Wednesday 12 December 2012

கதை போல் ஒன்று - 61


அதற்க்கு என்ன பெயர் என்றெல்லாம் தெரியாது.

நானும் தம்பியும் அதை பட்டாம் பூச்சி புழு என்றே சொல்லுவோம்.

நாகர்கோவில் நகரத்தின் முக்கியமான ஜங்சன் வேப்பமூடு ஜங்சன். அதிலிருந்து இடது பக்கம் திரும்பினால் செட்டிகுளம் ஜங்சன்.

அதில் இருந்து நேரே கார்மல் ஸ்கூல் ரோட்டை பிடித்து போனால் ராமன்புதூர் அல்லது கலுங்கு ஜங்சன்.அதில் இடது திரும்பி மறுபடி வலதெடுத்தால்”பார்க் ரோடு” வரும்.

இந்த பார்க் ரோட்டில் இருந்து நாகர்கோவில் முழு கிராமமாக மாறிவிடும்.

அந்த நகர கிராமத்தில்தான் எங்கள் வீடு.

வேப்பமரமும் புளியமரமும் பெரிய கிரவுண்டும் சொர்க்கம்.

சனி ஞாயிறு நானும் தம்பியும் சட்டையில்லாத உடம்பும், கொக்கி இல்லாத இழுத்து கட்டின டிரவுசருமாய் கையில் கம்பை வைத்துக்கொண்டு சுற்றித்திரிவோம்.

சும்மானாச்சும் கம்பைவைத்து எல்லா செடிகளையும் அடித்து கொண்டே போவோம்.

தட்டான் பூச்சிகளை பிடித்து கொன்று போடுவோம்.

எருக்கஞ்செடி மேல் தனி காதல் உண்டு.

அதன் இலையை பிய்த்து காம்பில் ஒழுகும் பாலை பொட்டு மாதிரி வைத்து உடனே அழித்து விடுவோம்.

ரொம்ப நேரம் இருந்தால் பொத்து விடுமாம்.

அது மாதிரி விளையாடும் போதெல்லாம் மஞ்சள் நிறத்தில் கறுப்புகோடுகளாய் பிரிக்கபட்ட புழுக்களை பார்ப்போம்.

அதுதான் ”பட்டாம் பூச்சி புழு” என்று தெரியாது சிறுவயது.

புழுவை பார்த்தால் தரையில் போட்டு நசுக்குவோம்.

உடம்பில் இருந்து பச்சை ரத்தம் வரும். “பச்சை ரத்த்த்த்ம்” என்று அழுத்தமாய் சொல்லி சிரிப்போம்.

அப்படி ஒரு புழுவை நசுக்க போகும் போது குரல் கேட்டது.

“பிள்ளைங்க என் பண்ணுறிய”

தெருவில் போன ஏதோ ஒரு பாட்டி. வசதியானவர் என்று அவர் கையில் வைத்திருந்த ஜிப் வைத்த அழகான பைபிளை பார்த்தவுடனே தெரிந்தது.

நானும் தம்பியும் அசடு வழிந்தோம்.

”ஐய்யே இந்த புழுவையா கொல்லுறிய. கொல்லக்கூடாது பிள்ளோ. அதுதான் பட்டாம்பூச்சியா பறக்குது.”

விழிவிரித்தோம்.

”இந்த புழுவ ஒரு கூட்டுக்குள்ள போட்டு தினமும் எருக்கம் எலையை போட்டி வளருங்கடே. கொஞ்ச நாள் பொறவைக்கு கூட்டுப்புழு வைக்கும்.அதுக்கம் பொறவைக்கு பட்டாம் பூச்சியா பறக்கும்ல.தயவு செய்து கொல்லதீய. பாவ காரியங்கள செய்யாதியில பிள்ளைங்களா”

சொல்லி போனார்.

அந்த ஏதோ ஒரு பாட்டி தெய்வமாய் தெரிந்தார்.
எவ்வளவு பெரிய விசயத்தை சொல்லி போயிருக்கிறார்.

பட்டர்பிளை தனியாத்தெரியும்.புழு தனியாத்தெரியும் ஆனா புழுதான் பட்டாம் பூச்சி என்று தெரியாது.

இரண்டு தொடர்பில்லாத விசயங்களுக்கிடையே தொடர்பை ஏற்படுத்து கருத்தாக்கங்கள் நல்ல இனிப்பை விட, இறைவனை விட, காம உச்சத்தை விட இன்பமானவை.

இரண்டு புழுக்களையும் வீட்டில் எடுத்து வந்தோம்.

எதில் போட்டு வளர்ப்பது?

தம்பி ஐடியா சொன்னான்” அப்பா கடையில் இருந்து எவரடி பெரிய பேட்டரி பெட்டி கொண்டு வருவாங்கல்லா நாம வெளையாடுறதுக்கு அதுக்குல்ல போடலாம்”
எவரடி அட்டை பெட்டியில் புழுக்களை போட்டோம்.

தம்பி பெட்டியின் குறுக்கே கயிறுகளை கட்டினான்.

புழுக்கள் உண்டு கழித்து இருந்தால் போதுமா அதற்கு பொழுது போக்கு வேண்டாமா.

காற்று போவதற்கு பெட்டியில் நிறைய ஒட்டை போட்டோம்.

நல்ல எருக்கம் இலைகளாக பறித்து அதை சிறுதுண்டுகளாய் வெட்டி இரையாய் போட்டோம்.

அப்புறம் பெட்டியை லேசாக திறந்து புழுவையே பார்த்துக்கொண்டிருப்போம்.

அது தன் உடலை குறுக்கி நீட்டி “பெரில்ஸ்டாட்டிக்: அசைவு கொடுக்கும் போது ஆச்சர்யமாய் இருக்கும்.

தினமும் கறுப்பு சிறு உருண்டையாய் எச்சம் போடும். அதை சுத்தம் செய்வதற்கு எனக்கும் தம்பிக்கும் செல்ல சண்டை வரும்.

அந்த புழு எங்கள் நினைவில் தங்கிவிட்டது. காலையில் புழுபற்றிய ஞாபகங்கள். தூங்கும்போதும் புழுபற்றிய ஞாபகங்கள்.

எட்டு நாட்கள் கழித்து புழு தன்னுடைய உடலை உள்ளே குறுக்கி, வெளியே கூட்டை கட்டி கொண்டது.

அது கூட்டுப்புழுவாய ஆகிப்போனது.

பெட்டியை பார்த்தால் புழு இல்லாமல் ஒரு சிறு இளநீல பளபள கூடு இருந்தால் எப்படி இருக்கும்.

என்ன மர்மம் இது.

தம்பி அந்த கூட்டு புழுவை தொடப்போனான். நான் கையை தட்டினேன்.

பொறுத்தோம்.

அடுத்த இரண்டு வாரம் கழித்து காலை எட்டு மணி வெயில் சுள்ளென்று முகத்தில் அடிக்கும் போது தம்பி என்னை எழுப்பினான். “விஜய் உனக்கு ஒண்ணு காட்டப்போறேன்”

சொன்ன உடன் விளங்கிற்று சட்டென்று எழுந்து கொண்டேன்.பெட்டியை நோக்கி ஒடினேன்.

பின்னால் தம்பி வாயை பொத்தி சிரித்துக்கொண்டே வந்தான்.

பெட்டியை மெல்ல கொஞ்சமாய் திறந்து பார்த்தேன்.உள்ளே படபடவென்று சிறகடித்து பறந்து கொண்டிருந்தது ஆரஞ்சும் கறுப்பும் கலந்த நாங்கள் கொல்ல போன, ஏதோ ஒரு ”பைபிள் பாட்டியால்” காப்பாற்றப்பட்ட , பச்சை கலர் ரத்தம் உடைய பட்டாம் பூச்சி புழு, இப்போது பட்டர்ஃபிளையாக.

எனக்கு தம்பிக்கும் சிலிர்த்தது, தோளில் கைகளை போட்டுக்கொண்டோம்.

என்னாலோ அல்லது தம்பியாலோ அந்த சம்பவத்திற்கு பிறகு ,தேவையில்லாமல் எந்த பூச்சிகளையும் கொல்லமுடியாது என்றே தோண்றிற்று.

பெட்டியை திறந்து விட எங்களிடம் சொல்லாமல் கொள்ளாமல் பறந்து போனது அந்த “தேனஸ் ஜெனுசியா” என்ற பட்டாம்பூச்சி.

5 comments:

  1. தேனஸ் ஜெனுசியா---- அழகு...

    ReplyDelete
  2. உங்கள் கதையூடாக கிராமத்து நிலங்களில் திரிந்து நாமும் பட்டாம் பூச்சியாக மகிழ்ந்தோம்.

    ReplyDelete
  3. விஜய்
    இப்போ தான் இக்கதை படித்தேன் பழைய நினைவுகள் மனதில் துள்ளி விளையாடுகின்றன . ஒவொன்ரா படித்து இன்புறுகிறேன் .
    சதீஷ் மேனன்
    கொச்சி ,கேரளா

    ReplyDelete
  4. நன்றி சதீக்ஷ் ஜி... ரொம்ப நல்லா எல்லாம் இருக்காது.. சுமாரா இருக்கும்...

    ReplyDelete