Wednesday 12 December 2012

இங்கிலாந்து தோற்கவில்லைதானே!

கிரிக்கெட் தெரிந்த அளவு கால்பந்து பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது.

ஆர்வமும் கிடையாது.

2006 ஆம் ஆண்டு உலககோப்பை கால்பந்து விளையாடும் போது இங்கிலாந்திற்கு சப்போர்ட் செய்தேன்.

கொஞ்சம் கொஞ்சமாக ஆர்வம் இருப்பது மாதிரி காட்டிக்கொண்டேன். நடித்தேன். 

ஆர்வம் வந்துவிட்டது. 

அப்புறம் இங்கிலாந்து ஜெயிக்க வேண்டும் என்று தீவிரமாக பிரார்த்திக்கும் அளவிற்கு மாறிவிட்டது.

குரூப் மேட்சில் தேறி இங்கிலாந்து காலிறுதிக்கு வந்தது.

காலிறுதியில் போர்சுக்கலை எதிர்த்து விளையாட வேண்டும்.

மேட்ச் பார்ப்பதற்காக ஆர்வமாய் இருக்கும் போது, அம்மா சொல்கிறார்.

“ எல அந்த பப்பாளி பழத்தை வெட்ட கூடாது. அப்பா வாங்கிட்டு வந்து நாளு நாளாச்சு”

“யம்மா பிறகு வெட்றேன் மேட்ச் பார்க்க போறேன் டிஸ்டர்ப் பண்ணாதீங்க”

சில வேலைகளை செய்யவே மாட்டோம் என்று தெரிந்தால் அதை அப்பா வீட்டில் இருக்கும் போது உரக்க சொல்லி செய்ய சொல்வது அம்மாவின் தந்திரம்.

“யல அந்த தண்ணி கேனை எடுத்து அதுல ஊத்த கூடாது”

“துணியல்லாம் கொஞ்சம் அயர் பண்ணினாஆபிஸுக்கு நல்லா நீட்டா போகாலம்லா கழுத”

நாங்கள் முடியாது என்று சொன்னால் அப்பா “டேய் அத செய்டா” என்று சொன்னால் பிரம்மாஸ்திரத்திற்கு கட்டுப்பட்ட அனுமன் போல் செய்வோம்.

பிரம்மாஸ்திரத்தை அனுமனால் மீறமுடியும்.

ஆனால் மீறமாட்டார்.

மீறினால் உலகின் நியதிகள் அனைத்தும் கேள்விக்குறிதாகும்.சட்டங்களின் சமநிலை குலைந்து விடும்.

நான் முனகி கொண்டே பப்பாளி பழங்களை வெட்ட கத்தியை எடுத்து தட்டை எடுத்து உட்கார்கிறேன்.

இரண்டு பப்பாளி பழங்கள்.

பப்பாளி மேல் கிராமத்து மனிதர்களுக்கு இருக்கும் ஆர்வம்தான் அப்பாவிடம் இருக்கிறது என்று நினைத்து கொண்டே தோலை சீவினேன்.

இங்கிலாந்து சுரத்தே இல்லாமல்தான் ஆடினார்கள்.

போர்ச்சுகலை தடுக்கவே அவர்களுக்கு நேரம் சரியாய் இருந்தது.

அவ்வப்போது டீவி ஸ்கிரீனில் இருந்து கண்களை எடுத்து பழத்தின் தோலை சீவுவதும்,உள்ளே உள்ள பகுதிகளை வழித்து போடுவதுமாய் இருந்தேன்.

பின் சிறு துண்டாய் ஆக்க முயற்சிக்கையில் கத்தி கைவிரலில் வெட்டி விட்டது.

அப்புறம் என்ன டிராமாதான்.

கைகளை கழுவி.டெட்டால் போட்டு, பக்கத்து கடையில் பேண்ட் எய்டு போடும் போது இரண்டு பேரும் ஒரு கோலும் போடவில்லை.

பெனால்டி கார்னர். சஸ்பண்ஸ்.

அதிலும் போர்ச்சுகல் மூன்று கோல்கள்போட, இங்கிலாந்து ஒரு கோல்தான் (?) போட்டது.

எனக்கோ மிகுந்த மனவருத்தம்.புலம்பி கொண்டே இருந்தேன்.

நான் சர்வர ஆத்மார்த்தமாக சப்போர்ட் செய்யாத பாவத்தினால்தான் இங்கிலாந்து தோற்றுவிட்டது என்று நம்பினேன்.

யார் என்னை சப்போர் செய்ய தடை செய்தது என்ற அடுத்த கேள்விக்கு பப்பாளி பழமும், அதை வெட்ட சொல்லி வற்புறுத்திய அம்மாவும்தான் என்ற பதில் கிடைக்க கொதித்து போனேன்.

அம்மாவை விட எளிதான் டார்ஜெட் ஒரு பிள்ளைக்கு வேறு எங்காவது கிடைக்குமா?

”எல்லாம் உங்களலாலதான்.சனியன் மாதிரி பழம் வெட்டு பழம் வெட்டு வந்து நின்னீங்கல்லா.பிறகு இங்கிலாந்து தோக்கத்தான செய்யும்.இந்த பழம் சாப்பிடலன்னா என்னம்மா நடக்கும். செத்துருவோமா? ஏன் இப்படி ஸீன் போடுறீங்க.ச்சே எரிச்சலா வருது..எங்க டீம் தோத்ததுக்கே நீங்கதான் காரணம்”

அம்மா என்னை எந்த உணர்வில்லாமல் பார்த்து புன்முறுவல் பூத்து கொண்டே இருப்பார்.

அது இன்னும் டென்சனாக்கும்.

கோவத்தை பப்பாளி பழம் சாப்பிடாமல் இருப்பதில் வெளிப்படுத்தி தூங்கப்போனேன்.

ஒருநாள் கழித்து பி.பி.சி ஸ்போர்ட்ஸ் வலைதளத்தில் இங்கிலாந்தின் தோல்வி கவலையில் இருந்து மீள்வதற்கு என்ன செய்யலாம் என்ற கட்டுரை வந்திரந்தது.

அதற்கு கமெண்ட்ஸ் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக சொல்லியிருந்தார்கள்.

அதில் ஒருவர் சொன்னதை படித்து கெக்கே பிக்கே என்று சிரித்தேன்.

அது பின்வருமாறு.

“இங்கிலாந்து காலிறுதியில் தோற்ற துன்பத்தில் இருந்து வெளியே வர என்ன செய்ய வேண்டும் என்றால், எல்லோரிடமும் போய் இங்கிலாந்து காலிறுதில் ஜெயித்து விட்டது என்று அடித்து சொல்லுங்கள்.

அதற்கு அவர்கள் சொல்லும் பதிலை கேட்காதீர்கள்.

காதுகளை பொத்தி கொண்டு
ஃப்ளா ஃப்ளா ஃப்ளா என்று சத்தமாக சொல்லி விட்டு ஒடி வந்து விடுங்கள்.

நம்மை பொறுத்தவரை நம் இங்கிலாந்து ஜெயித்த இங்கிலாந்தாகவே இருக்கும் :).

எனக்கு அந்த கமெண்ட் பிடித்திருந்தது.

அதில் ஒரு மறைதத்துவம் இருப்பதாக தோண்றியது.

2006 இல் இருந்து பத்து வருடங்கள் முன்னால் 1996 யில் ஈடன் கார்டனில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் நடந்த அரையிறுதி கிரிக்கெட் போட்டியில், இந்தியா படு கேவலாமாக தோற்றது.

ரசிகர்கள் மேட்சை நடத்தவிடவில்லை.

இலங்கை வென்றது என்று அறிவிக்கபட்டது.

அப்போது களத்தில் இருந்த வினோத் காம்ளி இந்திய தோல்விக்காக அழுதுகொண்டே போனார்.

நானும் அழுதேன்.

ஒன்றுமே முடியவில்லை.

ஒருவாரம் துக்கமாய் இருந்தது.

இந்த ”ஃப்ளா ஃப்ளா ஃப்ளா கேட்கமாட்டேன் கேட்கமாட்டேன் கேட்கமாட்டேன்” ஐடியா அன்றே தெரிந்திருந்தால் ஒருதுளி கண்ணீர் சிந்தியிருக்க மாட்டேனே!

அநியாயமா உணர்ச்சிவசப்பட்டுட்டேனே!

விளையாட்டுகளின் மேல் இருந்த அதீதம் மட்டுப்பட்டு அன்று தெளிந்திருந்தேன், ஒரு சாதரண கிண்டல் கமெண்ட் மூலமாக.

பல சமயம் நம்முள்,

எங்கிருந்தோ வரும் ஒளி பரவித்தான் விடுகிறது விழிப்பை உணர்த்தி.

1 comment: