Wednesday 22 May 2013

கதை போல ஒன்று - 93



”தயவு செய்து என்ன விட்டுட்டு நீங்க மட்டும் போங்கடா.எனக்கு நரசிம்மர பாக்க வேணாம். நான் கிறிஸ்டினா மாறப்போறேன்” என்று சொல்லும் போது, அந்த ஆயிரத்தி ஐநூறு படிக்கட்டில், எழுநூறாவது படிக்கட்டில் படுத்திருந்தேன்.

ராஜனும் கார்த்திக்கும் என்னை முறைத்தார்கள்.

”மச்சி நான் என் ஆளு பிறந்தநாளுக்கு சாமிக்கும்பிட வந்திருக்கேண்டா.கும்பிட்டு பிரசாதம் கொடுத்து ஸீனப்போடனும் நீ வா “என்றான் ராஜன்.

கார்த்திக் என்னைக்காட்டி
”இவன் என்னடா சுத்த ஸ்டாமினாவே இல்ல.நாளைக்கு கல்யாணம் முடிஞ்சி எப்படி வேலை செய்வ.மவனே விடாம வொர்க் அவுட் பண்ண வேண்டியிருக்கும்.இப்படி கிடந்தன்னா உம்பொண்டாட்டி பக்கத்து வீட்டுக்காரனோட எஸ்கேப்பாயிருவா”

“டேய் இது கோயில்டா”

“ஏன் எனக்கு தெரியாதா கோயில்ன்னு.சரி இவன எப்படி மிச்ச படி ஏற வைக்கிறது.எப்ப லட்சுமிநரசிம்மர கும்பிட வைக்கிறது.கழுத்துறுக்காண்டா”

சோளிங்கர் லட்சுமி நரசிம்மரை பார்க்க நானும்தான் ஆசையாகதான் வந்தேன்.

ஆனால் இந்த படிக்கட்டுக்களைதான் ஏறி மாளவில்லை.இருநூறாவது படிக்கட்டில் கொஞ்சமாய் தெரிந்த வலி, ஏற ஏற கால் கடுப்பாகி, மூச்சிரைத்து, அறுநூறாவது படியில் கால்கள் தள்ளாடி எழுநூறாவது படியில் நெட்டாங்கிடையாக படுத்து விட்டேன்.அதற்கு மேல் ஒற்றை அடி என்னால் எடுத்து வைக்க முடியவில்லை. கார்த்திக்கும் ராஜனும் கவலையோடு என்னை பார்த்து இருந்தார்கள்.

கார்த்திக் என் பின்மண்டையை அவன் நெஞ்சில் தூக்கி வைத்து பச்சபுள்ளைக்கு தண்ணீர் கொடுப்பது போல கொடுத்தான்.

“என்ன மச்சி தலைக்கு க்ஷாம்புவே போட மாட்டியா.இவ்வளவு எண்ணய்யா இருக்கு.கொய்யால என் சட்ட பூரா எண்ணய பாரு”

அந்த மயக்கத்திலும் நான் சிரித்தேன்.ராஜன் பக்கத்தில் வந்து தன் பையிலுள்ள  குளுக்கோஸ் பாக்கெட்டை உடைத்து  அப்படியே என் வாயில் தட்டினான்.

அதை அவுக் அவுக்கென்று தின்னும் போதே கேட்டேன்.

“மச்சி ஸ்பூன் கொண்டு வரல”

“ஸ்பூன் உங்க ஆயா கொண்டு வருவாடா. கடுப்பேத்தாத எந்திரிச்சி வாயேண்டா”

“முடியலடா.வேணுமின்னா வராம இருக்கிறேன்.நடக்க முடியல. இரு பத்து நிமிசம் நில்லு. போகலாம்.

அப்போது எங்களை கடந்து போன வயதானவரிடம் நிறைய தடி மரப் பிரம்புகள் இருந்தன.

“தம்பி பாதி தூரம் வந்துட்டீங்க.உங்க கையில கம்பே இல்ல”

“கம்பு எதுக்குண்ணே” என்றேன்.

”இன்னும் மேல ஏற ஏற நிறை குரங்குளா இருக்கும். இத வைச்சிருந்தாதான் பயந்து பக்கத்துல வராது”

“சரி இது எவ்ளோ” என்றேன்.

மூன்று கம்பு ”பதினைச்சி ரூவாய்”.

வாங்கினோம்.அவர்களோடு ஒவ்வொரு படிக்கட்டாய் தத்தி தத்தி ஏறினேன்.

ராஜன் கையில் அந்த பாலித்தீன் கவரை இறுக்க பிடித்திருந்தான்.அதனுள் தேங்காய் பழம் பூ என்று அர்ச்சனை செய்யும் பொருட்கள் இருந்தன.ஒரு விலை உயர்ந்த ஜவ்வாது பாட்டிலும் இருந்தது. அதையும் சாமி முன் வைத்து பூஜை செய்து, அவன் காதலிக்கு கொடுப்பானாம்.காதலி அதை பூசும்போது வரும் நறுமணம் அவனையே ஞாபகபடுத்துமாம்.

அவன் காதல் ஒருதலை காதல் மாதிரி ஆகிவிடாமல் அவள் பக்கமும் இருந்து சம்மந்தம் வேண்டியும்தான் அர்ச்சனைக்கான பொருட்களை பத்திரமாக எடுத்து போகிறான்.

என்னை கார்த்திக் தாங்கி கூட்டிப்போக, ராஜன் பின்னாடி வந்து கொண்டிருந்தான்.

“மாட்டிக்கிட்டேண்டா.இப்ப என்னடா பண்றது “என்ற குரல் கேட்டு நானும் கார்த்திக்கும் திரும்பினோம்.

ஒரு குரங்கு, ராஜன் கையில் வைத்திருந்த தேங்காயை, பாலத்தீன் கவரில் தொங்கிக்கொண்டிருந்த தேங்காயை இறுக்க பற்றிக்கொண்டடிருந்தது.

“அந்த பார்சல அதுகிட்ட கொடுத்திரு.ரிஸ்க எடுக்காத.கடிச்சி வெச்சிரப்போகுதுடா.குரங்கு கடிக்கு மருந்தே கிடையாதுன்னு கம்பு விக்கறவர் சொன்னாரு கேட்டல்ல.” என்றேன்.

ராஜனுக்கு கவரை விட மனதில்லை.ரொம்ப செண்டிமெண்டாக உணர்ந்திருப்பான் போல. கார்த்திக் பதட்டமானான்.

“நாய அத கொடுத்துட்டு வாடா.அவல்லாம் ஒரு ஆளுன்னு செண்டிமெண்ட் போடுற.உங்கள மாதிரி ஆளுங்கதாண்டா மொக்க ஃபிகரெல்லாம் உசுப்பேத்தி விடுறது”

“காதல பத்தி பேசாத. என் மனசுக்குள்ள இருக்குடா” என்று ராஜன் குரங்கிடம் ஆவேசமாய் பையை கொடுத்து விட்டு வந்தான்.

“புடுங்குன காதல்.அதுக்காக குரங்கு கிட்ட கடி வாங்குவானாம்” கார்த்திக் சவுண்டாய் பேச, ராஜன் அமைதியானான்.

கார்த்திக் சென்று ராஜன் தோளில் கையை போட்டுக்கொண்டான்.” இல்லடா நான் படிச்சிருக்கேன். ஒரு அம்மா அப்பா சின்ன பாப்பா மூணுபேரும் சின்ன துடுப்பு போடுற படகுல சவாரி போனாங்களாம். அந்த சின்ன குழந்தயில்ல அது தண்ணிக்குள்ள கைய விட்டு ராவிகிட்டு வரும்போது, முதலை ஒன்று அந்த  சின்னபிள்ள கையை பிடிச்சிட்டாம்.இப்ப அந்த பிள்ளைய தண்ணீல முதலைக்கு போடலைன்னா எல்லோரையும் முதலை கீழ் இழுத்திரும். அந்த அப்பாவும் அம்மாவும் குழந்தையையே தூக்கி ஆத்துல போட்டுட்டு வந்தாங்களாம்.அப்படி போகுது காலம். இவர் என்னடான்னா அர்ச்சனை பூ பழத்த குரங்கு தூக்கிட்டு போயிட்டாம்.”

“இந்த கதைய நிறைய பேர் சொல்றாங்க.உண்மையா பொய்யான்னு தெரிய மாட்டேங்குது. இந்த லேடீஸ் ஹாஸ்டலுக்குள்ள துணி வெளுக்கிறவன் தெரியாம நுழையும் போது அவன எல்லா லேடிஸும் ராப் பண்ணிருவாங்கன்னு பொதுவா ஒரு கத சொல்லுவாங்கல்ல அது மாதிரிதான கார்த்திக் சொல்ற “ என்றேன்.

”இந்த கதை சொல்லும் உணர்வு நமக்கு புரியுதா அவ்வளவுதான் நமக்கு வேணும்.அந்த கதை உண்மையா பொய்யான்னு ஏன் ஆராய்ச்சி பண்ணனும்.

நான் டாப்பிக்க மாத்தினேன்.” தேங்காய கூட தூக்கிட்டு போயிடுச்சியே” ராஜன் .

“இந்த குரங்க சும்மா விடமாட்டேன்டா” என்றான் ராஜன்.கம்பை கையில் வாங்கி விசுக் விசுகென்று வீசினான்.அவனை பார்க்கும் குரங்குகளை எல்லாம் துரத்தி துரத்தியடித்தான்.அவன் காதலுக்கு செய்ய முடிந்த காணிக்கையாகவே அதை நினைத்தான்.

அந்த குரங்குகள் தேங்காய் பழத்தை எடுத்தது கூட போகட்டும்.ஆனால் பாரிமுனையில் தெரிந்தவரிடம் சொல்லி வைத்து வாங்கின விலை உயர்ந்த ஜவ்வாது பாட்டிலையுமா பாலத்தீன் கவரோடு இந்த குரங்குகள் எடுத்துப்போகும். அந்த ஜவ்வாதை குரங்குகளுக்கு உபயோகப்படுத்த தெரியுமா? அப்படி உபயோகப்ப்டுத்தினாலும் நாற்றம் பிடித்த குரங்குளின் உடலில் அது வாசனையை கொடுக்குமா?

காமன்சென்ஸே இல்லாத குரங்குகளை இப்படி மலைமுழுவதும் நிரப்பி வைத்திருக்கிறாறே லட்சுமி நரசிம்மர்.அவர் வேண்டுமானால் உங்களை மன்னிக்கலாம்.ஆனால் குரங்குகளே இந்த ராஜன் உங்களை மன்னிக்க மாட்டான் என்று  சொல்லிக்கொண்டான்.

கொஞ்சம் கொஞ்சமாக தைரியம் வந்து ராஜன் பெரிய குரங்கை அடிக்க வீசும்போதுதான் அது நடந்தது.அந்த குரங்கு சட்டென்று சினந்து பார்த்து ராஜனை தாக்க ஒடிவந்தது.அது ஒடிவரும் வேகத்தைப்பார்ட்த்து மூவரும் ஒடினோம் தரையை நோக்கி.

குரங்கு குதித்து குதித்து பக்கத்தில் ஒடிவருகிறது, கார்த்திக் என்னை இழுத்து குரங்கு முன் விட்டு ஒடுகிறான்,ராஜன் என்னையும் கார்த்திக் இரண்டு பேரையும் இழுத்து விட்டு ஒடுகிறான்.நான் கைகால்கள் ஆட அவர்கள் இரண்டு பேரையும் குரங்கு முன் இழுத்துவிட்டு ஒடுகிறேன்.

இழுப்பென்றால் சாதரண இழுப்பெல்ல. பலம் கொண்ட மட்டும் ஒருவரை ஒருவர் குரங்கின் முன் தள்ளிவிடுகிறோம்.

ராஜனை இழுத்து விட்டதில் அவன் சட்டை பித்தான்கள்  தெறித்து ஒடியது.கார்த்திக் ராஜனை இழுத்துவிட்டதில் ராஜனின் கால்களில் சிராய்ப்பு.

உயிர் காக்கும் போராட்டத்தில் வரும் வெறியை இட்டுக்கட்டி கொண்டு வரவே முடியாது. அது அப்போது மட்டுமே வரும்.

லட்சுமி நரசிம்மர் ஆசீர்வாததித்தினால் இன்னும் நிறைய பேர் வந்து அந்த வெறிபிடித்த குரங்கை விரட்டி விட்டனர்.

குரங்கு போய்விட்டது என்று தெரிந்ததும். நிம்மதியாக தண்ணீரை குடித்தோம்.

நான் ஆரம்பித்தேன்.

“என்னடா சினன் குரங்கு தொரத்துனதுக்கே இப்படி ஒடுறோம்.ஒடுறது கூட முக்கியமில்ல.இப்படி மூணு பேரும் ஒருத்தன ஒருத்தன் இழுத்து விட்டுட்டு ஒடுறோம்.அவ்வளவுதானா ம்ச்சி பிரண்க்ஷிப்.பிரச்சனைன்னு வந்தா இப்படித்தான் சுயநலமா இருப்போம் போல.என்னா பதட்டம் பாத்தியா. நான் நான் நான் , நம்ம உடம்பு.நம்ம கைகால் எல்லாம் நல்லாயிருக்கனும்ங்கிற ஆவேசத்துல அடுத்தவன எப்படி தள்ளி விடுறோம் பாத்தியா. குரங்குக்கு பதிலா புலி துரத்திச்சுன்னா என்ன பண்ணியிருப்போம்டா “ என்றேன்.

”நானே உங்க ரெண்டு பேரையும் தலையில அடிச்சி புலிக்கு போட்டுட்டு,அது உங்கள சாப்பிட்டுடிருக்கும் போது ஒடிவந்திருப்பேன்” என்றான் கார்த்திக்.

அதை அவன் சிரித்து சொல்லவில்லை.புளியங்காய் புளிக்கும் என்று இயல்பை இயல்பாக சொல்வது போல சொன்னான்.

”அவ்வளவுதானாடா நட்பு”  என்றான் ராஜன்.

“அவ்வளவுதான் மச்சி நட்பு” அதுக்கு மேல ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது. என்று சொல்லி ராஜனின் தோளில் கைபோட இருவரும் படிகளில் ஏறினார்கள்.

குரங்கு துரத்தினதில் கீழே ஒடிவந்த நூறு படிகளை மறுபடியும் ஏறவேண்டுமே என்ற கவலையில் நான் கால்களை எடுத்து வைத்தேன்.

1 comment:

  1. யதார்த்தம்… நண்பர்கள் உயிரையும் தருவார்கள் என்பதெல்லாம் சினிமா டயலாக் மட்டுமே… நாலுநாள் ஃபேஸ்புக்ல இலலனா ஒரு லைக் போச்சேனு கவலைப்படும் நண்பர்களே இங்கு அதிகம்!

    ReplyDelete