Sunday 11 January 2015

புதிய எக்ஸைல் வெளியீட்டு விழாவில் தருண் தேஜ்பால் பேசியது...

தருண் தேஜ்பால் பேசியது வருமாறு...
இன்றைய எக்ஸைல் 2 நாவல் அறிமுக விழாவில் தருண் தேஜ்பால் பேசியது வருமாறு...
இந்த பேச்சை குறிப்பெடுக்க, பேனா கொடுத்த பிரியமுடன் துரோகிக்கு நன்றி  
எனக்கு சாருவின் சீரோ டிகிரி நாவல் பிடித்திருந்ததின் காரணம், அது என்னை தொந்தரவு செய்தது.
ஒரு படைப்பு படிப்பவனை வசதியாக இருக்க விடக் கூடாது.படித்து முடிக்கும் போது, வாசகன் வசதியின்மையாக,ஏதோ ஒரு மூச்சுமுட்டலை உணரவேண்டும்.நாட்டின் நிகழ்காலப் பிரச்சனைகளை தைரியமாக முன்வைக்க வேண்டும்.சாருவின் படைப்புகள் அதைச் செய்கின்றன.
நான் ஒரு இந்து என்று சொல்லிக்கொள்வேன். இந்துவென்றால் ”தத்துவ அடிப்படையில்” என்று புரிந்து கொள்ளுங்கள். எனக்கு சம்பிரதாயம் சாஸ்திரம் மதத்துக்காக அடுத்தவரை கொல்வது,இகழ்வது போன்றவற்றில் நம்பிக்கை கிடையாது.
ஆனால் இந்து மத இலக்கியங்ளில் தேவையான கல்வி இருக்கிறது என்பதை நம்புகிறேன். மகாபாரதத்தை விட வாழ்வியலை சிறப்பாக சொல்லும் புத்தகம் ஏதுமுண்டா என்ன ?
எழுத்தாளன் சொல்வதை நின்று கேட்காத சமுகம் மிகப்பெரிய பின்னடைவை மட்டுமே சந்திக்கும்.
இங்கு பலர் சாரு செக்ஸ் எழுதுகிறார் அது இது என்று பேசுவதை கேட்க முடிந்ததால் சொல்கிறேன். காதல் செக்ஸ் எல்லாம் அத்தியாவசியமானது மட்டுமல்ல, அவைகளை நாம் வாழ்க்கையோடு இணைத்துதான் பல்லாயிரம் வருடங்களாக வாழ்ந்து வந்திருக்கிறோம். கடந்த இருநூறு வருடங்களாக பல்வேறு கோட்பாடுகளால் அதிக சிக்கலாக்கியிருக்கிறோம். காதலும் நகைச்சுவையும் இருந்தால் வாழ்க்கையில் என்னப் பிரச்சனையை வேண்டுமானாலும் சந்திக்கலாம். வெற்றிபெறலாம்.
சாரு செக்ஸ் பற்றி எழுதுவதை நான் ஆதரிக்கிறேன்.பாராட்டுகிறேன்.
எளிதாக எழுதுவது என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. சிக்கலான விசயங்களை சிக்கலாக எழுத வேண்டும். மனிதன் பல்லாயிரம் வருடங்களாக வாழ்ந்து சிக்கலாகிக்கிடக்கிறான்.அவன் சமுதாய அமைப்பு சிக்கலாக்கிக் கிடக்கிறது. இப்படி இருக்கும் போது எளிதாக எளிதான வாசிக்க இனிமையான விசயங்களை மட்டுமே எழுதுவது என்பது எழுத்தாளனின் கடமையாகாது. அவனுக்கென்று பொறுப்பிருக்கிறது.
எனக்கு 27 வயதிலும் 24 வயதிலும் இருபெண்கள் இருக்கிறார்கள்.மனைவியோடு சேர்த்து மூன்று பெண்கள் இருக்கும் உலகத்தில் இருந்து பார்த்து நான் சொல்கிறேன் இனி வரும் காலம் பெண்களின் காலம். பெண்கள் விழித்து விட்டார்கள். இந்த உலகத்தில் இருக்கும் மொத்த ஆண்களையும் வருங்காலத்தில் கூண்டில் அடைத்து தேவைப்படும் போது மட்டும் உபயோகப்படுத்திக் கொள்ளும் அளவுக்கு பெண்கள் வளரப்போகிறார்கள். ( சிரிப்பு). இதை அச்சுறதலாக சொல்லவில்லை. அவர்கள் முன்னேறப்போகிறார்கள் என்ற அடிப்படையில் மகிழ்ச்சியாக சொல்கிறேன்.
எழுத்தாளன் எழுத வேண்டிய முக்கியமான விஷயம் ”அதிகாரம்” அதிகாரம் எப்படி வளர்கிறது, ஆதிக்கம் செலுத்துகிறது, பரவுகிறது என்பதைப் பற்றி ஒவ்வொரு எழுத்தாளனும் ஆராயவேண்டும்.என்னிடம் பலர் கேட்கிறார்கள் “நீங்கள் ஏன் இந்தியாவைப் பற்றி குறைவாக எழுதிகிறீர்கள்” என்று. நாம் எதை நேகிக்கிறோமோ அதைத்தான் அதிகம் விமர்சிப்போம். அந்த அன்பினாலும் அக்கறையினாலுமே இந்தியாவை விமர்சிக்கிறேன்.
இந்தியா ஒளிர்கிறது என்றோம். டில்லியில் ஒவ்வொரு சின்கலிலும் ஒற்றை ரூபாய்க்காக பிச்சை எடுக்கும் குழந்தைகளைப் பார்க்கிறோம். சைனாவில் ஊட்டச்சத்து குறைவுள்ள ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் 6 சதவிகிதம் இருக்கிறார்கள். ஆனால் இந்தியாவி எவ்வளவு தெரியுமா? யாராவது சோசியாலஜி படித்தவர்கள் யூகம் வைத்திருக்கிறீர்களா? இல்லையா ? நான் சொல்கிறேன். இந்தியாவில் ஐந்து வயதுக்குள்ளாக சத்துணவு குறைவான ஊட்டச்சத்துக் குறைவான குழந்தகள் விகிதம் 46 சதவிகிதமாகும்.
ஸ்டாக் மார்கெட் உயர்கிறது என்பதெல்லாம் இந்திய வளர்ச்சியில்லை. ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விசயத்துக்கு முன்னுரிமை கொடுக்கும். அதுபோல இந்தியாவும் தன் நாட்டுப் பிரச்சனைக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் .எந்தப் பிரச்சனைக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதைக் கூட நாம் அமெரிக்காவிடமும் பிரிட்டனிடமும் காப்பி அடிக்கிறோம்.
இந்திய நாகரிகம் நல்ல நாகரிகம் என்பதை ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் வேண்டுமானால் சொல்லலாம்.ஆனால் தற்போதைய இந்தியாவை நல்ல நாகரிக நாடு என்று சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை.
நான் பாலியல் அத்துமீறல் பிரச்சனையின் விசாரணைக்காக ஜெயிலில் 5 1/2 மாதங்கள் இருந்தேன். அங்கே 24 வயது இளைஞனும் 28 வயது இளைஞனும் விசாரணைக் கைதியாக தலா 5 வருடம் 4 வருடம் என்று ஜெயிலில் இருந்தனர் அவர்கள் செய்தக் குற்றமாக சிறு திருட்டைச் சொல்கிறார்கள்.
ஒருவேளை தீர்ப்பில் விடுதலை ஆகிவிட்டால் அவர்கள் அனுபவித்த ஜெயில் தண்டனை. அவர்களிடமிருந்து போன காலம். அவர்கள் இளமை. அதனால்தான் சொல்கிறேன் இந்தியா சிக்கலான நாடு. இந்த சிக்கலான நாட்டி ஒவ்வொருப் பிரச்சனையும் சாரு போன்ற எழுத்தாளர்கள் கூர்மையாகப் பார்த்து எழுத வேண்டும். அதுதான் மக்களுக்கு விழிப்புணர்வைக் கொடுக்கும்.
ஊழலைவிட இந்தியாவின் முக்கியப் பிரச்சனை மதவாதமாகும். இந்திய சிற்பிகள் எனப்படும் காந்தியும் நேருவும் இந்தியாவை ஒரு மதச்சார்ப்பற்ற நாடாக ஆக்குவதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டார்கள்.
எவ்வளவு அக்கறையாக உழைத்தார்கள்.
சுதந்திரம் அடைந்த முதல்நாள் அதற்கான வேலையைத் தொடங்கினர் அதைத்தான் நாமெல்லோரும் அமைதி என்ற ரூபத்தில் அனுபவித்து வருகிறோம்.1947 ஆம் ஆண்டு இந்தியாவின் கல்வியறிவு பத்து சதவிகதம் மட்டுமே.அதிலிருந்து நம்மை மீட்டு கல்வி கொடுத்தது யார்?
இந்தியாவின் நிலப்பிரபு ஆதிக்கத்தை ஒழித்ததும் இவர்கள்தான். இப்போது வரைக்கும் பாக்கிஸ்தானால் அதை செய்யமுடியவில்லை. இன்று நாம் அனுபவிக்கும் சுகத்தின் விதைகளை இட்டவர்கள் 50 வருடத்துக்கு முந்தைய நல்ல அரசியல்வாதிகள்.
அரசியலை சமூகத்தை விமர்சனம் செய்யும் ஆர்வம் எழுத்தாளனுக்கும் ஊடகக்காரனுக்கு இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே நாடு நேர் திசையில் போகும்.
இந்த விழாவின் கூட்டத்தைக் கண்டு களிப்படைகிறேன்.
டில்லியின் இலக்கியக் கூட்டத்துக்கு இவ்வளவு கூட்டமெல்லாம் கூடாது. விருந்தில் ஷாம்பெயினும், சிக்கன் டிக்காவும் வைத்து அழைத்தால் மட்டுமே கொஞ்சம் மனிதர்களாவது வருவார்கள்.
ஆனால் இவ்வளவு அருமையான கூட்டம் சாரு நிவேதிதாவுக்கான வரவேற்பைக் காட்டுகிறது.
அவர் இந்திய அளவிலும், உலக அளவிலும் புகழ்பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
மகிழ்ச்சி.நன்றி.

No comments:

Post a Comment