Saturday 25 May 2013

கதை போல ஒன்று - 94


கெமிஸ்டிரி லேபில், சார் இல்லாத போது செல்வா கேட்டான்.

விஜய் நீங்க பிளஸ்டூவா?

இந்தகேள்வி என்னை பயமுறுத்தும் அளவுக்கு வேறெதுவும் பயமுறுத்தாது.

அதை உணர பிளஸ் டூ படித்து விட்டு பாலிடெக்னிக் முதலாண்டில் இருந்து படிக்க வேண்டும்.வயதில் சிறியவர்களோடு படிப்பதில் வரும் தாழ்வு மனப்பான்மையை அனுபவித்தாலே புரியும்.

என்னை பிளஸ் டூவென்றே சொல்லிக்கொள்ள மாட்டேன்.முடியை மிக ஒட்டிவெட்டியிருப்பேன்.தாடி மழிக்கவே சோம்பி ஒத்திப்போடும் நான் தினமும் க்ஷேவ் செய்வேன்.

சின்னப்பசங்க கூட அதிக வெச்சுக்க கூடாதென்று பேச்சை குறைத்தேன்.வகுப்பில் இருக்கும் போது அமைதியிலும் அமைதி.முடிந்ததும் யாரிடமும் பேசுவதில்லை.வேக வேகமாக பஸ்ஸைப் பிடித்து வீடு போய் சேர்வேன்.

ஒரு கல்லூரியில் படிக்கிறேன்.அந்தப்படிப்பை படிப்பேன். அதற்கிடையில் யார் நட்பும் வேண்டாம் எனக்கு. இந்த பொடிபசங்ககிட்ட பேசுறதுக்கா இங்க சேர்ந்தோம். சே... நம்ம கூட படிச்சவன் எல்லாம் அண்ணா யுனிவர்சிட்டி,இன்ஜினியரிங் காலேஜ்,மெடிக்கல் காலேஜ்ன்னு படிக்கிறான்கள்.நான் மட்டும் ஏன் மாட்டிக்கொண்டேன்.

நல்ல மார்க் வரவில்லையென்றால் மனிதனுக்கு இவ்வளவு அவமானமா வரும்.

துக்கம்தான் வாழ்க்கையாக இருந்தது.அழுகை முட்டும்.

சில சமயம் மாலை வேளையில் மெரினா பீச்சில் இறங்கி கடலைப்பார்த்து நெடுநேரம் அமர்ந்திருப்பேன்.நோட்டை எடுத்து எதாவது எழுதுவேன்.எழுத்து பூராவும் துக்கத்தை தூக்கி நிறுத்தி இருக்கும்.

பல சமயம் அழுவேன்.கண்களில் கண்ணீர் கசியும்.துடைக்க துடைக்க கடல் ஊத்து போல திடமாய் கசியும் கண்ணீரின் ஈரமே எனக்கு ஒரு குரூர ரசனையாகிவிட்டது என்று கூட சொல்லலாம்.

எப்படி படித்து முடிக்க போகிறேன் இந்த கோர்ஸை. அதுவும் மூன்றரை ஆண்டுகள். இப்படியே இந்த கடலில் குதித்து விடலாமா? முடியாது தைரியம் கிடையாது.அமமா அழுவாள்.

”உனக்கு எப்படி நான் பிளஸ் டூன்னு தெரிஞ்சது.”

”இல்ல அன்னைக்கு பசங்க பேசிக்கிட்டாங்க.”

”நீங்கன்னு சொல்லாத நீன்னே சொல்லு.பப்ளிக்கா மரியாதையா கூப்பிடாத ஃப்ளீஸ் ஒகேவா.

”அது வரமாட்டேங்குது விஜய்.”

அவனைப்பார்த்தேன் பார்க்கும் போதெல்லாம் அவன் ஒரே சட்டையை போட்ட மாதிரிதான் இருக்கிறது.பிரிந்து பிரிந்து பிசிறு தொங்கும் அட்டை பெல்டை போட்டிருந்தான்.தலையில் சின்ன பரட்டைத்தனம் தெரிந்தது.

“எனக்கு இந்த சால்ட் டெஸ்ட் சொல்லித்தாங்க... சாரி சொல்லித்தா விஜய்”

“சுத்தமா ஒண்ணும் புரியமாட்டேங்குது.நான் படிச்சது சைதாப்பேட்டை கார்பிரேசன் ஸ்கூல்ல.இங்க இங்கிலீக்ஷ்ல கெமிஸ்டிரி எல்லாம் படிக்க சுத்தம். ரொம்ப கஸ்டபடுறேன். இந்த சால்ட் எல்லாம் எப்படி கண்டுபிடிக்கிறீங்க. எனக்கு கண்ணக்கட்டி விட்டாப்போல இருக்கு”

பார்க்க பாவமாய் இருந்தது.

என்னுடைய சால்டை எளிதாய் கண்டுபிடித்துவிட்டேன்.அவன் கையில் இருந்தது கலர்லெஸ் சால்ட். ஆளுக்கொரு சால்டை கொடுத்து கண்டுபிடிக்க சொல்லி போய்விட்டார் சார்.பயிற்சியாம்.

“இதப்பாரு செல்வா இப்ப கேல்சியம் நைடிராட் வெச்சிக்க, இதுல பேசிக் ராடிக்கிள்.அசிடிக் ராடிக்கிள்ன்னு இரண்டு இருக்கு அது தெரியுமா”

“தெரியாது”

“கேல்சியம்தான் பேசிக் ராடிக்கிள்.நைட்டிரேட்தான் அசிடிக் ரேடிக்கிள்.”

“இந்த ரெண்டையும் தனிதனியா கண்டுபிடிச்சி.அதுதான் அந்த சால்ட் அப்படிங்கிறதுக்குள்ள டெஸ்டை நீ செய்யனும்.”

”புத்தகத்தை புரட்டினேன்.இதப் பாத்தியா இதுல போட்டிருக்கிறது எல்லாத்தையும் படிக்கனும் முதல்ல”

அவன் பார்த்தான். “படிச்சிரலாம்” என்றான்.

”நாம ஈசியா கண்டுபிடிக்கிறதுக்கு வழியிருக்கு.உனக்கு குடுத்திருக்கிற சால்ட எடுத்துக்க”

அவன் டெஸ்ட் டியூபில் சால்டை எடுத்துக்கொண்டான்.

“இப்ப இதுக்குள்ள சல்ஃபூரிக் ஆசிட்ட கொஞ்சமா விடு, டைலூய்ட்தான்”

அவன் சல்ஃபூரிக் ஆசிட்டை விட்டான். ஒன்றுமே நடக்கவில்லை.

“இப்ப பாத்தியா இதுல இருந்து புசுபுசுன்னு பொகை வந்து மூக்குள்ள துளைச்சுதுன்னா அது குளோரைடு.ஆனா இதுல எதுவுமே வரல.அப்ப சல்ஃபேட் அல்லது நைட்டிரேட்டா இருக்கலாம். நமக்கு ஒரே ஒரு நைட்டிரேட்தான் இருக்கு. அதனால சல்பேட்டுக்குள்ள டெஸ்ட செய்திரலாம். இப்ப பேரியம் குளோரைட உள்ள ஊத்து.”

ஆர்வமாய் ஊத்தினான்.

“பாத்தியா கீழ வெள்ள கலர்ல பொடியா நிக்கு பாரு. உன்னோட சால்ட் வந்து இப்ப சல்ஃபேட்டு”

பரவசத்தால் என் முதுகை பிடித்து கொண்டான்.

“இரு இப்ப பேஸிக்க் ராடிக்களையும் டெஸ்ட் செய்திரலாம்.இன்னும் கொஞ்சம் சால்டைய எடுத்து அதுக்குள்ள சோடியம் ஹைடிராக்சைட விடு”

“அது நீலக்கலரைக்காட்டிற்று”

“உனக்கு லக்கு செல்வா.இப்படி நீலக்கலர் காட்டினா அது மெக்னீசியம் சால்டு. நீ கண்டு பிடிச்ச சால்டு பேரு மெக்னீசியம் சல்பேட்”

இப்படி சொன்னது செல்வா என்ற செல்வகுமார் துள்ளிக்குதித்தான்.கைகளை வைத்து வெற்றிக்குறி காண்பித்தான். “சூப்பர் விஜய் சூப்பர் விஜய். எனக்கு ஈசிய புரிய வெச்சுட்ட,இனிமே நான் புக்க படிச்சா புரிஞ்சிரும். இவ்வளவு நாள் இத படிக்க முடியாம எவ்வளவு டென்சனா இருக்கும் தெரியுமா? என்னால உன்ன மறக்கவே முடியாது”

எப்போதும் என் பையில் இருக்கும் கிழிந்து நைந்த “மரப்பசு” புத்தகத்தை ஒருநாள் காணவில்லை.மறுநாள் செல்வா அதை தைத்து ஒட்டி பைண்டு செய்து கொடுத்தான்.அவன் கைகளை பிடிக்கும் போது வழிந்தோடும் நட்பில் கரைய ஆரம்பித்தேன்.திரும்ப திரும்ப வற்புறுத்தியதால் அவன் வீட்டிற்கு சென்றேன்.

சைதாப்பேட்டை பாலத்தில் அடியில் இருக்கும் ஆஸ்பெஸ்டாஸ் குடிசைகளில் ஒரு குடிசைதான் அவனிருக்கும் வீடு.வீட்டில் ஸ்டீல் சேரில் அமர்ந்து வீட்டைப்பார்க்கும் போது செல்வாவின் வறுமை படீரென்று அடித்தது. சமைலறை ஹால் பெட்ரூம் எல்லாம் ஒரே அறை.ஒருவர் இருமினால் எல்லோரும் துன்புறும் இடவசதியின்மை.கொசு.நிரந்தரமாய் சுருண்டு சுருண்டு வீசும் நாற்றம்.

செல்வாவின் அமமா மிரிண்டா வாங்கிக்கொடுத்தார்.அதிகம் பேசவில்லை.

போகும் போது ஒன்றே ஒன்று சொன்னார் “ எங்களுக்கும் தெக்குபக்கம்தான் தம்பி. செல்வா நல்லா படிப்பாம்.உன்னப்பத்தி அடிக்கடி பேசுவான். நீ இல்லன்னா அவன் இந்தப்படிப்ப விட்டுட்டு ஐ.டி.ஐ சேர்ந்திருப்பானாம். கொஞ்சம் சந்தேகம் இருந்த சிரமம் பாக்காம சொல்லிகுடு”

அதைக்கேட்டு வெளியே நடந்து வரும்போது இனிமேல் மெரினா பீச்சில் உட்கார்ந்து கடலைப்பார்த்து விக்கி விக்கி அழமாட்டேன் என்று தீர்மானமாய் தோண்றியது.

சீனிக்கட்டி கரைந்தே விட்டது....

1 comment:

  1. பயனில்லாமல் யாருமில்லை ; எதுவுமில்லை; தாழ்வு மனப்பான்மை என்னையும் சிலகாலம் ஆட்டிப்படைத்தது - என் மனைவி வரும்வரை…!

    ReplyDelete