Wednesday 6 March 2013

கதை போல் ஒன்று - 75


அம்மா அப்பா அவர்களுடைய இருபது வயது பையன் ”பாலன்”மூவரும் ஆசிரமத்தை நோக்கி நடந்துகொண்டிருந்தார்கள்.

பாலனால் சரியாக நடக்க முடியவில்லை.பயமாயிருந்தது அவனுக்கு.

ஆசிரமத்தை நெருங்க நெருங்க கை காலெல்லாம் உதறியது.

அப்பா அவன் கைகளை பிடித்து கொண்டார்.சிறிய ஏரி போல் கைமுழுவதும் வேர்வை பாய்ச்சி இருந்தது.

அப்பா அம்மாவை பார்த்தார்.

“பாலன் ஒரு மாத்திரை சாப்பிடுறியாப்பா” என்றார்.

“வேண்டாம்மா” என்று பாலன் சொன்னதில் அவனுடைய ஆளுமையற்ற மனபயம் வெளிப்பட்டது.

உள்ளே சென்று காத்திருந்தவர்களை முழுவதும் வெள்ளையுடை அணிந்த இளம்பெண் ஒருவர் வரவேற்றார்.

“அப்பாயிண்மெண்ட் வாங்கியிருக்கீங்களா”

“ஆமா மேடம்” என்று அப்பா தன்னிடம் உள்ள கம்பியூட்டர் பிரிண்ட் அவுட்டை கொடுத்தார்.

வாங்கி சரி பார்த்தபின்.

”அரைமணி நேரம் காத்திருங்கள்” என்று ரோஜாவை முகத்தை மலர்த்தி போனார் அப்பெண்.

அந்த அறையில் பாலன் அம்மா அப்பா தனியாக இருந்தார்கள்.

பிளஸ் டூ பரிட்சை எழுதும் போதுதான் பாலனின் கைநடுக்க நோயின் தீவிரம் எல்லோருக்கும் தெரிந்தது.

கணிதபரிட்சைக்கு முந்தின நாள் இரவெல்லாம் விழித்து படித்து மறுநாள் பரிட்சை எழுத போகும் போதே
“மேத்ஸ் பரிட்சைன்னா எனக்கு பயம்மா இருக்குமா “ என்றான்.

அவனுடைய விழிகளை பார்த்து அம்மா கொஞ்சம் பயந்தாள்.உடல் களைப்பை தாண்டின மன அயர்ச்சியை கண்டுபிடிப்பது எளிதாய் இருந்தது.

பத்தரை மணிக்கு ஸ்கூலில் இருந்து உடனடியாக வரச்சொன்னார்கள்.அம்மா அப்பாவுக்கு போனை போட்டு இருவரும் பள்ளிக்கு வரும்போது பரிட்சை எழுதாமல் பாலன் ஹெட்மாஸ்டர் அறைபக்கத்தில் உட்கார்ந்திருந்தான்.

அவன் கைகள் கடகடவென்று நடுங்கி கொண்டிருந்தது.

கைகளை எடுத்து இரண்டு தொடைகளுக்கு அடியே வைத்தான்.

இருந்தாலும் கைநடுக்கத்தின் ஆவேசத்தில் தொடையும் சேர்ந்து நடுங்கியது.

“யம்மா கை ஏம்மா இப்படி நடுங்குது. இது நிக்காதாம்மா.நான் பரிட்சையே எழுதலியேப்பா.நான் செத்தரவாப்பா” என்று கன்னத்தை ஒங்கி ஒங்கி அடித்து கொண்டான்.

அம்மா நெஞ்சை பிடித்து உட்கார்ந்து கொண்டாள்.அப்பாவுக்கு வாய் கோணிற்று.

ஹெட்மாஸ்டர் சத்தம் போடாமல் இருகக் சொன்னார்.

வெளியே அரசமரத்தடியில் அரச இலைகள் உதிர்ந்து கிடந்தன.

பாலனின் கைகளை அப்பா இருக்க பிடித்து கொண்டார்.அதையும் மீறி நடுங்கியதை எல்லா அரச இலைகளும் பார்த்தன.

டாக்டர் பாலனுக்கு உடல் பிரச்சனையில்லை மனப்பிரச்சனை என்று சொல்லி ஆனால் நிறைய மூட் சேஞ்சர்ஸ் மாத்திரை கொடுத்தார்.

இரண்டு நாட்கள் பாலனை தூக்கத்திலேயே வைத்திருந்தார்.

மூன்றாவது நாள் கவுன்சிலிங் கொடுத்தார்.

இரண்டு நாட்கள் பரவாயில்லை.ஆனால் மறுபடியும் கைநடுக்கம் போகவில்லை.டாக்டரை மாற்றிப்பார்த்தார்கள்.குணமாகவில்லை.

சித்த மருத்துவத்திற்கு மாறினார்கள்.

அக்கபஞ்சர் ஒர்க் அவுட் ஆகும் என்றார்கள்.

நடக்கவில்லை.

பிளஸ் டூவை முடித்து, டிப்ளமா சேர்ந்து
தத்தி தாவி முடிப்பதற்குள் அப்பாவும் அம்மாவும் தங்கள் மகிழ்ச்சியை இழந்திருந்தார்கள்.

அப்பா தினமும் தண்ணீர்பாட்டிலை நிரப்ப சொல்வர் பாலனிடம்.

பாட்டிலினுள் கால்வாசி நீர் கூட போகாது.வெளியே கொட்டி வைப்பான்.

கோயிலுக்கு நேர்ந்தார்கள்.தங்கதேர் இழுத்தார்கள்.தாந்தோண்றியம்மனுக்கு பாலனின் மாமா தீ மிதித்தார்.

டிரையினில் வந்த ரயில் சிநேகம் ஒன்று ”தேன்மா” சாமியாரை பற்றி சொல்ல, அவரையும் பார்க்கலாம் என்று காத்திருக்கிறார்கள் பாலன் அப்பா அம்மா மூவரும்.

உள்ளே வரும்படி ஒரு பெண் கூப்பிட
மூவரும் உள்ளறையில் நுழைந்தார்கள்.

”தேன்மா” சாமியார் அன்றை ரொட்டிக்கான மாவை பிசைய மாவை விரவிகொண்டிருந்தார்.

இவர்களை பார்த்தது சிரித்தார்.

“சாமி உங்கள் பார்த்தா பிரச்சனை தீந்திரும்ன்னு சொன்னாங்க”

“நான் டிரைபண்றேன்.உங்க பிரச்சனைய மெயில்யே படிச்சிட்டேன்”

பாலனை பார்த்தார் தேன்மா.

“பாலன் இந்த மாவுல கொஞ்சம் தண்ணிய விடு” என்றார்.

பாலன் வாட்டர் பாட்டிலை எடுத்து தண்ணீரை விடும் போது கைகள் வழக்கத்திற்கு அதிகமாக ஆடியது.

அதை கவனியாமல் மாவை பிசைந்தார்.பிசைந்து முடிக்கையில்

“பாலன் நீ அந்த டெஸ்கல இருப்பா. நீங்க இரண்டு பேரும் ஒரு மணி நேரம் வெளிய இருங்க ஃப்ளீஸ்”

கைகளை சுத்தமாக கழுவிகொண்டு பாலன் அருகே அமர்ந்து கொண்டார் தேன்மா.

அவன் கைகளை பிடித்து வேகமாக இங்கும் அங்கும் ஆட்டினார்.முதுகில் தொப் தொபென்று அடித்தார்.

“கடைசியா எப்போ மேஸ்டுருபேட் பண்ணின”

பாலன் வெட்கப்பட்டு “இரண்டு மாசமா பண்ணவே இல்ல ஐயா”

“அட ஏன்பா. நானெல்லாம் உன் வயசுல நாளைக்கு மூணுதடவ செய்வேன்.அதெல்லாம் அடக்காத.அதுவே ஸ்டிரஸ்.உன் மனசுல உள்ள பேண்டஸி உனக்கு மட்டும்தான்.யாருக்கிட்டையும் பகிர்ந்துக்காம நீ மகிழ்ச்சியா இரு” என்று சிரித்தார்.

அப்போதும் பாலன் கைகள் நடுங்கியது.

மறுபடியும் அவன் கைகளை பிடித்தார்.இரண்டு நிமிடம் கண்மூடி ஏதோ முணுமுணுத்தார்.

“நான் ஒண்ணு சொல்வேன் அத செய்வீயா பாலன்”

“சொல்லுங்க ஐயா”

“ஐயான்னு சொல்லாத.தேன்மான்னு சொல்லு”

“சொல்வேன் தேன்மா. தேன்மா!”

“உனக்கு முதன் முதல்ல கைநடுங்கினது ஞாபகம் இருக்கா”

“ம்ம்ம்”

“எப்போ”

“பிளஸ் டூ மேத்ஸ் பரிட்சையில”

“அப்போ என்னப்பார்த்த”

“ஒண்ணுமே பார்க்கல தேன்மா.அப்பாவுடைய அம்மாவுடை அழுது வீங்கின முகம்த்தை தவிர”

“இல்ல பாலன் இன்னும் யோசி. என்னப்பார்த்த”

“ஒண்ணுமே பார்க்கல தேன்மா”

“நீ பார்த்த நான் சொல்லட்டுமா”

“ம்ம்ம்”

“நீ அன்னைக்கு அழுதுகிட்டே தரைய பார்க்கும் போது ஒரே ஒரு அரச இலைய பாத்தியா”

“ஆ...ஆமா ஒரு இலையை பார்த்தேன்

தேன்மா.உங்களுக்கு எப்படி தெரியும்..எப்படி... “

“அதவிடு பாலன் பார்த்தியா அது எப்படி இருந்துச்சி பாலன்”

“நான் அழுதது பிடிக்காம எரிச்சல்ல எல்ல இலையும் மொகத்த திருப்பிகிச்சி தேன்மா.ஆனா ஒரு இலை மட்டும் மத்திம வயசுல உள்ள ஒரு இலை மட்டும் என்னப்பார்த்து ஆறுதல் சொல்லிச்சு”

“எப்படி அது ஆறுதல் சொல்லிச்சுன்னு சொல்ற”

“தெரியல தேன்மா.ஆனா அது ஆறுதல் சொல்லிச்சி”

அத உன்னால இப்ப வரைய முடியுமா.அந்த அரச இலைய.

ஒரு டிராயிங் நோட்டையும் கலர்பென்சில்களையும் அவன் முன்னால் வைத்தார் தேன்மா.

பாலனுக்குள் இருக்கும் இலை பாலன் வழியாக தன்னை வரைந்து கொண்டது.

அரச இலைகளை வளைவும் வாலின் “தலைப்பிரட்டை வால் “அமைப்பும். நரம்புகளும் கலர்பென்சிலில் இருந்து குதித்து குதித்து நோட்டில் படிந்து கொண்டிருந்தன.

பதினைந்து நிமிடத்தில் அன்று பார்த்த அந்த அரச இலையை வரைந்திருந்தான்.

வரைந்து முடித்திருக்கும் போது அவன் கைநடுக்கம் பாதியாக குறைந்திருந்தது.

“பாலன்”

“இதுதான் அந்த இலையா”

“தேன்மா... “ உணர்ச்சித்தான் பாலன்.

”இந்த இலைகள் மாதிரி எல்லா இலைகளையும் வரைந்து விடு.

இனிமேல் இலைகள்தான் உன் நண்பன்,காதலி,நல்லது,கெட்டது எல்லாம்.

உலகின் ஒரு இலையை விடாதே.

புளிய இலையை வரை,ஆல இலையை வரை,யானைசெவி இலையையும் விடாதே,குரோட்டன்ஸ் செடி இலையை வரை. வரைந்து கொண்டே இரு.

இந்த இலைகள்தான் உன்னுடைய கைநடுக்கத்தை நிறுத்தும்.உன்னுடைய கம்பீரத்தை உனக்கு மீட்டுக்கொடுக்கும்.

ஒவியத்தில் கரைந்துவிடு.

பல வர்ணங்களிலும் உன்னுடைய கைநடுக்கம் கரைந்து இந்த வெள்ளைத்தாளில் படிந்து விட்டது.

இனிமேல் உனக்கு கைநடுங்காது.

இந்த கலர்பென்சில் பாக்ஸையும் டிராயிங் நோட்டையும் விடாதே பாலன்.

வேறு எல்லா மருந்துகளையும் தூக்கி போட்டுவிடு பாலன்.

பென்சில்களை நீ வீச வீச இலைகள் பலவித பச்சைகளில் உன் தாளில் தளிரட்டும்.

போய்வா பாலன்.”

கதவை திறந்து வெளியே வந்த பாலனின் கைகள் நடுங்கவே இல்லை என்பதை அப்பாவும் அம்மாவும் அதிசயமாய் பார்க்கும்போதே, அவனுடைய கைகளில் இருக்கும் கலர்பென்சில் பாக்ஸையும் டிராயிங் நோட்டையும் அதைவிட அதிசயமாய் பார்த்தார்கள்.

1 comment:

  1. கொஞ்சம் புரியல;
    அல்லது புரியாத மாதிரி நடிக்கிறேனான்னு தெரியல…!

    ReplyDelete