Thursday 21 March 2013

கதை போல ஒன்று - 76

ஒவரிக்காரரின் கண்கள் எங்கள் கடையின் கோழிமுட்டை அளவு பெரியது.

பாதி மறைந்த தலைமுடியோடு லொங்கு லொஙென்று இரண்டுகால்களையும் விரித்து நடந்து வருவார்.

கடைக்கு வந்து அப்பாவிடம் பேசும் போது, அவருடைய துடிப்பான நாக்கு,அப்பாவை புகழ்ந்து கொண்டே இருக்கும்.

”நீங்க பெறவி அறிவாளில்லா.நல்ல தீர்க்கமான ஆளுல்லா” என்று பேசிக்கொண்டே இருப்பார்.

அப்பா அதை ஏற்றும் ஏற்காததுமாய் முகபாவனை காட்டி தலையை ஆட்டி வைப்பார்.

ஒவரிக்காரரின் தொழில் வட்டிக்கு விடுவதுதான் என்றாலும் அதனால் அவருடைய நல்லவர் பிம்பத்திற்கு அழிவோ குறைவோ இல்லை.

அப்பாவும் நானும் மட்டும் கடையில் இருக்கும் போது ஒவரிகாரர் டி.எஸ்.சேம்பை நிறுத்திவிட்டு ஒடி வந்தார்.

”அண்ணாச்சி வாங்க.வேலையிருக்கு” என்று அப்பாவை கூட்டிப்போனார்.

போன அப்பா வரவே இல்லை.

பதினொன்றாம் வகுப்பு மாணவனான எனக்கு அதிர்ச்சிதான்.எங்கே போயிருப்பார் போயிருப்பார் என்று மூளையை குழப்பிக்கொண்டே இருந்தேன்.

ஒவரிகாரருடன் போன அப்பா நான்கு மணிக்கு திரும்பினார்.

”என்னப்பா சொல்லாம கொள்ளாம போயிட்டீங்க.” என்று கத்தினேன்.

அப்பா என்னை கொஞ்ச நேரம் கத்த விட்டு “இல்லடா அவரு பையன் கோணம் பாலிடெக்னிக்ல படிக்கிறான்லா.கிளாஸ்ல சின்ன பரிட்சை வைச்சிருக்காரு வாத்தியாரு.பையன் ஒருத்தனுக்கு பேப்பர் கொடுத்திருக்கிறான்.பேப்பரை பாத்து காப்பியடிச்சவன் திரும்ப குடுக்கும் போது வாத்தியார் புடிச்சிகிட்டாராம்.அது பிரின்சிபல் வரைக்கும் போய் பிரச்சனையாடுச்சி.”

”சரி அதுக்கு நீங்க எதுக்கு போனீங்க”

“இல்ல ஒவரிகாரரு பேசிக்கிட மாட்டாரு அதான் போனேன்.அங்க போனா நம்ம வள்ளிநாயகம் பிள்ள சார் இருக்கிறார்லா.அவரு அங்க லைபரியன்.அவர வைச்சி தெரிஞ்ச பையன்தான்னு சொல்லி கெஞ்சி கூத்தாடி பிரின்சிபல் மன்னிச்சி விட்டுட்டாரு..அதுக்கு நாலு மணி ஆயிட்டு”

“ம்ம்ம்.நான் உங்க கிட்ட ஃபிராங்கா ஒண்ணு சொல்லுறேன்.நீங்க கடைய போட்டுட்டு அடுத்தவங்களுக்கு சேவை செய்ய போறது எனக்கு பிடிக்கல.நம்மளே இப்போதான் பேங்கல லோன் போட்டு கடைய நடத்திகிட்டு வரோம்.நீங்க அத கவனிக்காம ஒவரிகாரருக்கெல்லாம் உபகாரம் பண்ணப்போனா” என்று கத்தினேன்.

அப்பா சிரித்தபடியே”ஒடனே ஆரம்பிச்சிருவான.இப்படி செய்றதால எல்லாம் நாம் அழிஞ்சிரமாட்டோம்டா.அவருக்கு பேசத்தெரியாது.அந்தப்பையன் தான் அவுங்க வீட்ல மொதல் மொதல்ல படிக்கிறான்.அவன் படிப்பும் பாதில போச்சுன்னா.அந்த குடும்பம் மனசு கஸ்டபடாதா?

அப்புறம் ஒவரிகாரர் பையன அடிப்பார்.அவன் அவமானத்துல விசத்த குடிப்பான்.இப்ப அப்பா போனதால ஏதோ நம்மலாள முடிஞ்சது, பையன மறுபடி கிளாஸுக்குள்ள தள்ளி விட்டோம்.

நீ ரொம்ப யோசிக்காத விஜய். அத விடு. போ அப்பாவுக்கும் உனக்கும் டீ வாங்கிட்டு ஏதாவது கடிக்கிறதுக்கும் வாங்கிக்க” என்று பத்து ரூபாய் தாளை நீட்டினார்.

ஒன்றுமே பேசமுடியாது அப்பாவிடம்.அவருக்கு அவர் ஞாயவான்.அவரின் செயல்களை மேலோட்டமாக பார்த்து விமர்சிக்கவே முடியாது.

இறங்கி சிந்தித்தால் அவர் செய்வது சரி மாதிரியே ஆக்கிவிடுவார்.

ஒரு அண்ணன் மெடிக்கல் காலேஜும் இன்னொருவன் பொறியலும் படிக்கும் வீட்டில்,

இன்னும் இரண்டு பேர் படிக்க காத்திருக்கும் வீட்டில்,

கடையை போட்டுவிட்டு இன்னொருத்தருக்கு உபகாரம் செய்வது தப்பென்று பளிச்சென்று தெரியும்.

ஆனால் அப்பாவிடம் பேசின பிறகு அப்படி தெரியாது.

அன்றிரவு ஒவரிக்காரர் வந்து அப்பாவுக்கு பலமுறை நன்றி சொன்னார்.

மறுநாள் நான் கடைக்கு போகும் போது “லே பிள்ளே நீவயெல்லாம் நல்லா வருவியல.தகப்பன் நல்லாயிருந்த குடும்பம் முன்னேறும்ல” என்று புகழ்ந்து தள்ளினார்.

எனக்கு எப்போதுமே ஒவரிக்காரர் பிடிக்காது என்பதால் அமைதியாக இருப்பேன்.சிரிக்க கூட மாட்டேன்.

இரண்டு நாள் கழித்து பனங்கிழங்கும் மரச்சீனிகிழங்கும் நிறைய கொடுத்துவிட்டுப்போனார் ஒவரிகாரர்.

இருபதாயிரம் சரக்கு போட்டு மாதம் இரண்டாயிரம் அண்ணகள் படிப்பு செலவுக்கு போக, வீட்டுச் செலவு எல்லாம் செய்தால் எங்கே கடை தழைக்கும்.

கொஞ்சம் கொஞ்சமாக கடை படுக்க ஆரம்பித்தது.

கையில் ஆயிரம் ரூபாய் மறுநாள் கொள்முதலுக்கு இருக்கும்.அதில் ஐநூறை செலவுக்கு எடுத்தால்.மிச்சம் ஐநூறை வைத்து மட்டும் கொள்முதல் செய்ய முடியும்.

ஒரு மூட்டை மைதா மாவு அரைமூட்டையாகும்.

கடையின் தோற்றத்தில் தரித்திரம் தெரிய ஆரம்பித்தது.

ஹார்லிக்ஸ் பாட்டில்களூம்,முறுக்கு பாக்கெட்டுகளும், ரேசன் மண்ணென்னயும், கடலை பாக்கட்டுகளும் மாதிரி கொஞ்ச சரக்கே கடையில் இருந்தன.

”தேங்காய் எண்ணய் அரை லிட்டர்” என்று கேட்ட பக்கத்து கடை பரோட்டா மாஸ்டரிடம்

நான் இல்லை என்று சொல்ல “அட என்னப்பா டவுனுக்கு நடுவுல கடைய போட்டுகிட்டு ஈயடிக்கிரிங்க.முடியலன்னா கடைய விட்டுட்டு போயிருங்க.வேற யாராவது கடைய போடுவாங்கல்லா” என்று சொல்லிப்போனார்.

பொறியியல் ஃபைனல் இயர் புராஜக்டு செய்ய அண்ணன் ஆயிரத்து ஐநூறு ரூபாய் வேண்டுமென்று லட்டர் போட்டிருந்தான்.

அப்பாவிடம் சல்லிக்காசு இல்லை.

ஒவரிகாரரிடம் கேட்டார்.ஒவரிக்காரர் கொஞ்சம் அரைமனதாகத்தான் அப்பாவுக்கு அந்தப்பணத்தை கொடுத்தார்.

அடுத்த மூன்று மாத்தில் தினமும் கடைக்கு வந்து கேட்பார்.

அப்பா எதைவாது சொல்லி அனுப்புவார்.

நான் மட்டும் கடையில் இருக்கும் போது வந்து தகராறு செய்ய ஆரம்பித்துவிட்டார்.

”உங்கப்பா எங்கல.எனக்கு குடுக்க வேண்டிய காசக்கொடுக்காம வீட்ல பொண்டாட்டி கூட இன்னொரு பிள்ளைக்கு ரெடி பண்ராரா” என்று கேட்டார்.

என்னால் அந்த வார்த்தை கேட்டு ஒன்றுமே சொல்ல முடியவில்லை அழுதுகொண்டே இருந்தேன்.

கண்களில் கண்ணீர் சுரந்து கொண்டே இருந்தது.

அப்பாவிடம் எதையுமே சொல்ல வில்லை.ஆனால் அம்மாவிடம் சொல்லி அழுதேன்.

அம்மா கலங்கிவிட்டார்.தன்னுடைய கையில் போடிருந்து ஒரே ஒரு நெளி மோதிரத்தை விற்று அப்பாவிடம் ஆயிரம் ருபாய் கொடுத்து கொடுக்க சொன்னார்.

முதலில் அம்மாவை திட்டிய அப்பா பின் அந்த ஆயிரம் ரூபாயை ஒவரிகாரருக்கு கொடுத்தார்.

முகபாவனையில் இரக்கம் காட்டாமல் அதை வாங்கிக்கொண்டவர்,”மிச்ச ஐநூறு எப்ப தருவிய” என்றார்.

“சீக்கிரம்” என்று சுருக்கமாக முடித்து கொண்டார் அப்பா.

அடுத்து மூன்று வாரம் பிறகு நானும் அப்பாவும் கடையில் இருக்கும் போது ஒவரிக்காரர் வந்தார்.

அவர் ஐநூறு ருபாயை பற்றி பேசி அவமானபடுத்த பார்க்கிறாரோ என்று பயந்தது அப்பாவின் கண்களில் தெரிந்தது.ஆனால் அதையெல்லாம் பேசவே இல்லை.

“என்ன அண்ணாச்சி எப்படி இருக்கீங்க.தம்பி இந்த லிஸ்ட கொஞ்சம் போடுப்போ என்று என்னிடம் கொடுத்த லிஸ்டை வாங்கி போட ஆரம்பித்தேன்”

”ஹார்லிக்ஸ் பாட்டில் ஐந்து” எடுத்து போட்டேன்.

“மைசூர் சாண்டல் அரை டஜன்” ஏடுத்து போட்டேன்.

“சீனி நாலு கிலோ” கட்டி வைத்தேன்.

“ஏலக்காய் நூறு கிராம்”

“பாமாயில் நாலு பாக்கட்”

இது மாதிரி பில் போயிற்று.எல்லாம் கட்டி அட்டைபெட்டியில் வைத்து தன் வண்டியில் ஏற்றின பிறகு ஒவரிக்காரர் அப்பாவிடம் வந்து சொன்னார்.”சரி அண்ணாச்சி பில் எவ்வளவு”

“பில் ஐநூத்தி நாற்பது ருவா” ஒவரிகாரரே.

“ம்ம்ம்.நான் பொறுமையா தாரேன் அண்ணாச்சி.கணக்குல வைச்சிக்கோங்க” என்று சொல்லிப்போக

நான் அப்பாவிடம் கூவினேன்.”யப்பா நாம கொடுக்க வேண்டிய ஐநூற எப்படி சுரண்டி எடுத்துகிட்டு போறாரு பாருங்க ஒவரிகாரரு”

“அதுக்கென்ன பண்றது நாமளும் அவருக்கு காசு கொடுக்க வேண்டியது இருக்குதான” என்று சொல்லிய அப்பாவின் கண்களில் கண்ணீர் நிறைந்திருந்தது.

வாழ்க்கையில் அப்பா அழுது முதலில் பார்ப்பது அன்றுதான்.

பிற்காலத்தில் படித்து பட்டம் பெற்று,

முதன் முதலில் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் முழுவதையும் எடுத்து வந்து,

வீட்டில் யாரும் இல்லாத அறையில் அந்த பணத்தை போட்டு காலால் மிதித்து மிதித்து ஒரு மனநோயாளி போல விளையாடியதற்கும் அப்பாவின் கண்ணீரே காரணம்.

No comments:

Post a Comment