Friday 7 August 2015

இவன் பார்க்க அவன் சுட்டு...

யாகூப் மேமனின் மனது இப்போது எப்படி இருக்கும் என்று சிந்தித்துப் பார்ப்போம்.
ஒவ்வொரு விநாடியையும் அவர் எப்படி கடப்பார் என்று நினைத்துப் பார்ப்போம். ஒருவேளை மனிதநேயம் நமக்குள் வந்தாலும் வர வாய்ப்பிருக்கிறது.
ஜார்ஜ் ஆர்வல் எழுதிய கட்டுரையொன்றில்
பர்மாவில் தான் நடத்திய யானை வேட்டை ஒன்றை விவரித்திருப்பார்.
அவர் போலீஸ் அதிகாரியாய் இருந்த போது அட்டகாசம் செய்த யானையொன்றை விரட்ட அல்லது அடக்க ஒரு துப்பாக்கியோடு போவார்.
அவர் பின்னால் கிட்டத்தட்ட இரண்டாயிரம் பர்மியர்கள் செல்வார்கள்.
குறிப்பிட்ட இடத்தில் யானை நிற்கும். ஆனால் சாதுவாய் பிரச்சனையில்லாமல் அப்பாவியாய் நிற்கும்.
மாவுத்தன் வரும் வரை அதை கொல்ல வேண்டாம். மாவுத்தன் வந்து அடக்கும் வரை பொறுப்போம் என்று இவர் நின்றிருப்பார்.
ஆனால் இவர் பின்னால் நிற்கும் இரண்டாயிரம் மக்களும் அந்த யானையைக் கொன்றே ஆகவேண்டும் என்று நிற்பார்கள்.
வேறு வழியில்லாமல் மதம் கொள்ளாத அந்த யானையை இவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்வார். யானை செத்துச் சரியும்.
இந்தியாவில் ஒரு கைதி அரசியல் துருப்புச்சீட்டாக, அரசியல் அடிப்படையிலான ’மக்கள் கவன ஈர்ப்பை’ பெறும் போது இப்படித்தான் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் ஒருவர் பார்க்க இன்னொருவர் சுட்டுக் கொல்கிறார்கள்.
காங்கிரஸ் தூக்கிலிடும் போது இந்துத்துவ சக்திகள் அந்த 2000 பர்மியர்கள் போல கவனித்துக் கொண்டே இருக்கின்றன. “ஐயோ அவன் பாக்குறானே. எதாவது செய்திருவானோ (மக்களிடம் தேசத்துரோக கட்சி என்ற அரசியல் பிரச்சாரம்) என்று பயந்து தூக்கிலிடுகிறது.
பா.ஜ.க தூக்கிலிடும் போது காங்கிரஸ் அந்த 2000 பர்மியர்கள் செய்த வேலையை செய்கிறது. காங்கிரஸ் எங்கே பா.ஜ.க பற்றி தவறாக மக்களிடம் சொல்லிவிடுமோ என்று, பா.ஜ.க தூக்கிலிடுகிறது.
இவன் பார்க்க அவன் சுட்டு,
அவன் பார்க்க இவன் சுட்டு,
தாங்கள் தங்கள் அரசியல் விளையாட்டுக்காக எடுப்பது ஒரு மனித உயரை என்ற மனித நேய உணர்வே இல்லாமல் அந்த இரண்டு கட்சிகளும் செய்யும் மரண விளையாட்டு இன்னும் நாள் செல்ல செல்ல அதிகமாகும் என்றுதான் தெரிகிறது.
இவர்களின் இந்த விளையாட்டுக்கு அடிப்படைக் காரணமாக இருப்பது பொதுமக்களாகிய நம்முடைய அறியாமையும், மேலோட்டக் கருத்துக்களும் தான்.
அது எப்போது மாறும் என்பதும் தெரியவில்லை.
இதையெல்லாம் நினைத்தால் அயர்ச்சியுடன் கூடிய நம்பிக்கையின்மையே வருகிறது.

No comments:

Post a Comment