Monday 7 March 2016

சல்மா - ஆவணப்படம்

எழுத்தாளர் சல்மா பற்றிய ஆவணப்படம் ஒன்றை பார்த்தேன்.(பரிசல் செந்தில்நாதன் கொடுத்த தகவலால்)
என்னை மிகவும் ஈர்த்த அப்படம் பற்றி
1.இப்படம் சல்மா என்ற தனி மனுஷியை பற்றி கூறுவது போல் தெரிந்தாலும்,
'சல்மா' ,அடைக்கப்பட்டிருக்கும் இஸ்லாமிய சமூகத்தின், இந்திய சமூகத்தின் பானை சோற்றின் "ஒரு சோறாகவே" எடுத்து காட்ட பட்டிருக்கிறார். அதுதான் இப்படத்தை தொடர்ந்து ஆர்வத்துடன் என்னை பார்க்க வைத்தது.
2.சல்மா என்னும் கவிஞர், எழுத்தாளர், அரசியல்வாதி தன் சொந்த ஊரான துவரங்குறிச்சிக்கு வருவதாக படம் தொடங்குகிறது. சல்மா தன் ஊரின், தன் வீட்டின் ஒவ்வொரு இடமாக நினைவு கூர்கிறார்.
அதன் மூலமாக இஸ்லாமிய சமூகத்தில் எவ்வாறு பெண்கள் அடக்கபட்டிருகிறார்கள் என்பதை பார்வையாளர்கள் அறிந்து கொள்கிறார்கள்.
3.சல்மா வீட்டில் சிறிய ஜன்னல் இருக்கிறது. ஒரு பெண் வயதுக்கு வந்து விட்டால் அந்த ஜன்னல் வழியே மட்டும்தான் பார்க்க முடியும். பள்ளிக்கு பாடம் படிக்க அனுப்புவதில்லை.15 வயதில் திருமணம் செய்து கொடுத்து விடுவார்கள். அது மத சட்டத்தில் வருவதால் அதை கேள்வி கேட்கவும் முடியாது.
அந்த ஜன்னல் பார்க்க யார் உட்காருவது என்று சல்மாவுக்கும் அவர் அக்காவுக்கும் சண்டை வருமாம். "சரி நீயே இருந்துந்துக்க" என்று அக்கா விட்டு கொடுத்து விடுவாராம்.
3.சல்மாவின் அம்மா சொல்கிறார். "நான் இரண்டாம் தாரமாதான் வந்தேன். முதல் தாரத்துக்கு ஆண் குழந்தை இல்லாத காரணத்தால். என்னை இரண்டாம் தாரமாக கட்டிகொண்டார். எனக்கும் பெண்ணாக சல்மா பிறந்ததால் அவளை என் வீட்டிலேயே கூட சேர்க்கவில்லை இவர்.
சல்மா பாட்டி வீட்டில் தான் வளர்ந்தார்.
4.கல்வி கற்பதற்கான வாய்ப்பு மறுக்கப்படும் போது சல்மா துடித்து போகிறார். "நான் பெரியவளாக ஆகும் முன் பெரியவளாக இருக்கும் அக்கா எல்லாம் வெளியே வராமல் இருப்பது பற்றி கவலை கொள்வேன். நாளை நமக்கும் இந்நிலைமைதான் என்று நினைக்கும் போது நடுங்கும்"
5. சல்மாவின் அத்தை அல்லது சித்தி சொல்கிறார்
"நான் வயசுக்கு வந்த விஷயத்தையே அம்மா கிட்ட சொல்லல. சொன்னா வெளிய விட மாட்டாங்க. அதனால சொல்லாம ஒருவாரம் இருந்தேன். அப்போ இப்ப மாதிரி நேப்கின் கிடையாது. அலசித்தான் உடுத்தணும். அம்மாவுக்கு தெரியாம துணி அலசுவேன். ஆனா அம்மா எனக்கு வயசுக்கு வர்றதுக்கு மருந்து கொடுக்கும் போது பயந்து சொல்லிட்டேன்" என்கிறார்.
6.சிறு வயதில் கிடைத்த செய்தி தாள்கள் மூலமாக தன் அறிவை வளர்த்து கொள்ளும் சல்மா, எப்போதும் தான் அடக்கப படுவதற்கு எதிராகவே இருக்கிறார்.
சிலசமயம் உயிர் இருக்கும் கரண்ட் வயரில் தன் கைகளை வைக்கும் அளவுக்கு கூட போராடுகிறார். மிகுந்த பிரச்சனைக்கு பின் தன்னைச் சுற்றி ஒரு சிறு வெளியை மிகுந்த பிரச்சனைக்கு அப்புறம் கட்டமைக்கிறார். சல்மா சொல்கிறார் "எப்போதும் இந்த பெரிய உலகை காண நான் ஆர்வமாய் இருந்தேன். இந்த கூடு போன்ற அடக்கப்பட்ட உலகத்தை விட்டு தப்பவே நினைத்தேன்"
7.அவ்வாறு தப்புவதற்கு இறைவன் சல்மாவுக்கு கொடுத்த சாதனம் 'பேனா'.
தப்பிக்கவே முடியாத சிறையில் உள்ளவன் தன் கனவில் ஒரு திறந்த வாசல் கொண்டு வந்து தப்பியதை போல, தப்பிக்க சிரமமான அடைப்பட்ட சமூக முறையில் இருந்து தன் பேனாவின் உதவியாலும் தன்னம்பிக்கையாலும், போராட்டத்தாலும் தப்பிக்கிறார்.
8.சல்மா யாருக்கும் தெரியாமல் கவிதை எழுதுகிறார். அக்கவிதைகளை தன் அம்மாவின் மூலமாக பத்திரிகைக்கு அனுப்பி வைக்கிறார். ஓன்று இரண்டு கவிதைகள் வெளியாகி அவர் எழுதும் ஆர்வத்தை அதிக படுத்துகிறது.
9 சல்மாவுக்கு 19 வயது இருக்கும் போது அவருக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள்.
திருமணம் வேண்டாம் என்றிருந்தவரை அம்மாவுக்கு உடல் நலம் சரியில்லை என்பது மாதிரி நாடகம் ஆட செய்து உணர்வுபூர்வமாக மிரட்டி திருமணம் செய்து வைக்கிறார்கள்.
10.சல்மா கவிதை எழுதுவது கணவருக்கு பிடிக்கவில்லை. எழுத கூடாது என்று எல்லா இந்திய ஆண்களை போல் கொடுமை படுத்து கிறார். முகத்தில் ஆசிட் வீசி விடுவேன் என்று கூட மிரட்டுகிறார்.
இது பற்றி சல்மா சொல்லும் போது "எங்கே ஏதாவது ஆசிட் ஊற்றி விடுவாரோ என்று பயமாய் இருக்கும். தூங்கும் போது என் குழந்தை முகத்தை என் முகத்தோடு சேர்த்து வைத்து கொண்டு தூங்குவேன். குழந்தை முகத்தை பார்த்தல் அது மாதிரி ஊற்ற தோன்றாது அல்லவா".
11.சல்மாவின் முதல் கவிதை தொகுப்பை பதிப்பித்த பதிப்பாளர் சொல்கிறார். "சல்மாவின் கவிதையில் எழுத்து பிழை இருந்தாலும், வாசிக்க ஒரு இலக்கிய அம்சம் இருக்கும்.
அவரது முதல் கவிதை தொகுப்பை வெளியிட வரும்போது உணவகத்தில் எப்படி சாப்பிடுவது, சாலையை எப்படி கடப்பது, என்பது போன்ற மிக அடிப்படியான விஷயம் கூட அவருக்கு தெரியாது. அவர் வளர்ந்த சூழ்நிலை அப்படி. அனால் எந்த நல்ல விஷயங்களையும் உடனே கற்று கொள்ளும் பண்பை கொண்டிருந்தார்"
12.சல்மாவை முதன் முதலில் பேட்டி எடுத்தவர் சொல்கிறார். நான் சல்மாவின் ஊருக்கு அவரை பேட்டி எடுக்க சென்று இருந்தேன். சுற்றிலும் ஆட்கள் இருக்க அவரை பேட்டி கண்டேன். அவரை இதுவரை யாரும் புகைப்படம் எடுத்தது கிடையாது.
நான் கேட்டேன். "அப்படியா எடுக்கணுமா" என்று கேட்டவர் யாரும் இல்லாத சமயத்தில் தன் பர்தாவை விலக்கி முகத்தை காட்டினார். நான் உடனே ஒரு போட்டோ எடுத்தேன். அது இதழில் வெளியாக ஊரில் பெரிய பிரச்னையை ஏற்படுத்தி இருக்கிறது.
13.சல்மாவின் கணவர் சொல்கிறார்" மற்றவர்கள் உடன் ஒப்பிடும் போது நான் இவளுக்கு சுதந்திரம் கொடுத்துதான் இருந்தேன்."
14. சல்மா கவுன்சிலராகி, எம்.எல். ஏவும் ஆகிறார்.
15. இந்த இடத்தில இந்த ஆவண படத்தை நிறுத்தாமல் எடுத்து இருப்பது இதன் சிறப்பு.
சல்மா சென்னைக்கு தன் அக்காவோடு வருகிறார். அங்கே இருவர் குடும்பமும் ஒரே வீட்டில் இருக்கிறார்கள்.
16.சல்மாவின்அக்கா பையன் ஒரு யுவன் முஸ்லிம் பெண்கள் புர்கா போடுவது அவர்கள் அடையாளதுக்குதான், பாதுகாப்புக்குத்தான் என்று வாதிடுகிறான்.
அவன் வாதம் அனைத்தும் பலவீனமானவை. ஒரு பொது புத்தி முஸ்லிம் செய்யும் "பெண் அடக்கும் வாதம்".
சல்மாவும் அவர் அக்காவும் அதை கேட்டு கொண்டிருக்கிறார்கள். இந்த இடத்தில ஆவன பட இயக்குனரை பாராட்டியே ஆகவேண்டும்.
ஒரு தெளிவான பிற்போக்கான வாதத்தை அப்படியே அனுமதிப்பது மூலமாக பார்வையாளர்கள் அதற்க்கு எதிரான மனநிலையை அடைவதற்கு வழி செய்கிறார்.
17.படத்தின் விவாத்தில் ஒருவர் சல்மாவிடம் "நீங்கள் ஏன் விவாகரத்து செய்யவில்லை" என்று கேட்க "அது பல்வேறு விஷயங்கள் கொண்ட கண்ணி. அதை வெட்டினால் பல பிரச்சனைகள் வரும் என்று நினைத்தேன்" என்றார்.
இன்னும் பல பார்வையாளர்கள் பேசியது மைக் இல்லாத காரணத்தால் எனக்கு கேட்கவில்லை. விலாசினி கேட்ட கேள்வி எல்லாம் எனக்கு கேட்கவில்லை என்பது வருத்தம்.
18.ப்ரீதம் "இது சல்மாவின் ஆங்கில மொழி பெயர்ப்பு எழுத்துக்களை படித்து இதன் இயக்குனர் அவரை அணுகி எடுத்த படம். சல்மாவை போற்ற வேண்டும் என்று எடுத்த படமில்லை" என்று சொன்னார்.
19.இப்படம் பார்க்கும் பார்வையாளர்களுக்கு பல சிக்கல்கள் இருக்கின்றன.
-முதிர்ந்த இலக்கியவாதிகள், வாசகர்கள். "சல்மா எல்லாம் ஒரு ஆளா.அவர பத்தி ஒரு படம் அது போய் பாக்கனுமாக்கும்" என்ற மனநிலையை கொண்டிருக்கலாம்.
-சல்மாவின் சமகால படைப்பாளிகள் இப்படத்தின் மூலமாக சல்மா மீது பொறாமை கொண்டிருக்கலாம். (அவர்களை அறியாமல்). அவர்கள்.
-காலச்சுவடு குழுமத்தில் இருப்பார் என்ற பெயர் கொண்டதால் சல்மா மீதான எரிச்சல் கொண்டவர்கள்.
-சல்மாவின் கட்சி முகம் பிடிக்காதவர்கள்.
- மத அடிப்படைவாதிகள்.
இப்படி நிறைய மனநிலையில் இதை முன்முடிவுடன் அணுகாமல் இருந்தால்,
ஒரு அடக்கப்பட்ட சமூகத்தில் இருக்கும் பெண்ணின் கதை என்று நினைத்தால்,
சல்மா என்ற ஒரு பெண் வெளியே வந்து விட்டார். ஆனால் பல பெண்கள் மதத்தின் ஆண்களின் சட்டதிட்டங்களின் கைகளுக்குள் சிக்கிக் கொண்டு இன்னமும் சிதைந்து கொண்டும் புழுங்கி கொண்டும் இருக்கிறார்கள். அவர்களின் பிரதிநிதியாகத்தான் சல்மா இப்படத்தில் வருகிறார் என்பதை உணர்ந்து கொண்டால் அதுவே இப்படத்தின் வெற்றியாக இருக்கும்.
20.சல்மாவின் முதல் புகைப்படத்தில் இருக்கும் தேஜசும் அழகும் தன்னம்பிக்கையும் 'உலகமெங்கும் இப்படி எத்தனை பெண்கள் திறமை இருந்தும் இன்னும் அடக்கி வைக்க பட்டு கொண்டிருக்கிறார்கள்" என்பதை தெளிவாக சொல்கிறது.
இப்படத்தை திரையிட்டு காட்டிய
"இமானுவேல் கண்ட் அறிந்த" வெங்கடேஷ் சக்கரவர்த்திக்கு நன்றி.

No comments:

Post a Comment