Thursday 3 July 2014

நேர்முகத் தேர்வு செல்லும் முன்...

இவையெல்லாம் சொந்த அனுபவத்தில் சொல்வது. உண்மையா என்று தெரியாது  

1.நேர்முகத்தேர்வில் அதிகம் பம்மாதீர்கள்.வேலை கொடுத்த பின்தான் அவர் நமக்கு பாஸ்.(பிராக்டிக்லா சொல்றேன்) அதற்கு முன்னால் நாமும் அவரும் சமம்தான்.அதற்காக நக்கலான பாடி லேங்குவேஜும் தவறு.சாதரணமாக அமர்ந்திருக்க வேண்டும்.

2.எக்ஸ்டிரா பிட் போட்டு நீங்களே மாட்டிக்கொள்ளாதீர்கள்.ஒருமுறை நான் தேவையில்லாமல் NPSH என்று சொல்லிவிட்டேன்.அதே வார்த்தையைப் பிடித்துக் கொண்டு காய்ச்சி எடுத்து விட்டார்கள்.

3.நீளமாக நீங்கள் பேசி முடித்த பிறகு, கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “நான் பேசுவது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்” என்று சொல்லலாம்.( ஆனால் இதெல்லாம் ரிஸ்க்தான்.கேட்கும் முகபாவம் முக்கியம்)

4.Relocation பற்றி கேட்பார்கள். டில்லிக்கோ மும்பைக்கோ நீ எப்படி வருவாய்? எங்கே வீடு பார்ப்பாய் ?இதெல்லாம் கேட்கும் போது மிக சகஜமாய் “அதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை” என்று சொல்லவேண்டும்.இந்த சமயத்தில் பாடி லேங்குவேஜ் முக்கியம்.அதை கூர்ந்து கவனிப்பார்கள்.

5.ரொம்ப பணக்காரனும் இல்லை, நீங்கள் கொடுக்கும் சம்பளத்தை மட்டும் நம்பியிருக்கும் ஏழையுமல்ல.மத்திம தன்னம்பிக்கைகாரன் என்பதை எப்படியாவது புரிய வைத்து விடுங்கள்.

6.ஏன் பழைய வேலையை விட்டாய்? என்று கேட்டால் “அதற்கு பல காரணங்கள் இருக்கிறது.பணம் மற்றும் மாற்றம் என்பது முக்கிய காரணம்” என்று சுற்றி வளைத்துப் பேசுங்கள்.இந்த விசயத்தில் மிக நேரடியாக பேசுவது அவர்களுக்கு பிடிக்காது.

7.எங்கள் கம்பெனியில் எத்தனை வருடம் வேலை பார்ப்பீர்கள் என்று கேட்டால் “குறைந்தது நான்கு வருடங்கள் “என்று தைரியமாக சொல்லுங்கள். “நான்கு வருடங்களுக்கு அப்புறம் வேற வேலைக்கு போயிருவீங்களா” என்று கேட்டால் , “அது அப்போதைய பிரச்சனை.இப்போதைக்கு என் மனதின் முடிவு இதுதான்” என்று நச்சென்று சொல்லுங்கள்.

8.உங்களைப் பற்றிச் சொல்லுங்கள் என்றால்,பர்சனலாக கொஞ்சம் சொல்லிவிட்டு வேலை சம்பந்தமாக சொல்ல ஆரம்பித்து விடுங்கள். அதிலும் ரொம்ப நுணுக்கமாக சொல்லாதீர்கள். மேலோட்டமாக Core மட்டும் சொல்லுங்கள். விரித்து கேள்வி கேட்க வேண்டியது அவருடைய வேலை.

10.இண்டர்வியூ செய்பவர் இந்தியர் என்றால் அவர் நிச்சயமாக அட்வைஸ் செய்வார்.நீங்கள் அவரை விட புத்திசாலியாக இருக்கலாம். இருப்பினும் ”இந்திய பெரியவர்களை” அட்வைஸ் செய்ய விட்டால் அவர்கள் மாபெரும் மன நிம்மதியையும்,திருப்தியையும் அடைவார்கள்.இண்டர்வியூவின் முடிவில் அவரை அட்வைஸ் செய்ய விட வேண்டும். உதாரணமாக “ மும்பைல இருந்து சென்னைக்கு எமர்ஜென்சின்னா ஃப்ளைட் அதிக காசாகுமா சார்?” என்று கேட்கலாம். உடனே அவர் அட்வைஸ் செய்யத் தொடங்குவார். புரிகிறதா?

11.சம்பளம் பற்றி பேசும் போது நீங்கள் கேட்கும் சம்பளத்தை கொடுக்க முடியாதென்று சொல்லுவார்கள். நீங்கள் சொல்ல வேண்டும் “சார் நான் நிண்ட காலமாக இங்கே பணியாற்ற விரும்புகிறேன்.எனக்கு பணம் என்பது மனத்தொந்தரவாக இருக்கக் கூடாது. நான் கேட்ட சம்பளம் வேண்டும்” என்று சொல்லி அமைதியாக இருக்க வேண்டும். எதிராளி அந்த மவுனத்தை நீட்டிப்பார்.நீங்கள் அந்த மவுனத்தை போக்குகிறேன் என்று தப்பித்தவறி கூட பேசிவிடாதீர்கள்.பேச வேண்டியது அவர்.அதுவரை அமைதியாக இருங்கள்.

12.உங்களுக்கு இருமல் தும்மல் ஜலதோஷம் இருந்தால் முதலிலேயே சொல்லிவிடுங்கள்.”சார் எனக்கு தண்ணீர் வேண்டும்” என்று கேட்கலாம். கடுமையான காய்ச்சல் தும்மலில் பாட்டில் நீரோடு, நீரைக் குடித்து குடித்து ஒரு இண்டர்வியூ அட்டெண்ட் செய்திருக்கிறேன்.அது ஸ்டைலாக இருக்கும். மேலும் இருமல் போன்ற தொந்தரவுகளை நமக்கு சாதகமாக மாற்றும் கலை ( இது எந்த அளவுக்கு உங்களுக்கு புரிகிறது என்று தெரியவில்லை)

13.நீங்கள் தற்போது வேலை செய்யும் புராஜெக்டின் அடிப்படையை தெரிந்து கொண்டு போங்கள். சிலர் அவர்கள் செய்யும் வேலையில் திறமையாக இருப்பார்கள்.அடிப்படை தெரியாமல் இண்டர்வியூவில் மாட்டிக் கொள்வார்கள். என் புராஜெக்டில் தரையில் இருந்து கிடைக்கும் வெப்பத்தை வைத்து நீரைச் சூடாக்கி டர்பனை சுற்ற வைத்து பவர் எடுக்கிறார்கள்.அதில் டர்பைன் ஏரியாவை நான் கவனிக்கிறேன்.இப்படி ரொம்ப அடிப்படையாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.அதை ஒற்றை வரியில் சொல்லத் தெரிய வேண்டும்.

14.பணிவு என்று வார்த்தையை முழுங்கிப் பேசாதீர்கள்.இதைப் பல முட்டாள்கள் செய்வார்கள். பலர் பதிலை தெளிவாக உரக்க சொன்னாலே உயர் அதிகாரிகளை அவமானப்படுத்தி விட்டோமோ என்ற குற்ற உணர்வு அடைவார்கள்.அது தவறு. தெளிவான பேச்சு முக்கியம்.

15.ஆங்கிலம் பேசும் போது நிதானமாக மெதுவாக பேசுங்கள்.தமிழ் போன்றே வேகமாக பேசும் போது ஆங்கிலம் தடுமாறும். அது மாதிரி குரலை உயர்த்திப் பேசுவதும் ஆங்கிலத்துக்கு செட்டாகாது. பைக்கை வேகமாக முறுக்கி அடுத்த நான்கு மீட்டரில் பிரேக் போட்டது போன்று ஆங்கிலம் பேசாதீர்கள். சரியாக விளக்க வராவிட்டால் மன்னிப்பு கேட்டு இன்னுமொருமுறை பேசுங்கள்.

16.ரொம்ப டெக்னிக்லாக ஒன்றை விளக்க சிரமம் ஏற்பட்டால், பேப்பரும் பேனாவும் கேட்டு அதில் வரைந்து காட்டி பேசுங்கள்.வரையும் போது அவசரப்பட்டு காமா சோமா என்று செய்யக் கூடாது.அதை பொறுப்பாக செய்ய வேண்டும்.அந்தப் பொறுப்பை கவனிப்பார்கள்.

17.இணடர்வியூ எடுப்பவரின் கண்களை பார்க்க வேண்டும். அப்போது உங்கள் முகத்தில் சிரிப்பு இருக்க வேண்டும். கவனிக்க சிரிப்புதான். அசடு இல்லை.

18.உங்களுக்கு டெக்னிக்கலாக சரியாய் பதில் சொல்ல முடியவில்லை. ரொம்ப மொக்கையாக போகிறது இண்டர்வியூ. நிச்சயமாக செலக்ட் ஆக மாட்டீர்கள் என்று இண்டர்வியூவின் பாதியிலேயே தெரிய ஆரம்பித்து விட்டால், உங்கள் போக்கை மாற்றுங்கள். பணிவாக ஆனால் உறுதியாக சொல்லுங்கள் “சார் எனக்கு ரொம்ப டெக்னிக்கா தியரி கேட்டா தெரியாது. ஆனா ஒரு பிராக்டிக்கலா புராஜெக்ட் பண்ணுவேன். ஒரு டிசைன கொடுத்தா செய்வேன். எனக்கு குடுத்திருக்க வேலையை அதுக்கு தக்கன கத்துகிட்டு செய்வேன்.இதுக்கு முன்னாடியும் இப்பவும் அப்படித்தான் பண்ணிகிட்டிருக்கேன்.” இப்படி பேசலாம்.வேறு வழியில்லை. இப்படி பேசி வொர்க் அவுட் ஆன நண்பர்களை எனக்குத் தெரியும்.

19.மூன்று பேர் இண்டர்வியூவில் இருந்தால் மூன்று பேரையும் பார்க்க வேண்டும்.ஒருத்தரைப் பார்த்து ஒருத்தரை பார்க்காமல் இருக்ககூடாது. அந்த மூன்று பேரில் ஒருவர் தன்னம்பிக்கை குறைந்து தாழ்வு மனப்பான்மையில் இருப்பார்.அவரை அதிகமாக மதிக்க வேண்டும்.இது முக்கியம்.

20.இண்டர்வியூ முடிந்த பின்னர், எடுத்தவருக்கு கைகொடுக்க வேண்டும்.தன்னம்பிக்கை கைகொடுத்தலாக இருக்க வேண்டும் அது.

21.ஒருவேளை நீங்கள் செலக்ட் ஆனால் ஹெச்.ஆர் ”புரபோசல் சம்பளம்” அனுப்பி வைப்பார்கள்.அது உங்களுக்கு சம்மதமானாலும் அதை ஒத்துக் கொள்ளும் போது இப்படித்தான் ஒத்துக் கொள்ள வேண்டும். “சார் உங்க புரபோசல் கிடைத்தது. நீங்கள் 4.5 லட்சம் சிடிசி சொல்லியிருக்கிறீர்கள். எனக்கு 5 லட்சம் சம்பளமாக போட்டு அப்பாயிண்மெண்ட் அனுப்பினால் மகிழ்ச்சி.இது என் கோரிக்கைதான். எனக்கு வேலை ஆர்டர் கிடைத்து 60 நாள் கழித்து உங்கள் நிறுவனத்தில் சேர அவலாயிருக்கிறேன்” இப்படி எழுதினால் 5 லட்சம் கொடுக்காவிட்டாலும் 4.7 லட்சமாவது கொடுப்பார்கள். ஒரு கடிதம் மூலமாக கொஞ்சூண்டு பணம் ஏறினால் கூட அது நல்லதுதானே. கிடைப்பதை ஏன் வீணாக்க வேண்டும்.

22.வேலை உத்தரவு கிடைத்தும், அவர்கள் சொன்ன தேதியில் அல்லது பத்து இருபது நாள் அதிகமாக சேருவதாக பேசி, தேதியை சொல்லி கடிதம் அனுப்பி விட வேண்டு.ஒருவேளை நீங்கள் சொன்ன தேதியில் உங்களால் ஜாயின் பண்ண முடியாது என்று தெரிந்தால் ரொம்ப முன்னரே சொல்லாதீர்கள்.நீங்கள் வேலைக்கு சேர ஒருவாரம் இருக்கும் போது சொல்லுங்கள்.அதை நேரடியாக சொல்லக்கூடாது. ஹெச்.ஆருக்கு போன் போட்டு வேறு ஏதோ விசாரிப்பதுபோல் விசாரித்து விட்டு “சார் எவ்ரிதிங்க் செட்.எல்லாமே கிளிரா இருக்கு.மெடிக்கல் டெஸ்ட் எடுத்திட்டேன்.என்றெல்லாம் சொல்லி முடிவில். “சார் ஒன் வீக் கழிச்சிதான் ஜாயின் பண்ண முடியும்” என்று சொல்லுங்கள்.

இவையெல்லாம் என்னுடைய சொந்த அனுபவத்தில் சொல்வது. உண்மையா என்று தெரியாது 

No comments:

Post a Comment