Sunday 29 January 2017

பரோட்டாவும் நானும்...

மதியத்துக்கு மேல் இன்றொரு அலுப்பான நாளாக இருந்தது.
ஹாலில் பழைய மெத்தை ஒன்றை விரித்து அப்படியே மலைமாடு மாதிரி படுத்துக் கொண்டேன்.
உருண்டு உருண்டு கிரிக்கட் பார்த்துக் கொண்டிருந்தேன்.
அதையாவது உருப்படியாக பார்த்தேனா இல்லை.
பக்கத்தில் ஒரு புத்தகம். கையில்; மொபைல். புத்தகத்தை வாசிப்பேன். அப்புறம் விளம்பரத்துக்கு நடுவே சேனலை மாற்றுவேன். மொபைலில் ஃபேஸ்புக் பார்ப்பேன்.
எதையும் ஒழுங்காக செய்வதில்லை.
இப்படியே இருக்கையில் வெறுமையாக உணர்வோம். என்னடா வாழ்க்கை இது என்ற எரிச்சல் வரும்.
கண்ணாடியை கழற்றி வைத்துவிட்டு தூங்க முயற்சி செய்தேன். மதியம் தூக்கமும் வராது எனக்கு.
மனம் பரபரவென்றே இருக்கும்.
தலை வலிக்க ஆரம்பித்தது. டீ குடித்தேன். ஒரு பதிவு எழுதினேன்.
சலிப்பு சலிப்பு சலிப்பு. யாராவது முதுகில் ரெண்டு குத்து குத்தி விட்டால் தேவலாம் என்பது போன்ற சோம்பேறித்தனம்.
எதையும் செய்ய முடியவில்லை.
யோசிக்க முடியவில்லை.
வாசிக்க முடியவில்லை.
உட்காரமுடியவில்லை.
இரவானது.
திடீரென்று உடையை மாற்றி தெருவில் நடந்தேன்.
ஒரு கிமீ தள்ளி ஒரு பரோட்டா கடை இருந்தது. கூட்டத்தில் ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு மூன்று பரோட்டா ஒரு ஆம்லேட் ஆர்டர் செய்தேன்.
அந்த அண்ணனை பக்கத்தில் அழைத்து “ பரோட்டா ஃப்ரெஷ்ஷா கொண்டு வாங்கண்ணே” என்று குரல் தழுதழுக்க சொன்னேன்.
சூடாக மூன்று பரோட்டாக்கள் வந்தன.
மேலே சிக்கன் குருமாவை சுடச் சுட ஊற்றினார்.
ஆம்லேட் அம்சமாக வெங்காய வாசனையோடு வந்தது.
மொபைலை ஆஃப் செய்தேன்.
தலையை புரோட்டாவுக்கள் விட்டேன்.
ஒரு துண்டு பரோட்டோவை சால்னாவில் நனைத்து ஆம்லெட்டை பிட்டு வைத்து ஒரு வாய். மறுபடி அதே மாதிரி, மறுபடி அதே மாதிரி.
சுற்றம் மறந்தேன். சூழ்நிலை மறந்தேன்.
என் பெயரை மறந்தேன். என்னை மறந்தேன்.
நான் பரோட்டோ ஆம்லேட்
நான் பரோட்டோ ஆம்லேட்
அப்போது ஒருதடவை கூட மொபைலை ஆன் பண்ண தோன்றவே இல்லை.
ஃபேஸ்புக் பாக்க தோன்றவில்லை. வாட்ஸ் அப் பார்க்க தோன்றவில்லை.
அப்படியே உடல் மனம் இன்னும் என்னவெல்லாம் இருக்கிறதோ அதெல்லாமும் ஒன்றாய் கலந்து பேரனுபவத்துகு சென்றேன்.
தட்டு இலையை வழித்து நக்கினேன்.
சுயநினைவுக்கு வந்தேன்.
அப்போது அடைந்த புத்துணர்ச்சி இருக்கிறதே வார்த்தையால் விவரிக்க முடியாத மனஎழுச்சி அது.
வரும் போது சோர்வாக வந்தவன் போகும் போது குதியாட்டம் போட்டு போனேன்.
வழியில் ஒரு ஐஸ்கிரீம் கடையில் கோன் ஐஸ் வாங்கி நக்கிய படியே வீடு நோக்கிச் சென்றேன்.
என்னை மாதிரி எத்தனை கோடிக்கணக்கான தமிழன்கள் இந்த ”பரோட்டா தவ” நிலையை தினமும் அடைகிறான்கள் என்பதை எண்ணி வியந்து கொண்டே சென்றேன்.
ஜப்பானியர்களுக்கு எப்படி டீயோ
தமிழன்மார்களுக்கு அப்படியே பரோட்டா
என்று நினைத்தபடி வீடு வந்து சேர்ந்தேன். 

No comments:

Post a Comment