Wednesday 28 November 2012

கதை போல ஒன்று - 57

”விஜய் சீனியர்கிட்ட பேசும் போது இனிமே மரியாதையா பேசுங்க. அதுவும் லேடீஸ்கிட்ட பேசும்போது கொஞ்சம் டீசண்சி மெயிண்டயின் பண்ணுங்க”

”மேடம் என்ன சொல்றீங்க. புரியல.”

”இதுக்கு மேல என்கிட்ட எதுவும் கேட்காதீங்க”

கோவம் வந்தது.

“சும்மா மொட்டையா சொல்லிட்டு இனிமே கேக்காதீங்கன்னா. நான் என்ன லூசா. கரெக்டா உங்க பிரச்சனை என்ன? அத சொல்லுங்க.”

மவுனம்.

எரிச்சலாய் வந்தது.

காவ்யா மேடம்தான் வேலைக்கு சேர்ந்ததில் இருந்தே என்னுடைய ”மெண்டார்”.

அவர் பிராஜக்ட்டில் நான் டிசைனர்.

வயது முப்பது இருக்கும்.

முகலட்சணம் என்றால் ஆழமான திருத்தமான முகம்.

பார்த்து கொண்டே இருக்கலாம்.

என்னை விட வயது கம்மியாய் இருந்தால் கண்டிப்பாக கல்யாணம் செய்து கொண்டிருப்பேன்.

சின்ன சின்ன விசயத்தையும் அன்பாக சொல்லித்தருவார்.

திட்டினதோ அவமானபடுத்தியதோ இல்லை.குரல் உயர்த்தி பேசமாட்டார்.

வேலை நேரத்தில் வேலைதான்.

ஐந்து மணிக்கு மேல் செம அரட்டை அடிப்பார்.

எளிய ஜோக்குகளுக்கு கூட கண்கள் பனிக்க சிரிப்பார்.

அவர் சிரிப்பதற்காகவே வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை நிறைய மசாலா சேர்த்து சொல்வேன்.

சொன்னதும் வெடித்து வாய் பொத்தி சிரிப்பார்.வலது கையை உதறி உதறி சிரிப்பார்.

எனக்கும் காவ்யா மேடத்துக்கும் இடையே எந்த பிரச்சனையுமே வராத அன்பு உருவாகி இருந்தது என்று தீர்க்கமாய் நம்பி கொண்டிருந்த போது இப்படி ஒரு முகவெட்டை அவர் காட்டியதும் நொந்து போனேன்.

“என்னதான் நடந்தது மேடம்.ஃபிளீஸ் சொல்லுங்க” கெஞ்சினேன்.

“போன வெள்ளிகிழமை லன்சுல நீங்க என்ன சொன்னீங்க”

நான் நெடுநேரம் யோசித்து கண்டுபிடித்து விட்டேன்.

“மெட்டிஒலி நாடகத்துல வர டைடில் சாங் மட்டும்தான் பார்ப்பேன் அப்படின்னு சொன்னேன். அதுக்கு நீங்க கூட சிரிச்சீங்களே”

“அத நீங்க எந்த அர்த்தத்தில சொன்னீங்க”

“அதுல மூணு பொண்ணுங்க கிளாமரா ஆடுவாங்க. அந்த அர்த்தத்தில சொன்னேன்”

“கரெக்ட் நான் என் ஹஸ்பண்ட்கிட்ட சொல்லும் போது அவரும் இதைத்தான் சொல்லி, ஏன் ஜெண்ட்ஸ்கிட்ட இப்படி பேசுறேன்னு என்ன ரொம்ப திட்டிட்டார்”

தாங்க முடியாத அவமானத்தால் எழுந்த கோவம் ஆடியது என்னுள்.

சுயபிரக்ஞை இழந்தேன்.

“நீங்க அரைவெட்டா. வெள்ளிகிழமை நான் அத சொன்னதும் சிரிச்சீங்க. அப்புறம் உங்க ஹஸ்பண்ட் சொன்னது வந்து திங்கக்கிழமை வந்து திட்டுவீங்களா? முதல்ல இதயெல்லாம் ஏன் ஹஸ்பெண்ட்கிட்ட சொல்றீங்க. அவரு ஒரு லூசு. பெரிசா கண்டுபிடிசிட்டாராமா. நான் தான் லூசுன்னு”

கணவனை திட்டினால் எந்த இந்திய மனைவிதான் பொறுப்பாள்.

தன்னுடைய விசுவாசத்தை காட்ட நல்ல களமாக நினைத்து எனக்கு சரமாரியாக திட்டு விழுந்தது.

“ஹவ் சில்லி யூ ஆர் விஜய்.இனிமே அவர பத்தி எதாவது சொன்னீங்கன்னா, மேனேஜர்கிட்ட உங்கள பத்தி கம்பிளைண்ட் கொடுப்பேன்.இனிமே என்கிட்ட பர்சனலா பேசாதீங்க சரியா”.

உள்ளத்தில் நடுங்கினேன்.

அவமானம், கோவம், அதிர்ச்சி எப்படி காவ்யா மேடத்திடம் இனிமேல் பேசாமல் இருக்க போகிறோம் என்பது மாதிரியான பயம்.

அவசரமாக பாத்ரூம் சென்று கதவை சாத்தினேன்.

சிறுநீரே கழிக்க முடியவில்லை.

ஒரு கணம் மனம் குவிந்தால்தான் யாராலும் சிறுநீர் கழிக்க முடியும்.

அந்த ஒரு கணம் கூட மனம் குவியவில்லை.

என்னை சட்டென்று பேசியது நினைவுக்கு வந்து வந்து பதினைந்து நிமிடம் கழித்து இருந்துவிட்டு, வெளியே வந்தேன்.

அழுதது தெரியாமல் இருக்க முகத்தை நன்றாக கழுவிக்கொண்டேன்.

அடுத்த நாள் முதல் இருவரும் பேசுவதில்லை.

ஆபீஸ் விசயமாக சம்பிரதாயமாக பேசுவதோடு சரி.

கடுப்பில் இரண்டு நாள் ஆபீஸுக்கு லீவ் போட்டுவிட்டு எல்லா சினிமாவும் பார்த்தேன்.இண்டர்நெட் செண்டருக்கு சென்று முடிந்தவரை பாலுணர்வை தூண்டும் படமாக பார்த்தேன்.

ஆனாலும் அழுத்தம் போகவில்லை.

காவ்யா மேடம் என்னவெல்லாம் பேசுவார்கள்.

அவர்கள் திருமணம் காதல் திருமணம்.

காவ்யா மேடத்தைவிட அவர் கணவர் உயர்ஜாதி என்று சொல்லபடுகிறதில் பிறந்தவர்.

அவர் துரத்தி துரத்தி காதல் சொன்னதை,

பின்னர் திருமணத்தின் போது கணவரின் வீட்டில் ஜாதி பேசி காவ்யா மேடம் குடும்பத்தை அசிங்கபடுத்தியதை,

ஆனாலும் காவ்யா மேடம் கணவர் வீட்டாரிடம் மழுங்கி மழுங்கி பேசுவதை,

அதை சட்டையே செய்யாமல் அவமானபடுத்தும் மாமனார் மாமியார் நாத்தனார்களின் தன்மையை,

எதைத்தான் காவ்யா மேடம் என்னுடன் பகிர்ந்து கொள்ளவில்லை.

நண்பர்களோடு திருவண்ணமலை செல்லும்போது ”எனக்காகவும் வேண்டிக்கோங்க விஜய் என்று சொன்னதை மறக்கமுடியுமா?

அந்த பிரார்த்தனை காவ்யா மேடத்துக்கு சீக்கிரம் குழந்தை பிறக்க வேண்டும் என்பதைத்தான் சுட்டுகிறது என்பது எனக்கும் அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாய் இருந்த அளவிற்கு ஆழமான நண்பன் எனறுதானே நினைத்து கொண்டிருந்தேன்.

காவ்யா மேடத்துக்கு குழந்தை பிறந்ததும் அம்மாவை அழைத்து கொண்டு பார்க்கபோனதை பார்த்து “உனக்கும் பந்தம் பாசம் எல்லாம் தெரியுதேன்னு அம்மா என்னை கிண்டல் செய்ததை மறக்க முடியுமா?

”இனிமே பர்ஸ்னலா எதுவும் பேசாதீங்க” திரும்ப திரும்ப அவர்கள் சொன்னதே ஒருவாரத்திற்கு நினைவுக்கு வந்தது.

பின் மெல்ல அந்த அழுத்தம் குறைந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக காவ்யா மேடத்தின் மனந்தொந்திரவு குறைந்து சகஜாமானேன்.

காவ்யாம் மேடம் மூன்று நாட்கள் வரவில்லை
ஆபீஸுக்கு.

நாத்தனார் கல்யாணமாம்.

மூன்றாம் நாள் வரும் போது கல்யாணத்துக்கு எடுத்திருந்த புடவையிலே வந்தார்கள்.

பெண்கள எல்லோரும் அந்த புடவை பற்றி விசாரிக்க, ஆணகள் தர்மத்துக்கு “கல்யாண ஸ்வீட் எங்க” என்று கேட்டு போய்விட்டார்கள்.

தீபாவிடம் காவ்யா மேடம் பேசிக்கொண்டிருந்தார்கள்.

“தீபா எனக்கு இந்த கல்யாணத்துல பெரிய ஹாப்பினஸ் கிடைச்சது”

தீபா “என்ன ஹாப்பினஸ் மேடம்” என்று கேட்க வேண்டும். ஆனால் அதை கேட்காமல் தீபா என்கிற முட்டாள்
“மேடம் கல்யாணத்துக்கு ஃபேசியல் செஞ்சீங்களா” என்று கேட்டாள்.

மனிதர்கள் வாளெடுக்காமல் துப்பாக்கி சுடாமல் கையாளும் வன்முறை இது. எதிர்த்தாற்போல் இருப்பவர்களின் உணர்வு தெரியாமல் பேசுவது.

தீபாவின் கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு, மறுபடி காவ்யா மேடம் ஆரம்பித்தார்கள்.

“தீபா இந்த கல்யாணத்துல நான் ரொம்ப ஜாலியா இருக்கேனே”

அதுவும் தீபாவுக்கு புரியவில்லை.ஏதோ சொல்லி அந்த இடத்தை விட்டு போய்விட்டாள்.

காவ்யா மேடம் முகத்தை பார்க்க முடியவில்லை.

கவலையாய் இருந்தார்.

என்னுள் அன்பு பொங்குகிறது.

உடனே அவர் கைகளை பற்றி கொள்ள வேண்டும் என்பது போல் இருக்கிறது.

இந்த பாழாய் போன தன்மானத்தை வைத்து அவித்து கஞ்டி குடிக்கவா முடியும் என்ற முடிவுக்கு வந்தேன்.

சுழலும் நாற்காலியை காவ்யா மேடத்தை நோக்கி திருப்பி அவர்கள் கணகளை ஆழப்பார்த்து சிநேகமாய் புன்னகைத்தேன்.

காத்திருந்ததை போல காவ்யா மேடமும் புன்னகைத்தார்.

“யாருக்கு கல்யாணம்”

”என் நாத்தனாருக்குதான்”

“நல்லா நடந்துச்சா”

”ஆமா நல்லா நடந்துச்சு”

இது பத்தாது அவர்கள் மனம் விட்டு பேச வேண்டுமானால். இன்னும் அணையை உடைக்க வேண்டும். மனம் கணக்கு போட்டது.

“மேடம் இப்பல்லாம் உங்க மாமனார் மாமியார் உங்களுக்கு பிரண்ட்ஸ் ஆகிட்டாங்களா”

காவ்யா மேடத்தின் கண்கள் விரிந்தன.

பிடித்து விட்டேன்.இதுதான் காவ்யா மேடத்தின் மகிழ்ச்சிக்கு காரணம். இதைத்தான் காவ்யா பகிர்ந்து கொள்ள நினைக்கிறார்.

“ஆங் விஜய் லாட் ஆஃப் சேஞ்சஸ் யூ நோ”

“அப்படியா மேடம். கலக்குறீங்க”

“ஆமா நாத்தனார் கல்யாணத்துல அவ்வளவு வேலை செய்தேன் விஜய்.என் மாமியாருக்கு சரியா நடக்க முடியல. கால் சுளுக்கிடுச்சி. அவங்களுக்கு மருந்து போட்டு, வெந்நீர் வெச்சு ஒத்தடம் போட்டு கவனிச்சு, கல்யாண வீட்டுக்கு வந்தவஙகள உபசரிச்சி, நான் இருந்த அக்கறைய பார்த்து நாலு வருசம் கழிச்சி இப்பத்தான் என்ன அவுங்க குடும்பத்துல மனப்பூர்வமா சேர்த்திருக்காங்க”

“ம்ம்ம்...”

”என் மாமனார் முதல் தடவையா, நானும் ஹஸ்பண்டும் வீ ட்டுக்கு திரும்பும் போது எங்களுக்கு சாமி கும்பிட்டு விபூதி குங்குமம் வெச்சி விட்டார்”

சொல்லும் போதே காவ்யா மேடத்தின் கண்கள் கலங்கின.

சொன்ன பிறகு அளப்பெரிய திருப்தி தெரிந்தது.

”மேடம் அந்த மெட்டி ஒலி சீரியல் டைட்டில் சாங் பத்தி நான் சொன்னத மனசுல வெச்சுக்காதீங்க”

“சேச்சே அத அன்னைக்கே மறந்துட்டேன். நான் சட்டுன்னு உங்கள் திட்டினத நினைச்சி ஃபீல் பண்ணிட்டிருக்கேன் விஜய். சாரி இஃப் ஐ ஹர்ட் யூ”

”தேங்கஸ் மேடம்”

“ஆமா நம்ம சண்ட நடந்த உடனே இரண்டு நாள் லீவு போட்டீங்களே ஏன்? “

“அது பயங்கர வைரல் ஃபீவர் மேடம்.வாமிட் வேற.பிளட் டெஸ்ட் எடுத்து கூட பார்த்தேன்” என்று கூசாமல் பொய்யை எடுத்து விட

காவ்யா மேடம் பரிதாபப்பட்டு கொண்டிருந்தார்.

நட்பில் நிறைய தன்மானமின்மையும், கொஞ்சம் போலித்தன்மையும் சேர்ந்தால் நட்பு நெடுநாள் வாழும் என்பதை அறிந்தேன் அன்று.

No comments:

Post a Comment