Wednesday 2 January 2013

கதை போல ஒன்று - 63


எண்ணே நீங்க பூனைக்கறி சாப்பிட்டிருக்கியளா?

இல்ல.

ஏண்ணே டேஸ்டா இருக்கும் தெரியுமா? 
“இந்த மில்ட்டிரி ஹொட்டல்ல எல்லாம் மொயல் கறி மொயல் கறின்னு சொல்றதெல்லாம் என்ன மொயல்ன்னா நெனச்சிட்டுருக்கிய இந்த பூனக்கறிதான்னே. பஞ்சு மாதிரி இருக்கும். அப்படி நாக்குல வைச்சா சும்மா சல்லுன்னு உள்ள போயிரும்.”

நான் சரவணனை பார்த்தேன்.

திருச்செந்தூர் போகும் போதெல்லாம், சரவணன் தூத்துக்குடியில் இருந்து என்னை பார்க்க வந்துவிடுவான்.

தூரத்து உறவு.

என்னை விட மூன்று வயது சிறிவனென்றாலும், அவனுடைய கம்பீரமா அல்லது என்னுடைய கம்பீரமின்மையா என்று தெரியாது, அவனை பார்க்க ஒரு கெத்து இருக்கும்.

பெரிய மீசையும் ஒங்கிய குரலும் ஆணுக்கு அழகு என்று நினைப்பவன்.”என்னன்னே நீங்க அப்படியே தெரைக்க வேண்டாமா” என்பான்.

உண்மையிலேயே பூனைய திம்பாங்கலால சரவணா?

ஆமா... அடிச்சி சொல்லுவேன் ஹோட்டல்ல போடுற முயல் கறில முக்கால்வாசி பூனைக்கறிதான்னே.

வேறன்ன கறியெல்லாம் சாப்பிடுவல என்ற கேள்வி சரவணனை உற்சாகமாக்கியது.

அணில் பக்கடா பண்ணி சாப்பிட்டுருக்கேன்,

முயல் வேட்டைக்கு போயிருக்கேன். நாலு பேரு மொயல கலைச்சி விடுவானுங்க, மூணு பேரு கண்ணி வெச்சிகிட்டு நிப்போம். மாட்டின பிறகு நம்ம சாமுவேல் சர்டருன்னு தோல உரிச்சிருவான்.

மசாலா தடவி சுட்டு சாப்பிடுங்க நல்லாயிருக்கும்.

புறா.

அது இல்லாமையா... டிரான்ஸ்பார்மர் மேல அல்லது போஸ்ட்கம்பத்துல புறா கூடு கட்டி இருக்கும்.

சதிக்ஷ் அண்ணந்தான் அதில ஸ்பெலிக்ஷ்ட்.

நைட் ஆனா மெல்ல போய் புறா தூங்கிக்கிட்டு இருக்கும் போது, புறா எடுத்துட்டு வந்து தரையில ஒங்குனாப்புல அடி.

இந்த தேங்காய சிதறாம வெடல போடுவாங்க இல்ல அது மாதிரி போடனும்.

ம்ம்ம்...

பன்னி சாப்பிட்டுருக்கேன், மாடு சாப்பிட்டுருக்கேன்.

எலி சாப்பிட்டுருக்கியா?

”ஆமா வெள்ளெலி வேட்டைக்கு போவோம்.புடிச்சிட்டு வந்தா ஊருக்கு வெளிய ஒரு தேமுத்து பாட்டி இருக்காவ. அவியட்டதான் கொடுப்போம்.

அவிய என்ன செய்வாவன்னா அந்த எலிய எல்லாத்தையும் கைய கால ஆய்ஞ்சுட்டு, தோல உரிச்சிட்டு, கொஞ்சமா உப்பு மிளகும் சேர்த்து ஒரல்ல போட்டு இடிப்பாவ,

அத சின்ன சின்ன உருண்டயா உருட்டி, நம்ம வெங்காயந்தக்காளி கொழம்புல போடுவாங்க

ஒவ்வொரு உருண்டையையும் சூடா எடுத்து சாப்பட்டா ருசின்னே...

எனக்கோ ஆர்வம் பிய்த்துகொண்டது,எல்லா கறியையும் பற்றி கேட்க வேண்டுமென்றிருந்தது.

அவனுக்கோ எல்லா கறியை பற்றி சொல்ல வேண்டும் போல இருந்தது.

பொதுவாக இரண்டு ஆண்கள் வெகுநாட்களாய் காமம் கிடைக்காமல் இருக்கும் போது இது போன்று உரையாடிக்கொள்வார்கள்.

முதலில் ஒருவன் உலகம் காமத்தால் கெட்டுவிட்டது போல தொடங்குவான்.

அடுத்தவனும் ஆமா ஆமா என்று ஆமோதிப்பான்.

பின் மெல்ல மெல்ல இருவரும், அவரவர்க்கு தோண்றும் உணர்வுகளை அப்படியே பகிர்ந்து கொள்வார்கள்.

அவரவர் அந்தரங்கங்களை அப்படியே கொட்டுவார்காள்.

” மச்சி இத யார்கிட்டயும் சொல்லாத, சின்ன வயசுல பக்கத்து வீட்டுஅக்கா அவுங்க பிளவுஸ்க்குள்ள காயின்ஸ்ஸ போட்டுகிட்டு என்ன எடுக்க சொல்வாங்கடா”

“மச்சி எனக்கு கூட அதுமாதிரிதான், இவ்ளோ நல்லா தெரிஞ்சவங்க டிரஸ் மாத்துறத பார்க்கிறோம்ன்னு அந்த ஆசையில தோணவே இல்லடா” .

அது மாதிரி நான் எல்லா கறி சுவையை பற்றியும், மனிதர்கள் அதை உற்கொள்வது பற்றியும் கேட்கும் வெறியாய் இருந்தேன்.

சரவணனோ தன்னுடைய எல்லா கறி அனுபவத்தையும் சொல்ல வெறியாய் இருந்தான்.

நத்தை சாப்பிட்டுருக்கியா?

ம்ம்ம்.

காக்கா?

காக்கா சின்ன வயசுலேயே சாப்பிடுவோம்னே.. டேஸ்டாத்தான் இருக்கும். இது கூட சாப்பிட்டுருக்கேன் என்றான்.

எது என்று அவனை பார்க்க, அவன் தன்னுடைய விரல் சுட்டும் இடத்தில் இருந்தது ஒரு மயில்.

அது எனக்கு அதிர்ச்சி.சரவணா மயிலாடா சாப்பிட்டுருக்க....

ஆமான்னே.என்ன இப்போ அதுக்கு.

அடப்பாவி மயில் சாப்பிடுறது சட்டப்படி குத்தம்டா.

ஸ்பீக்கர் போட்டு சொல்லிட்டா சாப்பிடுறோம். அது ரகசியமா நடக்கும்ண்ணே.அந்த வேட்டையே திரில்லிங்.

சரவணனிலன் அம்மாவை பற்றி ,அம்மா நிறைய கதை சொல்லியிருக்கிறார்கள். அவர் முருக பக்தை.

எப்போதுமே முருகர் சிந்தனைதான்.

விரதமிருப்பது கோயிலுக்கு போவது என்று கடவுளுக்கே தன்னை அர்பணித்து கொண்டவர்.

கல்யாணம் ஆகி ஏழுவருடங்கள் குழந்தையில்லாமல் இருக்க, ஒவ்வொரு வருடமும் தூத்துகுடியில் இருந்து திருச்செந்தூருக்கு பாதயாத்திரை வந்து தரிசித்து போவார்.

அம்மாவுக்க்கு பையன் மயில்கறி சாப்பிடுவது தெரிந்தால்?

எனக்கு அந்த விசயம் வித்தியாசமாய் பட்டது.

முருகனை தரிசித்து, வரம் வாங்கி பெற்ற பிள்ளை மயிலையே சாப்பிடுகிறதே என்பது மாதிரி தோண்றியது.

பின்னர்” என்ன இப்படி செண்டிமெண்டாய் யோசிக்கிறோம்.

மயில் என்பது ஒரு பறவை. அதை சட்டப்படி சாப்பிடக்கூடாது. அந்த ரீதியில்தான் இவனை எச்சரிக்க வேண்டும். என்று நினைத்தேன்.

”என்ன அமைதியாயிட்டீங்கண்ணே... ”

”சும்மா யோசிச்சேன்.”

”மயில் கறி ருசியால்லாம் இருக்காது.
ஒலகத்துலேயே டேஸ்டே இல்லாத கறின்னா மயில் கறிதான். நார் நாரா பிரிஞ்சி வரும். சை சுத்தமா சாப்பிடவே முடியாது. ஏதோ கொண்ணுட்டோமேன்னு சாப்பிட்டோம். “

கைவிரல்களை அசைத்து நார் நாராக என்பது செய்துகாட்டினான்.

”எல நாய உங்கம்மாவுக்கு தெரியுமா? அவுங்க எவ்வளவு சாமி பக்தில” என்றேன்

”தெரிஞ்சாதானன்னே.”

அவனை பார்க்க எரிச்சல் மண்டியது.

கடற்கரை இருட்டியதும் மணலைத்தட்டி நடந்தோம்.

நான் அமைதியானேன்.

கீரிபுள்ள... என்று ஆரம்பித்தான் சரவணன்.

நான் நாழிக்கிணறு இருக்கும் திசைபார்த்தேன்.
அவனிடம் அந்த டாப்பிக் பேச விருப்பம் இல்லை என்பதை நாசூக்காக உணர்த்தினேன்.

சரவணன் அப்பாவி.அவனுக்கு என் தந்திரம் புரியவில்லை. சொன்னான்.

“இந்த கீரிப்புள்ள இருக்குல்லாண்ணே.

அத புடிக்கிறது ரொம்ப கஸ்டம்.

அத மொத மொதல்ல புடிச்சி கொன்னத மட்டும் மறக்கவே மாட்டேன்னே.

அப்படி இப்படி அங்க ஒடி இங்க ஒடி புடிச்சிட்டோம்.

அப்புறம் அத ஒரு சாக்குல (கோணி) போட்டு மேல நல்லா கட்டினாரு சதிக்ஷ் அண்ணன்,

அப்புறம் அந்த சாக்க ஒரமா புடிச்சிக்கிடாரு.

கீர்ப்புள்ள உள்ள துள்ளுது.

அத அப்படி எடுத்து போஸ்டு கம்பில்ல அதுல ஒங்கி ஒரு அடி,

செத்திரோம்ன்னு பார்த்தா, அது இன்னும் துள்ளுது,

உள்ள துள்ளுரது தெரியுது,

ஒரு மாதிரி சவுண்டு கொடுத்திட்டு துள்ளுது,

சதீக்ஷ் அண்ணன் மூணுதடவை ஒங்கி அடிச்சாரு, சட் சட்டுன்னு கீரிபுள்ள அடிவாங்கறத பார்க்கும் போது எனக்கு அடிவயித்துல சுர்ன்னு பயமாயிருக்கு,

பாவமாயிருக்கு,

என்னடா காரியம் பண்ணிட்டுருக்கோம்ன்னு தோணிச்சி.

என்ன அறியாம சாமிய பேர சொல்றேன்.

ரொம்ப நேரம் அடிச்சி சாக்க அவத்து பார்த்தார் சதீக்ஷ் அண்ணன்.

நானும் பார்த்தேன்.

இதோ இப்படி எட்டி பார்த்தேன்.

அப்படியே பிய்ஞ்சி கிடந்துச்சுண்ணே,

செருப்ப கூட தொட்டுக்காம ஒடுனேன். யப்பா சாமி அத இப்ப நெனச்சாலும் மறக்காது அப்படி ஒரு ஒட்டம்.

அன்னையிலயிருந்து நான் கறியே சாப்பிடுறதுல்ல.
என்னால அது முடியாது பாத்துகிடுங்க.

அவன் சொல்லி முடிக்கும் போது திருசெந்தூர் கோயில் பக்கத்தில் வந்திருந்தோம்.

1 comment:

  1. 'ஒவ்வொருவரின் பரிதாபங்களும் ஒவ்வொன்றிடம்' என்பதை கடைசி நான்கு பாராக்களில் சொல்லிய விதம் அருமை..

    ReplyDelete