Saturday 27 July 2013

மதவெறியின் சுரப்பிகள்...

கிட்டத்தட்ட 2002 இல் குஜராத்தில் முஸ்லிம்கள் மேல் நடந்த தாக்குதலுக்கு இணையானது 1946இல் ஹிந்துக்கள் மேல்  பெங்காலில் உள்ள நவகாளியில் நடந்த தாக்குதல்.

நவகாளிலுள்ள இந்து மைனாரிட்டிகள் பலர் கொலை செய்யப்படுகின்றனர்.கட்டாய மதமாற்றம் செய்யப்படுகின்றனர்.பல பெண்களின் தாலிகளை அறுத்து எறிகின்றனர் மதவெறியர்கள்.

பல ஆயிரக்கணக்கான உயிர்கள் பாதிக்கபடுகின்றன.பெங்காலில் ஹிந்துக்கள் தாக்கப்படுவதை கண்டு கொதித்த பீகார் ஹிந்துக்கள் பீகாரிலுள்ள முஸ்லிம் மைனாரிட்டிகளை கொல்கின்றனர் தாக்குகின்றனர்.நாட்டில் நிலவும் சூழ்நிலைக்கு என்ன தீர்வென்று யாருக்கும் தெரியவில்லை.

காந்தி தனக்குத்தெரிந்த அகிம்சை ஆயுதமான பாதயாத்திரையை மேற்கொள்கிறார் நவகாளியில்.கிட்டத்தட்ட 65 கிராமங்களை பாதங்களால் கடக்கிறார்.மக்களின் அவலங்களை பார்க்கிறார்.கலங்குகிறார்.தன்னால் முடிந்த அளவுக்கு இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்காக பாடுபடுகிறார்.அவர் எடுத்துள்ள முறைகளில் வேண்டுமானால் குறை காணலாம்.ஆனால் நோக்கத்தின் மேல் யாரும் குற்றம் சாட்ட முடியாது.

பத்திரிக்கையாசிரியர் சாவி எழுதிய “நவகாளி யாத்திரை” படித்தேன்.படித்து முடிக்கையில் சலிப்பே மிஞ்சுகிறது.எவ்வளவு பெரிய விசயம் நடந்திருக்கிறது.அதை  தமிழ்நாட்டின் பத்திரிக்கையாசிரியர் தமிழ் மக்களுக்காக எழுதியிருக்கிறார்.ஆனால் தன் கட்டுரையில் எந்த தீவிரத்தன்மையையும் காட்டாமல் ஹாஸ்ய கட்டுரை போல “ஜஸ்ட் லைக் தட் “எழுதிக் கடந்திருக்கிறார்.

படிக்க மிகச்சுவாரஸ்யமானதாக இருக்கிறது சாவியின் எழுத்து.ஆனால் ‘நவகாளி யாத்திரை’ நல்ல கட்டுரை அல்ல.

அது நாட்டின் மதப்பிரச்சனையை சொல்லாமல் காந்தியை ஏற்றி கூறுவதில் மட்டுமே கவனம் கொள்கிறது.’காந்தி இப்படி செய்ஞ்சார்.காந்தி மகாத்தமா.காந்தி மகான்” என்ற் ரீதியிலேயே சாவி சொல்கிறாரே தவிர உண்மையான பிரச்சனை என்ன காந்தி அதற்காக எப்படி உளமாற வருந்தினார் என்பதை படிப்பவரின் மனதை தொடும்படி எழுதவே இல்லை.

உதாரணமாக கட்டுரையை சாவி இப்படி ஆரம்பிக்கிறார்.”அவர் நவகாளி யாத்திரை போகும் முன் பார்க்கில் வேகமாக நடந்து பழகினாராம்.ஏனென்றால் காந்தியுடன் பாதயாத்திரை போனால் வேகமாக நடக்க பயிற்சியாம்” .நாட்டின் முக்கிய கலவரத்தை கவர் செய்யும் லட்சணத்தை பாருங்கள்.

கலவரத்தில் பிழைத்த நாயிடம் காந்தி காட்டிய அன்பு, முஸ்லிம் மதக்குருக்களுக்கு கொடுக்கும் மரியாதையை அங்குள்ளவர்கள் காந்திக்கும் கொடுக்கும் பாங்கு,கலவரத்தில் இறந்தவர்களின் மண்டையோட்டுகளுக்கு நடுவே காந்தி பிரார்த்திப்பது,காந்தியின் பிரம்மச்சர்ய ஆராய்ச்சி என்று காந்தி என்ற தனிமனிதனை ஏற்றிப்பாடும் பாட்டாக மட்டும் சாவி அந்தக் கட்டுரையை எழுதியுள்ளார்.

உண்மையில் நவகாளியில் என்ன நடந்தது? யார் குற்றவாளி? மதவெறியின் வீரியம்? என்று களத்தில் கண்டதை சொல்லும் ஆர்வமே அவருக்கு இல்லை.(அவர் இரண்டே நாட்கள் காந்தியுடன் இருந்தாலும்.அங்கே அவருக்கு மாணிக்கவாசகம் என்ற பிரபல நிருபரின் உதவி கிடைத்திருக்கிறது என்பதை நினைவு கொள்ள வேண்டும்).

சாவி இந்த சுரணையில்லாத நீளககட்டுரை புத்தகத்திற்கு கல்கி கிருக்ஷ்ணமூர்த்தி எழுதிய முன்னுரை எவ்வளவோ பரவாயில்லை.அதில் கொஞ்சமாவது காந்தி எடுத்த சில முயற்சிகளை கல்கி சொல்கிறார்.

கல்கி எழுதுகிறார் (தொகுத்திருக்கிறேன்)

மகாத்மா காந்தி தினமும் பிரார்த்தனையில் “ராம நாம பஜனை” நடத்துவார் என்று எல்லோருக்கும் தெரியும்.

“ரகுபதி ராகவ ராஜா ராம்
பதித பாவன சீதா ராம்”

என்பது நவகாளி யாத்திரைக்கு முன்னால் பாடப்பட்ட பஜனை.ஆனால் நவகாளி யாத்திரையின் போது காந்தி இதோ இந்த வரிகளையும் சேர்த்தார்.

“ஈஸ்வர அல்லா தேரே நாம்
ஸப்கோ ஸன்மதி தே பகவான்”

(ஈஸ்வரன் என்றாலும் அல்லா என்றாலும் உன்னுடைய திருநாமந்தான்.பகவானே! எல்லோருக்கும் நல்ல புத்தியை அருள்க)

இந்த வரிகளை மகாத்மா சேர்த்தபோது ஹிந்துக்கள் பலருக்கு அறவே பிடிக்கவில்லை.ஆனால் நவகாளி யாத்திரை முடிந்து அடுத்த ஒருவருடத்தில் காந்தி சுடப்பட்டு இறந்த பின்னர், அதை எதிர்த்தவர்கள் கூட அந்த வரிகளை மனமுருகி பாடுவதை கேட்கிறோம்.

இப்படி சொல்கிறார் கல்கி.

கலவரம் செய்யும் பெரும்பான்மையினோர் இஸ்லாமியர்கள்.அந்த மாநிலத்தை ஆள்வது இஸ்லாமிய கவர்னர்.நாடோ பிரிவினை கலவரத்தில் இருக்கிறது.இதில் ராணுவம் என்று எதுவும் பெரிய அளவில் தொகுக்கபடவில்லை.முஸ்லிம்கள் மனம் குளிர்ந்தால் ஒருவேளை கலவரம் குறையலாம் என்று காந்தி நினைத்திருக்கலாம்.அதற்காகாவும் அந்த வரிகளை சேர்த்து பாடியிருக்கலாம்.

எப்படியாவது கலவரம் முதலில் அடங்கவேண்டும் என்று காந்தி தவித்த தவிப்பை இதன் மூலம் உணரலாம்.அதுதான் தேசநலன் கருதும் தலைவர்.

எப்பேர்ப்பட்ட அறிவாளி காந்தி.பீகாரிலும்,பெங்கால் சிட்டகாங்கிலும் பாதிக்கபட்ட இரண்டு மைனாரிட்டிகளைப் பற்றியும் கவலைப்பட்டார்.

இப்போதைய அரசியல்வாதிகளில் ஒரு முதலைமச்சரே கலவரத்தை தூண்டிவிட்டு மைனாரிட்டிகளை காலி செய்து நியூட்டனின் மூன்றாவது விதியை காரணம் சொல்கிறார்.

காந்தி பிறந்த குஜாராத்திலேயே அவரும் பிறந்திருக்கிறார்.ஆனால் இந்திய பிரதமராக ப்ரியப்படும்அளவிற்கு, காந்தியின் சரித்திரத்தை இன்னும் அவர் தெளிவாக கற்க ப்ரியப்படவில்லை.

மதவெறியின் சுரப்பிகள் சுரப்பது இந்தியாவுக்கு நல்லதே இல்லை...

No comments:

Post a Comment