Tuesday 2 October 2012

அய்யப்ப சாமி சீசனில் அல்வாதான்...

கொத்த வேலை (குளத்து வேலை) செய்பவர்கள் தங்கள் உடைமைகளான பிக்காஸ்,பாண்டை, கடப்பாரை,பூசு கரண்டி போன்ற உபகரணங்களை பஸ்ஸிலோ க்ஷேர் ஆட்டோவிலோ எடுத்து போகும் போது அதற்க்கு மற்றவர்கள் கொடுக்கும் ரியாக்சன் எரிச்சலாய் வரும்.

முகத்தை கடுகடுவென வைப்பதும், வாயினுள்ளே முனங்குவதும், “இது வேர” என்பது மாதிரியான பாவனைகள்.

அந்த கொத்த வேலை செய்பவர்கள் பஸ்ஸிலோ ஆட்டோவிலோ அவர்கள் உபகரணங்களை கொண்டு போகாமல் வேறு எதில் க
ொண்டு போவார்கள்.

அதற்கென்று தனியா லாரியா வைத்து கொண்டு போக முடியும்.

விவாசாயி போன்று அவர்களும் நாட்டின் முக்கியமான ஆட்கள் என்றே நினைக்கிறேன்.

நாகர்கோவிலில் பெரிய பேக்டரிகள் எதுவும் கிடையாது என்பதால் அங்கு கொத்த வேலை எல்லோராலும் செய்யபடும் வேலை.

கஸ்டபட்டவர்கள் என்றில்லை.

மிடில் கிளாஸ் கூட செய்வார்கள்.

அதில் எந்த மரியாதை குறைவும் கிடையாது என்று நினைப்பார்கள்.என்னுடைய நண்பர்கள் சில பேர் முழுவருட லீவிற்கு சித்தாள் வேலைக்கு சென்று பணம் சம்பாதிப்பார்கள்.

குடிப்பழக்கம் இல்லாத கொத்தனார்கள் மேஸ்திரியாகி முன்னேறி வெள்ளையும் சொள்ளையுமாய் அலைபவர்களும் இருக்கிறார்கள்.

இல்லை இல்லை கொத்த வேலை செய்து எனக்கு உடம்பெல்லாம் வலிக்கிறது. அதற்காக மாம்பட்டை குடிக்கிறேன், சாராயம் குடிக்கிறேன் என்று குடித்து அலைபவர்கள்தான் அதிகம்.

சாயங்காலம் ஆனால் குடித்து விட்டு "என் பக்கத்துவீட்டுகாரர்" தினமும் மனைவியை அடிப்பார்.

அடி என்றால் செம அடி.

எலும்பில் அடிப்பது நமக்கு கேட்கும்.

எப்போதும் மனைவியை “கள்ளமாப்பிள்ளை பிடிச்சுட்டா” என்றே சொல்வார்.உடனே மனைவி அவரை திட்டுவார். என்னையா திட்டுற என்று அடிப்பார்.

அது வீட்டில் நாடகமாகவே நடக்கும்.”அடிமையின் மோகம்” என்று பாரதியார் சொல்வாரே அடிமையாய் இருப்பதில் இருக்கும் இன்பத்தை கண்டு அந்த பெண் செயல்படுவது போல இருக்கும் ( பாஸ்கர பட்டேலரும் என்கிற நாவலில் சர்க்கரியா இந்த “அடிமையின் மோகத்தை” அழகாக சொல்லி இருப்பார்).

ஒருநாள் இதுமாதிரி மனைவியை அடித்து கிழே தள்ளி, மனைவி மீதே ஒண்ணுக்கு அடித்தார்.

அதை மனைவி அப்படியே ஏற்று கொண்டார்.

அவர் அந்த சிறுநீரை அருவி மாதிரி தலையில் பெய்ய, பெண் அதில் இருந்து விலகாமல் அப்படியே ஏற்று கொண்டார். அந்த அதீத்தை அந்த பெண்ணும் ரசிக்கிறார் என்று அம்மாவிடம் ஆர்கியூ செய்து “சனியன பொம்பளயா பொறந்து பாரு அப்ப தெரியும் “ நற்நற பல்கடி திட்டு வாங்கியிருக்கிறேன்.

இது ஒரு எடுத்துகாட்டு மட்டுமே.

நாகர்கோவிலில் இது மாதிரி பலபேரை பார்க்கலாம்.

அய்யப்ப சாமி சீசன் வந்தால் இந்த குடிமகன்கள் எல்லாம் ஒருவர் விடாமல் மாலை போடுவார்கள்.

குடிக்க மாட்டார்கள்.

அப்சல்யூட் ஜெண்டில்மேனாக இருப்பார்கள்.

சாயங்காலம் குடிக்க வைத்திருந்த பணத்தில் செவ்வாழை பழமும், உள்ளி வடையும் வாங்கி மனைவிக்கு ஊட்டிவிட்டு அன்பாய் இருப்பார்கள்.

ஆனால் அய்யப்ப சீசனில் பிரம்மசர்யத்தை கடைபிடிப்பதால் தாம்பத்யம் கிடையாது.

அது எப்படி? குடிக்காமலும் இருக்க வேண்டும், தாம்பத்யமும் வேண்டும் என்று ஒரு பெண் நினைக்கலாம்.

ஒன்று இருந்தால் ஒன்று கிடைகாதுதானே! கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசையா?

பக்கத்து வீட்டுக்காரர் அய்யப்ப சாமி குருசாமி என்பதால் அவருக்கு நிறைய நெய் கிடைக்க்கும்.

ரேசன் கோதுமையை வாங்கி அதை ஊறபோட்டு ஆட்டுகல்லில் ஆட்டி பாலெடுத்து, நெய்யை விட்டு கோதுமையை கிண்டுவார் அவர் மனைவி “அந்த அக்கா”.

அம்மாவை மறக்காமல் உதவிக்கு கூப்பிடுவார்.

அம்மாவும் அடிக்கடி அல்வா கிண்டும் கான்பிடனஸில் தன் உதவியை செய்த்துவிட்டு வருவார்.

முந்திரி பருப்பு நிறைய போட்டு எங்களுக்கு நிறைய தருவார்கள். அம்மா அதை மறுத்து கொஞ்சமாக வாங்கி வருவார்.

நான் செய்த அல்வா !நான் செய்த அல்வா! என்று அவர் எல்லோருக்கு கொடுக்கும் போது அந்த சின்ன வயதிலே எனக்கு மனது உருகும்.

அவர் அவ்வாறு அல்வா கிண்டும் போது பக்கத்து வீட்டில் இருக்கும் மற்ற அப்பர் மிடில் கிளாஸ்களில் சிலதுகள். “அவளுக்கென்ன அய்யப்ப சாமி சீசனில் ஒரே ஜாலிதான். அல்வாதான் “ என்று சொல்வது நான் கேட்ட மிகப்பெரிய ஆபாச வார்த்தைகளை விட கேவலமான வார்த்தைகளாக தெரியும்.

மறுபடி அய்யப்ப சீசன் முடிந்ததும் அவர் குடிக்க ஆரம்பித்து விட்டார்.

பக்கத்து வீட்டு அக்காவான தன் மனைவியை அடிக்க ஆரம்பித்தார்.

அக்கா எரிச்சல் தாங்காமல் மலிவு விலையில் கிடைக்கும் “எறும்பு பொடியை” தண்ணீரில் கலந்து குடித்து விட்டார்.

குடித்து விட்டு பொறுமையாக சொல்ல, அவரை அடித்து பிடித்து ஆட்டோவில் போட்டு கோட்டார் அரசு ஆஸ்பித்திரிக்கு கொண்டு போனார்கள்.

“எறும்பு பொடி” குடித்தால் குடலை கழுவினாலே போதும். ஒன்றும் ஆகாது.

ஆனால் டாக்டர்கள் கணவனை பயமுறுத்துவதற்காக ரொம்பவும் பயங்காட்டியிருக்கிறார்கள்.

சொந்தக்காரர்கள் திட்டு வேற.

மனைவி செத்து விடுவாள் என்றே பயந்து விட்டார்.

அவருடைய பத்தாம் வகுப்பு படிக்கும் பையன் கூட அவரை முதன் முதலாக திட்ட அவமானபட்டிருக்கிறார்.

எல்லாரையும் விட்டு தனியே வீட்டுக்கு வந்திருக்கிறார்.

தனிமை இன்னும் பயமுறுத்த கொத்த வேலைக்கு வைத்திருந்த பம்பரக்கயிறை ரெண்டு மூணாய் ஒன்றாக்கி ரூமில் போய் கதவை சாத்தியிருக்கிறார்.

அப்பா இப்படி போவதை பார்த்த பத்தாம் வகுப்பு படிக்கும் அவர் மகன் பின்னாலே ஒடிபோயிருக்கிறான்.

அவன் வருவதற்குள் அவர் துடிதுடித்து அடங்க போவதற்காக ஆடி கொண்டிருந்தார் தூக்கில்.

”அப்பா கால் அடுறத என் கண்ணால பார்த்தேன் மக்கா ”என்றான் என்னிடம் பிறகு ஒருநாள்.

இப்படியாக் அந்த குடிகாரர் ரொம்ப அனிமேட்டடா எல்லோரையும் பைத்தியமாக்கி செத்து போனார்.

அதன் பிறகு அந்த குடும்பம் அல்வா கிண்டாது.

அல்வாவும் சாப்பிடாது.

இது மாதிரி சிலவற்றை பார்த்து பார்த்து எனக்கு குடிமேல் தாங்கமுடியாத வெறுப்பு உண்டு.

”வைனில் ஆல்ஹாலே இல்லை சும்மா குடி மச்சி” என்று சொல்லும் நண்பனைகூட மனதில் செமயா திட்டி வெளியே மெலிதாக் மறுக்கிறேன்.

அமெரிக்கா சென்றிருக்கும் போது பார்ட்டியில் என்னிடம் ஒருவர் கேட்டார் நீங்கள் ஏன் குடிப்பதில்லை.

இவ்வளவு சீன் போடுகிறீகள் எனபது மாதிரி கேட்டார்.

“என் அப்பாவுக்கு நான் குடிப்பது பிடிக்காது “ என்றேன். அவரால் அதை ஜீரணிக்கவே முடியவில்லை.

உன் அப்பா எப்படி உன் வாழ்க்கையில் வரமுடியும். நீ அவரிடம் இருந்து வந்தாய் ( நவீனனின் டைரி) அவ்வளவுதான்.மற்றபடி நீ நீயாகத்தான் இருக்க வேண்டும்.

என்னை கிண்டல் செய்தார்.

அவருடைய கிண்டல் என்னை பாதிக்கவே இல்லை.

மனதிற்குள் “போடா லூசுப்பயல” என்று சொல்லி எனக்கு கொடுத்திருந்த பிரிசர்வடு ஆரஞ்சு ஜூசை குடித்தேன்.

No comments:

Post a Comment