Friday 7 September 2012

சம்பள தேதி

இன்று முதல் மாத சம்பளம் ( சென்னையில்) வாங்கினேன். போன மாதத்தின் ஏழு நாள் சம்பளமும் சேர்த்து அக்கவுண்டில் போடப்பட்டதாக எஸ்.எம்.எஸ் வர ஒரே மகிழ்ச்சிதான். 

அதன் பிறகு வேலை செய்பவர்கள் எல்லோரும் அன்பாக பேசிக்கொள்கிறார்கள். 

இந்த குழந்தைகள் எல்லாம் வெள்ளிகிழமை மாலைகளில், சனி ஞாயிறு லீவை நினைத்து அன்பை பொழிந்து கொள்வது போல. 

பெண்கள் முகத்தை நன்றாக கழுவி, பவுடரிட்டு புது பொட்டு வைத்து காலையில் எப்படி 
”பிரக்ஷ்” ஆக வந்தார்களோ அது மாதிரியே கிளம்பி போகிறார்கள்.

நானும் உற்சாகமாய் முகம் கழுவினேன்.(வழக்கமாக ஆபீஸில் முகம் கழுவமாட்டேன்).

”ஒரு வார தாடி” என் அழகை கெடுப்பதாக பட்டது.கம்பெனியை விட்டு வெளியே வந்ததும் பக்கத்தில் உள்ள சலூனில் க்ஷேவ் செய்தேன்.

தொழிலை சுத்தமாக திருப்திகரமாக கடைக்காரர் செய்தார்.

இவருக்கு இந்த தொழில் தெரிகிறது. நமக்கு இது மாதிரி எதாவது தொழில் இப்படி அட்சர சுத்தமாக, திறமையாக செய்ய தெரியுமா ? என்ற கேள்வியை அவசரமாக தவிர்த்து, பஸ்ஸில் ஏறினேன்.

என் பளிச் முகத்தை எதாவது பெண் ஆர்வமாக பார்க்கிறாளா என்று ஆர்வித்தேன். இல்லை.

எல்லோரும் தத்தம் தோழர்களோடு மொபலில் கதைத்து கொண்டிருந்தனர்.

பையில் இருந்து “சித்ரா பானர்ஜி” எழுதிய இந்திய உணவு பற்றிய புத்தகத்தை கொஞ்ச நேரம் படித்தேன்.

அடையார் பேக்கரியில் பைன ஆப்பிள் கேக்கும் , சாக்லெட் கேக்கும் வாங்கினேன்.

அப்புறம் காரம் வேண்டுமில்லையா? அதுக்கு பொட்டட்டோ சிப்ஸ் வாங்கினேன்.

மினிட்மெய்ட்டின் “பல்பி ஆரஞ்” ஒரு பெரிய பாட்டில்.(அது எனக்கு பிடிக்கும்).

மீராவுக்கு ஏதாவது “டாய்ஸ்” வாங்கலாமா என்று யோசித்தேன். இல்லை அவளே அவளுடை டாய்ஸை செலக்ட் செய்தால்தான் அவளுக்கு பிடிக்கும்.

அப்புறம் பஸ் ஸ்டாப்பில் இருந்து வீட்டிற்கு போகும் போது கமலி பன்னீர்செல்வத்துக்கு போன் போடலாமா என்று யோசித்தேன்.

பிறகு அவரை ஏன் டிஸ்டர்ப் செய்ய வேண்டும். அவர் வீட்டில் அடை தோசையோ, அல்லது கும்பகோணம் காபியோ செய்து கொண்டிருப்பார் என்று நினைத்தேன்.(சில சமயம் உடையார் நாவல் கூட படித்து கொண்டிருக்கலாம்)

ஆவின் பாலகத்தில் ஒரு பாக்கெட் கூல் பால் வாங்கி குடித்தேன்.

அடையார் பக்கம் நல்ல அழகான நார்த் இந்தியன் பெண்கள் நடமாடுவதை என் கண்கள் என் அனுமதி இல்லாமலே பார்பதை நொந்து கொண்டேன்.

நாளைக்கும் நாளன்னிக்கும் லீவு. ஜாலி.

வழியில் பல பிச்சைகாரர்களையும்,தெரு நாய்களையும் பார்த்தேன்.

’இவனுங்க எல்லாம் ஏன் உலகத்துல இருக்கானுங்க ? ‘ என்ற அறத்துகெதிரான சிந்தனையை என்ன செய்வது என்று அதையும் பையுக்குள் போட்டு,கையில் தூக்கியபடியே வீடு நோக்கி நடந்தேன்.

No comments:

Post a Comment