Monday 7 March 2016

குட்டி நாயனார்

மகளை ஓவிய வகுப்பில் இருந்து கூட்டி வரும் போது மனைவிடம் இருந்து போன்.
"கோவில்ல இறங்கிருங்க. இன்னைக்கு சனி பிரதோஷம் போயிட்டு வரலாம்.".
அதிர்ந்து இருந்தேன். இது மாதிரி சமயத்தில் கோவிலில் அதிக கூட்டம் இருக்கும். எனக்கிருக்கும் கடவுள் கொள்கைக்கு எதிரானது இந்த கூட்டம்.
ஆனால் மனைவிடம் மறுக்க முடியாது. மறுத்தால் அது ஒரு பனி போரின் ஆரம்ப சங்கிலியாக எடுத்து கொள்ளப்படும்.
மகளோடு கோவில் வாசலில் நின்றேன். மனைவி வந்தார். அவ்வளவு செருப்பு குவியல்களிலும் பாதுகாப்பான இடம் தேடி வைத்தார்.
கோவில் உள்ளே போனால் கூட்டம். அங்கே ஒரு கோஷ்டி பெண்கள் 100 முறை ஓம் நம சிவாய எழுதிக் கொண்டிருந்தார்கள்.
மனைவி ஒரு பெண்ணிடம் இருந்து ஒரு தாள் வாங்கி கொண்டார். அதை வைத்து எழுத ஒரு காலண்டர் அட்டை வாங்கி கொண்டார்.
என்னிடம் "நீங்களும் எழுதுறீங்களா?" என்று கேட்க "எனக்கு இந்த இடத்தை விட்டு சீக்கிரம் போக வேண்டும். காலை வேளையில் அமைதியாக இருக்கும் போது மட்டும்தான் எனக்கு கோவிலுக்கு வரப்பிடிக்கும் என்பது உனக்கு தெரியும்தானே" என்று சொன்னேன்.
வரிசையில் நின்றால் கால் சுட ஆரம்பித்தது.
எனக்கு அந்த கால் சூடு பிடிக்கும்.
மகளிடம் கேட்டேன் "உனக்கு கால் சுடுதா"
"சுடுது அப்பா ஆனா சுகமா இருக்கு" என்றாள்.
நான் குஷியானேன் " உனக்கு பிடிச்சி இருக்கா. சின்ன வயசுல அப்பா என்ன பண்ணுவேன் தெரியுமா? உச்சி வெயில்ல மொட்டை மாடி தரை ஒட்ல போய் நிப்பேன். அப்போ கால்ல சூடு ஏறி உள்ளங்கால இருந்து தண்ணி வரும். செம சுகமா இருக்கும்"
"இப்ப என் கால்ல இருந்து தண்ணி வருமா?"
"இது ஒரு வெயிலா.நல்ல வெயில்ல அப்படி வரும். நீ இன்னும் பெரிய பிள்ளை ஆனா பிறகு சொல்லித்தரேன்"
அப்போது மனைவி குறுக்கிட்டு "பேனா இருக்கா" என்று கேட்டார்.
இல்லை என்றேன். பேனா இல்லாமல் எப்படி ஓம் நமசிவாய எழுதுவது என்று தவித்தார். நான் அதை கண்டு கொள்ளாமல் நின்றது பற்றி என் மேல் எரிச்சல் வந்தாலும் அதை பிறகு காட்டிக் கொள்ளலாம் என்று இருந்தார்.
ஐந்து நிமிடம் போன பிறகு ஒரு பெண் வந்து மனைவி தோளை தட்டி ஒரு பேனா கொடுத்தார். மகிழ்ச்சியாக வாங்கி கொண்டு எழுத ஆரம்பித்தார்.
அதை கொண்டு கொடுத்து விட்டு வந்தார். சாமி கும்பிட்டு வெளியே வந்தோம்.
"இப்படி கூட்டத்துல வரதுக்கு. இன்னும் தேவாரம் திருவாசகம் எல்லாம் படிச்சிட்டு காலைல அமைதியா இருக்கும் போது வந்து ஒரு மணி நேரம் கும்பிடேன் உன் மனசுக்கு உண்மையான நிம்மதி கிடைக்கும். எனகென்னவோ இங்க பெரிய ஆடம்பரம் தெரிஞ்சா மாதிரி இருக்கு. சுத்தமா பக்தி உணர்வே வரல"
என்றேன்.
"வாய மூடுறீங்களா"
அமைதியாக வந்தேன். என்னை கலகலப்பாக்க ஏதோ பேசினார். நானும் பிகு பண்ணாமல் பேசினேன்.
"இந்த நாயன்மார்கள் இருக்காங்க இல்ல. 63 மூணு பேர்"
"ஆமா"
"அதுல டபுள்ஸ் வருவாங்க தெரியுமா?
ஆமா ஒரே கதைல ரெண்டு நாயன்மார்கள்"
"அப்படியா "
"ஆமா அரசி சாமி பூவை எடுத்து முகர்ந்து பார்த்த உடனே ஒரு நாயனார் அவர் மூக்கை வெட்டிராரு. அவரு ஒரு நாயனார்.
அரசன் வர்றான். ஏன் வைப் மூக்கை வெட்டுனீங்க. அவுங்க கையாள பூவா எடுக்கும் போதே கைய வெட்டி இருக்க வேண்டாமான்னு சொல்றார். அவரும் ஒரு நாயனார்தான். ஒர்ரே கல்லுல ரெண்டு மாங்கா" என்றேன்.
"பாவம் அந்த குவீன்" இது மகள்.
நான் தொடர்ந்தேன் மனைவியை நோக்கி.
"இன்னொரு டபுள்ஸ் சொல்றேன் கேளு. அரசனுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க மகளை கொடுக்கும் போது, திருமணத்துக்கு முந்தைய நாள் சிவன் கனவில் வந்து சொல்றார் " அப்பனே உன்ர மகள் தலை முடி எனக்கு காணிக்கையா வேணும்".
உடனே அப்பா என்ன பண்றார் சர்ர்க்கு சர்ர்க்குன்னு மக தலை முடிய மொட்டை அடிச்சி முடிய சிவனுக்கு காணிக்கை வைக்கிறார். மறுநாள் மாப்பிள்ளை எப்படி மொட்டை பெண்ணை கல்யாணம் செய்துப்பார்?
ஆனால் அந்த அரசன் நிலைமை புரிந்து கொண்டு கல்யாணம் செய்து கொண்டார். இப்போ அப்பா ஒரு நாயனார் ஆகிறார். புருஷன் ஒரு நாயானார் ஆகிறார்"
"அப்ப முடிய கொடுத்த அந்த பொண்ணு" இது மனைவி.
"அப்பா மற்றும் கணவன் புகழ் தானே ஒரு பொண்ணுக்கும் புகழ்." என்றேன்.
நறுக்கென்று ஒரு கிள்ளு விழுந்தது.
நான் தொடர்ந்தேன் "கேளு ஏன் இந்த டபுள்ஸ் கதைய சொன்னேன்னா.
இப்போ 'ஓம் நம சிவாய' எழுதியே தீரணும்னு நின்ன நீயும் ஒரு 'குட்டி நாயானார்தான்'.
உனக்கு அத எழுதுறதுக்கு பேனா கொடுத்த அந்த லேடியும் ஒரு குட்டி நாயனார்தான்.
இப்ப நீங்க ரெண்டு பேரும் ஒரு டபுல்ஸ்தான்" என்றேன்.
மனைவி ரசித்து சிரிக்கும் போது வீட்டின் கேட் வந்து விட்டிருந்தோம்.

No comments:

Post a Comment