Saturday 26 January 2013

கதை போல ஒன்று - 67


”இந்த பாஸ் செல்லாதுப்பா டிக்கட் எடு” என்றார் அந்த கண்டக்டர்.

இருபத்திநாலு ஏ அண்ணாநகர் போகும். நுங்கம்பாக்கம் வழியே போகும்.ஏறிக்கொண்டேன்.

மதிய வேளையானதால் கூட்டமே இல்லை.

பாஸ் இருந்தது.கண்டக்கரிடம் கொடுத்தேன்.அவர் பேனாவால் டிக் அடிக்காமல் என்னிடம் திரும்ப கொடுத்தார்.

என்னைத்தான் டிக் அடிக்க சொல்கிறாரோ என்று நினைக்கும் போது “இந்த பாஸ் செல்லாதுப்பா. நீ டிக்கட் எடு” என்று அதிகாரமாக கத்தினார்.

விசயமே புரியவில்லை.

“ஏன் சார் செல்லாது. நேத்து கூட வந்தேனே.பாருங்க கண்டக்டர் டிக் அடிச்சிருக்காரு”

“பேசாதப்பா நீ எடு”

“நீங்க காரணம் சொல்லாம நான் டிக்கட் எடுக்க மாட்டேன்”

“சனியன் மாதிரி பேசுறியே.நுங்கம்பாக்கத்துல இருந்து அண்ணாநகருக்கு நூத்தி அறுபது ரூபா பாஸு.நீ நூத்திநாப்பது ரூபா பாஸ எடுத்திருக்க”

“நான் எடுக்கல சார்.உங்க டிப்பார்ட்மெண்ட்ல குடுத்திருக்காங்க.ரூட் சொல்ல வேண்டியது என் வேல.அதுக்கு எவ்ளோ ரூபா பாஸுன்னு நான் சொல்ல முடியாது.”

“அதெல்லாம் எனக்கு தெரியாது பாஸ் செல்லாது. டிக்கட் எடு”

“எடுக்க முடியாது சார். செக்கிங் வந்தா நான்
சொல்லிக்கிறேன்”

எழுந்து பக்கத்தில் அவேசமாக வந்தார்.பயந்து பின் வாங்கினேன்.

“எட்றா டிக்கட்ட.பீட மாதிரி வந்த தொல்ல செய்ஞ்சினு”
அந்த அதட்டலில் பாக்கெட்டில் கையை விட்டு பத்து ரூபாய் கொடுத்து டிக்கட் எடுத்தேன்.

மிச்சம் சில்லரையாக மூன்று இரண்டு ரூபாய் நாணயங்கள் கொடுத்தார்.

அநியாயம் இழைக்பட்ட, அடிவாங்கிய வெறி இருந்தது என்னுள்.

பஸ்ஸில் உட்கார்ந்திருப்பவகள் வேறு பார்க்கிறார்கள்.
தனியே வழுக்கினால் பிரச்சனையே இல்லை.எழுந்துவிடலாம்.இதோ நாலு பேர் பார்க்கிறார்கள்.

எல்லோரும் பார்க்க விளையாட்டில் தோற்பதா? தப்பே இல்லாமல் அவமானம் ஏற்பது எப்படி?
கண நேரத்தில் அவருக்கு மறுஅடி கொடுக்க மனம் திட்டமிட்டது.மறுபடி ஆரம்பித்தேன்.

“கண்டக்டர் சார். இப்போ நீங்க இப்படி பாஸ் செல்லாது. டிக்கெட் எடுக்கனும்ன்னு சொல்றத ஒரு பேப்பர்ல எழுதி கொடுத்தா கையெழுத்து போடூவீங்களா”?

சத்தமாக கேட்டேன்.

பஸ் மொத்தமும் பார்க்க. கண்டெக்டர் என்னையும் நான் கண்டெக்டரையும் கூர்ந்து பார்தோம்.

இருபத்தி ஆறு வயதான என் வயதில் அவருக்கு பையன் இருக்கலாம்.அவருடைய நீலச்சட்டை அவர் எக்ஸ்பீரியன்ஸை காட்டியது.

நான் பதட்டத்தை அடக்கி தெளிவாக கேட்கும் கேள்வி அவரை பதட்டமடைய வைத்தது.

“என் பேரு விஜயராகவன்.அண்ணாநகர் டிப்போதான். எங்க வேணாலும் கம்ளைண்ட் பண்ணிக்க”

நான் விடவில்லை.

“அதில்ல விஜயராகவன்.நீங்க பாஸ் செல்லாதுன்னு சொல்றத பேப்பர்ல எழுத்துப்பூர்வமா கொடுக்க முடியுமா”

நிதானமாக கேட்டேன்.

விசில் அடித்து பஸ்ஸை நிறுத்தினார்.

”இறங்குடா கீழ.கீழ இறங்கு. தேவையில்லாம ரொம்ப பேசுற.”

இந்திய வயதானவர்களை பேர் சொல்லி அடிக்கடி கூப்பிட்டால் டென்க்ஷனாவார்கள்.

“நான் ஏன் இறங்கனும் விஜயராகவன்.டிக்கெட் எடுத்துட்டேனே.நீங்க செய்ஞ்த பேப்பர்ல எழுதி தரமுடியுமான்னு கேட்டேன்.நான் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னா முடிஞ்சி போச்சு விஜயராகவன்.ஏன் இறங்க சொல்றீங்க.முடியாது.”

டிரைவருக்கே கண்டெக்டர் செய்தது பிடிக்கவில்லை போலும் பஸ்ஸை எடுத்துவிட்டார்.

பஸ் பயணிகள் எல்லோரும் என்னை கொஞ்சம் ஹீரோத்தனமாக பார்ப்பதாக கற்பனை செய்து கொண்டேன்.

“டேய் தம்பி நீ டிப்போ வாடா அங்க பேசிக்கலாம்.”

“வரத்தான் போறேன் விஜயராகவன்.பாசேஞ்சர “டேய் தம்பின்னு” மரியாதை இல்லாம கூப்பிடுறீங்கன்னு கம்ளயின் பண்ணுவேன்.லட்டர் எழுதி காப்பி டு டிராஃபிக் ஹெட் பல்லவன் ஹவுஸ்ன்னு நேர்லயே போய் பல்லவன் இல்லத்துல கொடுக்கத்தான் போறேன்.அடையார் டிப்போ பிரான்ஞ் மேனேஜர்” சக்திவேல்” எனக்கு தெரியும்.டிவிசன் மேனேஜர் “ராமன்” கூடத்தெரியும். எல்லார்கிட்டயும் பேசுவேன்.உங்க மேல கம்ளைண்ட் கண்டிப்பா உண்டு விஜயராகவன்.”

விளையாட்டில் சிக்கிக்கொண்டார்
கண்டெக்டர்.

முகத்தை நார்மலாக வைத்துக்கொள்ள கஸ்டபட்டது தெரிந்தது.

அண்ணாநகர் டிப்போ வந்தது. வெளியே எல்லோரையும் இறக்கி விட்டார்கள்.நான் இறங்கவில்லை.

டிரைவர் “தம்பி இறங்குப்பா” என்றதும் இறங்கி, மறுபடி உள்ளே போன பஸ்ஸை நோக்கி ஒடிப்போனேன்.

விஜயராகவன் இறங்கவும் பிடித்துக்கொண்டேன்.

“வாங்க சார். பேசுவோம். நீங்கதன் டிப்போவுல போய் பேசலாம்ன்னு சொன்னீங்களே”

அவர் எதுவும் பேசாமல் நடந்து போய் கொண்டே இருந்தார். நான் பின்னாடியே ஒடி ஓடி ஆவேசமாக பேசிக்கொண் டிருந்தேன்.

டிப்போ டீக்கடையில் நின்றார்.

சுத்தி நிறைய கண்டெக்டரும் டிரைவரும் நின்றார்கள்.

அவர்கள் முன்னாலும் விஜயராகவினிடம் கத்தி கத்தி பேசினேன்.

வெட்கத்தை விட்டவனுக்கு என்ன தயக்கம்.

என் பிரச்சனையை இரு அணிகளாக பிரிந்து விவாதம் செய்தனர்.எனக்கும் சப்போர்ட்டாக ஒரு கோஸ்ட்டி உருவாகியது.

புதிதாய் வந்தவர்கள் “என்னப்பா விசயம் விசயம்ன்னு சேர. அந்த இடத்தின் வட்டம் பெரிதாக ஆரம்பித்தது.”

டிப்போவில் நின்ற பயணிகள் எல்லோரும் எட்டி பார்க்க ஆரம்பித்தனர்.

நான் சத்தமாக என் தரப்பு நியாங்களை நிதானமாக கத்தி கொண்டே இருந்தேன்.

விஜயராகவன் சட்டென்று தன் கையில் வைத்திருந்த தோல் பையோடு என்னை ஒரு கும்பிடு போட்டார்.

”எப்பா தம்பி தப்புதாம்பா.தெரியாம செய்ஞ்சிட்டேன்.காலையில இருந்து சாப்பிடவே இல்லை நானு.என் பொண்டாட்டி ஆஸ்பித்திரில இருக்கா. எனக்கே ஆயிரம் பிரச்சனை. கூட்டம் கூட்டி அசிங்கபடுத்தாத” என்றார்.

உள்ளம் மகிழ்ச்சியில் திளைத்தது.

அமைதியாக வெளியே வந்தேன்.

கூட்டம் இன்னும் விஜயராகவனிடம் “என்ன பிரச்சனை. என்ன பிரச்சனை என்று கேட்டு கொண்டிருந்தது.

வெற்றியடைந்து விட்டேன். என்னை அவமானபடுத்திய மூத்த நடத்துனரை பிரச்சனைக்குரியவர் என்று காட்டிவிட்டேன்.

காலம் எல்லாத்தை மறக்கடித்து, எனக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்து, பிள்ளையின் முதல் பிறந்தநாளை கொண்டாட திட்டமிடும் போது, ஒரு மாதம் முன்பு கம்பெனி குவைத்துக்கு ஆறுமாதம் ”போய்வா” என்று சொல்லியது.

குழந்தைவிட்டு பிரிய கஸ்டமாய் இருந்தது.

குவைத் போவதற்கு ரெண்டு நாள் முன்னாடி எப்போதும் , அவள் பக்கத்துலேயே படுத்துகிடந்தேன்.”அப்பாவுக்கு உன் முதல் பிறந்தநாளுக்கு உன் கூட இருக்கமுடியாது செல்லம்” என்று மனதிற்குள்ளவே வசனம் பேசினேன்.

பிரிவு நாளாகி, மணிநேரமாகி, நிமிடங்களாகி, நான் மட்டும் கால்டாக்சியில் ஏறி விமானசிலையத்தை நோக்கி போகிறேன்.

காலை மணி பத்து இருக்கும்.

முதன்முதலாக குடும்பத்தை விட்டு ஆறுமாதம் பிரியப்போவதில் பைத்தியமான மாதிரி உணர்வு.

தலைசுற்றி வெறுமை.பயம். பிரிவை பற்றிய துக்கம்.

கார் திருமங்கலம் சிக்னலில் நிற்கும் போது. என் பக்கத்தில் ஒரு பைக்கும் நின்று கொண்டிருந்தது.

கண்ணாடி வழியே பார்த்தால் விஜயராகவன்.

நான்கு வருடம் முன்னர் வெற்றிகரமாக அவமானப்படுத்திய விஜயராகவன்தான்.

வயது இன்னும் ஏறி இருந்தது.அப்பாவியாய் முகத்தை வைத்து அவர் சிக்னலில் நிற்கும் போது, “ஏன் இந்த மனுசன் மேல அன்னைக்கு அவ்வளவு வன்மம். அவ்வளவு வெறி.எப்படி இன்சல்ட் பண்ணினோம் இவர.

சம்பவத்துக்கு பிறகு அவருக்கு நமக்கும் என்ன தொடர்பு.

அவர், அவர் வாழ்க்கையை வாழ்ந்தார். நாம நம்ம வாழ்க்கையை வாழ்ந்தோம்.

அன்னைக்கு அவர்கிட்ட சண்டையே போட்டிருக்க கூடாது.

விஜயராகவன் மீது சொல்லமுடியாத கருணையும் அன்பும் தோண்றியது.

இறங்கி போய் அவர் கைகளை பிடித்து கொள்ளவேண்டும் போல் இருந்தது.

சிக்னல் பச்சையானது.

விஜயராகவனுக்கு தெரியாது, நான்கு வருடம் முன் அவருடன் சண்டை போட்ட ஒருவன் அவர் பின்னாடியே காரில் வந்து கொண்டிருக்கிறான்.

மனதில் அழமாக மன்னிப்பும் கேட்டுவிட்டான் என்று.

1 comment:

  1. நெகிழ்ச்சியான கதை.ஒரு நாளைக்கு பல நூறு பேரைப் பார்க்கும் பணியில் உள்ளவர்களுக்கு மன அழுத்தம் எந்தளவு இருக்குமென அறிகிறேன்..

    ReplyDelete