Sunday 29 January 2017

பெண் குழந்தைகள் தினம்...

இரண்டு நாட்கள் முன்பு பெண் குழந்தைகள் தினம் என்று ஒரு தினத்துக்கு பலர் வாழ்த்துச் சொன்னார்கள்.
அதற்கு சில நாட்களுக்கு முன் ஒரு காட்சியைப் பார்த்தேன்.
சென்னை நகரின் மத்தியில் நடந்து வந்து கொண்டிருக்கும் போது என் மகளின் வயதான ஒரு பெண் குழந்தை நின்று கொண்டிருந்தாள்.
காட்சியை மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்.
ஆறு வயதிலான பெண் குழந்தை அவள். மேலே டாப்ஸ் அணிந்திருக்கிறாள். கிழே ஜட்டி போடவில்லை. டாப்ஸை முன்பக்கம் கொத்தாக இடது கையால் பிடித்திருக்கிறாள்.
அவள் முன் ஒரு பெரியவர் ஒரு ஒடிந்த மரக்கிளையை கையில் வைத்திருக்கிறார். அது பிரம்பு அல்ல.கிளைகளின் பிரிவுகளோடவே அவர் அதை கையில் வைத்திருக்கிறார்.
அவர் முகம் கோபத்தால் துடிக்கிறது. அவர் முன்னே அந்த அம்மணங்குண்டி ஆறுவயது குழந்தை கொஞ்சம் அசடு வழிந்தாற்போலவும், பயந்தும் சொல்கிறது
“அது டூ பாத்ரூம் போனேன்”
“போவ அதுக்கு அங்கதானா வருவ” என்று சில கெட்டவார்த்தைகளை உதிர்க்கிறார் அந்தப் பெரியவர்.
இந்தப் பெண் அதே அசடு வழிந்து
கொண்டிருக்கிறாள்.
பக்கத்தில் இன்னொரு பெரியவர் வந்து “யாரு இது” என்று கேட்க,
“நம்ம இடத்துல வந்து...” என்று மறுபடியும் திட்டுகிறார்
அந்த கிளையை வைத்துக் கொண்டிருந்த பெரியவர். பின் அப்பிள்ளையை விரட்டிவிடுகிறார். அவளையே பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
அப்படி நடந்து அவளைக் கடந்து இன்னும் முன்னே போகும் போது அவள் ஒடி அவள் அம்மாவிடம் நிற்கிறாள். அக்குழந்தையின் முகத்தை என்னால் பார்க்க முடிகிறது. அவளின் கலக்கமான முகத்தைப் பார்த்ததும் அம்மா “இயாய்... என்னாச்சிடீ” என்று கத்துகிறார்.
அம்மாவைப் பார்த்ததும் அவளின் அந்த அசடு வழிந்த முகம், ஒரு விநாடியில் வாய் கோணி, உதடு துடித்து கதறி அழுகிறது.
அதை நான் பார்த்துவிட்டேன். அந்த அசடு வழியும் அவமானப்பட்ட முகத்தையும், அந்த அசடு வழிந்த முகம் அம்மாவைப் பார்த்ததும் திடீரென்று மாறும் அந்த மாற்றத்தையும் பார்த்து விட்டேன்.
அதைப் பார்த்ததும் எனக்கு ஒன்றும் ஒடவில்லை.
மூச்சை சரியாக விட முடியாத மனத்துன்பத்துக்கு ஆளானேன்.
என் இதயத்தை யாரோ வைத்து நைத்து சிதைத்து வைத்தது போல உணர்ந்தேன்.
என் மகளே அப்படி அழுதது போன்று உணர ஆரம்பித்தேன்.
அவள் மகள்தான்.
ஆம் அவள் அழுவது போன்றே அழுதாள்.
அப்படியே.
அப்படித்தான்.
- அந்தக்குழந்தை டூ பாத்ரூம் இருந்து ஆசுவாசமான பிறகு அவர் திட்டினாரா. இல்லை இவர் வருவதைப் பார்த்து அவளுக்கு டூ பாத்ரூம் நின்று போய்விட்டதா.
- நிச்சயமாக ஆறு வயது பெண்குழந்தைக்கு நல்ல சுயமரியாதை வளர்ந்தே இருக்கும். அந்த அவமானம் அவள் மனதை எந்த அளவுக்கு பாதித்திருக்கும்.
-வளர்ந்த பிறகு அப்பெண் குழந்தை இந்த சமூகத்தை எப்படி மதிப்பாள்.
- ஆறு வயது பெண் குழந்தை நிம்மதியாக டூ பாத்ரூம் போகும் விஷயத்தில் கூடவா ”பிறப்பு” ஒரு காரணியாக இருக்கும். அதற்கு கூடவா இந்தியாவில் வசதியான குடும்பத்தில் பிறக்க வேண்டும்.
- எப்படி இந்தியராக பிறக்கும் போது, இந்தியராக இருக்க வேண்டும் என்று உரிமையோ இந்திய அரசு நிர்பந்திக்கிறதோ, அதே அரசுக்கு சுகாதாரத்தின் அடிப்படை வசதிகளை அனைத்து மக்களுக்கும் நிச்சயம் செய்து கொடுக்கும் கடமை இருக்கிறதுதானே.
சிறுபான்மையினரான மிடில்கிளாஸுகளும், மிகசிறுபான்மையினரான பணககாரர்களும் நினைத்து கூட பார்க்க முடியாத பல பிரச்சனைகளை சிறு குடிசைவாசிகள் அனுபவித்து வருகின்றனர்.
திக்கித் திணறி கொஞ்சம் கொஞ்சமாக சிறு சிறு பொருட்களை சேர்க்கின்றனர். வாழ்க்கையை நிலையாக்கி ஒரு தாளகதிக்கு கொண்டு வருவதே அவர்கள் வாழ்நாள் லட்சியம்.
அவர்களைப் போய்....

No comments:

Post a Comment