Tuesday 2 December 2014

ஏடிஎம் காவலாளிகள்...

இந்த ஏடிஎம் காவலாளிகள் இறந்து கொண்டே இருக்கிறார்கள்.
யாராவது அவர்களை கொன்று கொண்டே இருக்கிறார்கள்.
சமீபத்தில் கூட டில்லில் 1.5 கோடி ரூபாய்த் திருட்டில் ஒரு காவலாளியை கொன்றிருக்கிறார்கள்.
பல ஏடிஎம் காவலாளிகளை இரவு நேரத்தில் கொல்கிறார்கள்.அவர்கள் இரவெல்லாம் அரைகுறையாக கண்விழித்து தங்கள் வேலையை செய்து முடித்து, சட்டமாய் விடியும் காலையில், நிம்மதியாய் போது வீட்டுக்குப் போய் தூங்கலாம் என்ற ஆசையோடு இருக்கும் போது கொன்று விடுகிறார்கள்.
அந்த ஏடிஎம் காவலாளிகள் அந்த வருடம் சபரிமலைக்கோ திருப்பதிக்கோ போகலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது கத்தியால் சொருகப்பட்டோ, சுடப்பட்டோ, கழுத்து நெறிக்கப்பட்டோ,பெரிய கல்லால் முகம் சிதைக்கப்பட்டோ சாகடிக்கப்படுகிறார்கள்.
மாதம் 6000 ரூபாய்,ஒருநாளுக்கு 200 ரூபாய் சம்பளத்துக்கு வரும் அந்த ஏடிஎம் காவலாளிக்கு கனவுகள் இருக்குமா இல்லையா என்பது பற்றி ஒரு நொடி யோசிக்காமலேயே இருக்கிறேன்.அவர்களின் இறப்புச் செய்திகள், செய்தித்தாள்களின் ஒரு அங்கமாக ஆகிவிட்டன.
6000 ரூபாய் மாதம் சம்பாதிப்பவனுக்கு என்ன மரியாதையை இந்த உலகம் கொடுத்து விடப்போகிறது.அதுவும் இந்திய ஆணாதிக்க சமூகத்தில் அவனுக்கு “சாணி மிதித்த கல்” லுக்கான மரியாதை கூட கிடைக்காதுதான் என்பதை நான் அறிந்து வைத்திருக்கிறேன்.
ஒரு ஏடிஎம் காவலாளி இறந்த உடன் இன்னொரு காவலாளி காத்திருக்கிறார் அந்த இடத்தைப் பிடித்து யாரோ ஒரு திருடனால் சாகடிக்கப்பட.
இந்தியாவில் 80 சதவிகிதத்துக்கும் மேலாக வறுமைக் கோட்டிற்கு கிழே பிறக்கும் ஜீவன்கள்தாம்.இந்திய ஆண்கள் அதிகம் பிறந்து வளர்ந்திருக்கிறார்கள்.இந்திய பெண்கள் அதிகம் பிறந்து வளர்ந்திருக்கிறார்கள்.அவர்கள் காமத்துக்கு நிறைய குழந்தைகள் பிறக்கின்றன.
பிராய்லர் கோழிகள் 50 நாட்களில் நமது ஞாயிறு காலை இட்லி தோசைக்கு மசாலாவோடு சேர்ந்து மகிழ்விக்க வளர்க்கப்படுவதைப் போல, இந்த Afterall ஏழைகள் நமக்காக வளர்ந்து வருகிறார்கள்.
அவர்களுக்கு பள்ளி வசதி, அடிப்படை வசதி,உறைவிட வசதி,சுகாதார வசதி எதுவும் கிடையாது.அந்த ஏழைக்குழந்தையின் தாய் தந்தை படித்தவர்கள் இல்லை.
இங்கே அந்த ஏழைக்குழந்தைக்கு Parrallel ஆக அதே காலகட்டத்தில் ஒரளவுக்கு வசதியான குழந்தை அம்சமாக வளர்கிறது.
ஏழைக்குழந்தை எப்படி இந்த உலகத்தில் பிழைக்க வேண்டும் என்று தெரியாமல் முழித்துக் கொண்டு அயர்ன் செய்பவனாகவும், குளத்து வேலை செய்பவனாகவும், வீட்டு வேலை செய்பவனாகவும், வயதாகி ஏடிம் காவலாளியாகவும் ஆகிறான்.
வசதியான குழந்தை படிக்கிறது.அதிகாரத்தைக் கைப்பற்ற, கைநிறைய சம்பாதிக்க படிக்கிறது. கோட்டூர்புரம் லைப்ரரிக்குச் சென்று சர்வீஸ் எக்ஸாமுக்கு வெறித்தனமாக படிக்கிறது.
அரசு உயரதிகாரி ஆகிவிட வேண்டும்.எல்லோரையும் அதிகாரத்துக்குள்ளும் பணங்காசுக்குள்ளும் அடக்கிவிடும் வெறி அந்த குழந்தையின் ஆழ்மனதில் ஏறிக்கிடக்கிறது.
அதை ஏற்கனவே ஒழுங்காக கோவிலுக்கு போய், பிறந்த நாளுக்கு சுவையான சர்க்கரை பொங்கல் வைத்து ஊட்டி விடும் அவன் ”குடும்ப அம்மாவும்”, தனக்கு மட்டும் அடிமையாயிருக்க வேண்டும் என்ற மறைமுகப் பொருளோடு போலி ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுக்கும் “குடும்ப அப்பாவும்” அவன் மனதில் ஏற்றியிருக்கிறார்கள்.
அவன் படித்து சம்பாதித்து ஏடிமில் நிறைய காசு வைத்திருக்கிறான்.அதை பாதுகாக்கும் ஏடிம் காவலாளி அநியாயமாக செத்து விடுகிறான்.படிக்காவிட்டால் சம்பாதிக்காவிட்டால் அப்படித்தான் இந்திய சமூகம் சகஜமாக கொன்று விடும் என்பது அந்த ஏடிம் காவலாளிக்குப் புரியவில்லை.
எனக்கொன்றும் இல்லை.
எனக்குக் குறையே இல்லை.
நேற்றுதான் பூட்டிய உறுதியான வீட்டில், மனைவியோடு மகிழ்ச்சியாக கலந்தேன்.அதன் பின் ஒரு கப் தயிரும் சீனியும் கலந்து புளிப்பினிப்பு லஸ்ஸி குடித்தேன்.
கொஞ்சம் இறைவன்.கொஞ்சம் இயற்கை ரசிப்பு.
ஒருவேளை குரு இருந்திருந்தால் அவருக்கு விழா எடுத்திருப்பேன்.
குழந்தைக்கு மாதா மாதம் விளையாட்டு சாமான்கள் வாங்கிக் கொடுக்கிறேன்.அவள் அதற்காக எனக்கு முத்தம் கொடுக்கிறாள்.
இந்த ஏடிம் காவலாளிகள்தாம் செத்துப் போய்விடுகிறார்கள்.அது எனக்கொரு செய்தியே இல்லை.அது பற்றி ஒரு விநாடிகூட நான் யோசித்துக் கவலைப்படத் தேவையில்லை.
எனக்கு இரக்க மனத்தில்லையா ? இரக்க மனதை ஒரு Element ஆக நான் வைத்திருக்கவில்லையா? வைத்திருக்கிறேன்.
அதோ அன்று புலி ஒருவனை மிருகக்காட்சி சாலையில் கொன்றதே அன்று இரக்கப்பட்டேன்.
இதோ பவுன்சர் பாலில் அடிபட்டு இறந்தாரே ஆஸ்திரேலிய வீரர் அவருக்காக கண்ணீர் சிந்தினேன்.
இரக்கப்படுவதற்கென்று ஒரு தகுதி இருக்கிறது.
அந்த இறப்பில் ”சம்பவங்களின் விசேசம்” இருக்க வேண்டும். அந்த ”சம்பவங்களின் விசேசத்தின்” தனித்தன்மையும் வித்தியாசத்தையும் பார்த்துதான் என் மனம் இரங்கும்.
சும்மா ஒரே மாதிரியாக செத்துக் போகும் ஏடிம் காவலாளிக்காக இல்லை

No comments:

Post a Comment