Monday 26 January 2015

நாசூக்கு...

சில ஆட்டோ டிரைவர்கள் சிரிக்க சிரிக்க பேசுவார்கள்.
அதில் ஒருவர் இப்படி ஒரு கதை சொன்னார்.
அவருக்கு தண்ணி அடிக்கும் பழக்கம் உண்டு.அவர் மாமியாருக்கும் தண்ணி அடிக்கும் பழக்கம் உண்டாம்.(சிறுவயதில் மலேசியாவில் வளர்ந்தவர் )
ஆனால் கணவன் இருக்கும் போது அதைச் செயவதில்லை.கணவன் வீட்டில் இல்லாத சமயத்தில் மகள் வீட்டுக்குப் போகும் போது தானே விருந்து சமைப்பதாக மகளிடம் சொல்லி விட்டு
மருமகனிடம் சொல்வாராம்
“ நான் சொல்ற லிஸ்ட எல்லாம் வாங்கியாந்துருங்க”
“சரிங்க அத்த”
“ஒரு கிலோ சிக்கன்”
”சரி”
”கொஞ்சம் மட்டன்”
“சரி”
“பூண்டு கால்கிலோ”
”சரிங்க அத்த”
“ஒரு எம்.சி குவார்ட்டரு”
“சரிங்க அத்த”
“பச்சப் பட்டாணி கொஞ்சம்”
“சரிங்க அதத”
“சோடா இருந்தா சோடா”
“சரிங்க அத்த”
அதாவது மருமகனிடம் நேரடியாக சரக்கு வாங்கிவா என்று சொல்ல வெட்கம்.அதனால் மளிகைக்கடை லிஸ்ட் சொல்லும் போதும் போகிற போக்கில் குவார்ட்டரை நுழைப்பாராம்.
மருமகப்பிள்ளையும் வாங்கிவந்திருவார்.மாமியார் இழுத்துப் போட்டு மகளுக்கும் மருமகனுக்கும் குழந்தைகளுக்கும் சமைப்பார். அன்பாக பரிமாறுவார்.மற்றவர்கள் சாப்பிட்டு படுத்த பிறகு,
மாமியார் மட்டும் தனியாக அமர்ந்து விருந்துண்டு, மதுவையும் அருந்துவாராம்.
இதை அவர் நகைச்சுவையாக சொல்லும் போது ஆட்டோவில் உருண்டு உருண்டு சிரித்தேன்.
பெண்கள் பொதுவாக குடிக்கமாட்டார்கள் ஆனால் குடிக்கிறார்கள் என்பதை ஏளனமாக நினைத்து சிரிக்கவில்லை. அந்த மாமியார் மளிகைப் பொருட்களின் நடுவே குவார்ட்டரை சொல்லும் விதத்தை எண்ணி அந்தச் சிரிப்பு.
கொஞ்சம் திட்டமிட்டால் தர்மசங்கடமான விஷயத்தைக் கூட நாசூக்காக கேட்கலாம் என்பதுதான், இந்த பத்தியில் நான் சொல்லவரும் நீதி.

No comments:

Post a Comment