Saturday 4 May 2013

கதை போல ஒன்று - 92




விநோத மிருகம் போல்தான் இருந்தது திடுமென பார்க்க.

இன்னும் கொஞ்சம் கண்களை குவித்தாலே மட்டும் அது நாயாகத் தெரிகிறது.

அசைக்க முடியாத உடலை கொண்டு தொடர்ந்து நகர முயற்சிப்பதும், அது முடியாத பட்சத்தில் கழுத்தை மட்டும் மேலே தூக்கி தூக்கி ஒலம் போடுவதும்,வாயில் ஒழுகும் கோளையுடனும் ஒலம் போடுவதைப் பார்க்க அவ்வளவு ரம்மியமானதாய் இல்லை.

கட்டாந்தரை சூரியனை பிரதிபலித்து நெருப்பாகிக்கிடக்க,புவியீர்ப்பினால் ”பாதி உடல் செயலற்ற” நாய் அதில் கிடந்து உருண்டுழல்வது பரிதாபமே.

நாயின் கழுத்தில் கிடக்கும் பட்டை அதை ஏதோ வீட்டுநாய் என்று சொல்லிக்கொண்டிருந்தது.

கிட்டப்போய் பார்த்தேன்.உடல் முழுவதும் புண்கள் கண்களுக்கு தெரிந்தும், வாடை மூக்கைத் துளைத்தும் நாயின் சேதியை சொல்லின.

நண்பர்களிடம் விசாரித்ததில் தெரியவில்லை என்கிறார்கள்.பக்கத்தில் இருக்கும் பழக்கடையிலும் அதே பதில்தான்.

நாயின் தன்மையிலிருந்து விலகி புழுவின் தன்மை கொண்டதாய் அந்த வெயிலில் அது துடித்தது.

சிராஜுதினிடம் கேட்டேன்.

“மச்சி என்ன பண்ணலாம்டா.ரொம்ப பாவமா இருக்கு.சனியன் செத்தும் போக மாட்டேங்குது.பாவமா இருக்கு.அப்படியே க்ஷூவ வெச்சி ஒரு நிமிசம் ஏறி நின்னுருவோமா.செத்துரும்.நிம்மதி”

சிராஜுதின் சீரியஸாக சொன்னான் ”மச்சி தண்ணி கொடுப்போம்”பழக்கடையில் நீர் வாங்கிவந்து உடைந்த பிளாஸ்டிக் தட்டு ஒன்றை கண்டு பிடித்து நாய்க்கு அதில் நீர்விட்டுக்  கொடுத்தான்.கொஞ்சம் நக்கியது.

பழக்கடையின் காலி பிளாஸ்டிக் கூடை இரண்டை கேட்டு வாங்கி ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி கொஞ்சம் நிழல் விழுமாறு செய்தான்.

”சரி இப்ப என்ன பண்றதுடா”

“புளூகிராஸுக்கு போன் பண்ணு” என்றான் சிராஜுதின்.

“எனக்கு நம்பர் தெரியாது”

“ஜஸ்ட் டயலுக்கு போட்டு கேளுடா” நாயின் மீது கண்களை அகற்றாமலே சொன்னான்.

ஜஸ்ட் டயல் போட்டு புளூகிராஸ் நம்பர் வாங்கி அழைத்தேன்.

”எந்த இடத்துல சார் நாய் கிடக்குது”

“மேடம் நுங்கம்பாக்கம் சர்ச் கிட்டக்க,அஞ்சப்பர் பக்கத்துல பழக்கடை இருக்கும்ல அதுமுன்னாடி”

“நீங்க எங்க இருக்கீங்க சார்”

“நானும் ஃபிரண்டும் நாய் பகக்த்திலே நிக்குறோம்.உடனே வாங்க”

“நாய் உயிரோட இருக்கா”

“இருக்கு மேடம்.சீக்கிரம் வாங்க.வெயில்ல கிடந்து துடிக்குது.உடம்புல பாதி வேலை செய்ய மாட்டேங்குது”

“கண்டிப்பா வரோம்”

காத்திருந்தோம்.கொஞ்சம் நிழலும் தண்ணீரும் கிடைத்ததும் நாய் ஆசுவாசித்து படுத்து கிடந்தது.பற்களை நறநறவென்று கடித்து கொண்டிருந்தது, பார்க்க கொஞ்சம் பயத்தையே கொடுத்தது பரிதாபத்தின் தொடர்ச்சியாக.

அரை மணிநேரம் காத்திருந்தோம்.புளூகிராஸ் வரவில்லை.மறுபடி போன் செய்தேன்.

“வரும் சார்.உங்க நம்பருக்கு கால் வரும் “ என்ற பதில் வந்தது.

பழக்கடைக்காரிடம் சொல்லி வந்தோம்.பழக்கடைக்காரருக்கு சலிப்பு.

“ஏம்ப்பா புளூகிராஸ் வந்தா உங்கள கூப்பிடுவாங்கல்ல.என்ன எதும் கேட்பாங்களா.சவம் தூக்கிட்டு போயிட்டா நல்லது.கடைக்க முன்னாடி செத்து கித்து போயிட்டா அப்புற படுத்திறதுக்கு  கஸ்டாமாயிருக்கும்.”

”ண்ணா நாய் பொழச்சிரும்ண்ணா.வாய வெச்சிட்டு சும்மா இருங்க.ஆபீஸ்ல வேல இருக்கு.நாங்க போறோம்.புளுகிராஸ் வரவரைக்கும் பாத்துகிடுங்க.வந்தா கண்டிபா நாங்க வருவோம்.”
சொல்லி லிப்டை பிடித்து மேலே வந்தோம்.

அன்று புது புராஜக்டின் கிக் ஆஃப் மீட்டிங்.

முதலில் வேலையின் முழுத்தன்மையை சொன்னார்கள்.அப்புறம் மெக்கானிக்கல் என்ன செய்ய வேண்டும் என்ற விவாதத்தில் கலந்து கொள்ளும் போது கோழை ஒழுகிய வெயிலில் துடிக்கும் நாய் ஞாபகம் வந்தது.

மெக்கானிக்கல் முடிந்து எலக்டிரிக்கல் வரும் போது சிராஜுதின் கவனமாக குறிப்பு எடுத்து கொண்டிருக்கும் போது ,எனக்கு போன் வந்தது. மீட்டிங் ஹாலை விட்டு ஒடிச்சென்று எடுத்தேன்.

”புளுகிராஸ்ல இருந்து வரோம்.வண்டி ஸ்டெர்லிங் ரோட்ல நிக்குது.எப்படி வரது”

“நீங்க பாலம் சுத்தி இங்க சர்ச் உள்ள ரோடு போகுமே அதுல இருக்கிற அஞ்சப்பர் பக்கதுல வந்துருங்கண்ணே”

“வரேன் நீங்க நில்லுங்க.நீங்க கண்டிப்பா நாய அடையாள்ம் சொல்லனும்”

“சரி” சொல்லிவிட்டு மீட்டிங்க் ஹாலுக்கு நுழைந்து மன்னிப்பு கேட்டு சிராஜுதினிடம் சொன்னேன்.

“மச்சி நான் மீட்டிங்ல இருக்கேன்.நீ மட்டும் போ.போய் அட்டென்ட் பண்ணு.அவனுக்கு அம்பது ரூபா கொடு என்ன.அப்பதான் நாய நல்லா கவனிப்பான்”

மண்டையை ஆட்டி லிஃப்டை பிடித்து கீழே வந்தேன்.

நாய் என்னை கொஞ்சம் ஓரக்கண்ணால் பார்த்தது.இப்போது அது பல்லையெல்லாம் காட்டவில்லை.சோர்வின் உச்சியிருந்தது.

இயலாமையை ஒத்துக்கொண்டு உடலை அசைக்காமல்  படுத்திருந்தது.

புளூகிராஸ் வரவில்லை.

மறுபடியும் போன்.

”ஆமா சர்ச பக்கதுல வர கிருக்ஷ்ணா ஸ்வீட்ஸ் தொட்டு வருமே அதே ரோடுதான்.வாங்க.அங்கதான் நிக்கேன்.வாங்க.”

பெரிய கூண்டு வண்டி வந்து. வேகமாக கையை நீட்டி வண்டியைத் தடுத்தேன்.வண்டியிலிருந்து இருபது வயதுள்ள பையன் குதித்தான்.
டிரைவர் வண்டியை விட்டு இறங்கவில்லை.

பையன் முகத்தை கனிவாக எல்லாம் வைத்திருக்க விரும்பாததால் அவனை நோக்கி வீசிபட்ட புன்னகை தரை விழுந்து கிடந்தது.

நாயின் முகத்தை தூக்கிப்பார்த்தான்.செல்லமாக ரெண்டு அடி அடித்தான்.நாய் அயர்ச்சியாய் கத்தியது.

“உயிர் இருக்கு “ என்று டிரைவரை நோக்கி கத்தினான்.டிரைவர் தூக்கி உள்ளே போடு என்று ஆக்சன் காட்டினார்.

நாயை பிடித்து தூக்கினான்.நல்ல முரட்டு நாய் அது.அதை அணைத்தபடிதான் தூக்க முடியும்.ஆனால் நாயைப்புரட்டினால், ஒரே இடத்தில் படுத்து கிடந்ததினால் ஒருபக்க வயிற்றில் மஞ்சள் நிறப்புண்ணாகி சீழும் கட்டி உடைந்து வழிந்து கொண்டிருந்தது.

 அதை தூக்கினால் அவன் சட்டை முழுவதும் ஆகிவிடும்.

இரண்டு முறை தூக்க முயற்சிபதும் பிறகு கீழே கிடத்தி விடுவதுமாய் திணறினான்.

கூடிய கூட்டத்தில் யாரும் வரவில்லை.அந்த நாற்றம் சுவாசிப்பதற்கே முடியவில்லை.எப்படி தொட்டுத்தூக்குவார்கள்.

பையன் என்னைப்பார்க்காமலே நான்தான் அவனுக்கு உதவமுடியும் என்று தோண்றிற்று.

வேறு வழியில்லை.நாயின் நிலமை மிக மோசமாக இருக்கிறது.இப்போது எடுத்துப்போனால்தான் எதாவது மருத்துவம் பார்ப்பார்கள்.ஏனோ தெரியவில்லை அந்த நாயை காப்பாற்ற வேண்டும் என்று துடித்தது.சட்டையை மடக்கி விட்டுக்கொண்டேன்.

“பின்னங்கால நான் புடிச்சிக்கிறேன்.முன்னாடி நீ புடிச்சிக்கோ.திடீருன்னு கொளைச்சாலும் நீ சமாளிப்பல்ல.”

“சரி பாஸ் தூக்குங்க”

நாயின் மிக அருகே போனேன்.பின்னங்காலை தொட்டுத்தூக்கினேன்.வாடை நாசியின் உள்ளே போய் கசப்பு சுவையை கொடுத்தது.

நாய் ஹூய் ஹூய் என்று ஒலமிட்டது.இரண்டு காலையும் பிடித்து தூக்கினால்.நாயின் உடலில் வடியும் அழுகிய நீரெல்லாம் என் உள்ளங்கையில் பரவி முழங்கைக்கு வரும் போல தெரிகிறது.அருவருப்பால் கைநடுங்கிறது.

வேகமாக  வண்டியை நோக்கி வருகிறேன்.

முதல் கதவு திறந்திருக்கிறது,ஆனால் வண்டியில் இருக்கும் பெரிய கூண்டுகதவில் ஒரு இரும்பு வளைவு கம்பியை கொண்டு தாளிட்டு வைத்திருக்கிறார்கள்.அதை எப்படி திறப்பது என்று தெரியாமல் முழிக்க, புளுகிராஸ் பையன் கத்தினான்.

“சார் உங்கள யாரு கதவுகிட்ட போகச்சொன்னது.நான் சொல்றதுக்கு முன்னாடியே போறீங்க.நீங்க இப்படி வாங்க நான் திறக்கிறேன்.”

அழுகிகொண்டிருக்கும் நாயின் நகம் கைகளில் உரச எனக்கு பதட்டத்தில் ஒன்றுமே புரியவில்லை.

ஒரு காலைபிடித்து கொண்டிருந்த கையை விட்டு கூண்டு கொண்டியை திறக்கிறேன். வலி தாங்க முடியாமல் நாய் கத்துகிறது,பையன் கத்துகிறான்.கையெல்லாம் வேலை செய்ய வில்லை.சட்டென்று கூண்டு உள்ளே ஏறமுயன்றேன்.

உள்ளே மேலும் இரண்டு நாய்கள் அரைகுறை மயக்கத்தில் கிடந்தன.

“சார் கூண்டுக்குள்ள போகாதீங்க.நீங்க போகவே கூடாது.இங்க இருந்தே மெல்லமா வைங்க.ஆனா கொஞ்சம் தள்ளிவைங்க”
அவன் லாவகாமாக கொஞ்சம் தள்ளி தாலாட்டுவதுபோல ஆட்டினான்.நானும் நாயை அப்படித்தான் ஆட்டினேன்.ஆனால் நாயின் உடலில் இருந்து தொடர்ச்சியாக சொட்டிய துளிகள் பாதத்தில் பட மூன்றாவது வீச்சை பெரிதாக வீசி நாயை உள்ளே போடுவதற்கு பதிலாக வீசியெறிந்தேன் என்னையறியாமல்.

நாய் உள்ளே விழுந்து” கெள்ள்ள்ள்ள்ள்” என்று ஒரு மரண ஒலத்தோடு விழுந்தது,

பையன் என்னை முறைத்து விட்டு கூண்டை சாத்தி வண்டி கதவை சாத்த டிரைவர் வண்டியை எடுத்துப்போனார்.அவனுக்கு கொடுக்க வைத்திருந்த ஐம்பது ரூபாயைக்கூட கொடுக்க முடியவில்லை.

பழக்கடைக்காருக்கு என் மேல் பரிதாபம்.அவரே கைகழுவ தண்ணீர் ஊற்றினார்.கழுவி விட்டு ஆபீஸ் ரெஸ்ட் ரூமில் சோப் போட்டு கழுவ கழுவ அந்த நாய் தூக்கிப்போடப்படும் போது போட்ட சத்ததை யோசித்து கொண்டே இருக்கிறேன்.

நிச்சயமாக அது நாயின் மரண ஒலம் போலத்தான் இருந்தது.

அருவருப்பினால் அவசரப்பட்டு நாயை வீசிவிட்ட குற்ற உணர்வு பொங்கி பொங்கி வந்தது.

கைகழுவி விட்டு வெளியே வரவும். சிராஜுதின் மீட்டிங் முடிந்து வெளியே வரவும் சரியாக இருந்தது.

‘என்ன மச்சி நாயை நல்ல படியா ஒப்படைச்சிட்டியா.பொழச்சிருமா மச்சி” என்றான்.

“ஆ பொழச்சிரும் போலத்தான் இருந்துச்சி.புளுகிராஸ்ல அத பொழைக்கவெக்க எண்பது சதவிகிதம் சான்ஸ் இருக்கு மாதிரிதான் சொன்னாங்க”

“சூப்பர் மச்சி.தேங்ஸ்டா.கலக்கிட்ட விஜய்”

எனக்கே தெரியாமல் சிராஜுதின் எடுத்த முயற்சியால்,அந்த மாதம் ’கேரர் அண்டு க்ஷேரர்’ அவார்டு எனக்காக கம்பெனியினால் கொடுக்கபட்டிருந்ததை நோட்டீஸ் போர்டு இப்படி சொல்லியது. “கம்பெனி வாசலில் அடிபட்டு கிடந்த நாய்க்கு கருணையோடு முதலுதவி செய்து,புளூகிராஸிடம் ஒப்படைத்து குணமடைய வைத்து நம்மையெல்லாம் பெருமையடைய வைத்த விஜயபாஸ்க்கருக்கு இந்த மாதம் பெஸ்ட் ’கேரர் அண்டு க்ஷேரர்” எம்பிளாயீ அவார்டை கொடுக்கிறோம்.

அதைப்படிக்கும் போது யாருக்கும் கேட்காத நாயின் மரண ஒலம் என் காதிற்கு தெளிவாக கேட்டது.

5 comments:

  1. வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே http://blogintamil.blogspot.in/2013/05/blog-post_22.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  2. வித்தியாசமான கதை.சில விவரிப்புகள் நேரில் பார்ப்பதைப் போல இருந்தது அருமை…

    ReplyDelete
  3. Wow...very very touching vijay....😥....

    ReplyDelete