Friday 7 September 2012

கதை போல ஒன்று - 47

விஜய் புளியம்பூவையும் கொழுந்துகளையும் சேர்ந்து அதில் மிளகாய் பொடி போட்டு சாப்பிட்டிருக்கிறான்.

மாங்காய் பறித்து அதை மிளகாய் பொடியை தொட்டு காரமாய் சாப்பிட்டிருக்கிறான்.

ஆனால் நேரடியாக ஒரு குத்து மிளகாய் பொடியை சாப்பிட்டதற்கு அவன் அத்தைதான் காரணம்.

பத்து வயதில் என்ன தெரியும்? 

சேட்டை நையாண்டி எல்லாம் உள்ள வயதுதானே.

அதற்குதான் அத்தை மிளகாய் பொடியை தின்ன கொடுத்தாள்.

வத்தல்( காய்ந்த மிளகாய்) மூட்டை எடுத்து மிசினில் அரைத்து வீட்டில் போட்டு விடுவார் அப்பா.

கல்யாணமாகாத அப்பாவின் தங்கை அதை எல்லாம் நூறு கிராம் இருநூறு கிராம் பாக்கெட்களாக போட்டு, பாக்கெட்டுக்கு இவ்வளவு காசு என்று கறாராக அப்பாவிடம் வாங்கி விடுவாள்.

அம்மாவுக்கு வீட்டு வேலை சரியாக இருப்பதால் இதில் ஈடுபட நேரமே இருக்காது.

அத்தை அம்மாவிடம் பேச மாட்டாள்.

ஆனால் அம்மா செய்த சாப்பாட்டில் இருந்து பிடித்து வைத்த தண்ணீர் முதலாய் எல்லா சர்வீஸ்களையும் ஏற்று கொள்வாள்.

விஜய் ஓடி ஆடி விளையாடி கொண்டிருந்த போது முதலிலேயே அத்தை எச்சரித்தாள்.

“யல விளையாடாத வத்தல் (மிளகாய்) பொடில கால் பட்டுற போது”

அலட்சியபடுத்தி விட்டு விளையாடும்போது, கால் பட்டு இருநூறு கிராம் எடை போட பட்டு ஒட்டுவதற்காக ரெடியாக உள்ள வாய் பிளந்த பாக்கெட்கள் சிதறி விழ, வத்தல் பொடி பறந்தது.

சம்மணமிட்டு உட்கார்ந்திருந்த அத்தை வெறியோடு ஒடி வர தாவி வெளியே ஒடினான்.

”உங்களால என்ன பிடிக்க முடியாதே” என்று அழவம் காட்டினான்.

“செத்த சவமே! கையில மாட்டாமலா போவ. அப்ப வா”

விஜய் கண்டு கொள்ளாமல் திரும்ப திரும்ப ரூமிற்குள் போவதும், அத்தை அடிக்க வரும் போது வெளியே ஒடுவதுமாய் விளையாடி கொண்டிருந்தான்.

கொஞ்ச நேரத்தில் அது போரடிக்க, பின் பக்கம் தொட்டிக்கு வந்தான்.

அந்த தொட்டி அப்பாவே கட்டியது.

உபயோகமில்லாதசதுர கிணற்றின் சுவரையும் பாத்ரூம் சுவற்றின் சுவரையும் தொட்டியின் நீள் பக்கங்களாய் வைத்து, அகல பக்கங்களை செங்கலை வைத்து கட்டியது.

முனிசிபாலிட்டி தண்ணி வரவில்லையாதலால்.தொட்டியில் நீர் விரலளவே இருக்க, கொசு முட்டையிட்டு கூத்தாடி புழுக்கள் கூத்தாடி கொண்டிருந்ததை ரசிக்கும் போதுதான் பின்னாடி உருவம் நிற்பது போல் இருந்தது.

அத்தை.

வலது கையில் குத்து வத்தல் பொடியோடு நின்றாL இடது கையால் இவன் சட்டையை கொத்தாய் பற்றியபடி.

இவன் திமிற திமிற வத்தல் பொடியை முகத்திலும் வாயிலும் அப்பி விட்டு போய்விட்டாள்.

காரம் காரம் காரம். உறைப்பு. எரிப்பு.

என்ன செய்வதென்று தெரியவில்லை.

தொட்டிக்குள் விழுந்தான்.

கூத்தாடி புழுக்களோடு உள்ள தண்ணீரை எடுத்து வாயை கொப்பளித்தான்.

முகத்தில் அறைந்து கழுவினான். இதை செய்யும் போது மிருகம் மாதிரி அவனை அறியாமலே குரல் எழுப்பினான்.

சரி. அம்மா நல்லவேளை இந்த காட்சியை பார்க்க வில்லை என்று தொட்டியை விட்டு வெளியே வரும் போது அம்மா அவனை பார்த்து அழுது கொண்டே இருந்தாள்.

அப்பா வந்தார்.

விசயம் கேள்விபட்டு அத்தையை மெலிதாக திட்டினார்.

அத்தை ஒடிப்போய் ரூமை பூட்டி கொண்டு தான் சாகப்போவதாய் சொன்னாள்.

அத்தை செத்தால் ,தானே எல்லா மிளகாய் பொடி பாக்கெட்களையும் ஒட்டி சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்து கொண்டான்.

அம்மா அப்பாவிடம் ஆவேசமாக பேசும்போது “ரத்த சம்மந்தத்தையெல்லாம் டக்குன்னு வெட்டி விட முடியாதுடா” என்றார்.

அந்த மிளகாய் பொடி சம்பவத்தில் இருந்து, அப்பா அத்தையிடம் பேசுவார் ஆனால் பேச மட்டும் செய்வார்.

சுவாரஸ்யபகுதிகள் எதையும் பேச மாட்டார்.

பின் அத்தையை கோயமுத்தூரில் கல்யாணம் செய்து கொடுத்து, பெரிய பணக்காரியாகி விஜய்யின் கல்யாணத்துக்கு வந்தாள் குடும்பமாக.

அம்மா “வா கவிதா என்று வரவேற்று கைகளை பிடித்து ரொம்ப நேரம் பேசினாள்”

அத்தை தன் கையாலே விஜய்க்கு ஜாங்கிரி ஊட்டிவிட்டாள்.விஜய் ஜாங்கிரியை சாப்பிட முடியாமல் ”ஹோவ் ஹோவ்” என்று அத்தையிடம் பாசமாக கூவினான்.

அபபாவிடம் ,அத்தை யண்ணா! யண்ணா! என்று நிறைய பேசினார்.

அத்தை தான் உடுமலைபேட்டையில் எப்படியெல்லாம் அந்தஸ்த்தாய் இருக்கிறேன் என்பதையும். தன் மகள் அரங்கேற்றத்துக்கு மூன்றரை லட்ச ரூபாய் செலவழித்து செய்த பெருமையையும் சொல்லி கொண்டிருதாள்.

அப்பாவும் பேசினார்.

கூர்ந்து கேட்டால் அப்பவும் அப்பா பேசினார். ஆனால் சுவாரஸ்யபகுதிகள் எதுவும் பேசவில்லைதான்.

வெறுமே பேசினார்.

பேச மட்டும் செய்தார்.

தன் வைராக்கியத்தை வைரம் மாதிரி பாதுகாப்பாக, என்னிடம் வைரம் இருக்கிறது என்று அலட்டாமல் , ஆனால் வைரத்தை மறக்காமல் அணித்து கொள்ளும் அப்பாவை பார்த்து அவனுக்கு கொஞ்சம் பயமாய்த்தான் இருந்தது.

No comments:

Post a Comment