ற உணர்ச்சியும் வராமல் இல்லை.
அதை எப்படி அறிமுகபடுத்துவது.
தெரியாமலே இருந்து விடட்டுமா?
இந்த பார்வையில் சிந்திக்க அவள் மேல் அளவிட முடியாத அன்பும் கனிவும் வாஞ்சையும் வந்தது.
அவளை இழுத்து பக்கத்தில் வைத்து
"நீ ஒன்னு கவனிச்சியா. இப்பல்லாம் அப்பாதான் உனக்கு முத்தம் தரேன். அனா நீ எனக்கு குடுக்கவே மாட்டிக்கிற"
"ஐயே போங்க" என்று எழுந்து ஓடினாள்.

2 comments:

  1. எப்படிச் சொல்வது?.. சொல்லத்தான் வேண்டும்...

    ReplyDelete