Saturday 26 January 2013

கதை போல ஒன்று - 66

பாட்டி 1

-ஹைதிராபாத் ஹைட்டெக் சிட்டியில் அந்த பாட்டியை பார்க்கும் போதெல்லாம் பாவமாய் இருக்கும்.

பிளாட்பாரத்தில் பிச்சை எடுத்து கொண்டிருப்பார்.வயது எழுபது இருக்கும்.வாயில் கோழை ஒழுகும்.

வருவோர் போவோரிடமெல்லாம் காசு காசு என்று கெஞ்சிக்கொண்டிருப்பார்.

சில சமயம் இட்லிகளை சாப்பிட்டுகொண்டிருப்பார்
ஒன்றிரண்டு நாய்கள் சூழ.

ஹைடெக் சிட்டியில் வேலை பார்க்கும் ஒரே ஒருத்தன் நினைத்தால் அந்த பாட்டியை நிம்மதியாய் வாழவைக்கலாம்.ஆனால் வைக்க மாட்டார்கள்.

பாட்டி இதுமாதிரி அசிங்கமாக பிச்சை எடுத்து கொண்டே இருக்க வேண்டுமா? இன்னும் எத்தனை காலம்தான் இந்த பாட்டி உயிரோடு இருக்கபோகிறார்.

அது பற்றிய ஏதாவது கவலை இந்த வெள்ளையும் சொள்ளையுமாய் இருக்கும் ஹைட்டெக் மனிதர்களுக்கு இருக்கிறதா?

தினமும் இப்படி பாட்டி பற்றி கொஞ்சம் தத்துவமாய் நினைத்து அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அடங்கி விடுவேன்.

வேலைக்கு சேர்ந்த முதல் மாதம் ஜாயின்ங் போனஸ் என்றொர்ரு ஐம்பதாயிரம் ரூபாய் கொடுக்க தலைகால் புரியவில்லை எனக்கு.

அந்த வார இறுதியில் ரயிலை தவிர்த்து விமானத்துக்கு டிக்கெட் எடுத்தேன் சென்னை வர.ஆபீஸில் இருந்து கிளம்ப பாட்டி ஞாபகம் வந்தது.

அந்த பாட்டிக்கு எதாவது செய்ய வேண்டும்.

சும்மா ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் போடக்கூடாது என்று நினைத்து பாட்டி இருக்கும் இடத்திற்கு வேலை இல்லாமலே வந்தேன். பாட்டி பக்கத்தில் நின்று மொபைல் போனை நோண்டுவது மாதிரி பார்த்துக்கொண்டே இருந்தேன்.

சட்டென்று பாக்கெட்டில் இருந்து புது ஐநூறு ரூபாயை பாட்டியின் பிச்சை தட்டில் போட்டுவிட்டு திரும்பி பார்க்காமல் நடந்தேன்.

”அந்த ஐநூறு ரூபாயை பார்த்து பாட்டி எப்படி மகிழ்ச்சியாயிருப்பார் என்று கற்பனை செய்து உலகில் உள்ள அனைத்து பிச்சைகாரகர்களும் என்னால் சுகமாகிவிட்டார்கள் போன்று தோன்றியது எனக்கு.

சென்னை லீவு முடிந்து புதன்கிழமை ஹைதிராபாத் வந்தால் பாட்டி அந்த இடத்தில் இல்லை.இரண்டாவது நாளும் பார்த்தேன். அப்போதும் பாட்டி அங்கே பிச்சை எடுக்கவில்லை.

எதையுமே தவறாகவே எடுத்துக்கொள்ளும் என் மனம்.” ஐநூறு ரூபாய்க்காக பாட்டியை யாரோ கொன்றுவிட்டார்கள்.ஆக உன்னுடைய சுயபெருமைக்காக பாட்டியை மறைமுகமாக கொன்றுவிட்டாய்” என்பது மாதிரி கிறுக்குத்தனமாய் நினைப்பு வந்தது.

இரண்டு வாரம் தினமும் தேடினேன்.

பாட்டியை பார்க்க முடியவில்லை.

ஏதோ ஒரு சின்ன கவலையாய் இருந்தது.”ஐநூறு ரூபாய் போட்டோம் அதற்கப்புறம் பாட்டி எங்கே? கேள்வி மெல்ல நிதானமாக என்னைத்துரத்தியது.

ஒருமாதம் கழித்து சில்பாராமம் கலைக்கூடத்திற்கு போகும் போது, அதன் வாசலில் அந்த பாட்டி பிச்சை எடுத்து கொண்டிருந்தை பார்த்து மனம் நிம்மதியானது.

பின் சட்டென்று எரிச்சலாகி மனதினுள் “இந்த சனியம் பிடிச்ச பீடை இங்கதான் இருக்கு.இவளால தேவையில்லத டென்சன்” கூவி கலைநிகழ்ச்சி பார்க்க “சில்பாராமம் உள்ளே சென்றேன்.

பாட்டி 2

-எங்கள் ஊரில் இருக்கும் தேமுத்து பாட்டிக்கு மருமகள் என்றாலே ஆகாது.

எப்போதும் திட்டிக்கொண்டே இருப்பார்.

இரவு பத்து மணிக்கு மேல் ஒப்பாரி வைத்து தன் இருபது வயதில் இறந்து போன கணவனை நினைத்து அழுவாள்.

ஊரே மிரளும்.

தேமுத்துப்பாட்டியின் ஒப்பாரி பார்த்து.
வீட்டிற்கு வந்த இன்னொரு பாட்டி அம்மாவிடம் சொன்னார்.” தேமுத்துக்கு பிடிச்சிருகிறது என்னதுன்னு தெரியுதாம்மா? அவளுக்கு “காமக்கிறுக்கு” பிடிச்சிருக்கு. இருவது வயசுலேயே தனியாயிட்டாள்ளா.அதக்குப்புறம் ஒழுக்கமா வேற இருந்துட்டா.இப்போ வயசான பிறகு இப்படி “கோட்டி பிடிச்சி” கத்துறா.சில வயசானவயிளுக்கு இப்படி வருமாப்பு”.

தேமுத்துப்பாட்டியின் மறுநாள் ஒப்பாரியை கேட்கும்போது சிலிர்த்தது.

பாட்டி 3

-நான் பிறக்கும் போது அம்மாவுக்கு வீட்டுவேலை செய்ய துணைக்கு வந்த பார்வதி பாட்டிதான் அவர் குடுமப்த்தை நிமிர்த்தியவர்.

புருசன் “வைரவன் ஆசாரி” எப்போதும் மாம்பட்டை அடித்து தூங்கிக்கிடப்பார்.

என்னை வளர்ததே பார்வதிபாட்டிதானாம்.

வெத்தலையும் போயிலையும் சுண்ணாம்பும் எப்போதும் பாட்டியின் வாயில் அடங்கிருக்குமாம்.

பத்து வீட்டு வேலைசெய்து தன் இரண்டுமகளை கட்டிக்கொடுத்து, மகன் வீட்டில் ஆசுவாசமாய் இருக்க நினைக்கையில் பாட்டிக்கு அதிகாமான வெத்தலை போயிலை போட்டதால் “வாய்புத்துநோய்” வந்ததாம்.

திருவனந்தபுரம் சித்திரைதிருநாள் ஆஸ்பித்திரில சொல்லிட்டாங்களாம் அது மோசமான நோயுன்னு.

மகள்களும் நோயை பார்த்து முகம் திருப்பிக்கொள்ள, ஒருதடவை நாகர்கோவில் போயிட்டு ஆஸ்பித்திரிக்கு வந்துரேன் என்று சொல்லி வந்த பாட்டி, எங்க வீட்டுக்கு வந்து அவுங்க வளத்த பிள்ளையான எனக்கு ”க்ரீம் கேக்கு” ஊட்டிவிட்டு “விஜி பாட்டி ஆஸ்பித்திரிக்குக்கு போறேன்” ன்னு சொல்லிட்டு திருவனந்தபுரம் பஸ்ஸ்டாண்டு ஹோட்டல்ல மசால்தோசைல தூக்கமாத்திரை கலந்து சாப்பிட்டு செத்துபோயிட்டாராம்.

பாட்டி 4

நல்லம்மா பாட்டிக்கு எப்பவும் அவுங்க பாம்படத்த யாராவது அறுத்துகிட்டு போயிடுவாங்களோங்கிற பயம்.

சீலைய காத சுத்தி போர்த்திதான் கிடப்பாங்க.

சின்ன வயசுல புருசன் கொழும்புல போய் சம்பாரிச்சு அனுப்ப அனுப்ப ஊரெல்லாம் தனி ஆளா நின்னு சொத்து வாங்கி குவிச்சாங்களாம் .

வெளங்காட்டுக்குள்ள இருக்க புளியமரத்துல எவனாவது புளிபறிக்கானா, சப்போட்டா திருடுறானா ன்னு பாக்குற்தே சின்ன வயசுல இருந்து இருக்க வேலையாம்.

மனசெல்லாம் தந்திரம்.

எவன் நம்மள அழிக்கப்போறான்கிற பயம்.

சொத்துபத்திரத்த எல்லாம் அடிக்கடி இரும்புபொட்டிக்குள்ள இருந்து எடுத்துப்பாக்கது. அப்புறம் இறுக்க பூட்டிவைக்கிறது.

மவன் மருமவள் டவுணுக்கு கூப்பிட்டாக்க கூட போறதுல்ல.

அதுக்கப்புறம் வயசாக வயசாக தனியா இருக்கும்போது பாட்டி பைத்தியம் மாதிரி கத்துனாங்க.

சின்ன பயலுகள் ஏதாவது ஒரு பேப்பர எடுத்துக்கிட்டு” பாட்டி இந்த பத்திரத்துல கையழுத்து போடுங்கன்னு வெளாடுறதும்.பாட்டி என் சொத்த எவனுக்கும் தரமாட்டன் தரமாட்டன்னுட்டு அழுது பொரளுரதும் எங்க ஊர்ல அடிக்கடி நடந்துச்சாம்.

பாட்டி 5

பாட்டியின் கண்களில் வாழ்தலுக்காக பேரார்வம் இல்லையென்றாலும், சத்தே இல்லாத வாழ்க்கை வாழ்வதற்கும் அவர் தயாராய் இல்லைதான்.

தன் முன்னே இருக்கும் காய்கறி தோல்களாலும், பழங்களாலும் அழுக்காக்கப்பட்ட கூடையில் பச்சை திராட்சை கொத்துக்களை அடுக்கி வைத்திருந்தார்.

தூக்கிகளும் தராசுகளும் படிக்கல்லும் கூடையின் ஒரத்தில் குழைந்து கிடந்தன.வாடிக்களையாளர் வந்தால் அவற்றுக்கு கண நேர நிமிர்வு கிடைக்கலாம்.

தரையை பார்த்திருந்த பாட்டின் கண்களுக்கு பூட்ஸ் தெரிகிறது. பூட்ஸை பாத்தபடியே மேலே கண்களை விடுகையில் “ஆஹா போலிஸ்காரர்” அல்லவா நிற்கிறார்.

“ஏம்பாட்டி அரைக்கிலோ திராட்சை போடு”

பாட்டி கூடையில் கையை விட்டு சிந்தினது சிதறினது,முன்னாலே பழுப்பேறிய திராட்சை எல்லாவற்றையும் பொறுமையாக பொறுக்கி பொறுக்கி தராசு தட்டை பிடித்தபடியே எறிகிறார்.

அந்த எறிதலில் தெரியும் சலிப்பும், எரிச்சலும் போலீஸ்காரரை உறுத்த அப்போதுதான் திராட்சை இருக்கும் தராசு தட்டை பார்க்கிறார்.பார்த்தால் பழுப்பேறி திராட்சையும் ஊறின திராட்சைகளும் கிடக்கிறது.

“யம்மா யம்மா... நான் ஒசிக்கு கேட்கிறேன்னு நினைக்காத. பணம் தருவேன். இந்தா வாங்கிக்க. நல்ல திராட்சையா போடும்மா”

பாட்டி அலெட்சியமாக போலீஸ்காரை பார்த்துவிட்டு, காசை வாங்கிக்கொண்டு “ஆராக்கிய கொத்தாய் “ பருத்த திராட்சை கொத்துகளை போட்டு
எடை போட ஆரம்பித்தார் நிதானமாக.

1 comment:

  1. கணவனை இழந்த துக்கத்தில் எங்க சொந்தக்காரப் பாட்டி விளக்கு பொருத்த வச்சிருந்த ஒரு சிறிய டம்ளர் மண்ணெண்ணையை தலையில் ஊற்றி(தேய்த்து?) தற்கொலைக்கு முயன்ற பரிதாபம் ஞாபகம் வருகிறது… வயதானவர்கள் நம் எதிர்கால பிம்பங்கள்…

    ReplyDelete