Saturday 2 August 2014

ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு ”பழக்கவழக்கம்”

ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு ”பழக்கவழக்கங்கள்” இருக்கும்.

இந்த பழக்கவழக்கத்தின் பின்னால் உள்ள விஞ்ஞானத்தை புரிந்து கொள்ளுதல் அவசியமானது.(தெரிந்து கொள்ளுதல்தான் ஆதரிப்பது அல்ல) அது பற்றிய ஒரு அறிவு நம் எல்லோருக்கும் இருக்குமானால் நம்மிடம் உள்ள அடிப்படைவாத எண்ணங்கள் குறையும்.

கர்நாடாகாவில் ’அம்பிகா’ மற்றும் ’ஹரிகந்திரா’ ஜாதியை சேர்ந்தவர்கள் மீன்பிடித்தொழிலையே தங்கள் தொழிலாக கொண்டிருக்கிறார்கள்.ஒருவர் வீட்டுபக்கத்தில் இன்னொருவராக வசித்து அன்னியோன்யம் பாராட்டுகின்றனர்.

அன்பாக பழகுகின்றனர்.திடீரென்று ஒருவரை ஒருவர் பார்த்தால் யார் அம்பிகா மீனவர்கள்,யார் ஹரிகந்திரா மீனவர்கள் என்று கண்டுபிடிக்கமுடியாது.

அப்படியானால் எது அவர்களை வேறு படுத்துகிறது.”பழக்கவழக்கம்” தான். 

மீனவர்களின் முக்கிய பழக்கம் எது? மீன்பிடிக்க வலைவீசுதல்.

அம்பிகா ஜாதியினர் வலையை தலைக்கு மேலே வீசி மீன்பிடிக்கின்றனர்.ஆனால் “ஹரிகந்திரா” மீனவர்கள் வலையை வயிற்றுக்கு கீழே வீசி மீன் பிடிக்கின்றனர்.

தப்பி தவறி கூட இதை மாற்றி செய்வதில்லை.விளையாட்டுக்கு கூட மாற்றி முயற்சி செய்வதில்லை.

இது பற்றி மானுடவியலாளர் “டெபர் டெப்” செய்யும் ஆராய்ச்சியின் முடிவாக, “இனங்கள் புறவயமாக சேர்ந்திருப்பது போன்ற தோற்றம் இருந்தாலும்,சமூக ரீதியாக ஒன்று கலக்காமல் இருக்க இந்த பழக்கவழக்கங்கள் உதவி செய்கின்றன.” என்கிறார்.

வேறுபாட்டை காட்டும் பழக்கவழக்கங்கள் எப்போது ஜாதி உணர்வை மங்காமல் இருக்கச் செய்கின்றன.வலையை வீசும் பழக்கத்தில் தங்கள் ஜாதி உணர்வை ரசிக்கிறார்கள்.

டெபர் டெப் இன்னொன்றும் செய்கிறார்.மீன்பிடி பழக்கமே இல்லாத மாணவர் குழுவை ஒவ்வொரு ஜாதினரிடமும் வலைவீச பழக சொல்கிறார்.

மாணவர்கள் இரண்டு பழக்கங்களையும் ஆராய்ந்து தலைக்கு மேல் வலைவீசும் முறைக்கு (அம்பிகா ஜாதியினர்) பழக்கம் அதிகம் உழைப்பை கோருகிறதென்றும்,இடுப்பளவுக்கு வலைவீசும் ஹரிகந்திரா ஜாதினரின் பழக்கவழக்கத்தை விட நான்கு மடங்கு அதிக உழைப்பை கோருகிறது என்றும் கண்டுபிடிக்கின்றனர்.

சரி.ஏன் அம்பிகா ஜாதினர் இவ்வளவு கஸ்டப்பட்டு உழைப்பை வீண்செய்ய வேண்டும்.அவர்கள் ஏன் ஹரிந்திரா ஜாதினரின் முறையை பின்பற்றவில்லை. காரணம் இனப்பற்று.

தன் இனத்தை வேறுபடுத்திக் காட்ட வேண்டும் என்ற ஈடுபாடு.பழமையான இனமாக அம்பிகா விளங்குவதாலும்,”நீரின் குழந்தைகள்” என்ற பட்டத்தை உடைய இனமக்கள் என்பதால் ஏற்பட்ட,தனித்தன்மையை காப்பாற்றும் ஆழ்மன ஆசையே இப்படியான கடின பழக்கத்தை வீம்புக்கு பின்பற்ற செய்கின்றன.என்று நினைக்கிறார்  டெபர் டெப்.

வரலாற்று ரீதியாக அம்பிகா முதலில் வருகிறார்கள்,அடுத்து ஹரிகந்திரா வருகிறார்கள்.

அடுத்து மூன்றாவதாக இன்னொரு இனத்தவரும் வருகிறார்கள்.அவர்கள் முஸ்லிம்கள்.அவர்கள் ஹரிகந்திரா இனத்தவர் மாதிரியே இடுப்பளவிற்குதான் வலை வீசுகிறார்கள்.ஆனால் ஹரிகந்திரா மாதிரி இடது கைபக்கம் இல்லை.வலது கைபக்கமாக.

அந்த முஸ்லிம்களும் தங்கள் இனத்தை தனித்தன்மையாக காட்ட அவர்களை அறியாமல் ஹரிகந்திராவினரின் பழக்கத்தை சற்றே மாற்றி கடைபிடிக்கின்றனர்.

நாகபதினி ஜாதிக்கும் நாகப்பதினி ஜாதிக்கும் சண்டை.
இரண்டுக்கும் என்ன வித்தியாசம்... 

ஒரே ஒரு “ப்” தான். ஆனால் அந்த “ப்” என்ற எழுத்து பரம்பரை பரம்பரையாக வந்திருக்குமென்றால்,அது அந்த ஜாதியின் முக்கிய அம்சமாகிவிடுகிறது.

அதை ஒட்டியே பிரச்சனைகளும் ஆரம்பமாகிறது.

No comments:

Post a Comment