Wednesday 12 December 2012

ரிஸ்க எடுப்பதில்லை....

சிறுவயதில் இருந்தே தேவை இல்லாமல் ரிஸ்க எடுக்க மாட்டேன்.

சண்டை போட மாட்டேன். 

அதிலும் கண்ணாடி போட்ட பிறகு ரொம்ப சாதுவாகிவிட்டேன்.

விளையாட்டுக்கு கூட அடிக்க மாட்டேன்.

யாராவது என் சட்டை பாக்கெட்டில் சட்டென்று கையைவிட்டு பணம் எடுத்தால், பணத்துக்கு கவலைப்பட மாட்டேன். 

ஆனால் அந்த டிஸ்கஸ்டிங் செயலுக்கு எரிச்சலாவேன்.

ஒடும் பஸ்ஸில் இறங்க மாட்டேன்.

தேவை இல்லாத வயரை தொடமாட்டேன்.

காலில் செருப்பு போட்டுத்தான் அயர்ன் செய்வேன்.

சிக்னலை குறுக்காக கடக்க மாட்டேன்.
சுரங்கபாதையைத்தான் உபயோகிப்பேன்.

போலீஸ் முன்னால் வேறு ஆள்களிடம் கூட இறைந்து பேசமாட்டேன்.

நின்று கொண்டிருக்கும் டெம்போ வண்டியை கடக்கும் போது, எப்போது வேண்டுமானாலும் டெம்போவின் கதவை யாராவது திறந்து முகம் அடிவாங்கலாம் என்ற கவனத்திலே இருப்பேன்.

மழை நேரத்தில் பஸ்ஸில் ஆட்டோவில் போகையில் தண்ணீரை கிழித்து கொண்டு வாகனம் போகும் போது, வாயையை கையால் பொத்தி கொள்வேன்.

அந்த மழை நீர் உதட்டில் பட்டால் எனக்கு பிடிக்காது.

பேண்ட் சர்டோடு யூரின் போகும் போது பேண்டை முட்டி வரை உயர்த்தி விட்டு கொள்வேன்.

பேண்ட் கால் நுனியில் நனைந்து அன்று முழுவதும் சிறிய எரிச்சலை கொடுப்பது கூட பிடிக்காது.

நாசூக்கு.டி.டி.ஆர் வந்து டிக்கட்டை செக் செய்யும் வரை நிம்மதியாக தூங்க முடியாது.

சினிமா தியேட்டரில் படம் போடுவதற்கு ஐந்து நிமிடத்துக்கு முன்னர் டிக்கட்டை சோதித்து பார்த்து கொள்வேன்.

அப்போதுதான் நிம்மதி.

பணம் எடுத்த பிறகு,ஏ.டி.எம் கார்டை எடுத்தேனா இல்லையா என்று மூன்றுதடவை வாசலிலேயே இருந்து சோதிப்பேன்.

பூட்டை பல முறை இழுப்பேன்.

காஸ் மூடியிருக்கிறதா என்று ரெகுலேட்டரை சைக்கோ சேஃப்டியாக சோதிப்பேன்.

வாழ்க்கையையே ரெஸ்ட் லெஸ்ஸா வாழ்கிறோமோ என்று சந்தேகம் வரும்.

படிக்கட்டில் மொபைலில் மெசேஜ் படித்து கொண்டே இறங்கும்போது, படிதவறி கால் வைத்து கீழே விழுந்தேன்.

எழுந்திருக்கவே முடியவில்லை.

செம வலி.

அப்புறம் படிகளை சுத்தம் செய்யும் பெண் வந்து தூக்கிவிட்டார்.

அன்றிலிருந்து ஹேண்ட் ரயிலை பிடித்துதான் எந்த படிகளையும் ஏறுகிறேன் இறங்குகிறேன்.

என்ன இந்த பத்தி இப்படி நீண்டு கொண்டே போகிறது.

சோகமாகவோ ஜாலியாகவோ அல்லது மெல்லிய உணர்வாகவோ ஒரு பன்சோடுதானே முடிக்க வேண்டும்.

ஒருமுறை (அப்போ நான் பேச்சுலர்) அம்மாவழி குடும்பங்கள் எல்லாம் சேர்ந்து ஈ.ஸி.ஆரில் ரிசார்ட்டுக்கு போனோம்.

அங்கே நீச்சல் குளத்தில் எல்லோரும் குளித்தோம்.

நான் பொதுவாக நல்ல பாடி பில்டர் எல்லாம் இல்லை.உடம்பு தொள தொளவென்று ”கிண்டி வைச்ச அல்வா” மாதிரிதான் இருக்கும்.

அதனால்தானோ என்னவோ சிறுவயதில் இருந்தே சட்டையில்லாமல் இருப்பதில்லை.

எப்போதும் சட்டையோடு இருப்பது ஒரு நாகரீகமாகவும் எனக்கு படும்.

ஆனால் அந்த இடத்தில் வழியில்லை.

நீச்சல் குளத்தில் ஜாலியாக குளித்தோம்.

எல்லோரும் நீச்சல் குளத்தில் தொப்பென்று குதித்தார்கள்.

நான் இரும்பு கம்பி படிகள் வழியே கவனமாக இறங்கினேன்.

மேலே ஏறும் போது எல்லோரும் ஒரு ஜம்ப் அடித்து பிருக்ஷ்டத்தை நீச்சல் குளக்கரை சிமெண்ட் கட்டில் வைத்து எழுந்து போனார்கள்.

தம்பி எனக்கு முன்னாடி அது மாதிரி போய்விட்டான்.

ஆனால் நானோ இரும்பு கம்பி படிகளை மிதித்து மிககவனமாக ஏறினேன்.

தம்பி என்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தான்.

பக்கத்தில் வந்து என்னிடம் “உங்கிட்ட ஒன்னு சொல்லனும் விஜய்” என்றான்.

“என்னது சொல்லு”

“தப்பா எடுத்துக்காத விஜய்”

“மயிரு சொல்லித்தொலல”

“உன்ன பார்க்க”

“என்ன பார்க்க. என்னது சொல்லி தொலச்சுரு”

“இல்ல சட்ட போடாம, க்ஷார்ட்ஸ் போட்டுட்டு, கொழ கொழ உடம்போட நீ ஸ்விம்மிங் பூல் படில ஏறி வரும் போது” அடக்க முடியாமல் சிரித்தான் தம்பி.
எனக்கோ கடுப்பு.

“செண்டன்ஸ முடிச்சிருல கடுப்பாயிருவேன்.

“இல்ல விஜய் அப்படி நீ ஏறிவரும் போது, எனக்கு சாட்சாத் “அக்னி நட்சத்திரம் நிரோக்ஷா” ஒரு பூங்காவனம் பாட்டுல வருவாங்கல்ல அது மாதிரி இருந்துச்சு என்று பீறிட்டு சிரித்தான்.

நானும் சிரித்தேன்.

சிலவற்றை நினைத்தாலே சிரிப்பும் வெட்கமும் வருமே.

அதில் அவன் பேசிய அந்த டயலாக்கும் ஒன்று.

No comments:

Post a Comment