Tuesday 26 August 2014

குளவியும் நானும்...

என்னைக் கொட்டிய குளவி என்னைப் பார்த்து கொண்டே இருந்தது.அது என்னைக் கொட்டியவுடன், அதை அடித்து விட்டேன்.குளவி தன் உயிரை விடப் போகும் போது பேசியது.

குளவி:நான் உயிரை விடப் போவது துரதிஷ்டமானாதுதான்.எனக்கென்று வாழ்க்கையில் சில எதிர்ப்பார்ப்புகள் இருந்தன.
நான்:நீ என் கழுத்தில் கொட்ட முயற்சி செய்தாய்.அதனால் அனிச்சை செயலாய் உன்னை அடித்தேன்.
குளவி:நான் கொட்ட முயற்சி செய்யவில்லை.நம் இருவரது உடலும் தொட்டுக்கொண்டன.நான் கொட்ட முயற்சி செய்தால் இப்படி வரமாட்டேன்.இதை விட ஆக்கிரோசமாக வருவேன்.
நான்:ம்ம்ம்
குளவி: யோசிக்க யோசிக்க தவறு உன்னுடையது என்றுதான் தோன்றுகிறது.
நான் : எப்படி ?
குளவி: சிறுநீர் கழிக்க நீ இந்த ஆளில்லாத தெருமுனைக்கு வந்தாய்.வந்தவன் தைரியமாக நிமிர்ந்து நின்று கழிக்க வேண்டியதுதானே.நீ குளவிகள் சுற்றும் முற்றும் இருப்பதைப் பார்த்து தலையை குனிந்து உன் உடலை தாழ்த்தி சிறுநீர் கழித்தாய்.அப்போது நடந்தது என்ன ? நீ உன் வெளியை உனக்கான வெளியை, உன் உடல் பருப்பொருள் ஆக்கிரமித்திருக்கும் வெளியை தாழ்வுமனப்பான்மையாலும், பயத்தினாலும் விட்டுக்கொடுக்கிறாய்.
குளவியாகிய நான் பறப்பவன்.எனக்கு ஒரு வெளி அடைக்கப்படாமல் இருந்தால் அது நான் பறக்கும் இடம்தான். நான் அப்பாவியாய் பறந்தேன் உன் தலைக்கு மேல். திடீரென்று நீ உன் தலையை நிமிர்த்தும் போது, என்னுடல் உன் மேல் மோதிற்று.ஏற்கனவே குளவிகள் பற்றிய உன் பய முன்கருத்தினால், உன் உடலை சிலிர்த்தாய்.அதே வேகத்தில் உன் கையில் இருக்கும் நோட்டு புத்தகத்தினால் என்னைத் தாக்கி இதோ தரையில் போட்டிருக்கிறாய். உன்னுடைய தன்னம்பிக்கையின்மை என் உயிருக்கு ஆபத்தாய் போய்விட்டது.
நான்: எனக்கு அழுகை வருகிறது. நான் உன்னை வெறுப்பு குரோதம் எதுவுமில்லாமல் முட்டாள்தனத்தால் கொன்றுவிட்டேன்.இப்போது நான் என்ன செய்ய குளவி.
குளவி:தயவு செய்து நான் இறந்த பிறகு அழுதுவிடாதே.கவிதையாய் எதுவும் எழுதிவிடாதே.கல்வெட்டு, ஒவியம் என்று தீட்டிவிடாதே.பொது இடத்தில் இந்த சம்பவத்தைச் சொல்லி உன் குற்ற உணர்ச்சியை பறைசாற்றி ”உன்னை” ”என்னை” பிரபலப்படுத்தி புனிதப்படுத்திவிடாதே.எனக்கு அதில் விருப்பம் இல்லை.இறப்பு என்பது என் இனத்தில் சாதரண ஒன்று.
நான்: ம்ம்ம்
குளவி: நான் சொல்ல வருவதெல்லாம் மனிதா! உன் வெளியை தைரியமாக அடைத்துக் கொள்.மரியாதை மட்டு மாங்கொட்டை அன்பு பாசம் என்று உன் வெளியை யாருக்காகவும் விட்டுக் கொடுக்காதே.தன்னடக்கம் என்ற பெயரில் உன் வெளியை நீ குறுக்கிக் கொள்ளும் போது, இன்னொருவர் அது பொதுவெளி என்று உலவக்கூடும்.திடீரென்று உன் வெளியை நீ ஆக்கிரமிப்பு செய்யும் போது, இப்போது போல் இருவரும் மோதிக் கொள்ளலாம்.அது இருவருக்கும் எரிச்சலைக் கொடுக்கலாம்.
இப்படி சொல்லி குளவி கண்ணை மூடியது.பெருவிரல் நகத்தால் அதை மண்ணுக்குள் அழுத்தி மூடிவிட்டு நடந்தேன்.

No comments:

Post a Comment