Thursday 27 June 2013

கதை போல ஒன்று - 96


லேபர் வார்டின் வெளியே அவளின் கரிய நிற செருப்பு கிடந்தது.
அவளே அங்கிருந்து என்னைப் பார்த்தது மாதிரி இருந்தது.

தங்கையிடம் இருந்து ஐந்து நிமிடம் முன்தான் போன் வந்தது. “நீங்க சிசேரியன் எல்லாம் பயப்படாதீங்க. கரெக்ட பண்ணிரெண்டு நிமிசம்தான்.ஆபிரேசனை முடிச்சிருவாங்க”

என்னுடன் யாருமில்லை அந்த கணத்தில்.நான் மட்டும்.தவிப்பு என்னை அலைகழித்தது.

வெளியே வந்து எட்டிப்பார்த்தேன்.”நாகாத்தம்மன்” கோயில் தெரிந்தது.வேண்ட மனது வரவில்லை.

ஆனால் தம்பி நினைவுக்கு வந்தான்.தம்பியின் காதல் நினைவுக்கு வந்தது.

”கிறிஸ்டின் பொண்ண கல்யாணம் பண்றதெல்லாம் நம்ம வீட்ல செட் ஆகுமாம்மா.அவன் அது மாதிரி செஞ்சா நான் குடும்பத்த விட்டு போயிருவேன் இவள கூட்டிக்கிட்டு.அப்புறம் எனக்கு யாரும் வேண்டாம்”.

அம்மா அழுது கமறிய குரலில் சொன்னார்.” அதுக்கு என்னடா பண்ண முடியும்.விரும்பிட்டான்.அந்த பொண்ணும் வீட்ல ஒரே பொண்ணு.என்ன செய்ய முடியும். எனக்கும் ஒருமாதிரிதான் இருக்கு.என்ன பண்ண முடியும்”

“யம்மா அந்தப் பொண்ணு சர்சுக்கு போகும்.அவனுக்கு பிறக்கிற குழந்தை எப்படி வளரும்.குழப்பமாத்தானே. லவ் எல்லாம் பெரிய விசயம் இல்லம்மா ரெண்டு மாசம் பிரிஞ்சிருந்தா எல்லாம் மறந்துரும்.”

......

“இப்ப என்ன இவன் கிறிஸ்டினா மாறுனுமாமா”

‘ஆமா அவுங்க மதத்தில பற்றா இருப்பாங்கல்லா.மதம் மாறி ஞானஸ்தானம் வேற வாங்குமுமாம்லா”

“ஆர்சியா பெந்தகொஸ்தேவா புரொட்டஸ்டண்டா ம்மா”

“ஆர்சிதான் பொட்டெல்லாம் வெச்சிக்கிலாம்.சட்டுன்னு தெரியாது.இப்பவே டெய்லி காலையில பத்து நாள் கிளாஸுக்கு போறான் சர்ச்சுக்கு’

‘எந்த சர்ச்சுக்கு’

‘பெரம்பூர் சர்ச்சுக்கு’

‘ஏம்மா இந்த நாய்க்கு புத்தி இப்படி போகுது.ஒழுங்காத்தான இருந்துச்சு நம்ம குடும்பம்.யாராவது இப்படி ஒரு காரியத்த செய்ஞ்சோமா”

அம்மா அமைதி காத்தாள்.

ஒத்துக்கொள்ளவே முடியவில்லை.அமைதியாக இருந்த குடும்பத்தில் தம்பி குழப்பம் ஏற்படுத்துவதாகவே நினைத்து கொண்டேன். வெறிபிடித்து போய் கத்தினேன்.

‘இந்த பன்னி இது மாதிரி செய்வான்னா, ரெண்டாம் கிளாஸ்ல கிட்னியெல்லாம் இன்ஃபெக்ட் ஆகி, முகமெல்லாம் வீங்கி சாகக்கிடந்தானே கோபாலபிள்ளை ஆஸ்பிட்டல்ல அப்பவே சாகட்டும்ன்னு விட்டிருக்கலாம்” என்றேன்.

அம்மா என்னைப் பார்த்தாள்.”வேணாம் வேணாம் என்ன விட்று.என்னால இந்தப் பேச்சக் கேக்க முடியாது’ என்று அழுதுகொண்டே சோபாவில் சாய்ந்தாள்.என்னை கும்பிட்டாள்.

நான் ஆபீஸுக்கு போய்விட்டேன். கொஞ்ச நேரத்தில் அண்ணனிடம் இருந்து போன்.

“விஜய் அம்மா மனச கண்டதையும் பேசிக்கஸ்டப்படுத்தாத,நீ இன்னும் கொஞ்ச மாசத்துல அப்பா ஆகப்போற.வைஃப் பிரக்ண்டா இருக்கும் போது சந்தோசமா இருக்கனும்.எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன்.தயவு செய்து அம்மாகிட்ட போய் “அவன் செத்திருக்கலாம் இவன் செத்திருக்கலாம்ன்னு பேசாத. அம்மா அழுறத போன்ல கேட்டாலே எனக்கு ஒண்ணும் ஒட மாட்டேங்குது”

லேபர் வார்டில் இருந்து ஒரு நர்ஸ் வெளியே வந்தார்.நான் எழுந்தேன்.ஒன்றுமே சொல்லாமல் மறுபடி உள்ளே போனார்.

அதிலிருந்து தம்பியின் காதல் திருமண விவகாரத்தில் நான் தலையிடவில்லை.

என்னைப் பொறுத்தவரை தம்பியே இல்லை என்று நினைத்து வாழ ஆரம்பித்தேன்.

மனைவியிடம் ‘அண்ணி’ என்று பேசுவான்.என்னிடம் பேச வருவான்.பதிலுக்கு பேசுவதில்லை.உறவு இல்லையென்றால் இல்லைதான்.அதை மறக்க அடுத்த கட்ட வேலையை தொடக்கி விடுவது வழக்கம்.

ஆனால் இப்போது மனைவியின் பிரசவம் உள்ளே நடக்க நினைத்து பார்த்தால், ‘ஏன் அப்படியெல்லாம் கீழ்தரமாக நடந்துகொண்டேன்.

படித்த புத்தகத்தின் பக்குவம் என்னுள் இறங்கவே இல்லையே.

ஆண் பெண்ணை காதலிக்கிறான்.இதற்குள் ஏசுவையும் முருகனையும் போட்டு ஏன் குழப்பிக்கொண்டேன்.

இருக்கட்டுமே கிறிஸ்தவர்கள் கொஞ்சம் மத அபிமானம் உள்ளவர்களாகவே இருக்கட்டுமே.தம்பி மதம் மாறட்டுமே.அதனால் என்ன வந்து போச்சு.? என்ன கலாச்சாரம் குழப்பம் வந்துவிடும்.சம்பிரதாயம்தான் கலாச்சாரமா?

அல்லது அது இன்னும் வேறான பொருளா?

இப்போது தம்பி என்ன செய்கிறான்.கல்யாணம் முடிந்து மகிழ்ச்சியாகத்தானே இருக்கிறான்.எதாவது கெட்டு போய்விட்டானா?

ஒன்பது நிமிடங்கள் ஆகியிருந்தது.

ஆவேசத்தின் மொழிகளுக்கு இங்கிதம் கிடையாது.இரக்கமும் கிடையாது.

வாழ்க்கையின் நெருக்கடி மனதில் உள்ள அழுக்கை காட்டிக் கொடுத்துவிடுகிறது.

அறிவு ,கற்றது ,உணர்ந்தது, நண்பனின் கதை அடுத்தவன் கதை எல்லாம் கேட்டு நெகிழ்ந்தது அனைத்தும் தனக்கு தனக்கு என்று வரும் போது பொய்யாகிவிடுகிறது.

தனக்கு ஒரு இக்கட்டு என்று வரும் போது, மனதில் உள்ள ஒநாய் விழித்து கடித்து குதறுகிறது.

அம்மாவாய் இருந்தால் என்ன ? அப்பாவாய் இருந்தால் என்ன? அப்போது உள்ளே இருக்கு வளர்ந்த சூழ்நிலை சார்ந்த மதவெறியும் அருவருப்பும் சூழ்ந்து கொள்கிறது.

பதினைந்து நிமிடம் முடிந்ததும், அந்த அழகான வெண்மையான பப்ளி இளம் டாக்டர் துணியில் வைத்து ஒரு குழந்தையை எடுத்து வருகிறார்.

ஆம் அது என் குழந்தைதான்.என்னுள் இருக்கும் பகுதிதான் அவன்/அவள்.கிட்டே பரபரப்பாய் ஒடிப்போகிறேன்.

டாக்டர் முந்திச்சொல்கிறார்.

“பாப்பா பொறந்துக்குங்க.கங்கிராட்ஸ்”

‘வெயிட் ஒகேவா டாக்டர்’

‘இரண்டே முக்கால்.ஒகேதான்’

ரோஸ் நிற போட்டபிள் பேபி பெட்டில் சின்ன பூவாய் படுத்திருக்கிறாள் என் மகள். இதோ என் மகள்தான்.

உடம்பெல்லாம் நடுங்குகிறது.

உள்ளே இருந்து சுரப்பது என்னது.இதுதான் உண்மையான பாசமா? இதுவரை நான் கொண்ட எல்லா உலக அன்புகளும் போலிகள் என்று பட்டவர்த்தனமாய் தோண்றியது.

மிச்ச காலத்திற்கெல்லாம் இந்த குழந்தையின் அடிமையாய் நான் இருப்பேன் என்று தோண்றியது.

கிட்டே சென்று கையில் எடுத்தேன்.பார்த்துக்கொண்டே இருந்தேன்.

“இந்த பன்னி இது மாதிரி செய்வான்னா, ரெண்டாம் கிளாஸ்ல கிட்னியெல்லாம் இன்ஃபெக்ட் ஆகி, முகமெல்லாம் வீங்கி சாகக்கிடந்தானே கோபாலபிள்ளை ஆஸ்பிட்டல்ல அப்பவே சாகட்டும்ன்னு விட்டிருக்கலாம்”

நான் அம்மாவிடம் சொன்ன வாக்கியங்கள் நினைவுக்கு வந்தது.

தம்பியும் இதுமாதிரிதான் சிறுகுழந்தையாய் இருபத்தியாறு வருடங்கள் முன் அப்பா கையில் இருந்திருப்பான் என்று தோண்றியது.

இதோ இதுமாதிரிதான் இளசாக தோலெல்லாம் மென்மையாக இதே குழந்தையாகத்தான் இருந்திருப்பான்.நான் அடையும் இதே உணர்வைத்தான் அம்மாவும் அடைந்திருப்பாள்.

அம்மா அன்று சோபாவில் மயக்க நிலையில் விழுந்து சாய்ந்து அழுது கமறியது எனக்குள் இறங்கியது.

கவலையும் மகிழ்ச்சியும் துக்கமும் சேர்ந்து உடலே கரைந்து பரவசமாய் இருந்தது. என்ன செய்ய வேண்டுமென்று எனக்கு தெரியவில்லை.

பிள்ளையின் வாயில் சுரந்த எச்சிலை எடுத்து நக்கினேன்.அவளைப்பார்த்து சிரித்தேன்.டாக்டருக்கு நன்றி சொன்னேன்.

அம்மாவை பார்க்கவேண்டும் போல் இருந்தது.

2 comments:

  1. இந்துக் கடவுள்களை 'சாத்தான்கள்' என்று விளிக்கும் சில தீவிர கிறிஸ்தவர்களைக் காணும்போது நான் தீவிர இந்துவாகி வாக்குவாதம் செய்துள்ளேன்… நம்பிக்கைகள் நாய்க்குட்டிகள் போல… அவற்றிற்கு வெறிபிடிப்பதும் நமக்கு வெறிபிடிப்பதும் நம் கையில் மட்டுமல்ல,எதிர்ப்படுவோர் கையிலும் உள்ளது என்பது என் அபிப்ராயம்…!

    ReplyDelete
  2. அன்புடையீர்..
    இன்று வலைச்சரத்தில் தங்களது தளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    http://blogintamil.blogspot.com/2014/01/blog-post_30.html
    நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete