Tuesday 11 June 2013

கதை போல ஒன்று - 97


கிறிஸ்த்து ஏன் இப்படியான மனிதர்களை தனக்கு பணி செய்ய படைத்திருக்கிறார்?

அவருடைய அங்கியின் வெண்மை மனதில் இல்லையே?

இரண்டு கைகளையும் பின்பக்கமாக கட்டி அவர் நடந்து செல்ல வேண்டும்.

நானும் அப்பாவும் அவரை கெஞ்சிகொண்டே பின் செல்ல வேண்டும்.அதிலும் அப்பா இருக்கிறாரே குரல் நடுங்க கெஞ்சுவதைப் பார்த்தால் யாருக்கும் மனம் கரையும்.

ஆனால் ஃபாதர் பர்பனபஸுக்கு மனம் கரையவில்லை.

காரட் உருளைக்கிழங்கு சாப்பிடும் வெண் பன்றிக்கறியைத் தான் ஃபாதர் சாப்பிடுவார் என்று கண்ணன் சொல்லியிருக்கிறான்.

நாகர்கோவிலில் சிறந்த கிறிஸ்த்தவ பள்ளியான அதில் சேர கிறிஸ்த்தவனாய் இருப்பதுதான் முதல் தகுதி என்று பூடகமாய் எனக்கு தெரிந்திருந்தாலும், அதில் படிக்க ஆசைப்பட்டேன்.

அப்பாவும் ஆசைப்பட்டார்.

ஐந்தாம் வகுப்பு வரை முதல் ஐந்து இடங்களில் இருப்பேன்.இரண்டு மூன்று பரிசுகள் வேறு வாங்கியிருக்கிறேன்.

ஆறாம் வகுப்பு வேறு பள்ளிக்கு மாறியே ஆகவேண்டும். ஃபாதர் பர்னபஸ் எண்டிரண்ஸ் எக்சாம் வைத்திருந்தார். எல்லாமே மிக எளிதான் கணித ஆங்கில கேள்விகள். நன்றாகவே எழுதினேன்.ஆனால் தேர்வானவர்கள் வரிசையில் என் பெயர் இல்லை.

என்னை விட சுமாராக படிப்பவருக்கெல்லம் இடம் கிடைத்திருக்கிறது.எனக்கில்லை.

ஃபாதர் பர்பஸிடம் கேட்டோம். ரூம் உள்ளே கூட்டிச்சென்றவர்
“உங்க பையன் மேத்ஸ்ல இருபத்தியைஞ்சிக்கு நாலு மார்க் வாங்கியிருக்கான்.இங்கிலீஸ்ல ஆறு மார்க்தான் வாங்கியிருக்கான்” அதான் சீட் இல்லை. வேற ஸ்கூல் பாத்துக்கோங்க என்றார்.

அப்பா பதில் பேசவில்லை. காரணம், எனக்கு அப்பாவுக்கு ஃபாதர் பர்னபஸ் மூவருக்கும் நன்றாகவே தெரிந்திருந்தது.

எழுந்து வந்து விட்டோம்.

லிஸ்டில் கண்ணனின் பெயர் இருந்தது.கண்ணன் எப்போதாவது பாஸாகும் நண்பன். அவனுக்கு எப்படி கிடைத்தது என்று அந்த துக்கத்திலும் தெரிந்து கொள்ள ஆர்வம்.

ஸ்கூலுக்கு வந்து கொண்டிருந்த கண்ணனிடம் கேட்டேன்.

” அது எங்கய்யா ஸ்கூல் கட்டிட மேஸ்திரில்லா. அத வெச்சு ஃபாதர் கிட்ட சீட் வாங்கிட்டாருல மக்கா”.

‘ஒஹோ ஃபாதர் ஃபர்பஸ்! வெண்பன்றி கறி சாப்பிடுபவரே! வெள்ளை அங்கியை தினமும் துவைத்து போடுபவரே! பைபிளின் வார்த்தைகளை படித்து மனப்பாடம் செய்து சர்ச்சில் கடவுளுக்கும், கடவுளை நம்பின மக்களுக்கும் ஒப்புவித்து அப்பம் கொடுப்பவரே! இதுதானா உங்கள் ஞாயம். பள்ளியில் படிக்க ஞானஸ்தானம் வாங்கியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் கட்டிட மேஸ்த்திரி ஆகியிருக்க வேண்டும் இல்லையா” என்று குமறினேன்.

ஆனால் அப்பா நம்பிக்கை இழக்கவில்லை. ஃபாதர் காலையில் வரும் போது கெஞ்சிக்கொண்டே பின்னால் போவார்.

அடுத்து எப்பவாது ஃபாதர் வரும் போதும் பின்னாலே போவார்.

ஃபாதர் ஃபாதர் என்று இரந்து கொண்டே இருப்பார்.அப்படி போகும் போது ஃபாதர் ஃபாதர் என்று சொல்லும் போது உதடுகள் ஒட்டாது.

பரிதாபம் வரும்.

இரண்டு மாதங்கள் முன் கடைக்கு வந்த  வெள்ளாளர் ஒருவர், அப்பாவை நீ வா போ என்று ஒருமையில் பேசி கன்னத்தில் வாங்கியது நினைவுக்கு வந்தது.

கண்கள் சிவப்பேற “ இந்த ஊர் கார நாடாக்கமாரு மாதிரி நினைச்சியோ. நான் பாண்டிக்காரன்ல. வார்த்தைல மரியாதை இருக்கட்டும்” என்று சொல்லும் போதே அவருக்கு கன்னத்தில் அடிவிழுந்தது.

இவ்வளவு கம்பீரமாக நினைத்து வைத்திருந்த அப்பா, இப்போது பிச்சை எடுக்கும் பதத்தில் கெஞ்சிக்கொண்டிருந்தார்.

வீட்டில் வயதுக்கு வந்து கல்யாணமாகாத எழுபதுகளை சேர்ந்த பெண் அடையும், ’பாரமாக இருக்கிறோம்’ என்ற குற்ற உணர்வை நான் அடைந்தேன்.

இரவெல்லாம் தூக்கம் வராது. அப்பாவுக்கு பாரமாக இருக்கிறோம். நம்மால்தான் அப்பாவுக்கு அவமானம். நம்மால் தான் அப்பா கெஞ்சுகிறார். இப்படியே செத்துவிட்டால் என்ன? அப்பாவுக்கு தொல்லையே இல்லை.ஃபாதர் பர்னபஸுக்கு கூட காலையில் எங்கள் முகத்தில் விழிக்க வேண்டாம்.

முடிவில் ஃபாதர் எங்களை தன்னுடைய அறைக்கு கூப்பிட்டார்.

’தண்ணி குடிக்கிறீங்களா’

‘இல்ல வேணாம் ஃபாதர்’

‘சரி எதுக்கு டெய்லி ஸ்கூலுக்கு வந்து இப்படி கெஞ்ச்சிரீங்க’

‘இல்ல ஃபாதர் இது ரொம்ப நல்ல ஸ்கூலுன்னு தெரியும் அதான்’

‘அட என் நெலமைய புரிஞ்சிக்கப்பா. இங்க இனிமே அட்மிசன் போட்டா என்கிட்ட கேள்வி வரும்ப்பா.ஒண்ணு செய். இந்த வருசத்த விட்று.அடுத்த வருசம் செவந்த் ஸ்டாண்டர்ட்ல பார்க்கலாம் என்ன இப்ப போங்க’

அப்பா தொண்டையை செருமிக்கொண்டார் குரலைத் தாழ்த்தி ‘ ஃபாதர் முதல் ரெண்டு பசங்களுக்கு இங்க சீட் கிடைக்கல.இப்ப மூணாவது பையனுக்காவது இங்க சீட் கிடைச்சா நல்லது ஃபாதர்’.

‘எனக்கு புரியுது.ஆனா என்னால முடியாது.அடுத்த வருசம் வாப்பா பையன கூட்டிட்டு’

தோல்வியோடு வெளியே வந்தோம்.

அதோடு அந்த் அத்தியாயம் முடிந்தது என்று நினைத்துக்கொண்டால் முடியவில்லை.

மறுபடியும் மறுநாள் காலையிலில் அப்பா என்னை கூட்டி வந்து விட்டார்.

’ஏம்பா இப்படி கெஞ்சுறீங்க.அசிங்கமா இருக்குப்பா’

‘படிப்புக்காக யார் கால்யும் விழலாம் விஜய்’

அப்படியே ஒருவாரம் போயிற்று.

அன்று காலை ஃபாதரின் காலை உணவு சுவையில்லையோ என்னவோ சட்டென்று அப்பாவிடம் திரும்பி “என்னப்பா அதான் சீட் இல்லன்னு சொல்லிட்டேன்ல.அசிங்கமா இல்ல இப்படி டெய்லி வந்து தொந்தரவு பண்றதுக்கு” என்று சொல்லி அப்பாவின் முகம் சுருங்கியதைப் பார்த்தவுடன் ஆவேசம் வந்தது எனக்கு.

வராண்டாவில் இருந்து தாவிக்குதித்து ஒட ஆரம்பித்தேன்.

ஒட்டமென்றால் வெறியான ஒட்டம்.

அப்பா என்னை துரத்துகிறார்.ஆனாலும் என்னை பிடிக்க முடியவில்லை.

ஃபாதரை விட்டு விலகி ஃபுட்பால் கிரவுண்டில் என்னை அப்பா பிடித்து கொண்டதை ஃபாதர் பார்ப்பது எனக்கு தெரிந்தது.

அழுகை வெடித்தது.என்னை பிடித்த அப்பாவை அடித்தேன்.

என் சட்டையை கிழிக்க முயற்சித்தேன்.

என்னவெல்லாமோ பேசினேன்.

எங்கெல்லாமோ கேட்டு பழகிய கெட்டவார்த்தை அன்று வாயில் வெடித்தது.

”அந்த ஃபாதர் குன்னயா ( ஆணுறுப்பு) வெட்டுவேம்பா. தயளி புண்டாமவன் கிறிஸ்டினுக்கு மட்டும்தான் சீட் கொடுப்பானோ. இருவது நாளு வந்து கெஞ்சிட்டே இருக்கோம்.இவனெல்லாம் என்னத இயேசுவ கும்பிடுறானாம். சர்ச்சுல நடக்குற மாஸுக்கு வர  பழம் கேக்கு எல்லாம் தின்னு கொழுத்த பன்னிப்பா அவன்.பரதேசி கூதிமவன்.எனக்கு இந்த ஸ்கூல்ல சீட் வேண்டாம்பா.சத்தியமா வேண்டாம்.இனிமே இங்க வரவேண்டாம்”

நான்தான் பேசினேனா அல்லது சர்ப்பமாய் வந்து ஏவாளிடம் கனி உண்ணச் சொல்லிய சாத்தான்தான் பேசினானா என்று தெரியாது.ஆனால் தொடர்ச்சியாக குச்சியால் ஒருவனை அடித்துகொண்டிருந்தால் அவன் அப்படித்தான் பேசுவான் என்று தோண்றியது.

அப்பா என்னைப் பார்த்துக்கொண்டே இருந்தார்.கொஞ்சம் அவர் கண்கள் கலங்கினாற் போல இருந்தது.

சட்டென்று என்னை நோக்கித் திரும்பியவர் “சரி வா இந்த ஸ்கூல் வேண்டாம் ”என்று இழுத்துப்போனவர் நூறு மீட்டர் தாண்டியதும்.

“உலகம் அப்படித்தான் இருக்கும். உனக்கு இது மொத தடவைன்னொ ஒடன கோவம் வருது. இன்னும் போகப் போகப்பாரு இப்படித்தான் இருக்கும். நீ கவனிச்சிப்பாரு அந்த ஃபாதர் நினைச்சிருந்தா கேட்டுக்கு வெளியே நம்ம வர முடியாம பண்ணியிருக்கலாம்.வாட்ச்மேன விட்டு நம்மள உள்ள வரமுடியாம செய்திருக்கலாம்.ஆனா அப்படி செய்யல. வராண்டா வரை நம்மள அலோ பண்ணியிருக்கார்.உனக்கு உன் சீட்டு மட்டும்தான் கவலை.அவருக்கு அது மாதிரி எவ்வளவு பிரச்சனையோ.நம்மள மாதிரி ஜாதிக்காரங்க எல்லாம் படிச்சிருக்கோம்ன்னாலே அது அவுங்களாலத்தான். அவங்க இல்லாட்டி நாம் இன்னும் கோவணம் பாய்ச்சிகிட்டு பனமரம் ஏறிகிட்டுத்தான் இருந்திருப்போம் .இன்னும் நிறைய இருக்கு “

“நீங்க என்ன சொன்னாலும்ப்பா நான் வரமாட்டேன் இனிமே இந்த ஸ்கூலுக்கு”

‘நாளைக்கு ஒருநாள் மட்டும் போவோம்.அவர் முடியாதுன்னுடாருன்னா விட்றுவோம்’

மறுநாள் காலை நாங்கள் ஃபாதர் பர்பனப்ஸுக்காக காத்திருந்தோம். வரவே இல்லை. மதிய வாக்கில்தான், ஃபாதர் தன் ரூமுக்கு காலையிலே வந்து விட்டார் என்ற செய்தி கிடைத்தது. கொஞ்ச நேரம் பிறகு எங்களை உள்ளே வரச்சொன்னார்.உட்காரச்சொன்னார்.

“வாப்பா. காலையிலேயே உங்கள வரச்சொல்லிருப்பேன்.எனக்கு கொஞ்ச சுகர் அதிகமாயிட்டதால அப்படியே சேர்ல படுத்து கிடந்தேன்”

“உங்களுக்கு சுகர் இருக்கா ஃபாதர்” அப்பா பணிவோடு கேட்டார்.

“இருபத்தியட்டு வயசுலே ஆரம்பிச்சிட்டுப்பா.ரொம்ப கஸ்டம் அதோட. அத விடு. பையனுக்கு ஒரு சீட் இருக்கு. அட்மிசன் வாங்கிக்க.”

பின் என்னைப்பார்த்து ‘நல்லா படிக்கனும். டிசிப்ளினா இருக்கனும்” என்று சொல்லி ஒரு சீட்டில் எழுதி என்னிடம் கொடுத்து

‘போங்க அபீஸ்ல போய் ஃபார்மாலிட்டீஸ் முடிச்சிட்டு கிளாஸ்ல போய் பையன உட்கார வைங்க’

எழுந்தோம்.

‘இருப்பா’ என்று சொல்லி ஃபாதர் ஃபர்னபஸ் என்னை நெருங்கி தலையில் கைவைத்து சின்ன ஜெபமாய் வாயில் முணுமுணுத்து அனுப்பினார்.

வராண்டாவில் நடக்க நடக்க இனி எப்படி அப்பாவின் முகத்தை பார்க்க போகிறோம் என்கிற வெட்கம் வந்தது.

1 comment:

  1. தந்தை தன்முன் பிறரால்(அது கடவுளே ஆயினும்…!) அவமானப்படுவதை எந்த பண்பான மகனும் பொறுத்துக் கொள்ளவே மாட்டான்.அப்படி மகன் தனக்காக வெகுண்டெழுந்தால் தந்தையின் முகம் அடையும் பிரகாசம் ஆயிரம் சூரிய பிரகாசம்…! என் தந்தைக்காக நான் வெகுண்ட சம்பவத்தை என் தாயிடம் நானில்லாத போது சொல்லி சொல்லிப் பெருமையுறுவார் என்தந்தை என்று இப்போதும் நினைவு கூர்வார் என் தாய்…! தேங்க்ஸ் விஜய் நினைவைத் தேட வைத்தமைக்கு…!

    ReplyDelete