Friday 3 October 2014

Kigelia Africana...

புடுக்கு என்றால் ஆணின் அந்தரங்கபகுதியை குறிக்கும் சொல்லாகும்.
சிறுவயதில் எங்கள் கடையில் வேலை பார்த்த தாத்தா ஒருவர், ஒரு பலூனில் கொஞ்சம் நீரை ஊற்றி அதை மிதமான நீளமாக்கி “கழுதைப் புடுக்கு கழுதைப் புடுக்கு பாரு” என்று வேடிக்கையாக சொல்வதை நினைத்துப் பார்க்கிறேன்.
நானொன்றும் வேண்டுமென்றே அதிர்ச்சிக்காகவோ அல்லது மற்றவர்கள் திரும்பிப் பார்க்க வேண்டுமென்றோ எழுதவில்லை.
தினமும் ஒருவகையான மரங்களை ஆங்காங்கே கடந்துவருவேன்.ஒன்றரை வருடங்களாக அந்த மரத்தை அண்ணாந்து பார்த்ததில்லை. ஒருநாள் அப்படி பார்க்கையில் அதிர்ச்சி. பெரிய பெரிய் பிரவுன் வெள்ளரிக்காய் தண்டியில் நீளமான மிக நீளமான காம்பில் ஒரு காய் தொங்கிக் கொண்டிருக்கிறது.
இந்தக் காய் நம் தலையில் விழுந்தால் என்னவாகும் என்று நினைக்கும் போதே நடுங்கிற்று. “அதெல்லாம் விழாது” என்று அலட்சியப்படுத்தவும் முடியாதபடி அந்தக் காய்கள் ஆங்காங்கே விழுந்தும் கிடந்தன.
ஒரு காயைத் தூக்கிப் பார்த்தேன். கிட்டத்தட்ட இரண்டு கிலோ.பூமி விசைக்கும், மரம் இருக்கும் உயரத்துக்கு தலையில் விழுந்தால் என்ன வாகும்.சுக்கு நூறாக வெடித்து விடாதா அய்யப்போ.
காற்றில்லாவிட்டால் ஒற்றை மழைத்துளியே புல்லட்டாக இறங்குமாமே நம் உடலில்.இம்மாம் பெரிய காய் விழுந்தால்? இப்படியாக அந்த மரத்தை உற்று கவனிக்க ஆரம்பித்தேன்.
ராணிமுத்து காலெண்டரில் இருக்கும் முருகர் எப்படி நாம் பார்த்தால் அவரும் பார்ப்போரோ, அது மாதிரி மரமும் தன் நூற்றுக்கணக்கான காய்க்களைக் காட்டி என்னை உற்றுப் பார்த்தது போல ஒரு உணர்வு.
அந்த மரத்தின் பெயரைக் கேட்க ஆரம்பித்தேன்.ஒருவருக்கும் தெரியவில்லை.அது இந்திய மரமாக எனக்குத் தெரியவில்லை.அதன் பெயரை அறிந்து கொள்ள அதிகம் ஆர்வம் கொண்டிருந்தேன்.
கலை ,இலக்கியம், அறிவு சம்பந்தப்பட்ட ஒன்றை திரும்ப திரும்ப நினைத்துக் கொண்டிருந்தால் அது எனக்கு கிடைக்கும் என்று என்மேலேயே எனக்கொரு மூடநம்பிக்கை.
இந்த மரம் விசயத்திலும் அது நடந்தது.
அன்று கோட்டூர்புரம் லைப்பரரியில் புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருந்த போது, பெரிய பாட்டனி புத்தகம் ஒன்றைப் பார்த்தேன்.
அதில் ஒரு மரத்தின் வித்தியாசமான தமிழ் பெயரைப் பார்த்து சிரித்தேன்.அதன் பாட்டனிக்கல் பெயரை மனப்பாடம் செய்து கொண்டேன்.அப்புறம் மறந்து விட்டேன்.
ஆபீஸில் ஒய்வாக இருக்கும் போது திடீரென்று அந்த வித்தியாசமான தமிழ் பெயர் நினைவுக்கு வந்து அந்த செடியின் பாட்டனிக்கல் பெயரும் நினைவுக்கு வந்தது.
பாட்டனிக்கல் பெயர் Kigelia Africana.
அதை விக்கிப்பீடியாவில் டைப் செய்து பார்த்தால் அசந்து விட்டேன்.
ஆஹா!ஆஹா! அது நான் தினமும் பார்க்கும் மரத்தின் காய்கள் உள்ள மரம். அதன் பெயர் ஆங்கிலத்தில் Sausage tree ( அந்த உணவு போல இருப்பதால்).
கண்டுபுடிச்சிட்டேன் கண்டுபுடிச்சிட்டேன் என்று துள்ளினேன்.அதன் வித்தியாசமான தமிழ்ப் பெயரை எல்லோருக்கும் சொன்னேன்.
கேட்ட அனைவரும் சிரித்தனர்.
Kigelia Africana மரத்தின் தமிழ்ப் பெயர் “யானைப்புடுக்கன்”.

2 comments:

  1. யானைபுடுக்கன் தான் சாசேஸ் ஃப்ரூட்டின் தமிழ்பெயரா? நல்ல தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  2. 1967ம் ஆண்டு நான் இராமேஸ்வரத்தில் ஒரு மாதம் விடுமுறையில் தங்க நேர்ந்தது.அப்போது நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.வீட்டுக்கு அருகில் ஒரு மாபெரும் மரம்.அதை குடைந்து ஒரு சிறு வீடு கட்டிவிடலாம் .அவ்வளவு அகலம்.அந்த மரம் நீங்கள் குறிப்பிட்ட மரம்தான்.பெரிய அளவில் காயகள் தொங்கிக் கொண்டிருந்தன.அந்த மரத்தினை பொந்தம்புளி மரம் என்று சொன்னார்கள்.காயை உடைத்து பார்த்தேன்.மாவு உருண்டைகள் போல சிறு சிறு கட்டிகள் இருந்தன.அந்த உருண்டைக்குள் விதை இருந்தது.வாயில் போட்டுப் பார்த்தேன்.மிகவும் புளிப்பாக இருந்தது.புளிக்குப்பதிலாக சிலர் சமையலில் இதை பயன்படுத்துவார்கள் என்று சொன்னார்கள்.

    ReplyDelete