Wednesday 28 May 2014

முன்னுரை வந்தது வண்டியிலே...

முன்குறிப்பு:இதில் வரும் அனைத்து சம்பவங்களும் கற்பனையே.யாரையும் குறிப்பிடுவன அல்ல...
அந்த வாசகர் எழுத்தாளரைக் காண காத்திருந்தார்.
கையில் உயர்ரக மதுபோத்தலை வேறு உயர்த்திப் பிடித்திருந்தார்.
எழுத்தாளர் மனசெல்லாம் நிறைந்து வாசகரை வரவேற்றார்.
பேசிய கொஞ்ச நேரத்திலேயே எழுத்தாளர் பண உதவி கேட்க,வாசகர் உடனே அதை சாங்சன் செய்ய,எழுத்தாளர் கண்ணீர்மல்குகிறார்.உடனே வாசகரும் உருகுகிறார் இப்படி,
“இதுல என்ன தல இருக்கு”
“அட போப்பா என்னை இந்த தமிழ் இலக்கிய உலகம் எப்படி புறக்கணிக்கிறதென்று உனக்கு தெரியாது.உன்னுடைய அன்பிற்கு நான் என்ன கைமாறு செய்யப் போறேன்னு தெரியலையே”
“ஒண்ணும் வேண்டாம் தல”
“நோ வாசகா.எதாவது உனக்கு செய்யனும்.உன்ன எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.நீ எனக்கு கொடுக்கிற காசு பணத்த அதவிட எனக்கு பிடிச்சிருக்கு.உன் ஆச என்ன சொல்லு”
“ஒண்ணுமே இல்ல தல”
“அட சொல்லுப்பா”
“அது வந்து ஒரு புக்கு எழுதி பப்ளிஷ் பண்ணனும்.அதுல நல்ல புகழ் அடையனும்.அதுக்கு நீங்க உதவி செஞ்சா வசதி”
“அட இவ்வளவுதான.வா தண்ணியடிக்கலாம்”
“தல புக்கு பத்தி”
“அட வாப்பா வாசகா கோப்பையை நிரப்பு.தண்ணியடிக்கலாம்”
வாசகன் கோப்பையை நிரப்ப, ஆளுக்கொன்றாக எடுத்துக் கொண்டனர்.
இரண்டு ரவுண்ட் போனதும்.
வாசகனுக்கு போன்.
கட் செய்தான் அதை.மறுபடியும் மறுபடியும் போன் அடிக்கிறது.எரிச்சலில் எடுக்க, மறுமுனையில் வாசகனின் மனைவி
“என்னங்க என்னங்க எனக்கு பயமாயிருக்கு”
“என்னாச்சும்மா.. எதாவது பிரச்சனையா”
“ஏதோ நடக்குதுங்க.நீங்க டேபிள்ள பேப்பரும் பேனாவும் வெச்சிருந்தீங்கல்ல.அதுல பேனா மட்டும் தன்னாலேயே பேப்பர்ல ஏதோ எழுதிகிட்டிருக்கு.பேய் பூதமா இருக்குமோ”
வாசகன் திடுக்கிட்டான்.எழுத்தாளனை பார்த்தான்.
எழுத்தாளர் ஆலிவ் காய்களை ஃபோர்க்கினால் குத்தி குத்தி தின்று கொண்டிருந்தார்.புன்னகைத்தார்.
“வாசகா உன் மனைவியை பயப்பட வேணான்னு சொல்லு.என்கிட்ட சேர்ந்தால் அது மாதிரிதான்.அங்கே ரெடியாகிக் கொண்டிருப்பது உன்னுடைய படைப்பு”
வாசகன் ஆசுவாசமாகி மனைவியை சமாதானப்படுத்தினான்.
“நீ பயப்படாத.எல்லாம் தலயோட திருவிளையாடல்.அந்த ’தன்னால எழுதிற பேனாவ’ தடுக்காத.அத அப்படியே எழுத விட்டுடு”
“சரிங்க நீங்க சொல்றபடியே கேக்குறேன்.ஆனா அந்த பொல்லாத பேனா ஒரு மாதிரி பின்னி பின்னி எழுதுதுங்க”
”அது பின்நவீனத்துவம் எழுதுது.அப்படித்தான் பின்னும் பயப்படாதம்மா “ என்று சொல்லி போனை வைத்தான்.
வாசகனுக்கு புல்லரித்தது.எழுத்தாளர் காலில் விழுந்து அழுதான்.
“ஐயா!உங்களுக்கு என்ன நன்றி சொல்வேன் ஐயா.உங்களோட ஐரோப்பிய பயண செலவ கூட நான் ஏத்துக்கிறேன் தல” என்றான்.
அப்போது வாசகனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்திருந்தது.
தன்னை ஒரு அறிவு பிம்பமாக காட்டிக் கொண்டிருக்கும் அரசியல்வாதியாகிவிட்ட பதிப்பக உரிமையாளரிடமிருந்து வந்தது.
“பாஸ் உங்க வீட்ல உங்க பேனா தனியா எழுதுறதா கேள்விப்பட்டேன்.கண்டிப்பா அத என் பதிப்பகத்துக்கு குடுத்திருங்க.நான் தான் அத பப்ளிஷ் பண்ணுவேன்.கொஞ்சம் செக்ஸ் அதிகமா இருக்கிறது மாதிரி உங்க பேனாகிட்ட சொல்லிருங்க.சரியா.பேனாவுக்கு காண்டம் போடக் கூடாதென்று குஷ்வந்த் சிங்கே சொல்லியிருக்கிறார்”
எஸ்.எம்.எஸ்ஸை பார்த்ததும் வாசகனுக்கு தலை சுற்றியது.
எழுத்தாளருக்கு பலமுறை நன்றி சொல்லி வீட்டுக்கு சென்றான்.
அங்கே வீட்டில் பேனா அந்த இருநூறு பக்க படைப்பை எழுதிமுடித்திருந்தது.வாசகனுக்கு திருப்தி.தன்னுடைய படைப்பு புத்தகமாவது பற்றி மிக்க மகிழ்ச்சி.
அப்போது காலிங் பெல் அடிக்க,கதவை திறந்தான்.
தெருவில் ஒரு மீன்பாடி வண்டி நின்றிருந்தது. அதை பெரிய டார்ப்பாயைப் போட்டு மூடியிருந்தார்கள்.
வண்டியின் சொந்தக்காரர் வந்து வாசகனிடம் சொன்னார்.
“உங்க படைப்பு முடிஞ்சதா.என்ன எழுத்தாளர் அனுப்பி வெச்சார்”
“முடிஞ்சது ப்ரோ.என்ன விசயம்”
“நீங்க ரெண்டு பேரும் தண்ணியடிக்கும் போதே எழுத்தாளர் ரூம்ல அவர் பேனா தன்னாக்குல எழுதுன முன்னுரையாம் இது.இத உங்க படைப்புக்கு முன்னாடி போட்டுக்கச் சொன்னார்.
வாசகன் உணர்ச்சிப் பெருக்கால் தேம்பி தேம்பி அழுதான்.
“எழுத்தாளருக்கு நன்றி சொன்னதா சொல்லுங்க,எங்க அவரு எழுதின முன்னுரைய பார்ப்போம்”
“இருங்க” என்று சொல்லி மீன்பாடி வண்டிக்காரர் டார்ப்பாயை நீக்கினார்.
கிட்டத்தட்ட ஒரு டன் அளவிற்கான பின் நவீனத்துவ முன்னுரை அந்த வண்டியில் வாசகனைப் பார்த்து சிரித்தது.
வாசகன் மயங்கி விழுந்தான் 

No comments:

Post a Comment