Saturday 26 January 2013

கதை போல ஒன்று - 68


நின்று கொண்டிருந்த ஆட்டோவில் படுத்து புகைத்து கொண்டிருந்த ஆட்டோ டிரைவருக்கு அம்பத்து ஐந்து வயது இருக்குமா? இருக்கும்.

புகையை வெளியிடும் வீச்சில் இந்த உலகத்தை அலட்சியப்படுத்தும் தன்மை தெரிந்தது.

”நந்தனம் வருமா?” 

”நூத்தியம்பது ரூபா ஆகும் தம்பி.”

”நூத்தி எழுவது தருவேன்.ஆனா சிகரட் பிடிக்க கூடாது சொல்லி சிரித்தேன்.”

”ச்சே சே கஸ்டமர் இருக்கும் போது சிகரட் பிடிக்க மாட்டேம்பா.”

ஆட்டோவை இயக்கி ஓட்டி கொண்டிருக்கும் போதே சொன்னார்

“இந்த பழக்கம் ராஜண்ணன் சொல்லிக்கொடுத்த பழக்கம்”

“ம்ம்ம்” என்றேன்.

“ராஜண்ணன்னா யாரு தெரியுமா தம்பி”

“நீங்க என்ன மினிஸ்டர் ராஜண்ணன்னையா சொல்லிரப்போறீங்க. சொல்லுங்க யாரு அந்த ராஜண்ணன் ?”

ஆட்டோ டிரைவருக்கு சிரிப்பு அள்ளியது.

”அந்த மினிஸ்டரத்தான் சொல்றேன்.”

நான் நிமிர்ந்து உட்கார்ந்து முகத்தை முன்னால் வைத்து கைகளை கொண்டு முட்டு கொடுத்து கேட்டேன்.

“மினிஸ்டர் ராஜண்ணன் உங்க ஃப்ரண்டா?”

”ஆமா.நானும் அவரும் தான் சின்ன வயசுல ஒண்ணா பீடிப்பிடிப்போம்”

“யண்ணே சும்மா கத வுடாதீங்க” என்றேன்.

“உண்மையில தம்பி.போன்னேரி பக்கம்தான் எங்க ஊரு.அவர் வீடும் என் வீடும் பக்கத்து பக்கதுலதான். சின்ன வயசுல இருந்தே நாங்க பிரண்ட்ஸ்தான்.இப்பவும் அவருக்கு என்னத்தெரியும்”

ஆர்வம் வந்தது ஆட்டோ டிரைவரிடம் பேச.

”அவரு அரசியல்வாதியாயிட்டாரு. நீங்க ஆட்டோ ஒட்ட வந்துட்டீங்க. எப்படி?எதுவரைக்கும் ரெண்டு பேரும் ஒண்ணா படிச்சீங்க”

“பி.ஏ வரலாறு முதல் வருக்ஷம் வரை ஒண்ணாத்தான் படிச்சோம். அப்புறம் எனக்கு படிப்பு வரலன்னு காலேஜுக்கு போகல”

“காலேஜ் படிக்கும் போதே ராஜண்ணன் அரசியல்ல இருப்பாரா?”

“அவர் ஸ்கூல் படிக்கும் போதே அரசியல் பேசுவாரு.ரொம்ப தைரியமா இருப்பாரு. ஒரு தடவ ஊர் கிணத்துல குதிக்க முடியுமான்னு ஒருத்தன் சவால் விட்டான், இவரு அப்படியே குதிச்சிட்டாரு.கொஞ்சம் தமிழ் அதிகம் படிப்பாப்ல”

“காலேஜ்ல அரசியல் இருந்திருக்கும்லாண்ணே”

“ஆமா.அப்போ நம்ம ஊர்ல ஒரு கட்சி ரெண்டா உடைஞ்சது தெரியுமா? அந்த பிரிஞ்ச கட்சில போய் நல்லா வேலை செய்வார்.யாரையும் கண்டுக்காம,

பிரதிபலன் பார்க்காம கட்சி வேல செய்வாப்ல.மூணு வருசம் வேலை செய்ஞ்சான்.நான் கூட அவன் கூட கட்சியில இருப்பேன்.வேலை எல்லாம் செய்வேன்.

என்னடா ராஜண்ணா! நல்லா வேல செய்றோம் ஆனா யாரும் கண்டுக்கவே மாட்டேங்கிறாங்களேன்னு நான் பொலம்பினா.உழைப்போம்டா. கடவுள் குடுப்பான் நமக்குன்னு சொல்வான்.இல்ல சொல்வாரு.

அப்போ ரெட் ஹில்ஸ்ல எங்க கட்சியின் எதிரி கட்சி மீட்டிங் நடந்தது”

நான் ஆட்டோ டிரைவர் பேச்சை மறித்து ”ராஜண்ணன் முதலியாரா அல்லது வன்னியராண்ணே ”என்றேன்.

அவரு நாயக்கரு. நான் தான் முதலியார்.நான் சொல்றத கேளுப்பா... ம்ம்ம கேளுங்க தம்பி.’

ஒஹ் சாரி. சொல்லுங்க. ரெட் ஹில்ஸ்ல உங்களுக்கு பிடிக்காத கட்சித்தலைவர் கூட்டதுக்கு வரார்ன்னு சொன்னீங்க.

“வராருன்னு சொன்னேனா.நானும் ராஜண்ணாவும் மீட்டிங்கல ஆஜர்.

கையில ஆளுக்கொரு சந்தனமாலை.

கூர்ந்து பக்கதுல பார்த்தா.நாங்க ரெண்டு சந்தனமாலைக்கு நடுவுல எலுமிச்ச மாலைய வெச்சிருக்கிறது தெரியும்.

சந்தன மாலை போடுறாப்புல பக்கத்துல போய் எலுமிச்சை மாலைய போடுறதுதான் ஐடியா.

கூட்டமான்னா செம கூட்டம்.

எனக்கு பயம் அதிகமா இருக்குது.நான் தான் முதல்ல எலுமிச்சை மாலை போடனும். அடுத்தது டக்குன்னு பின்னாடி நிக்குற ராஜண்ணா போடனும். அப்படிங்கர மாதிரி ஏற்பாடு.

இது எங்க கட்சிக்காரங்களுக்கு கூடத்தெரியாது.ரகசியமா வெச்சிருந்தோம்”

“யண்ணே ஒரு நிமிசம்.எலுமிச்ச மாலை போட்டா என்ன. அது அவமானப்படுத்துரதா?”

ஆட்டோக்காரர் என்னைப்பார்த்தார்.

“ஒரு வேள செத்தவங்களுக்குதான் எலுமிச்சை மாலை போடுவாங்களோ” என்றேன்.

“அதெல்லாம் எனக்குத்தெரியாதுப்பா எலுமிச்சை மாலை போட்டா அது அவமானம்.பித்தம் அதிகமானவங்களுக்கு, பைத்தியகாரங்களுக்குதான் அப்படி போடுவாங்கமாதிரி ஒரு நம்பிக்கைன்னு வெச்சுக்கங்களேன்.”

“சரி சரி சொல்லுங்க.”

“எனக்குன்னா பயம் தம்பி.

போட்டா சுத்தி உள்ள எல்லாரும் அடிச்சி தோல உரிச்சிருவாங்க.

மேடைமேல ஏறலாமா வேணாமான்னு கியூல நிக்கிறேன்.

ராஜண்ணா ஆவேசமா பின்னாடியே நிக்குறார்.

நான் பயந்து பின் வாங்க , ராஜண்ணா சடார்ன்னு மேடையில ஏறி அந்த தலைவர் கழுத்தில சந்தன மாலை போடுறாப்புல சட்டுன்னு எலுமிச்சை மாலைய போட்டுட்டாரு”

எனக்கு திக்கென்றிருந்தது.அத்தனை தொண்டர்கள் முன்னாடி தைரியமாக அவர்கள் தலைவருக்கே எலுமிச்சை மாலை போட்டேதான் விட்டார் போல.

“அப்புறம் என்னாச்சுன்னே”

“நல்ல வேள தம்பி போலீஸ் ராஜண்ணாவ சுத்திகிட்டு அடிச்சானுங்க.

தொண்டர்கள் கையில சிக்கியிருந்தா ராஜண்ணா செத்திருப்பார்.

போலீஸ் ஒரு நாள் முழுக்க அவர கோர்ட்டுக்கே கொண்டு போகாம அடிச்சிருக்காங்க.

ரத்தம் உறையிற அடி.இந்த சம்பவத்த பெரிசு பண்ண வேணான்னு அவர விட்டுட்டாங்க.

அப்பத்தான் எங்க கட்சிக்காரங்களே இவர் யாருன்னு திரும்பிப்பார்த்தாங்க.

இரண்டு நாள் கழிச்சு எங்க தலைவரே ராஜண்ணாவ கூப்பிட்டு பேசுனார்.

அப்ப கெடச்ச புகழ்தான். சின்ன சின்ன போஸ்டிங் வாங்கி, எம்.எல்.ஏவாகி ,அப்படியே மேல மேல போயிட்டார்.

இப்ப மினிஸ்டராவும் ஆயிட்டாருல்ல. “

ஆச்சரியத்து கொண்டே இருந்தேன்.

அந்த கணம்தான். அந்த தைரியம்தான் ராஜண்ணாவுக்கும் இந்த ஆட்டோ டிரைவருக்கும் உள்ள வித்தியாசம்.

ஆட்டோடிரைவரின் ஒரு கண தயக்கம். ராஜண்ணாவின் ஒரு செகண்ட் வீரம் இரண்டும் ஒரே புள்ளியில் வெட்டும் எதிர் எதிர் கோடுகள்.

அந்த ஒரு செகண்ட்தான் அந்த புள்ளி.

என் வாட்சை பார்த்தேன்.

விநாடி முள் டக் டக்கென்று போய் கொண்டிருந்தது.அதில் வரும் ஒரு விநாடியை பிடிக்க முயற்சித்தேன்.

உணர முயற்சித்தேன்.

இது மாதிரி ஒரு விநாடியில்தான் எல்லா மனித முடிவுகளும் எடுக்கபடுகின்றன.அது முன்னேற்றதிகோ பின்னேற்றத்திற்கோ வழிவகுக்கின்றது.

மறுபடியும் வாட்சையை முகத்தின் பக்கத்தில் வைத்துப்பார்த்தேன்.

விநாடி முள் ஒடிக்கொண்டே இருந்தது.டிட்ச் டிட்ச் டிச் என்று .

ஆட்டோடிரைவர் தன் மெலிந்த முதிர்ந்த சக்தியற்ற கைகளால் ஆட்டோவை ஒட்டிக்கொண்டிருந்தார்.

2 comments:

  1. கடைசிவரை ஒரு சஸ்பென்சாகவே கொண்டு சென்றது அருமை…!

    ReplyDelete