Tuesday 18 June 2013

கதை போல ஒன்று - 100


லூர்து,தலையணைக்குள் முகத்தை புதைத்து கொண்டு இயேசுவே இயேசுவே இயேசுவே என்று இயேசுவையே துதித்து கொண்டிருந்தாள்.

கிளாஸ் டீச்சராகி அந்த முறைதான் ஸ்டூடண்ஸுக்கு முதன் முதலாக ‘புராகிரஸ் ரிப்போர்ட்’ வழங்கப்போகிறாள். ஆனால் அவளுடைய பதட்டத்திற்கு காரணம் அதுவல்ல.

லூர்து ஹோலிக்கிராஸில் பி.ஏ ஹிஸ்டரி முடித்ததும், பிரைமரி ஸ்கூல் ஹிஸ்டரி டீச்சராக வேலை கிடைத்தற்கு காரணம் தான் எந்த ஞாயிறையும் விடாமல் சர்ச்சுக்கு போனதுதான் என்று நம்பினாள்.

அவளுடைய ஒடிசலான உடலுக்கு கூட சேலை பொருந்தி டீச்சருக்குள்ள கம்பீரத்தை கொடுக்கும் காட்சியை கண்ணாடியில் முதன் முதலாய் பார்க்கும் போதே ‘நல்ல டீச்சராய்’ வேலைக்கு சேர்கிறேன். அதே அளவு நேர்மையை ரிட்டயர்ட் ஆகும் வரை கடைபிடிப்பேன் என்று மானசீகமாய் சபதம் எடுத்துக் கொண்டாள்.

லீவே எடுக்காமல் வருடம் முழுவதும் வந்ததால், சேர்ந்து முதல் வருடம் முடியும் போதே ஐந்தாம் வகுப்பு பி செக்சனுக்கு கிளாஸ் டீச்சராக பெட்டினா மேரி சிஸ்டர் நியமித்தார்.

பெட்டினா மேரி சிஸ்டர் வயதெல்லாம் கணக்கில்லை.திறமைதான் முக்கியம் என்று “சர்ச் சபை” ஏற்பாடு செய்திருந்த ”ஸ்பெசல் மேனேஜ்மெண்ட் டிரனிங்கில்” கேட்டு கேட்டு, அதை செயல்படுத்த லூர்த்தின் பதவி உயர்வை உறுதியாக்கினார்.

அவர் லூர்த்திடம் கேட்டதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் “லூர்து எனக்கு நீ உண்மையான அன்பை நேர்மையை கொடுக்க வேண்டும்.நான் எடுத்த முடிவு சரிதான் என்று என் மனசாட்சி நம்பவேண்டும்” என்று.

லூர்து சிஸ்டரின் வளையல் இல்லாத மெல்லிய கைகளைப் அன்பாய் பிடித்து தன் சத்தியத்தை உறுதி செய்தாள்.

ஜூன் மாதம் மன்திலி டெஸ்டுக்காக சோசியல் சயின்ஸ் பரிட்சை வைக்க வேண்டும்.

மற்ற எல்லா பாட பரிட்சைகளும் வைத்து முடித்து கிளாஸ் டீச்சரான லூத்துவிடம் மார்க் லிஸ்டை கொடுத்து விட்டார்கள் சக டீச்சர்கள்.

சோசியல் சயின்ஸ் மட்டும் லூர்த்து இன்னும் வைக்கவில்லை. அவள் மாணவர்க்ளை திரும்ப திரும்ப நன்றாக கற்க செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தாள்.

முதன் முறையாக பெட்டினா மேரி சிஸ்டரின் ரூமில் உள்ள உலக உருண்டையை தன் வகுப்பிற்கு எடுத்து வந்து அவள் பாடம் சொல்லிகொடுப்பதை மற்ற ஆசிரியர்கள் பொறாமையுடனும், பெட்டினா மேரி பெருமிதத்தோடும் பார்த்து கொண்டிருந்தார்.

இப்படி சோசியல் சயின்ஸ் பரிட்சையை பிந்தி பிந்தி ஒரு வெள்ளிக்கிழமை வைத்தாள்.

அந்த பள்ளியில் மன்திலி டெஸ்டுகளை நோட்டில்தான் எழுத வேண்டும்.பேப்பரில் எழுதக்கூடாது. நோட்டில் எழுதி மிஸ்ஸிடம் கொடுத்து விட வேண்டும்.

பரிட்சை முடிந்ததும் நோட்டுகளை எல்லாம் வாங்கி வைத்து விட்டு பெட்டினா மேரி சிஸ்டரிடம் தகவல் சொன்னாள்.

“தென் வாட் லூர்து மோளே! திங்கள் புராகிரஸ் ரிப்போர்ட் கொடுத்தரலாமே”

“திங்களா சிஸ்டர்”

“சனி ஞாயிறு லீவு.இந்த மன்திலி டெஸ்ட் நோட்ட வீட்டுக்கு எடுத்து போயிட்டு திருத்து.மார்க் எண்டர் போடு. டோட்டல் போட்டு புராகிரஸ் ரிப்போர்ட் கொடுத்திரு”

’சரி சிஸ்டர்’

‘முத தடவையா புராகிரஸ் ரிப்போர்ட் பிரிப்பேர் பண்ணப்போற. கங்கிராட்ஸ் லூர்து.”

வெள்ளி இரவே நோட்டை கடகடவென திருத்தினாள். திருத்தி முடித்தால் நாற்பத்தி இரண்டு நோட்டுக்கு பதிலாக நாற்பத்தி ஒன்றுதான் இருக்கிறது.எப்படி குறையும்? குழம்பினாள்.

அட்டென்டண்ஸ் ரெஜிஸ்டரை எடுத்துப் பார்த்தாள்.யாருமே லீவ் இல்லை. ஆனால் எப்படி குறைகிறது. தங்கையின் துணையுடன் ஒவ்வொன்றாக சோதித்தாள்.

சோதித்தில் விஜயபாஸ்கர் என்பவனின் நோட்டைக் காணவில்லை.

வெள்ளி இரவு நரகமாய் போயிற்று. சனிக்கிழமையும் லூர்துவுக்கு ஒன்றுமே ஒடவில்லை. நோட்டைத்தொலைத்து விட்டோமே என்ற கவலை.

இதற்கு பதிலாக திங்கள் இன்னொரு பரிட்சையை வைக்க வேண்டுமென்றால் திங்களே புராகிரஸ் கார்டை கேட்கும் பெட்டினா மேரி சிஸ்டரிடம் என்ன சொல்ல.

அழுகை வந்தது, தனியாக உட்கார்ந்து அழுதுகொண்டிருந்தாள்.

லூர்து மிஸ் அழுதுகொண்டிருக்கும் போது விஜய் சட்டையில்லாமல், ஊக்குகள் இல்லாத டிரவுசரை மடித்துக்கட்டி ஆனந்தமாக பட்டம் விட்டுக்கொண்டிருந்தான்.

திடீரென்று பட்டத்தை இன்னும் கொஞ்சம் உயரமாக ஏற்றும் ஆசை வந்தது . வீட்டிற்குள் ஒடிவந்து தன் பையில் வைத்திருக்கும் பட்ட நூலை எடுக்க வந்தவன் , தன்னுடைய ஹிஸ்டரி மன்திலி டெஸ்ட் நோட்டைக் கண்டான்.

கையில் எடுத்துப்பார்த்தான். பரிட்சை எழுதிவிட்டு மிஸ்ஸிடம் கொடுக்க வேண்டும். கொடுக்க மறந்து பையில் வைத்து கொண்டுவந்திருந்தான். பயத்தில் தலைவலித்தது.

லூர்து அழுதுகொண்டே இருந்தாள்.அப்பா விசாரித்தார்.அம்மா விசாரித்தார்.சமாதானப்படுத்தினார்கள்.

ஆனாலும் அழுகையை விடவில்லை.” யம்மா ஏம்மா மொத மொதல்ல புராகிரஸ் ரிப்போர்ட் கொடுக்கப்போறேன் இப்படி பண்ணிட்டாரே ஆண்டவர்” என்று அழுது அழுது கடவுள் மேல் கோபம் கொண்டாள்.

“இனிமே ஞாயிறு சர்சுக்கு போகவே மாட்டேன்மா” என்று சபதம் எடுத்தாள்.

லூர்து சபதம் எடுக்கும் போது விஜய் திருச்செந்தூர் முருகன் படம் முன்னே நின்று சாமி கும்பிட்டு கொண்டிருந்தான்.”முருகா எப்படியாவது என்ன இந்த இதுல இருந்து காப்பாத்து, வேணுமின்னே பண்ணல, தெரியாம பண்ணிட்டேன்.நா வேணா ஒம் சரவண பவ ஃபை ஹண்டிரட் டைம்ஸ் எழுதிர்றேன் முருகா”

ஞாயிறு காலை எழுந்த லூர்து என்னதான் சர்ச்சுக்கு போகக்கூடாதென்று நினைத்தாலும் அவளையறியாமல் குளித்து உடுத்து போனாள் ஆண்டவரை துதிக்க.

ஞாயிறு காலை எழுந்த விஜய்க்கு அந்த ஐடியா தோண்றியது.லூர்து மிஸ்ஸின் வீட்டுக்கு போனால் என்ன? லூர்து மிஸ்ஸின் வீடு இருக்கும் சந்தின் பெயர் தெரியும்.அங்கே போய் விசாரித்தால் என்ன?

முயற்சிப்போம். மன்திலி டெஸ்ட் நோட்டை எடுத்துக் கொண்டு அம்மாவிடம் விளையாடப்போவதாக சொல்லிவிட்டு அதிமிக்கேல் சந்துக்குப் நடந்தான்.

சர்ச்சில் லூர்த்து இயேசுவிடம் கதறிக்கொண்டே இருந்தாள்.வீடு திரும்பும் போது டிரவுசர் சட்டையுடன் ஒரு பையன் நின்று கொண்டிருப்பது தெரிந்தது.

“என்னடா”

”மிஸ் நான் உங்க கிளாஸ்ல படிக்கிறேன்.விஜயபாஸ்கர்”

“உள்ள வா.என்ன விசயம்”

ஹாலில் அவனை உட்காரச்சொன்னார்.விஜய் நோட்டை எடுத்து லூர்துவிடம் கொடுத்தான்.

லூர்துவிற்கு சந்தோசம். தான் தொலைக்கவில்லை. இப்போது நோட்டே கையில் கிடைத்துவிட்டது. தன் பிரச்சனையெல்லாம் தீர்ந்துவிட்டது என்று நினைக்கும் போது அவளுக்கு அந்த கவலை வந்தது.

இவன் வீட்டிற்கு நோட்டை எடுத்து எதாவது பார்த்து எழுதியிருந்தால்

“ஏண்டா நோட்ட எடுத்துட்டுப்போன”

விஜய் சேரைவிட்டு எழுந்து அழ ஆரம்பித்தான்.

“தெரியாம எடுத்து பேக்ல வைச்சுட்டேன் மிஸ்.”

”வீட்ல போய் பாத்து எழுதினியா”

”ச சத்தியமா இல்ல மிஸ்”

நோட்டைப்பிரித்தாள்.

”சொல்லு வாட் இஸ் லேட்டியூட்?

சரியாக பதிலைச்சொன்னான். இன்னும் இரண்டு மூன்று கேள்விகள் மிகச்சரியாக பதில் சொன்னான்.

நேர்மை என்றும் தைரியத்தை கொடுக்க கூடியது. சத்தியத்தின் கம்பீரம் எவரையும் ஈர்க்கவே செய்யும்.
சத்தியம் நிம்மதியானது. நேர்மைக்குள் இருப்பவனக்கு சட்டதிட்டம் பற்றிய கவலையில்லை. தார்மீகம் பலம் கொடுக்கும் சக்தி காண்டாமிருக பலம்.

“ம்ம்ம் நம்புறேன்.இனிமே இப்படி செய்யகூடாது”

“சரி மிஸ்”

“காலையில சாபிட்டியா சாப்பிடுறியா”

‘...... “

ஆப்பமும் குருமாவும் சாப்பிட்டான்.

“இத ஸ்கூல்ல யார்கிட்டயாவது சொல்லுவியா விஜய்”

”சொல்லமாட்டேன்”

”தேங்ஸ்டா”

விஜய் லூர்துமிஸ்ஸைப் பிரிந்து வரும்போது சூரியன் அழகாயிருந்தது, மரங்களின் பச்சை அழகாயிருந்தது. மூச்சை ஆனந்தமாய் இழுத்து விட முடிந்தது, நடக்கவே முடியவில்லை மகிழ்ச்சியில் கிரிக்கட் பேட்டை எடுத்துக்கொண்டு வெறித்தனமாக ஒடினான்.

ஒடிக்கொண்டிருக்கொண்டிருக்கும் போது “தேங்ஸ் முருகா... முருகாஆ தேங்க்ஸ் ” என்று மனதுக்குள் கூவிக்கொண்டிருக்கும் போது

லூர்து தன்னுடைய பிரச்சனையை தீர்த்து வைத்ததற்காக இயேசுவுக்கு தனிஜெபம் மூலம் நன்றி சொல்லி கொண்டிருந்தாள்.

4 comments:

  1. நேர்மை என்றும் தைரியத்தைக் கொடுக்கக் கூடியது.சத்தியத்தின் கம்பீரம் எவரையும் ஈர்க்கவே செய்யும்.நேர்மைக்குள் இருப்பவனுக்கு சட்டதிட்டம் பற்றிய கவலையில்லை…! - அருமையான வரிகள்…
    கதையின் அடிநாதமான நேர்மை அற்புதமாக கையாளப்பட்டுள்ளது…!

    ReplyDelete
  2. அவரவரின் பயத்திற்கு அவரவரின் சாயும் தோள்கள்...

    ReplyDelete
  3. அருமையான கதை.
    வாழ்த்துகள்.
    நன்றி திருமதி கிருத்திகா தரன் - உங்கள் பக்கத்தில் பார்த்து தான் இந்த கதையை படித்தேன்.

    ReplyDelete
  4. நேர்மை அற்புதமாக கையாளப்பட்டுள்ளது....அருமையான கதை......
    மனதை தொடுகிறது -பாரதிபிரியன்

    ReplyDelete