Saturday 23 March 2013

கதை போல ஒன்று - 77


இரவு ரெண்டு மணிக்கு கண் முழித்தார் அவர்.

அந்த விழிகளின் மொழியை கோபாலகிருக்ஷ்ணாவால் கொஞ்சம் புரிந்து கொள்ள முடிந்தது.

தினமும் அந்த சின்னப்பெண் வருகிறாள்.வங்கி வாசலில் நிற்கிறாள்.முப்பது விநாடி பார்க்கிறாள்.
அப்புறம் போய்விடுகிறாள்.

ஒரு வயசுப்பெண் இப்படி செய்வது அவருக்கு வித்தியாசமாய் தெரிந்தது.

கிட்டதட்ட இருவாரமாய் இப்படி செய்கிறாள்.

மற்ற ஊழியர்கள் வழியே அவருக்கு அந்த தகவல் வந்தது,

வங்கி ஊழியர்கள் மொத்தமும் அந்தப்பெண் பற்றியே பேச ஆரம்பித்தார்கள்.

கோபாலகிருக்ஷ்ணாவும் அவளை இருநாட்களாக பார்க்க தொடங்கினார்.தயக்க பார்வை.தளர்ந்த நடை.

நாளை கேட்டுவிட வேண்டும் என்று யோசித்தபடியே தூங்கினார்.

”இஙக வாம்மா”

தயங்கபடியே நின்றாள்.

“சும்மா வா”

வந்தாள்.வேறு யாரோ உபயோகித்த ஆல்டர் செய்த சுடிதார் அவள் ஏழ்மையை காட்டிற்று.

“எதுக்கு டெய்லி பேங்க் வாசல பார்த்துகிட்டு போற”

“எஜுக்கேசனல் லோன் பத்தி”

“என்ன”

”இல்ல படிக்கிறதுக்கு லோன் குடுக்கிறது பத்தி தெரிஞ்சிக்கனும் அதான்”

“அப்ப உள்ள வந்து கேளும்மா.இது என்ன வரக்கூடாத இடமா.பிளஸ் டூல எவ்வளவு மார்க்”

அவள் தன் பர்சில் மடித்து வைக்கப்பட்ட ஜெராக்ஸ் மார்க் ஷீட்டை கொடுக்க

ஆயிரத்து எழுவத்தியாறு மார்க்

கோபால கிருக்ஷ்ணாவுக்கு ஒருவிதமான பதட்டம் வந்தது.

“இவ்வளவு நல்ல மார்க் வைச்சிருக்கிறியே.கண்டிப்பா கிடைக்கும் உன் குடுமபத்தி சொல்லும்மா”

அப்பா பெயிண்டராம்.குடி போன்ற கெட்ட பழக்கம் எதுவுமில்லை.

ஆனால் உடல்நிலை சரியில்லை.எப்போதும் இருமிக்கொண்டே இருக்கும்.
நுரையீரலில் சளி கோர்த்து கொண்டிருக்கும் டிபிக்கு முந்தின நோய் அவரை ஆசீர்வதித்திருந்தது.

அம்மா வீட்டு வேலை செய்பவர்.
வள்ளியூர் போன்ற டவுனில் வீட்டு வேலை செய்தால் என்ன சம்பாதித்து விட முடியும்.

பொறியியல் எல்லாம் படிக்க முடியாதென்று அந்த பெண்ணுக்கே தெரிந்திருக்கிறது.

வேண்டுமானால் எதாவது ஆர்ட்ஸ் காலேஜில் சேர்ந்து பி.ஏ வோ அல்லது பி.எஸ்.சி யோ சேர்ந்து படித்து கொள் என்று அப்பா அம்மா சொல்லிவிட்டார்களாம்.

“உனக்கு எஜுக்கேசனல் லோன் பத்தி யாரு சொன்னது”

“பேப்பர்ல படிச்சேன்”

"கண்டிப்பா கிடைக்கும்”

“கெடச்சாலும் யூஸ் இல்ல சார்.இன்ஜினிரியங் கவுன்சிலிங் முடிஞ்சிட்டு சார்”

கோபால கிருக்ஷ்ணாவுக்கு அது இன்னும் பெரும் அதிர்ச்சி.

பொறியல் கவுன்சிலிங் முடிந்த பிறகு என்ன செய்ய முடியும்.எந்த காலேஜில் படிப்பது.பணம் கொடுத்து விடலாம் படிக்க. காலேஜை எப்படி கொடுப்பது.?

தான் கும்பிடும் கடவுளை பழித்தார்.

யோசிப்பது மாதிரி நடித்து.

”நாள மறுநாள் வாம்மா.நான் ஒரு ஐடியா சொல்றேன்” என்று பேருக்கு அனுப்பிவிட்டார்.

அது முதல் அதே நினைவு .சாப்பிடும் போது.அன்றிரவு உறங்கும் போதும் அதே நினைவு.

என்ன செய்வதென்று தெரியாத வேளையில் மனைவி சொன்னார் “ஏங்க அந்த வடக்கன்குளத்து காலேஜ் கரஸ்பாண்டண்ட் நம்ம பேங்குலதான அக்கவுண்ட் மேனேஜ் பண்றார்.அவருக்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுருங்க”.

கரஸ் முன் அமர்ந்திருந்தது கோபால கிருக்ஷ்ணன்தான்.

“கண்டிப்பா கோபால்.இங்க கவுன்சிலிங்கல நிரம்பாத பல சீட்டு இருக்கு.அதுல ஒரு சீட்ட அந்த பொண்ணு எடுத்து படிக்கலாம்.இருங்க”

போன் செய்து விசாரித்து.

”எலக்டிரிக்கலும்,ஐடியும் இருக்கு எதுனா ஒண்ணு எடுத்துக்கோங்க.பீஸ் பொறுமையா கொடுங்க ஆனா கொடுத்திருங்க” என்று கைகுலுக்கி அனுப்பி வைத்தார்.

அப்பா அம்மாவுடன் வந்த பெண்ணை காரில் காலேஜுக்கு கூட்டிப்போய் ஃபார்மெல்லாம் நிரப்பி வைத்து ஐடி எடுக்க வைத்து, லோன் சாங்சன் செய்து காலேஜில் சேர்த்தார்.

காலேஜ் சேர்ந்து முதல் நாள் குடும்பமாய் வந்து ஆசீர்வாதம் வாங்கி மிட்டாய் கொடுத்து போனாள்.

வங்கியின் செல்லப்பிள்ளையானாள்.

பதவி உயர்வு வர வர வள்ளியூரில் இருந்து ஹைதிராபாத்துக்கும், ஹைதிராபாத்தில் இருந்து சென்னைக்கும் மாற்றலாகிப்போனார் கோபால கிருக்ஷ்ணன்.

மூன்று வருடம் கழித்து அந்தப்பெண்ணிடம் இருந்து மெயில் வந்தது.

அன்புள்ள அங்கிள்,

நான் நல்லா படிச்சு, நல்ல மார்க் வாங்கினேன்.டி.சி.எஸ் யில் கேம்பஸ் இண்டர்வியூவில் செலக்ட் ஆகியிருக்கிறேன்.நல்ல சம்பளம்.அப்பா அம்மா உங்களத்தான் அடிக்கடி பேசுவாங்க.என் வாழ்க்கையில நீங்க வராம இருந்தா நான் என்ன ஆயிருப்பேன்னு நினைக்கவே பயமாயிருக்கு.இத எழுதும் போதே நான் அழுறேன்.நீங்க அன்னைக்கு பேங்க் உள்ள வான்னு கூப்பிடலன்னா என் கதி.சென்னை வந்தது உங்களை சந்திக்கிறேன் அங்கிள்.

கோபால கிருக்ஷ்ணன் இப்படி பதில் எழுதினார்.

அன்பு பகவதி குட்டிக்கு,

வாழ்த்துக்கள்.

நான் அன்னைக்கு உள்ள கூப்பிட்டேன் .

அது எதுக்குன்னா நீ ரெண்டு வாரம் விடா முயற்சியா பேங்க் முன்னாடி வந்து நின்னதாலத்தான்.

ஏதோ நடக்கும்ன்னு உன் உள்ளுனர்வு சொல்லிருக்கு.நீ எடுத்த நல்ல மார்க்கு உனக்கு அந்த நம்பிக்கைய கொடுத்திருக்கு.

நான் ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேன்.நீயும் எதாவது கஸ்டபட்டவங்க, பணத்தால படிக்க முடியாதவங்க உங்கிட்ட வந்த அவுங்களுக்கு உன்னால முடிஞ்ச உதவிய செய்.

அது எனக்கு சந்தோக்ஷம்

நானும் அவளும் உன்னப்பார்க்க ஆசையா இருக்கோம்.சென்னை வந்தா கண்டிப்பா வீட்டுக்கு வா.

அன்புள்ள கிருக்ஷ்ணா அங்கிள்.

1 comment:

  1. விடாமுயற்சி - விஸ்வரூப வெற்றி…!!! :-)

    ReplyDelete